“இந்துவாக இருப்பவர் ஒழுக்கவாதி; ‘இந்துத்துவா’வை ஏற்றுக் கொண்டவர், பலே பலே ஒழுக்கவாதி” என்று நாம் சொன்னால், அண்ணாமலைக்கு கோபம் வந்து விடும். “யாரடா அப்படி சொன்னது? நீ எந்த ஊடகம்பா? மரியாதையாகப் பேசு; மான நஷ்ட வழக்கு போடுவேன்” என்று பொங்கிடுவார். ஏதோ, கிண்டலுக்காக நாம் எழுதவில்லை. அவரது பேச்சை ‘தினமலர்’ (டிசம்.12) வெளியிட்டிருப்பதிலிருந்துதான் கூறுகிறோம். அண்ணாமலைக்கு எல்லாவற்றுக்கும் ஆதாரம் வேண்டுமே!

“திராவிட இயக்கங்களில் இருப்பவர்களே அஞ்சி வெட்கப்படும் அளவிற்கு பாலியல் குற்றச்சாட்டுகள் நம்மோடு இருப்பவர்கள் மீது பரபரப்பாக எழுகிறது. ஒழுக்கக் கேடானவர்களுக்கு பா.ஜ.க.வில் இடம் இல்லை. அவர்கள் கட்சியிலிருந்து விலகி விடலாம்” என்று கண்டிப்பாகக் கூறியிருக்கிறார். அதாவது பாலியல் குற்றச்சாட்டிலும் பா.ஜ.க.வை அடிச்சுக்கவே முடியாது; அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று மகிழ்ச்சியை அல்ல; வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

என்ன சார் இது - இதெல்லாம் ஒரு பிரச்சினையா... நம்ம இந்து தர்மத்தில் பகவான் கிருஷ்ணன், இந்திரன், சிவன் போன்ற பிரமுகர்கள் வாழ்ந்து காட்டியதைத் தானே நாங்களும் பின்பற்றுகிறோம். இதுல ஒழுக்கக் கேடு எங்கிருந்து வருகிறது? அண்ணாமலை இப்படி எல்லாம் நமது புராணங்களைப் படிக்காமலேயே பேசுவது நமது பகவான்களையே அவமதிப்பது இல்லையா?” என்று கேட்கிறார், ஓர் உண்மையான பா.ஜ.க. இந்து பக்தர். நியாயம் தான்!

ஆனாலும், மக்கள் இதை எல்லாம் வெறுக்க மாட்டார்களா? என்ற நியாயமான கேள்வி எழவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அண்ணாமலை யாருக்கு அவரது கட்சி நலன் கருதி சில இலவச ஆலோசனைகளை வழங்குகிறோம். ஏற்பதும் புறந்தள்ளுவதும் உங்கள் மத உரிமை!

  • பா.ஜ.க.வில் உறுப்பினராவோர் காவல் நிலையத்தில், கிரிமினல் வழக்கு ஏதும் இல்லை என்ற சான்றிதழைக் கொண்டு வர வேண்டும்.
  • விபூதி, நாமம், கையில் வண்ண வண்ணக் கயிறுகள் கட்டியிருந்தால் மட்டும் உண்மையான ‘இந்து’ என்று ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையான இந்து; அசலான பக்தி உணர்வாளர் என்பதைக் கண்டறிய ஏதாவது சோதனைக் கருவி ஒன்றை உலகம் முழுதும் டெண்டர் போட்டு கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். குறைந்தது நமது அறிவியல் துறை விஞ்ஞானிகளின் உதவிகளையாவது நாடலாம்.
  • பா.ஜ.க.வில் எந்த ‘கோஷ்டி’யில் இருக்கும் ‘இந்து’ உண்மையான இந்து என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அண்ணாமலை தன்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும். வானதி ‘கோஷ்டி’ இந்து, ‘ராஜா’ கோஷ்டி இந்து போன்ற பல்வேறு கோஷ்டி இந்துக்களை ஓரங்கட்டினால் தானே இந்து ஒற்றுமையை வலிமைப்படுத்தி ஆட்சியைப் பிடிக்க முடியும்?
  • பா.ஜ.க. மகளிர் பிரிவுக்கு துப்பாக்கி போன்ற தற்காப்பு ஆயுதங்களை வழங்குவதோடு, பா.ஜ.க.வினர், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையாகத் தடை போட்டு விடவேண்டும்.
  • அண்ணாமலை கோஷ்டி இந்துக்களைத் தவிர, மற்ற பா.ஜ.க. குழுக்களின் இந்துக்கள், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி இந்துக்களும் இந்துக்களே அல்ல என்று அமீத்ஷா வழியாக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வருவது குறித்தும் பரிசீலிக்கலாம். அப்போது தான் கட்சி தூய்மை பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும்.

இன்னும் ஏராளமான யோசனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்துக்களுக்கான பாரதத்தை பாரத மாதா தலைமையில் உருவாக்கி ஆன்மீகத்தையும் ஒழுக்கத்தையும் காப்பாற்ற இப்போதைக்கு இதுவே போதும் என்பது அடியேன் கருத்து.

இந்த ‘குருnக்ஷத்திரத்தில்’ அண்ணாமலை ‘ஜி’ - ‘ஜெயம்’ பெற அடியேனின் அநேகக் கோடி ‘பிரார்த்தனைகள்’; வாழ்க ‘காசி புண்ணிய nக்ஷத்திர’ தமிழ்; வளர்க பாரத மாதாவின் இந்து ஒற்றுமை! ஒழிக ஒழுக்கமற்ற இந்துக்கள்!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It