மனிதன் வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் குறிஞ்சி முல்லை நிலங்களில் வாழ்ந்த கால கட்டத்தில் அந்நிலங்களில் வரகு தினை முதலியவற்றை விளைவித்தான். அவற்றுடன் உழுந்து, பயறு அவரை முதலியவற்றையும் விளைவித்தான். ஆனால் விளைச்சலின் பயன் அவனுக்கு, வாய்க்கும் கைக்கும் எட்டாத நிலையிலேயே இருந்தது. கடன் வாங்கிப் பிழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவன் தள்ளப்பட்டிருந்தான்.

farmerஎருதுகாலுறாஅ திளைஞர் கொன்ற
சில் விளைவரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு கடைதப்பலின்
ஒக்கல் ஒற்கஞ் சொலியத் தன்னூர்ச்
சிறு புல்லாளர் முகத்தளவை கூறி
வரகுக் கடனிறுக்கும் நெடுந்தகை “ - புறநானூறு : 327

(எருதுகளைப் பிணித்து அவற்றின் காற்கீழ்ப் பெய்து கடாவிடுதலின்றி இளையர்கள் காலால் மிதித்தெடுத்த சிலவாக விளைந்த வரகாகிய புல்லிய குவியலில், வளைத்துக் கொண்ட கடன்காரருக்குக் கொடுத்தது போக எஞ்சியதைப் பசித்து வந்த பாணர் உண்டு வெளியேறினாராக, புறங்கடை வறிதாகலின் சுற்றத்தாருடைய வறுமையைக் களைய வேண்டித் தன்னூரில் வாழும் சிறிய புல்லாளர் முன்னே தனக்கு வேண்டுமளவைச் சொல்லி வரகைக் கடனாகப் பெறும் நெடிய புகழுடைய தலைவன்) என்று, உழவன் தன் சுற்றுத்தாருடைய வறுமையைக் களைய வேண்டி வரகைக் கடனாகப்; பெற்ற செய்தியைப் புறநானூறு கூறுகிறது.

வரகுந்தினையுமுள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுணக் கொளத்தீர்ந்தெனக்
குறித்து மாறெதிர்ப்பைப் பெறாஅ மையிற்
குரலுணங்கு விதைத்தினையுரல் வாய்ப்பெய்து
சிறிது புறப்பட்டன்றோவிலள்” - புறநானூறு : 333

(வரகுந்தினையுமாகத் தன்மனையில் உள்ளவற்றை யெல்லாம் இரவலர் உண்டதனாலும் கொண்டதனாலும் தீர்ந்தனவாக விருந்தினராக வந்த பாணரை உண்பித்தற்பொருட்டு, வரகைக் கடனாகப் பெற முடியாமையால் கதிரிடத்தே முற்றி உலரவிட்ட விதைத்தினையை உரலிற் பெய்து குற்றிச் சமைத்து மனைத்தலைவியானவள் உண்பித்தாள்) என்று மனனத்தலைவி விருந்தினரின் பொருட்டு விதைத்தினையைக் குற்றிச் சமைக்க முற்பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது. இவ்வாறு,கணசமூகமாக வாழ்ந்த குறிஞ்சி முல்லை நிலமாந்தரின் பற்றாக்குறையான அவலவாழ்வு குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. இம்மக்கள் வறுமையில் வாடினாலும் பண்பில் உயர்ந்து ஓங்கி நின்றதைக் காண்கிறோம். இவ்வுயர்வுக்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் கணசமூகமாக வாழ்ந்தனர். அது பொதுவுடைமை வகைப்பட்ட கணசமூகம்.

இரும்பு கண்டுபிடிக்கப் பட்டுப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு உற்பத்திக் கருவிளிலும் உற்பத்தி முறையிலும் மாற்றம் ஏற்பட்டது. காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலமாக்கப்பட்டன. ஆறுகளும், ஓடைகளும் மறித்து ஏரிகளும் பாசனக் குளங்களும் அமைக்கப்பட்டன. புதர் மண்டிக் கிடந்த காடுகள் வயல்களாக – விளைநிலங்களாகத் திருத்தப்பட்டன. வரகும் தினையும் விளைந்த வன்னிலங்கள் நெல்லும் கரும்பும் இஞ்சியும் மஞ்சளும் வாழையும் கமுகும் விளையும் மென்னிலங்கள் ஆக்கப்பட்டன. காடு திருத்தி விளைநிலமாக்கப்பட்ட செய்தியை ‘காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி” (பாட்டினைப்பாலை (283 -84) என்றும் ‘நிலன் நெளிமருங்கில் நீர் நிலை பெருகத் தட்;டோரம்ம இவண் தட்டோரே” (நிலம் குழிந்த விடத்தே நீர் நிலை மிகும்படியாகத் தளைத்தோர்தாம் இவ்வுலகத்துத் தம் பேரோடு தளைத்தவர் ஆவர்) புறநானூறு 18) என்றும் சங்க இலங்கியங்கள் கூறுகின்றன. இவ்வேலைகள் அனைத்ததையும் அடிமைகளே செய்து முடித்தனர். ஆனால் திருத்தப்பட்ட நிலங்கள் தனி நபர் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தன. உழைப்பாளிகளான அடிமைகளின் பேருழைப்பால் விளைச்சல் பெருகியது. ஒட்டுண்ணிகளாகத் தலையெடுத்த ஆண்டைகள் அதனை அபகரித்துக் கொண்டனர்.

அடிமைகளின் அயரா உழைப்பால் விளைச்சல் அபரிமிதமாகப் பெருகியது. ‘ஒரு பிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு’ என்றும் ‘தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளையும்” என்றும் இலங்கியங்கள் அடிமைகளின் உழைப்பால் விளைந்த மிகுவிளைச்சல் பற்றிக் கூறுகின்றன.

உழைக்கும் மக்களாகிய உழவர்,உழத்தியர், கடையர், கடைசியர் முதலியவர்களின் உழைப்பால் உழவுத்தொழில் சிறப்புப்பெற்றது. உழவுத் தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து திருவள்ளுவர் கூறுகிறார்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு - குறள்.

(ஏரால் உழுதலைப் போல எருவிடுதலும் பயிருக்கு நல்லதே யாம், களையினை நீக்கிய பிறகு பயிரைப் பாதுகாத்தல் நீர்பாய்ச்சுதலைப்போல நல்லதேயாகும்) என்பது உழவு குறித்து வள்ளுவர் கூறும் தொழில் நுட்பம் ஆகும். இக்குறளில் அவர் நிலத்தை உழுதல் பயிரைப்பாதுகாத்தல் நடவுக்குப் பிறகு களை நீக்குதல் , நீர் பாய்ச்சுதல், பயிரைப் பாதுகாத்தல் என உழவுத்தொழிலில்; கடைப்பிடிக்கவேண்டிய உத்திகள் குறித்துக் கூறியுள்ளார். சங்க காலத்தில் உழவர்கள் பின்பற்றிய உத்திகளைக் கண்டுதான் வள்ளுவர் அவ்வாறு கூறியிருத்தல் கூடும்.

ஆறு குளம் ஏரி முதலிய நீர் நிலைகளில் இருந்து உழவர்கள் வயலுக்கு நீர்பாய்ச்சினர், உழுது சேறாக்கித் தொளி கலக்கினர். பரம்படித்துப் பண்படுத்தினர். நாற்று நட்டனர். களை பறித்தனர். நீர்பாய்ச்சினர். பறவைகளும் விலங்குளும் பயிரை அழித்து விடாமல் பாதுகாத்தனர். நெல்லறுத்துப் போரடுக்கினர். பிணையல்அடித்துப் பொலி தூற்றினர். நெல்லை மலைபோலக் குவித்தனர். குவித்த நெல்லை ஆண்டைகளின் மனைகளில் இருந்த நெற் கூடுகளில் இட்டு நிரப்பினர். இத்தொழிலில் அடிமைகளான களமரின் உழைப்பு கடுமையானது. இது குறித்து சங்க இலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன.

‘நல்லேர் நடந்த நசைசால் விளைவயல் “ (நன்றாக எருதுகள் உழுத நச்சுதல் அமைந்த, விளைகின்ற வயல்) என்றும் ‘எருதெறிகளமர் ஓதை “
(எருதுகளை அடித்து உழுகின்ற களமர்களின் ஓசை) என்றும் சங்க இலக்கியங்கள் உழவு பற்றிக் கூறுகின்றன.

‘மிதியுலை கொல்லன் முறிகொடிறன்ன
கவைத் தாளலவன் அளற்றளை சிதையப்
பைஞ்சாய்கொன்ற மண்படு மருப்பிற்
காரேறு பொருத கண்ணகன்செருவின்
உழா நுண்டொளி நிரவிய வினைஞர்”

(மெத்தென்ற துருத்தியை அமுக்கி ஊதுகின்ற உலையிற்கொற்றொழில் செய்கின்றவனுடைய முறிந்த கொடிற்றை யொத்த கப்பித்த கால்களையுடைய நண்டினது சேற்றின்கண் உண்டாகிய முழை கெடும்படி பசிய கோரையை அடியிலே குத்தியெடுத்த மண்கிடக்கின்ற கொம்பையுடைய கரிய கடாக்கள் தம்மிற் பொருத இடமகன்ற செய்யின்கண், தாம் உழப்படாத நுண்ணிய சேற்றை உழவர் ஒக்க மிதித்து நிரவினர்) என்று, உழவர்கள் வயலில் நீர் பாய்ச்சித் தொளிகலக்கி உழுது சேற்றை நிரவிப் பண்படுத்திய செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை (207 -11) கூறுகிறது.

கடைசியர் நாற்று நடுதலும் களைபறித்தலும்

தொளி கலக்கிப் பண்படுத்திய வயல்களில் கடைசியர் நெல்நாற்றை நடவு செய்தது பற்றியும் களைபறித்தது பற்றியும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ‘முடிநாறழுத்திய நெடுநீர்ச் செறு” என்று பெரும்பாணாற்றுப்படை அது குறித்துக் கூறுகிறது. வயலில் கடைசியர் களைபறித்தது குறித்தும் அந்நூல் கூறுகிறது. கடைசியர் களையாகப் பறித்த தண்டினை வளையலாக அணிந்து அழகுபார்த்ததனை ‘கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்” என்று புறநானூறு கூறுகிறது.

களைஞர் தந்த கணைக்கால் நெய்தல்
கட்கமழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக்
கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டவண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி
யீருடை யிருந்தலையாரச் சூடி’

(முடியாகக் கிடந்த நாற்றை நட்ட நெடிய நீரையுடைய செய்களில், களையைப் பறிப்பார் களையாகப் பறித்துப் போட்ட திரண்ட தாளையுடைய நெய்தலினது தேன்நாறுகின்ற புதிய பூவை வெறுத்தார்களாயின் அரும்புகள் சூழ்ந்த முள்ளையுடைய பூவைப் பறித்துக் கொண்டு அந்நிலத்தில் உள்ள தண்டாங் கோரையைப் பல்லாலே சவட்டிக் கிழித்து முடிந்த நாராற் கட்டின புனைதற்கினிய மாலையை ஈர்நிறைந்த கரிய தலையிற் சூடினர்) என்று, பெரும்பாணாற்றுப் படை (211-18) வயலிற்களை பறித்த கடைசியர் நெய்தற் பூவையும் முள்ளியின் பூவையும் தண்டாங்கோரையைப் பல்லால் சவட்டிக் கிழித்ததில் தொடுத்து ஈர் நிறைந்த தலையிற் சூடிக் கொண்டதைப் பேசுகிறது.

‘கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாணெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறு.”

(கொண்டையாகிய மயிரையும் குளிர்ந்த தழையுடையையும் உடைய கடைசியர், மலங்கு மீன் பிறழ்கின்ற செய்யில் நெய்தலையும் ஆம்பலையும் களைந்தனர்) என்று, கடைசியர் வயலில் ஆம்பலும் நெய்தலுமாகிய களையைப் பறித்தனையும் தழையுடையை அணிந்திருந்ததையும் புறநானூறு (61) கூறுகிறது.

களமர் வயலுக்கு நீர் பாய்ச்சுதல்

களமர் கடைசியர் கடையர் என்று அழைக்கப்பட்ட அடிமைகள் வரிசையாக நின்று இடா ஏற்றம், பூட்டைப் பொறி பிழா பன்றிப் பத்தர் முதலியவற்றால் குளங்களில் இருந்து வயல்களுக்குத் தண்ணீர் இறைத்த காட்சியைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

‘நீர்த் தெவ்வு நிரைத் தொழுவர்
பாடு சிலம்பின் மிசை ஏற்றத்
தோடு விளங்கும் அகலாம்பியிற்
கயனகைய வயல் நிறைக்கும்
மென்றொடை வன்கிழார்” - மதுரைக் காஞ்சி : 89 – 95

(வயல் தழைக்கும்படி நீரை நிறைத்தற்குக் காரணமான குளங்களில் நிரையாக நின்று தொழுவர்கள் நீரை இடாவால் முகந்து ஒலிக்கும் ஓசை : ஏற்றத்துடனே உலாவும் அகன்ற பன்றிப் பத்தரின் ஓசை: மெத்தென்ற கட்டுக்களையுடைய பூட்டைப்பொறியின் ஓசை : எருதுகள் பூண்ட தௌ;ளிய மணிகளின் ஓசை : பயிர்களிற் படியும் கிளி முதலியவற்றை ஓட்டும் ஓசை ஆகியன பற்றியும் சங்க இலங்கியங்கள் செய்தி கூறுகின்றன. பனையோலை யாற் செய்த பிழா என்னும் ஓலைப் பெட்டியால் உழவர் ஆற்றில் இருந்து வயலுக்கு நீர் இறைத்த செய்தியைச் சிலப்பதிகாரம் செப்புகிறது.

‘ஆம்பியும் கிழாரும் வீங்கிசை ஏற்றமும்” என்று அந்நூல் அது குறித்துக் கூறுகிறது.

‘வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை’ மதுரைக்காஞ்சி : 109 – 10

(யாறுகள் வெள்ளம் மாறாமல் வந்து விளைதல் பெருகுகையினாலே முற்றின நெல்லு காற்றடித்து அசைதலினாலே எழுந்த ஓசை, நெல்லரிவாரது ஓசை) என்று வயல்களில் வெள்ள நீர் பாய்ந்தமை குறித்தும் விளைந்த நெல்லைக் களமர் அரிந்தது பற்றியும் நூல்கள் கூறுகின்றன.

‘ஏர்பரந்த வயல் நீர்பரந்த செறு
நெல்மலிந்த மனை பொன்மலிந்தமறுகு” புறநானூறு : 338

என்று, நீர் நிறைந்த வயல்களில் ஏர்கள் உழுதமை குறித்தும் ஆண்டைகளின் மனைகள் நெல்லால் நிறைந்தமை குறித்தும் அவர்கள் வாழும் தெருக்கள் பொன்னால் நிறைந்தமை குறித்தும் சங்க இலக்கியங்கள ; கூறுகின்றன.

பயிர் பாதுகாப்பு

வேட்டைச் சமூகமாக வாழந்த மக்கள் மேய்ச்சல் சமூகமாக மாற்றமடைந்து உழவுத் தொழிலை மேற்கொண்டு வரகு தினை முதலியவற்றைச் சாகுபடி செய்த காலம் முதலே பயிர்களைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். குறிஞ்சி முல்லை நிலங்களில் வரகும் தினையும் பயிரிட்ட எயினர்கள் யானை மான், பன்றி முதலிய விலங்குளாலும் கிளி மயில் புறா முதலிய பறவைகளாலும் பயிருக்கு ஏற்படும் சேதங்களினின்றும் அவற்றைப் பாதுகாக்கப் பரண் அமைத்துக் காவல் காத்தனர், பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் காவற்பணியில் ஈடுபட்டனர். இதனை,

‘நெற்கொணெடு வெதிர்க்கணந்தயானை
முத்தார் மருப்பினிறங்குகை கடுப்பத்
துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்
நற்கோட் சிறுதினைப் படுபுள்ளோப்பி
எற்பட வருதியரென நீ விடுத்தலிற்
கலிகெழு மரமிசைக் சேணோன் இழைத்த
புலியஞ்சிதண மேறி யவண
சாரற் சூரற் றகைபெற வலந்த
தழலுந் தட்டையுங் குளிரும் பிறவும்
கிளிகடி மரபினூழூழ் வாங்கி
யுரவுக் கதிர் தெறூஉம்”

(நெல்லைத் தன்னிடத்தே கொண்ட நெடியமூங்கிலைத்தின்றற்கு மேல் நோக்கி நின்று வருந்தின யானை, அவ்வருத்தந் தீரும்படி முத்து நிறைந்த கொம்பிலே ஏறட்டு நான்ற கையையொப்ப, துய்யையுடைய, தலை வளைந்த ஈன்றணிமை தீர்ந்த கதிர்களை நன்றாகத் தன்னிடத்தே கொள்ளுதலையுடைய சிறிய தினையிலே வீழ்கின்ற கிளிகளை யோட்டி, பகற்பொழுது கழியாநிற்ப நீவீர் வருவிராக என்று கூறி நீ போக விடுகையினாலே யாங்களும் போய், ஆரவாரம் பொருந்தின மரத்தின் உச்சியிலே இராக்காலம் ஆகாயத்திருப்போன் பண்ணின புலியஞ்சுதற்குக் காரணமானதும் அவ்விடத்தன வாகிய மலைப்பக்கத்துப் பிரம்பாலே அழகுபெறத் தெற்றினதுமான பரணிலே ஏறித் தழலும் தட்டையும் குளிரும் பிறவுமாகியகிளியோட்டும் முறைமை யினையுடையவற்றை, மிகுதலையுடைய ஞாயிற்றின் கிரணங்கள் சுடும் வெம்மை விளங்கின்ற பொழுதிலே முறைமுறையே கையிலே வாங்கி ஓட்டினோம்) என்று குறிஞ்சி நிலத்தில் மகளிர் பகற்பொழுதில் பரண்மீதமர்ந்து கிளிகடி கருவிகளைக் கொண்டு பறவைகளை ஓட்டிக் காவல் காத்தமை பற்றி மதுரைக் காஞ்சி (35-45) கூறுகிறது.

‘வட்டவரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்” என்று புறநானூறு (28) இரவில் தினைப் புனங்காத்த எயினரைச் சேவல் கூவித்துயில் எழுப்பியது குறித்துக் கூறுகிறது. இவ்வாறு பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் தினைப்புனம் காத்தமை குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. அடிமைச் சமூகத்தில் மருதநிலத்தில் வயல்களில் விளைந்துநின்ற நெற்பயிர்களைப் பாதுகாக்கும் பணியில் அடிமைகளான ஆடவரும் மகளிரும் ஈடுபட்டிருந்தனர். இதனை,

‘கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து” - புறநானூறு 396

(கழிகள் சூழப்பட்ட, நெல் விளைந்து கிடக்கும வயலின் கண் அரித்த ஓசையை யுடைய பறையை முழக்குவதால் கதிர் கவரவரும் கிளி முதலிய பறவைகளை ஓட்டினர்) என்றும்

‘புதற்றளவில் பூச்சூடி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து” - புறநானூறு : 395.

(மகளிர் புதலிடத்தே மலர்ந்த தவள முல்லையின் பூவைத்தலைவிற் சூடிக் கொண்டு அரித்த ஓசையுடைய கிணைப்பறையைக் கொட்டி வயலில் விளைந்த நெற்கதிர்களை யுண்டற்குவந்து படியும் பறவைகளை யோட்டினர்) என்றும் புறநானூறு கூறுகிறது.

செம்பொன் மலைபோல் சிறப்பத்தோன்றும் நெற்பொலி

களமர் வயலில் நெல்லரிந்தது குறித்தும் சூடு அடுக்கிப் போரடித்துப் பொலிதூற்றியது குறித்தும் தூற்றிய நெல்லைச்செல்வர்மனைகளில் உள்ள நெற் கூடுகளில்கொண்டு போய்ச் சேர்த்தது குறித்தும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

‘கூனி குயத்தின் வாய் நெல்லரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவை இய குன்றாக் குப்பை’
(களமர் வளைந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லையறுத்து நாடோறும் கடாவிட்டு மேருவென்னும்படி திரட்டின தொலையாத நெற்பொலியை நெருங்கத்தெற்றின குதிரின்கண் வெற்றிடம் இல்லையாம்படி பெய்தனர்.) என்று பொருநராற்றுப்படை (242 – 48) கூறுகிறது.

கழனிகள் நீங்காத புதுவருவாயையுடையவை , அவற்றில் நெற்பயிர் விளைந்து முற்றியிருந்தது. பசுமையறும்படி முற்றின பெரிய கதிர்கள், அறுப்பார்க்கும் சூடாக அடுக்குவார்க்கும் பிணையலடித்துக் கடாவிடுவார்க்கும் பெரிதும் துன்பம் விளைப்பன, குளவிகள் கொட்டினாற் கடுப்பது போலக் கடுக்கும் தன்மையன, களமர் அக்கதிர்களின் திரண்டதாளையறுத்துக்கட்டுக்களாகக் கட்டிப் பிணையலடித்தனர். எருதுகள் போன பின்பு வைக்கோலையும் கூளத்தையும் நீக்கினர். ஈரம் உலரா நிற்க, பொலியை மேல் காற்றிலே கையாலே தூற்றினர். தூற்றிய நெல் மேருமலை போலக் குவிந்து கிடந்தது. இக்காட்சியை,

‘நீங்காயாணர் வாங்கு கதிர்க் கழனிக்
கடுப்புடைப்பறவைச் சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செய் நெல்லின்
தூம்புடைத்திரள் தாள் மிதுத்த விளைஞர்
பாம்புறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலிபெறு வியன்களமலிய வேற்றிக்
கணங் கொள் சுற்றமொடு கைபுணர்ந்தாடும்
துணங்கையம் பூதம் துகிலடுத்தவை போல்
குழுமுநிலைப் போரின் முழு முதல் தொலைச்சிப்
பகடூர் பிழிந்த பின்றைத்துகள் தப
வையுந் துரும்பும் நீக்கிப் பைதறக்
குடகாற்றெறிந்த குப்பை வடபாற்
செம்பொன்மலையின் சிறப்பத்தோன்றும்” என்று பெரும்பாணாற்றுப்படை (228-241) காட்டுகிறது.

வயலில் களை பறித்த கடைசியர், வயலில் பிறழ்ந்து துள்ளிய மலங்கு, வாளை முதலிய மீன்களைத் தளம்பு என்றும் சேறு குத்தியால் பிடித்து வந்தனர். அதனைத் துண்டு துண்டாக அறுத்துச் சமைத்ததனைப் புதிய நெல்லில் சமைத்த வெள்ளிய சோற்றுக்கு மேலீடாகக் கொண்டு விலாப்புடைக்கத் தின்ற களமர், குனியமாட்டாதவராய், சூட்டை இடும் இடம் அறியாமல் தடுமாறினர் என்ற செய்தியை,

‘கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாணெய்தல் ஆம்பலொடுகட்கும்
மலங்குமிளிர் செறுவிற்றளம்பு தடிந்திட்ட
பழனவாளைப்பரூ உக்கட்டு ணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கையுறையாக
விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடுகதிர்க் கழனி சூடு தடுமாறும்
வன்கை வினைஞர்” – புறநானூறு :61
என்று கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் நகைச்சுவை தோன்றக் கூறினார்.

ஆமை முதுகில் அரிவாள் தீட்டல்

களமர் வயலில் நெல்லறுத்துக் கொண்டிருந்தபோது அரிவாள் முனை மழுங்கிவிட்டது. அதனால் அவர்கள் விரைந்து அறுக்க முடியவில்லை. அரிவாளைத் தீட்டிக் கூராக்கினால் தான் தொடர்ந்து விரைவாக அறுக்க முடியும். அவ்வாறு ‘மறத்தோடு அரியும்படி (விரைந்து அரியும்படி) நிலவுடைமையாளரான ஆண்டைகள் அடிமைகளான களமரை வற்புறுத்தி ஏவினர். எனவே களமர் வயலில் கிடந்த ஆமையின் முதுகில்முனை மழுங்கிய அரிவாளைத் தீட்டிக் கொண்டார்களாம்.
‘களமர் ஏன் ஆமை முதுகில் அரிவாளைத் தீட்டினர்? வயலில் இருந்து வெளியேறி மேட்டு நிலத்துக்கு வந்து கல்லில் தீட்டினால் என்ன? என்ற வினாக்கள் இயல்பாக எழும். அறுவடையின் போது வேலையை இடையில் நிறுத்தி விட்டுக் களமர் அரிவாளைக் கூர் தீட்டுவதற்காக வயலில் இருந்து வெளியேறினால் வேலை தாமதப்படும். அதனால் ஆண்டைகள் அதை அனுமதிக்கவில்லை. வயலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாத நிலையில் வேறு வழியின்றிக் களமர் வயலில் கிடந்த ஆமையின் முதுகில் அரிவாளைத் தீட்டிக் கொண்டார்கள் என்பதே உண்மை. இக்காட்சியைப் புறநானூறு (379) தெளிவாகக் காட்டுகிறது.

‘நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கிற்
பின்னை மறத்தோடரியக் கல் செத்து
அள்ளல் யாமைக் கூன்புறத்துரிஞ்சும்
நெல்லமல் புரவு ‘ என்பது அந்நூல் காட்டும் அரிய காட்சியாகும்.

களமர் அரிவாளைக் கூர்தீட்டிக் கொள்ள வயலில் இருந்து வெளியேறுதலும் கூடாது, விரைந்து அறுத்திடவும் வேண்டும். எனவே களமர் ஆமைமுதுகில் அரிவாளைக் கூர் தீட்டிக் கொண்டார்கள். அக்காலத்தில் அடிமை எஜமானர்களான ஆண்டைகளால் அடிமைகளான களமர் எவ்வளவு கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். என்பதை ‘பின்னை மறத்தோடரிய’ என்னும் தொடர் உணர்த்துகிறது. இதனை’மடியாவினைஞர் (ஓய்வறியாத உழைப்பாளிகள்) என்னும் தொடர் மேலும் வலியுறுத்துகிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சைத் தரணியில் நாற்று நடுதல் களைபறித்தல் முதலிய பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்கள், பசியால் அழுகின்ற கைக்குழந்தைக்குப் பால் கொடுத்துப்பசி போக்கி அழுகையை அமர்த்துவதற்காக வேலையின் இடையில் வயலை விட்டு வெளியேறுவதைப் பண்ணையாளர்களான ஆண்டைகள் அனுமதிப்பதில்லை. செங்கொடி இயக்கத்தின் நீண்ட நெடிய வலிமைமிக்க போராட்டத்திற்குப் பிறகுதான் அக்கொடிய நிலைமை மாறியது என்பது அண்மைக் கால வரலாறு நமக்கு அறிவிக்கும் செய்தியாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சங்ககாலத்தில் அடிமைச் சமூகத்தில் தோன்றியிருந்த அக்கொடிய வழக்கம் இருபதாம் நூற்றாண்டில் செங்கொடிஇயக்கம் தலையிட்டுத் தீர்க்கும் வரையிலும் நீடித்திருந்தது. நாகரிகம் வளர்ந்து விட்டது. என்று கருதும் இருபதாம் நூற்றாண்டிலும் இக்கொடுமைகள் நீடித்திருந்தன என்னும் போது, மனிதன் அநாகரிக நிலையில் வாழ்ந்த அடிமைச் சமூகத்தில் அடிமைகளான களமரின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பது கற்பனைக்கும் எட்டாததாகும்.

வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் மனிதன் வாழ்ந்த காலத்தில் காட்டைத் திருந்தி வரகும் தினையும் விளைவித்தான். விளைந்து வந்த வரகும் தினையும் குதிர்களில் சேமிக்கப்பட்டன. சேமிக்கப்பட்ட அவை அனைவருக்கும் பொதுவாக இருந்தன. அதனை; அடையாளமாக அக்குதிர்கள் பொது இடமாகிய அரணின் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அவை யானைக் கூட்டம் போல் காட்சியளித்தன என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

அடிமைச் சமூகத்தில் நெல் விளைவிக்கப்பட்டது. அந்நெல் நெற் கூடுகளில் சேமிக்கப்பட்டது. அக்கூடுகள் ஆண்டைகளின் வளமனைகளில் தான் அமைக்கப்பட்டிருந்தன. ஏணிக்கு எட்டாத உயரமுடைய அக்கூடுகளில் களமர் தாம் விளைவித்த நெல்லைக் கொண்டு போய்ப் பெய்து சேமித்தனர். ஆனால் நெல்லை விளைவித்த களமர்க்கு அதன் மீது உரிமை ஏதும் இல்லை. உற்பத்தி செய்த களமர்க்கு நெல்லின் மீது இருந்த உரிமை மறுக்கப்பட்டது. நெல்தனியுடைமை ஆக்கப்பட்டு விட்ட செய்தியை இலக்கியங்கள் நமக்குத் தெளிவு படக்கூறுகின்றன.

‘ஏணி எய்தா நீணெடு மார்பில்
முகடு துமித் தடுக்கிய பழம்பல்லுணவிற்
குமரி மூத்த கூடோங்கு நல்லில்”
(ஏணிக்கு எட்டாத நெடிய வடிவினையும் தலையைத்திறந்து உள்ளே சொரியப்பட்ட பலவாகிய பழைய நெல்லினையும் உடைய அழியாத் தன்மையவாய், முதிர்ந்த கூடுகள் வளர்ந்த நல்ல இல்) என்ற பெரும்பாணாற்றுப்படை (245- 47) வரிகள், நெல் தனியுடைமை ஆக்கப்பட்டு விட்டதற்கும். பசியோடும், பட்டினியோடும் உழைக்கின்ற மக்களுக்கு வழங்கப்படாமல் நெடுங்காலம் கூடுகளில் கிடந்தது என்பதற்கும் சான்றளிக்கின்ற சாசன வரிகளாகத் திகழ்கின்றன.

Pin It