மகாமகம் அல்லது மாமாங்கம் என்பதாக ஒரு பெரிய திருவிழா அடுத்த மாதம்(மார்ச்சு மாதம்) 10 தேதியில் கும்பகோணத்தில் நடத்த ஏற்பாடுகள் வெகு துரிதமாக நடைபெற்று வருகின்றது. சுமார் ஒரு லட்சம் ஜனங்களுக்கு மேலாகவே வந்து கூடுவார்கள் என்று கணக்கிடப்பட்டு, ரயில்வேக்காரர்கள் பல பிளாட்டுப்பாரங்களையும், கொட்டகைகளையும் போடுகிறார்கள். அதற்குத் தகுந்தபடி கூட்டங்களை வரவழைக்க அநேகவித சித்திரப் படங்களை அச்சடித்து ரயில்வே ஸ்டேஷன்களின் மேடைகளில் எல்லாம் கட்டித் தொங்க விட்டும், பத்திரிகைகளுக்குப் பணங்கொடுத்துப் பிரசுரிக்கும் படி செய்தும் மற்றும் பல வழிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள்.

சாதாரணமாகக் கும்பகோணமானது ஒரு அழகான பட்டணம் என்றோ, சுகாதார வசதியான பட்டணமென்றோ, வேறு ஏதாவது ஒரு வழியில் மக்கள் அறிவுக்கோ, தொழிலுக்கோ, பயன்படத் தகுந்த விசேஷம் பொருந்திய பட்டணமென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. அது ஒரு புராதனமான பட்டணம் என்பதோடு, நாளுக்கு நாள் க்ஷீண திசை அடைந்துவரும் தோற்றமுடைய பழங்கால முறைக் கட்டடங்களையும் உடைய ஊராகும். அதில் வசிக்கும் மக்களோ பெரும்பாலோர் பார்ப்பனர்களும் “மேல் ஜாதி“ மிராசுதாரர்களுமாகும்.

கும்பகோணப் பார்ப்பனர்கள் என்றால் மிக தந்திரசாலிகள் என்பார்கள். கும்பகோணம் மாத்திரமல்ல தஞ்சாவூர் ஜில்லா முழுவதுமே உள்ள பார்ப்பனர்கள் பழைய ராஜாவின் தர்மத்தினாலும் மற்றும் தஞ்சை ஜில்லாவிலேயே ஏற்பட்டிருந்த இரண்டு முதல்தர காலேஜினாலும் சாப்பாடும், கல்வி யும் சுலபமாய் இருக்கும் இடத்திலேயே கிடைக்கக்கூடிய நிலைமை இருந்த தால் படித்துப் பட்டம் பெறவும், அதற்கேற்ற உத்தியோகங்கள் பெறவும் சௌக ரியம் ஏற்பட்டு இந்த மாகாணத்தில் அவர்களே முக்கியமானவர்களாய் இருந்து வந்திருக்கிறார்கள்.

periyar 250சுமார் 25 வருஷங்களுக்குமுன் தமிழ் நாடு மாத்திரமல்ல சென்னை மாகாண முழுவதிலும் தஞ்சை ஜில்லா பார்ப்பனர்களே திவான்களாகவும், பிரபல வக்கீல்களாகவும், முன்சீப், ஜட்ஜி, டிப்டி கலெக்டர் போலீஸ் இன்ஸ் பெக்டர், சூப்பிரண்டுகளாகவும் மற்றும் பல பெரிய பதவி உடையவர்களாகவும் ஆக நேர்ந்து பிரபலமாகி விட்டார்கள். இந்தக் காரணங்களால் கும்பகோண பார்ப்பனர்களுக்கு அதிகமான விளம்பரம் ஏற்பட வசதியாகி விட்டது. அங்குள்ள மிராசுதாரர்களும், ஏறக்குறைய பார்ப்பனர்களை காப்பியடித்து தங்களையும் மேல்ஜாதிக்காரர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதோடு நின்றுவிட்டார்களே தவிர, கல்வியில் அவர்களுடன் போட்டி போடவோ, உத்தியோகம் பெறவோ முடியாதபடி பார்ப்பனர்கள் செய்து வந்த சூழ்ச்சியை வென்று முன்னேற முடியவில்லை. ஆதலால் பணம் சேர்ப்பதிலும், பூமியை பெருக்குவதிலும் மாத்திரம் கவலைகொண்டு ஆள் ஒன்றுக்கு 1000 வேலி 2000 வேலி என்பதாக நிலத்தை பெருக்கிக் கொண்டார்கள். இரண்டு கூட்ட மும் சிறிதாவது சரீரத்தினால் உழைக்காமல், ஏழைகள், உழைப்பாளிகள் ஆகியவர்களின் பாட்டினாலேயே வாழ்ந்து வருகிறார்கள். இதைத் தவிர மற்றபடி அந்த ஜில்லாவுக்கும், கும்பகோணத்துக்கும் வேறு உண்மையான யோக்கியதை ஒன்றும் கிடையாது.

ஆனால் மற்றொரு யோக்கியதையும் உண்டு. அது மேற் சொன்னவை களைவிட மிகவும் மோசமான யோக்கியதையேயாகும். அதென்னவென்றால் தஞ்சை ஜில்லாவிலுள்ள ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு விசேஷ ஸ்தலங் களாகும். பாடல் பெற்ற ஸ்தலங்களாகவும், பூலோக வைகுண்டமாகவும், பூலோக சுவர்க்கமாகவும் மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய nக்ஷத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள், புண்ணிய மூர்த்தங்கள் என்பவைகள் எல்லாம் தஞ்சை ஜில்லாவிலேயே ஒவ்வொரு கிராமத்தில் ஒவ்வொன்று பிரதி பலிப்பதாக கதைகளும், புராணங்களும் கர்ண பரம்பரை விசேஷங்களும் உண்டு. தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள் படித்துவிட்டு வெளியிடங்களுக்கு சென்று ஆங்காங்குள்ள செல்வங்களை கொள்ளைகொண்டு போய் சேர்ப்பது ஒன்று, கிராமங்கள் தோரும் புண்ணிய nக்ஷத்திரங்களும், பாடல் பெற்ற nக்ஷத்திரங்களுமாய் இருப்பதால் மற்ற ஊர்களில் இருக்கும் மூடர்கள் எல்லாம் பாடுபட்டுத் தேடிய பணங்களை மூட்டை கட்டிக் கொண்டுபோய் அந்த ஜில்லாவில் அழுதுவிட்டு வரும் மடத்தனம் இரண்டு. ஆகிய இவைகளால் மாத்திரமல்லாமல், மைசூர், குடகு தேசத்தில் இருந்து வரும் காவேரியானது சேலம் கோயமுத்தூர் ஜில்லா வழியாக வந்தாலும் சேலம் ஜில்லாகாரர்களுக்கு குடிப்பதற்குக்கூட மார்க்கமில்லாமல் செய்துவிட்டும், கோயமுத்தூர் ஜில்லாக்காரருக்கு ஒரு செண்டு பூமிகூட பயிராவதற்கு உதவா மல்படி ஏமாற்றி விட்டு எல்லா தண்ணீரும் நேரே தஞ்சை ஜில்லா சென்று ஜனங்கள் வெளிக்கு போவதற்குக் கூட இடமில்லாமல் எல்லா நிலமும் நஞ்சை பயிராகும்படியும் செய்து கொண்ட சூட்சியால் ஏற்பட்ட லாபம் மூன்று. இந்தப் படியாக “இயற்கை” வளம் பெற்ற தஞ்சை ஜில்லாவுக்கு மகாமக விசேஷம் என்னும் ஒரு புரட்டு யோகமும் சேர்வதில் அதிசயமொன்று மில்லை. ஆனால் இப்போது நாம் இதை ஏன் எடுத்துக்காட்ட வருகிறோம் என்றால், நமது மக்கள் இத்தனை காலம் தான் மூடர்களாய், மடையர்களாய், கடையர்களாய் இருந்து இவ்விதப் புரட்டுகளுக்கும், சூட்சிகளுக்கும் ஆளாகி, நஷ்டமும், கஷ்டமும், இழிவும், ஏமாற்றமும் அடைந்து வந்தோம் என்றாலும் இனியும் பாரம்பரியமாய் தலைமுறை தலைமுறையாய் அடைய வேண்டுமா என்பதை ஞாபகப்படுத்தவே இதை எழுதுகிறோம்.

மகாமகம்

தோழர்களே! மகாமகம் என்றால் என்ன? என்பதை சற்று விசாரித்துப் பாருங்கள். இதை அறிவதற்காக நாம் ஆவல் பட்டு தேடினோம். கும்பகோண ஸ்தல புராணம் என்பதில் இருப்பதாக அறிந்தோம். அதை வரவழைத்துப் பார்த்தோம். அதில் உள்ளதை வெளியிடுகின்றோம்.

“கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதா வரி, சரயு, தாமரபரணி” ஆகிய ஒன்பது நதிகளும் ஒன்பது கன்னிகை களாக வெளி வந்து, வெள்ளியங்கிரிக்குச் சென்று பரமசிவனை அடைந்து, “உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் எவ்வளவோ கொடியதாகிய பாவங்களைச் செய்து விட்டு எங்களிடத்தில் வந்து ஸ்நானம் செய்து அவர்களது பாவங்களை எங்களுக்கு கொடுத்து தீர்த்துக் கொண்டு போய் விடுகிறார்கள். அந்தப் பாவங்களை யெல் லாம் பெற்றுக் கொண்ட நாங்கள் எப்படி அவைகளை போக்கிக் கொள்ளுவது” என்று கேட்டார்கள். அதற்கு பரமசிவனார், “கும்ப கோணத்திலே, தென்கிழக்கிலே ஒரு தீர்த்தம், உண்டு. 12 வருஷத்துக்கு ஒரு முறை மாசி மாதம் மகாமக நாளன்று அதில் குளிப்பீர்களானால் உங்கள் பாவங்கள் துலைந்து போகும்” என்று சொன்னார். அந்த 9 கன்னிகைகளும் “கும்ப கோணம் எங்கே இருக்கின்றது” என்று கேட்டார்கள். அதற்கு பரமசிவனார் அந்த 9 கன்னிகைகளையும் பார்த்து “நீங்கள் காசிக்குப் போயிருங்கள், அங்கிருந்து நான் விஸ்வேஸ்வரன் என்னும் பெயருடன் உங்களை கும்பகோணத்திற்கு அழைத்துப்போகிறேன்” என்று சொன்னார். அந்தப்படியே கன்னிகை கள் காசிக்குப் போயிருந்தார்கள். பரமசிவனார் அவர்களை காசி யிலிருந்து கும்ப கோணத்துக்கு அழைத்துச் சென்று மகாமக குளத்தைக் காட்டி குளிக்க வைத்தார். பிறகு சிவபெருமானும் அந்த கன்னிகைகளும் கும்பகோணத் திலேயே கோவில் கொண்டு விட்டார் கள்.” ஆதலால் இதில் அந்த காலத்தில் குளித்தவர்களுக்கு சர்வ பாவ மும் துலைந்து சர்வ மங்களமும் உண்டாகும்” என்று கண்டிருக் கின்றது.

தோழர்களே! இதுதான் கும்பகோண ஸ்தல மகத்துவமும், தீர்த்த மகத்துவமும், கோவில் மகத்துவமும் ஆகும். இதற்கு அப்புறம் அந்தக் குளத்தில் எப்படிக் குளிப்பது. அதற்காக பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியது என்கின்ற விஷயங்களும் எந்தெந்த இடத்தில் குளிப்பது, எந்தெந்த சாமியை எப்படி எப்படி கும்பிடுவது என்கின்ற விஷயமும் இருக்கின்றது.

இந்தக் கதையை ஆதாரமாக வைத்த இந்த மகாமக உற்சவத்திற்காக எவ்வளவு ஆர்பாட்டங்கள், எவ்வளவு விளம்பரங்கள், எவ்வளவு பணச் செலவுகள், எவ்வளவுகஷ்டங்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்துக் கள் மடையர்கள், அஞ்ஞானிகள், மூடர்கள் என்று ஒருவன் சொன்னால் உடனே கோபப்பட்டுக் கொள்ளத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கின் றோமே அல்லாமல் அறிவைக் கொண்டு பார்க்கின்றோமா?

இந்த கும்பகோணத்துக்கும், அங்குள்ள மாமாங்கக் குளத்திற்கும் உள்ள விசேஷம் போலவே உலகத்தில் உள்ள அனேக சாக்கடைகளிலும், பட்டிக் காடுகளிலும், குப்பை மேடுகளிலும் உள்ள குழவிக் கல்லுகளுக்கும், நீரோடைகளுக்கும், குளங்களுக்கும், குட்டைகளுக்கு மெல்லாம் புராணங் களும், கதை ஆதாரங்களும், ஐதீகங்களும் இருந்து வருகின்றன. பொதுவாக இது போன்ற எந்தக்காரியங்களுக்கும் விசேஷம் என்பதெல்லாம் இரண்டே இரண்டு வாக்கியங்கள் தான் அடங்கி இருக்கின்றன.

1. சர்வ பாபங்களும் நிவர்த்தியாகிவிடும்.

2. வேண்டியதெல்லாம் அடையலாம்.

என்கின்றவைகளே யாகும்.

இந்த இரண்டு காரியமும் யோக்கியமான காரியமாயிருக்குமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

மனிதன் செய்கின்ற பாவமெல்லாம் இந்த மாதிரியான காரியங்களால் தீர்ந்து போவதாயிருந்தால், உலகத்தில் எந்த மனிதனாவது பாப காரியங் களைச் செய்யத் தவருவானா? தயங்குவானா? என்று யோசித்துப் பாருங்கள்.

மனிதனுக்கு வேண்டிய - அவன் ஆசைப்படும் படியான காரியங்கள் எல்லாம் இந்த மாதிரியான சிறு காரியங்களால் கை கூடி விடுவதாய் இருந்தால் மனிதனுடைய முயற்சி - நடத்தை - ஒழுக்கம் என்பவைகளுக்கெல்லாம் அவ சியமும், நிபந்தனையும், வரையரையும் எதற்காக வேண்டும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

நிற்க, பாவமுள்ள மனிதர்கள் நதிகளில் ஸ்நானம் செய்ததால் நதி களுக்கு அந்தப்பாவங்கள் ஒட்டிக் கொண்டது என்பதில் ஏதாவது அறிவோ, உண்மையோ இருக்க முடியுமா? அந்த நதிகள் அந்தப் பாவத்தை தொலைக்க மற்றொரு தீர்த்தத்தில் போய் குளிப்பது என்று மகாமக தீர்த்தத்துக்கு வந்து குளிப்பதானால் இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணையம் இருக்கின்றதா? என்று யோசித்துப்பாருங்கள். இத்தனை பாவங்களையும் ஏற்றுக் கொண்ட மகாமக தெப்பக்குளம் அதன் பாவத்தைத் தீர்க்க எந்த உருவெடுத்து எந்த குளத்தில் போய் குளிப்பது என்பதையும், பிறகு அந்தக்குளம் வேறு எந்த குளத்துக்குப் போய் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்பதையும் யோசித்தால் கடுகளவு அறிவுள்ளவனாவது இதை ஏற்க முடியுமா என்று பாருங்கள். இதையெல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாப புண்ணியத்தின் பேரால், கடவுள் பேரால், தீர்த்தம் ஸ்தலம் மூர்த்தி என்னும் பெயர்களால் மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டு, கடையர்கள், மடையர்கள் ஆக்கப் படுகின்றார்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

மற்றும் அந்த புராணத்திலேயே இந்த மகாமகக் குளத்துக்குள் வடக்கு பாகத்தில் 7 தீர்த்தங்கள் இருப்பதாகவும், கிழக்கு பாகத்தில் 4 தீர்த்தங்கள் இருப்பதாகவும், நடுமத்தியில் 660000000 அருபத்தி ஆறு கோடி தீர்த்தம் இருப்பதாகவும், இந்த மகாமக குளத்தில் முழுகினால் இத்தனை தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்குமென்றும் எழுதி, அந்தப்படி ஒரு சித்திரமும் வரையப் பட்டிருக்கின்றது. இது எவ்வளவு பரிகசிக்கத்தக்க விஷயம் என்று பாருங்கள். இதை எழுதினவன் எவ்வளவு அயோக்கியன் அல்லது எவ்வளவு மூடன் என்பதல்ல இப்போதய நமது கேள்வி. மற்றென்ன வென்றால் இதைப் படித்துப் பார்த்து இதன்படி நடப்பார்கள் என்று நம்பிய மக்களை இவன் எவ்வளவு முட்டாளாகவும், அடிவண்டலாகவும் கருதி இருக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வியாகும்.

தீர்த்தம் என்றாலும், நதி என்றாலும், குளம் என்றாலும் என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். நதி என்றால் மழைபெய்வதால் ஏற்படும் வெள்ளங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஓடை அல்லது நீர்போக்காகும்.

குளம் என்றால் இந்தமாதிரி ஓடையில் இருந்து வழி வைத்து தண்ணீர் நிரப்புவதோ, அல்லது மழை, வெள்ளத்தால் ஊரில் உள்ள அசுத்தங்களையும், கசுமாலங்களையும் அடித்துக் கொண்டு வந்து குளத்தில் விழுந்து தேங்கி யிருப்பதேதான். மற்ற குட்டித்தீர்த்தங்கள் என்பதும் கிணற்றுக்குநீர் ஊற்றம் போன்ற ஊற்றேயாகும். இந்தத் தண்ணீர்களுக்கு எல்லாம் அந்தந்த இடத்தை அனுசரித்த குணங்களேதான் உண்டு. மற்றபடி அவற்றில் ஒருமனிதன் செய்யும் பாவம் என்பதைப் போக்கவோ, அவன் ஆசைப்பட்டதைக் கொடுக் கவோ ஆன சக்திகள் எப்படி இருக்கக்கூடும் என்பது ஒரு மனிதனுக்கு தெரியாதா என்றுதான் கேட்கின்றோம்.

மாமாங்க குளம் என்பது மேல் கண்டமாதிரியான ஒரு சாதாரண தெப்பக்குளம். மகாமக சமயத்தில் அதில் உள்ள தண்ணீர் அவ்வளவையும் இறைத்து விட்டு வெறும் அடிவண்டலையும், சேற்றையும் மாத்திரம் மீதி வைத்து அதிலும் கந்தகப் பொடியைக் கலக்கி விடுவார்கள். அந்த சேரானது கருப்புக் களிமண் போல் இருக்கும். அந்தக் குளத்தின் விஸ்தீரணமோ சுமார் 500 அடி சதுரம் இருக்கலாம். அடிமட்டம் சுமார் 200 அடி சதுரம் இருக்கலாம். இதில் லக்ஷம் பேர்கள் குளிப்பது என்றால் எப்படி சாத்தியமாகும். அந்தக் குளத்தில் இறங்கி அந்த சேற்றில் கொஞ்சம் எடுத்துச் சரீரத்தில் பூசிக்கொள்ள வேண்டியதுதான். பிறகு இந்த அசிங்கம் போவதற்கு வேறு குளத்தில் குளிக்கவேண்டியதுதான். இதுதான் வழக்கமாம். ஒரு கிறிஸ்தவறோ, ஒரு மகமதியறோ இந்தப்படி செய்தால், அதை நாம் பார்க்க நேர்ந்தால் அப்போது நாம் என்ன என்று சொல்லுவோம்.

மிஸ். மேயோ நமது பழக்க வழக்கங்களைப் பற்றியும், சடங்குகளைப் பற்றியும் தீர்த்தங்களைப் பற்றியும் எழுதியதைப் பார்த்து கோபித்துக் கொண்டோம். ஆனால் இந்த மாதிரி சேற்றில் குளிப்பதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்று கருதி இருக்கிற முட்டாள்தனமான பேராசைக்காக நாம் வெட்கப் படுவதில்லை என்றால் பிறகு எந்த விதத்தில் நாம் அறிவாளிகள், யோக்கியர்கள், மனிதத் தன்மையுடையவர்கள் என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாமாங்கத்தால் எத்தனை லக்ஷ ரூபாய் ரயில்க் காரன் கொள்ளை அடிக்கப் போகிறான்? எத்தனை லக்ஷ ரூபாய் பார்ப்பான் கொள்ளை அடிக்கப் போகிறான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இவை ஒரு பக்கம் இருப்பதோடு கூட்ட நெருக்கடியில் உயிர்ச்சேதம் எவ்வளவு, திருட்டு எவ்வளவு, இவை தவிர இப்பொழுதே அங்கு கும்ப கோணத்தில் காலராவும் அம்மையும் வந்து விட்டது. இதற்காககொட்டகை கட்டி அங்கு கட்டிலும் படுக்கையும் போட்டாய் விட்டது. பிளேக்குக்கும் கொட்டகையும் போட்டாகி விட்டது. அதுவும் தான் தன் பாபத்தைத் தீர்த்துக் கொள்ள அங்குவரப் போகின்றது. சுடுகாட்டுக்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கி வைத்து அங்கு சில குளிகளும் தயாராய் முனிசிபாலிட்டியார் வெட்டி வைத்திருக்கிறார்கள்.

கும்பகோணத்துக் கொசுக்களோ அந்த ஊர் பார்ப்பனர்களையும் குச்சிக்காரிகளையும்விட எத்தனையோ பங்கு மோசமானவைகள் என்று சொல்லலாம். ஏனெனில் இது அவர்களை விட மோசமாக வெளியில் இருந்து வருகின்றவர்களின் இரத்தத்தை உரிஞ்சக் காத்துக் கொண்டு இருக்கின்றது. மாமாங்கத்துக்கு போய் வந்தவனுக்கு வரப் போகின்ற மலேரியா காய்ச்சல் அடுத்த மாமாங்கம் வந்தாலொழிய தீராது. இந்த நிலையில் உள்ள மகாமகம் என்ன புண்ணியத்தைக் கொடுக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

(குடி அரசு - தலையங்கம் - 12.02.1933)

Pin It