தாய்மார்களே! பெரியோர்களே! முதலாவது உங்களுக்குச் சொல்கிறேன். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் எல்லாம் செய்தாலும்கூட இந்த வாழ்த்துக் கூறுதல் என்ற மூட நம்பிக்கையைப் போக்க முடியவில்லை. மற்ற சடங்குகளை எல்லாம் நிறுத்தி விட்டேன். இதை நிறுத்த முடியவில்லை. கொஞ்சம் நாளாகும். மக்களுக்கெல்லாம் நல்ல அறிவு வர வேண்டும். அப்போது இதுவும் தானாக மாறி விடும். என்னைப் பொறுத்தவரையில் இந்த வாழ்த்துக் கூறுவது என்பதில் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. வாழ்த்துக் கூறுவதை நம்பினால் வசையையும் நம்பத்தானே வேண்டும். அதற்கு என்ன பலனோ, அதே பலன்தானே இதற்கும் உண்டு!

சாதாரணமாக நடைபெறுவது போலல்லாமல் இது கொஞ்சம் மாறுதலாக நடைபெறுகிறது. நல்ல அறிஞர்கள், பெரியவர்கள் எல்லாம் இம்முறையைக் கையாண்டு வருகிறார்கள். 40 ஆண்டு காலமாகப் பொதுமக்களிடையேயும் இந் நிகழ்ச்சி பரவலாக நடைபெற்று வருகிறது. இதுதான் - இந்த முறைதான் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பதில்லை. இந்த முறையை 1967-ஆம் வருட மாடல் என்று தான் சொல்லுவேன். இந்த முறை நமது இயக்கத்திற்கோ, கொள்கைக்கோ முடிவான முறையுமல்ல. தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்ப மாற்றிக் கொண்டு செல்ல வேண்டியது தான்.

நான் நினைக்கிறபடி நடக்க வேண்டுமானால் திருமணம் என்பதே சட்ட விரோதமான செய்கையாகும். இந்த மாற்றத்திற்குக் காரணமெல்லாம் பழமையை மாற்ற வேண்டுமென்பதோ நமக்கென்று ஒரு முறை வேண்டுமென்பதாலோ அல்ல! இதுவரை பெரும்பாலான மக்களால் நடத்தப்பட்டு வரும் முறையைப் பற்றிய விளக்கம் கிடையாது. சரித்திரம் கிடையாது. நடைபெறும் நிகழ்ச்சிக்குத் தமிழில் ஒரு சொல்லே கிடையாது. முதலில் நடைபெற்ற இந்திப் போராட்டத்திற்குப் பின்தான் திருமணம் என்ற சொல்லே வந்தது.

அதற்கு முன் கல்யாணம், - விவாகம், - தாரா முகூர்த்தம் -_ கன்னிகாதானம் என்கின்ற வடமொழிச் சொற்கள்தான் வழங்கி வந்தன. தமிழர்களுக்குக் கல்யாணமே கிடையாதா? அவர்கள் குடும்பமாக வாழவில்லையா? என்று கேட்கலாம். இம்முறை எதற்காகப் பயன்படுகிறது என்று பார்ப்போமானால் சட்டப்படி _- மதப்படி _- சாஸ்திரப்படி _- சம்பிரதாயப்படி _- ஆஸ்திகர்கள் கருத்துப்படி தனது வாழ்க்கைக்கு ஓர் ஆண், ஒரு  பெண்ணை அடிமை கொள்கிற நாள்தான் திருமணம் என்பதோடு,  பகுத்தறிவு உள்ள மனிதனின் அறிவை நாசமாக்கி மூட நம்பிக்கையை, முட்டாள்தனத்தை அவன் இரத்தத்தில் புகுத்தி, அவனை மடையனாக்கவும், மூன்றாவதாக ஜாதியைக் காப்பாற்றவுமேயாகும்.

அதாவது, பார்ப்பான் பார்ப்பானாகவே சமுதாயத்தில் எந்தவித உழைப்பும் இன்றி வாழவும், பறையன் பறையனாக, சக்கிலி சக்கிலியாக இப்படி அவனவனும் தங்கள் ஜாதிப்படி இருக்க வேண்டும், ஒன்று சேரக் கூடாது என்கின்ற தன்மையில் ஜாதி காப்பாற்றப்படுகிறது. முன்னெல்லாம் சொல்வார்கள், குலத்திலே குரங்கைக் கொள் என்று. குரங்கு போல இருந்தாலும் பரவாயில்லை. அது ஜாதியிலிருந்தால் கட்டிக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். அவ்வளவு ஜாதி வெறி இருந்தது.

இவற்றைப் பார்க்கும் போது மூன்று காரியங்களை அடிப்படையாகக் கொண்டு தான் பழைய முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒன்று, பெண்ணை அடிமையாக்குவது, இரண்டு, மக்களைப் பகுத்தறிவற்ற முட்டாள்களாக்குவது, மூன்றாவதாக, மனிதனை ஒன்று சேர விடாமல் ஜாதி காரணமாகப் பிரித்து நிற்கச் செய்வது ஆகியவைகளேயாகும்.

மணமக்களுக்கு வேண்டியதெல்லாம் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். பதினாறும் பெற்று என்று சொல்வது குழந்தைகளைப் பெறுவதற்காகச் சொல்வதல்ல. 16 பேறுகளைப் பெற்று என்று சொல்வதற்காகச் சொல்வதாகும். ஆடம்பர மில்லாமல் மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத வகையில் வாழ வேண்டும். கூடுமானவரை ஆடம்பரத்தைக் குறைத்துக் கொண்டு, எளிய வாழ்வு வாழ வேண்டும். அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால் எப்படி ஒழுக்கம் குறைகிறதோ, அதுபோலத்தான் வரும்படிக்கு  மேல் செலவிட்டாலும் ஒழுக்கம் குறையும். பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதையும், சிங்காரித்துக் கொள்வதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். எல்லா மக்களும் பெண்களை நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும். பெண்கள் படிக்க ஆரம்பித்தால், அவர்களே தங்களின் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்வார்கள்.

பெண்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கைக்குத் துணைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதாகி விட்டதே - கஞ்சி யார் ஊற்றுவார்கள் என்று கவலைப்பட வேண்டாம் என்று வயதானவர்களுக்கு மாதம் இவ்வளவு என்று அரசாங்கம் பென்ஷன் கொடுக்கிறது. அதுபோல வகையில்லாமல் விதவையாகி விட்டால் விதவை பென்ஷன் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் இந்தச் சர்க்கார் பார்க்கவில்லை என்றால் வேறு சர்க்காரைக் கூப்பிடுகிறோம். மக்களுக்காகத் தான் சர்க்காரே ஒழிய, சர்க்காருக்காக மக்கள் அல்லவே! இதை இந்தச் சர்க்கார் செய்யாவிட்டால் வேறு எந்தச் சர்க்கார் செய்கிறதோ, அதைக் கூப்பிட்டு நடத்தச் சொல்கிறோம். அது பாகிஸ்தானாக இருந்தாலென்ன? ரஷ்யாவாக இருந்தால் நமக்கென்ன? யார் செய்கிறார்களோ, அவர்கள் வந்து ஆளட்டும். நமக்கு வேண்டியதெல்லாம் மக்கள் வளர்ச்சியடைய வேண்டும். மற்ற மேல்நாட்டு மக்களைப் போல் வாழ வேண்டுமென்பதுதான்.

----------------------------------------

26.8.1967 அன்று சென்னையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இல்லத் திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையிலிருந்து..  - விடுதலை 27.8.1967.

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It