கடவுளாகட்டும் மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் வைத்துக்கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்குப் பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம்-பொதுச் சொத்து.

நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய்விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம்பவில்லை. அதைக் கொழுக்கட்டை என்று சொல்லுகிறேன். நான் போய்விட்டுப் போகிறேன்; உங்களுக்கொன்றும் நஷ்டமில்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே, உங்களுக்கென்ன நஷ்டம்?

ஆனால் ஒழுக்கமில்லையென்றால் என்னவாகும் பாருங்கள்? நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது, இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்குப் பேர்தானே?

ஒழுக்கமாக இல்லை என்றால் எங்கெங்கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான்; நாணயமாக இல்லையெனில் யாரையோ ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கின்றான். உண்மையாக இல்லை என்றால் என்னத்தையோ எவனையோ ஏமாற்றிப் பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்?

ஆகவே ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களில் குற்றவாளியாக இருந்தானானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குச் கேடு விளைந்திருக்கும். இது முக்கியமில்லை.

பக்தி, கடவுள் நம்பிக்கை மதக் கோட்பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கியமென்றால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் அதனாலே?

-----------------

தந்தை பெரியார் 24-11-64 - பச்சையப்பன் கல்லூரிப் பேருரை

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It