இந்தியாவின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் தீண்டப்படாத மக்கள் கிராமத்துக்கு வெளியேதான் வசிக்கிறார்கள். இது ஊரறிந்த இரகசியம். இந்த மக்களைப் பற்றி ஆழமாக அறிந்திராதவர்களுக்குக் கூட இது நன்கு தெரியும். எனினும் ஒரு திருப்திகரமான பதிலளிக்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி என்று இதனை எவருமே எடுத்துக் கொள்ளாததுதான் வேதனையிலும் வேதனையாக இருக்கிறது; வியப்பிலும் வியப்பாக இருக்கிறது. தீண்டப்படாத மக்கள் கிராமத்துக்கு வெளியே வாழும்படி எவ்வாறு நேர்ந்தது? அவர்கள் முதலில் தீண்டப்படாதவர்களாக அறிவிக்கப்பட்டு, பிறகு கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்களா? கிராமத்திற்கு வெளியே வசிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்களா? அல்லது ஆரம்பத்திலிருந்தே அவர்கள் கிராமத்திற்கு வெளியே தான் வசித்து வருகிறார்களா? பின்னர்தான் தீண்டப்படாதவர்களாகப் பிரகடனம் செய்யப்பட்டார்களா? துவக்கத்திலிருந்தே அவர்கள் கிராமத்திற்கு வெளியே தான் வசிக்கிறார்கள் என்பது இக்கேள்விகளுக்குப் பதிலாக இருக்குமானால் இங்கு மேலும் ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு என்ன காரணம்?

ambd 400 1தீண்டப்படாதவர்கள் தனித்து ஒதுங்கி வாழும் பிரச்சினை இதற்கு முன்னர் என்றுமே எழுப்பப்பட்டதில்லை; எனவே, தீண்டப்படாத மக்கள் கிராமத்திற்கு வெளியே எவ்வாறு வசிக்க நேர்ந்தது என்பது பற்றி இயல்பாகவே ஊகக்கோட்பாடு ஏதும் இல்லை. ஆனால் இந்து சாத்திரங்கள் இத்தகைய ஒதுக்கலை ஆதரிக்கவே செய்கின்றன; இதற்கு ஒரு கோட்பாடு அந்தஸ்து கொடுக்க ஒருவர் விரும்பினால் அவ்வாறே செய்யலாம். அந்த்யஜாக்கள் கிராமத்துக்கு வெளியேதான் வசிக்க வேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன என்பதில் ஐயமில்லை. உதாரணமாக மனு பின்வருமாறு கூறுகிறார்:

X51. சண்டாளர், ஸ்வபாக்களும் கிராமத்திற்கு வெளியே தான் வசிக்க வேண்டும், அவர்கள் அபபத்ராக்களாக்கப் படவேண்டும், நாய்களும் குரங்குகளும்தான் அவர்களுடைய செல்வம்.

X52. பிணங்களின்மீது போர்த்தப்பட்ட துணிமணிகளே அவர்களது ஆடைகள். மிச்சம் மீதமான பதார்த்தங்களே அவர்களது உணவு, இரும்பாலானவையே அவர்களது அணிமணிகள், அவர்கள் எப்போதும் ஒவ்வொர் இடமாக அலைந்து திரிய வேண்டும்.

X53. சமயக் கடமையைப் பூர்த்திசெய்யும் எவரும் அவர்களுடன் கலந்து பழகக்கூடாது; கொள்வினை கொடுப்பினைகளை அவர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும், திருமணங்களைத் தங்களை ஒத்தவர்களுக்குள்ளேயே செய்து கொள்ள வேண்டும்.

X54. அவர்களது உணவை ஓர் உடைந்த தட்டில் மற்றவர்கள்தான் தரவேண்டும்; இரவு நேரங்களில் அவர்கள் கிராமங்களிலோ நகரங்களிலோ நடமாடக்கூடாது.

X55. பகலில் தங்கள் பணியைச் செய்ய அவர்கள் வெளியே செல்லலாம், மன்னரின் கட்டளையின் பேரில் அவர்கள் அடையாளச் சின்னங்களைத் தரித்திருக்க வேண்டும், உறவினர்கள் எவரும் இல்லாதவர்களது பிணங்களை அவர்கள் தூக்கிச் செல்லவேண்டும்; இது நிர்ணயமான விதிமுறையாகும்.

X56. அரசனின் ஆணையின்பேரில் சட்டப்படி குற்றவாளிகளை அவர்கள் தூக்கிலிட வேண்டும், இத்தகைய குற்றவாளிகளது ஆடைகள், படுக்கைகள், அணிமணிகள் முதலியவற்றை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.”

சாஸ்திரங்களின் இந்தக் கூற்றுகளிலிருந்து ஒருவர் என்ன முடிவுக்கு வரமுடியும்? இவற்றுக்கு இரட்டை அர்த்தம் கொள்ள வாய்ப்பு உண்டு. தீண்டப்படாதவர்கள் இதுவரை கிராமத்துக்கு வெளியே இருந்து வந்ததைப் போன்றே இனியும் இருக்க வேண்டும் என்றுதான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவ்வாறு ஓர் அர்த்தம் கொள்ளலாம். மற்றொரு அர்த்தம் தீண்டத்தகாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் கிராமத்திலிருந்து கிளம்பிச் சென்று வெளியே வசிக்க வேண்டும் என்பதாகும். இரண்டு அர்த்தங்கள் தொனிக்கும் சாஸ்திரங்களின் கூற்றுகளைக் கொண்டு பார்க்கும்போது, இரண்டு விதமான சாத்தியக்கூறுகள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. முதலாவது சாத்தியக்கூறு: தீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே வசிப்பதற்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமுமில்லை; ஆரம்பம் முதலே அவர்கள் கிராமத்துக்கு வெளியேதான் வசித்துவந்தார்கள். அதன் பின்னர் தீண்டாமை என்னும் வடு அவர்களுக்கு நேர்ந்தபோது, கிராமத்திற்குள் நுழைய முடியாதபடி அவர்கள் தடை செய்யப்பட்டார்கள். இரண்டாவது சாத்தியக்கூறு: தீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே வசிப்பதற்கும் தீண்டாமைக்கும் எல்லா வகையிலும் சம்பந்தம் உண்டு. வேறுவிதமாகச் சொன்னால், ஆரம்பத்தில் தீண்டப்படாதவர்கள் கிராமத்திற்குள்தான் வசித்து வந்தார்கள், அதன்பின்னர் தீண்டாமை கறை அவர்களுக்கு ஏற்பட்டபோது, கிராமத்திலிருந்து காலிசெய்து வெளியே வசிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இந்த இரு சாத்தியக்கூறுகளில் எது ஏற்கத் தக்கது?

முதல் சாத்தியக்கூறு அபத்தமானதும், நகைப்புக்கிடமானதும், வியப்புக்குரியதுமாகும். நாம் இங்கு விவாதிக்கும் விஷயம் தனி ஒரு கிராமத்தையோ அல்லது பிரதேசத்தைப் பற்றியதோ அல்ல. இந்தக் காட்சியை இந்தியா முழுவதிலும் காண்கிறோம். தீண்டப்படாதவர்களை கிராமத்திலிருந்து கிராமத்துக்கு வெளியே குடியமரச் செய்வது என்பது மிகப் பரந்த நடவடிக்கையாகும். இத்தகைய பிரமாண்ட பரிமாணங்களை உடைய ஒரு நடவடிக்கையை எப்படி, யார் மேற்கொண்டிருக்க முடியும்? ஒரு மாபெரும் சக்தியாலன்றி இத்தகைய ஒரு குடிபெயர்வு சாத்தியமல்ல. ஆனால் சாத்தியமோ, சாத்தியமில்லையோ இது ஒரு சக்கரவர்த்தியின் சாதனையாகத்தான் இருக்கமுடியும். இத்தகைய சாதனைக்கான நன்மதிப்பையோ அவமதிப்பையோ பெறக்கூடிய அந்தச் சக்கரவர்த்தி யார்? அந்த அருஞ்செயலைப் புரியக்கூடிய சக்கரவர்த்தி யாரும் இந்தியாவில் இல்லை. அவ்வாறாயின் இரண்டாவது சாத்தியக்கூறைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

தீண்டப்படாதவர்கள் என அழைக்கப்படுபவர்கள் தீண்டப்படாதவர்களாவதற்கு முன்பே ஆரம்பம் முதலே கிராமத்துக்கு வெளியே வசித்து வந்தனர்; பின்னர் தீண்டாமை பழி அவர்கள் மீது சுமத்தப்பட்டபோது, வேறுவழியின்றி கிராமத்துக்கு வெளியே அவர்கள் தொடர்ந்து வசிக்கவேண்டியதாயிற்று. இதுதான் நமது பரிசீலனைக்குரிய ஒரே சாத்தியக்கூறாகத் தோன்றுகிறது. ஆனால் இது ஒரு சிக்கலான, கடுமையான கேள்வியை எழுப்புகிறது. அவர்கள் ஏன் கிராமத்துக்கு வெளியே வாழ்ந்து வந்தார்கள்? அவ்வாறு செய்யும்படி அவர்களை நிர்ப்பந்தித்தது என்ன? உலகெங்கும் பூர்வீக சமுதாயம் நவீனகால சமுதாயமாக மாறுவதற்குத் துணைபுரிந்த அம்சங்களைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, தீண்டப்படாதவர்கள் தொடக்கக்காலம் முதலே கிராமத்திற்கு வெளியேதான் வசித்து வந்திருக்கிறார்கள் என்று அனுமானிப்பது முற்றிலும் இயல்பே.

பூர்வீக சமுதாயத்தை நவீனகால சமுதாயமாக மாற்றிய காரணிகளைப் பற்றி விளக்கிக் கூறாமல் இது இயல்பானதே என்று மொட்டையாகக் கூறுவதை பலரால் புரிந்துகொள்ளமுடியாது. இந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமாயின், நவீனகால சமுதாயம் பூர்வீக சமுதாயத்திலிருந்து இரண்டு அம்சங்களில் வேறுபடுகிறது. பூர்வீக சமுதாயத்திலிருந்து இரண்டு அம்சங்களில் வேறுபடுகிறது. பூர்வீக சமுதாயம் நாடோடி சமூகங்களைக் கொண்டிருந்தது. நவீனகால சமுதாயமோ குடியமர்ந்த சமூகங்களைக் கொண்டிருக்கிறது. இரண்டாவதாக பூர்வீக சமுதாயம் குருதி உறவு கொண்ட குலமரபு சமூகங்களை கொண்டிருந்தது. நவீனகால சமுதாயமோ பிரதேச பற்றுதல் கொண்ட ஸ்தல சமூகங்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. வேறுவிதமாகக் கூறினால் பூர்வீக சமுதாயம் நவீனகால சமுதாயமாக மாறுவதற்கு முன்னர் இரு பரிணாம வளர்ச்சி மார்க்கங்களை மேற்கொண்டது. ஒரு பரிணாம வளர்ச்சி மார்க்கம் பூர்வீக சமுதாயத்தை குலமரபு குழுவிலிருந்து பிரதேசக் குழுவாக மாற்றியிருக்கிறது. இத்தகைய ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதில் எத்தகைய ஐயமும் இருப்பதற்கில்லை. இப்படிப்பட்ட மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன என்பதற்கு மன்னர்கள் தங்களுக்குப் பதவிப்பெயர்கள் சூட்டிக்கொள்ளும் பாணியிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். ஆங்கில மன்னர்கள் கைக்கொண்ட பாணியை எடுத்துக்கொள்ளுங்கள். ஜான் மன்னர்தான் முதன்முதலில் தம்மை இங்கிலாந்தின் அரசன் என்று அழைத்துக் கொண்டவர். அவருக்கு முந்தைய அரசர்கள் அனைவரும் ஆங்கிலேய மன்னர்கள் என்றே தங்களைப் பொதுவாக அழைத்துக் கொண்டனர். முந்தையவர் ஒரு பிரதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பிந்தையவர் குலமரபுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இங்கிலாந்து ஒரு சமயம் ஆங்கிலேயர்கள் தங்கிவாழ்ந்த இடமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் தற்போது இங்கிலாந்தை வாழ்விடமாகக் கொண்ட மக்களாக இருக்கின்றனர். இதே போன்றதொரு மாற்றம் பிரெஞ்சு மன்னர்கள் விஷயத்திலும் நிகழ்ந்திருப்பதைக் காணலாம். பிரெஞ்சு மன்னர்கள் ஒரு சமயம் தங்களை பிராங்குகளின் மன்னர்கள் என்று கூறிக்கொண்டனர். பிற்காலத்தில் பிரான்சின் மன்னர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டனர். இரண்டாவது பரிணாம வளர்ச்சியானது பூர்வீக சமுதாயத்தை ஒரு நாடோடி சமூக நிலையிலிருந்து குடியமர்ந்த சமூக நிலைக்கு இட்டுச் சென்றது. இங்கு மாற்றம் திட்டவட்டமானதாகவும் தெளிவானதாகவும் இருக்கிறது; இந்த எதார்த்தத்தை எவருக்கும் மெய்ப்பித்துக் காட்டுவதற்கு விளக்கம் ஏதும் அளிக்கப்பட வேண்டியதில்லை.

நாம் மேற்கொண்டுள்ள நோக்கத்தைப் பொறுத்தவரையில் இரண்டாவது பரிணாம வளர்ச்சியைப் பரிசீலிப்பதோடு நிறுத்திக் கொள்வது போதும் என்று கருதுகிறோம். பூர்வீக சமுதாயம் எவ்வாறு ஒரு குடியமர்ந்த சமூகமாக மாறிற்று? இது ஒரு பெரிய கதை. இந்த நீண்டகதையை ஓர் அத்தியாயத்தில் அல்லது அதன் ஒரு பகுதியில் சுருக்கிக் கூறுவது என்பது சாத்தியமல்ல. இப்போதைக்கு இரண்டு விஷயங்களைக் கவனத்திற்கொண்டால் போதுமானது. நாம் இங்கு தெரிந்து கொள்ள வேண்டிய, புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் பூர்வீக சமுதாயம் தனது நாடோடி வாழ்க்கையை கைவிடும்படி செய்தது எது; இரண்டாவது விஷயம் நாடோடி வாழ்க்கையிலிருந்து குடியமர்ந்த வாழ்க்கைக்கு மாறிச் சென்ற காலத்தில் என்ன நிகழ்ந்தது.

பூர்வீக சமுதாயம் நாடோடிச் சமுதாயமாக இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது நாடோடிச் சமுதாயமாக இருந்ததற்கு அதன் உள்ளார்ந்த உற்றுணர்வு, இயற்றூண்டுதல் காரணமல்ல. அதேபோன்று அதன் தனித்த மனப்பண்பு எதுவும் காரணமல்ல. மாறாக, பூர்வீக சமுதாயத்தின் மிக ஆரம்பக்காலச் செல்வம் கால்நடைகள் வடிவத்தில் இருந்ததன் விளைவே இது. பூர்வீக சமுதாயம் நாடோடிச் சமுதாயமாக இருந்தது என்றால், அதன் செல்வம் அதாவது அதன் கால்நடைகள் எப்போதும் இடம்விட்டு இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்ததே காரணம். கால்நடைகள் புதிய மேய்ச்சல் நிலங்களை நாடி, தேடிச் சென்றுகொண்டிருந்தன. பூர்வீக சமுதாயத்திற்குத் தனது கால்நடைகள் மீது உயிர், கொள்ளை பாசம். எனவே, கால்நடைகள் சென்ற இடங்களுக்கெல்லாம் அவற்றைப் பின்பற்றியே அது சென்றுகொண்டிருந்தது. எனினும் விரைவிலேயே ஒரு புதுவகையான செல்வம் கண்டுபிடிக்கப்பட்டபோது, பூர்வீக சமுதாயம் ஓர் இடத்தை, உறையுள்ளை நிரந்தரமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டது, அதாவது வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அது ஒரு குடியமர்ந்த சமுதாயமாகப் பரிணமித்தது. இவ்வாறு அதன் கதிப்போக்கை மாற்றிய செல்வம்தான் நிலம். பூர்வீக சமுதாயம் நிலத்தை உழுது பண்படுத்தி பயிர் செய்யும் கலையைக் கற்றுக்கொண்டபோது இது நிகழ்ந்தது; இப்போது செல்வம் ஒரே இடத்தில் நிலைத்து நின்றது. அதன் வடிவம் கால்நடையிலிருந்து நிலமாக மாற்றமடைந்தது; இந்த மாற்றத்தைத் தொடர்ந்து பூர்வீக சமுதாயமும் ஒரே இடத்தில் நிலைத்திருக்கும் சமுதாயமாக மாறிற்று.

பூர்வீக சமுதாயம் குடியமர்ந்த சமுதாயமாக மாறி வந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சிகளை அடுத்து நாம் கவனிக்கவேண்டும். பூர்வீக சமுதாயம் நாடோடி வாழ்க்கையிலிருந்து குடியமர்ந்த சமுதாயத்துக்கு மாறியபோது அதனை பிரதானமாக இரண்டு பிரச்சினைகள் எதிர்நோக்கின. ஒன்று குடியமர்ந்த சமூகம், மற்றொன்று சிதறுண்ட சமூகம். குடியமர்ந்த சமூகத்தை நாடோடி குலங்களுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பிரச்சினை எதிர்நோக்கிற்று. சிதறுண்ட சமூகத்தைப் பொறுத்தவரையில் தன்னைப் பராமரித்துக் கொள்ளும், புகலிடம் தேடும் பிரச்சினை எதிர்ப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் எவ்வாறு, ஏன் எழுந்தன என்பதை இங்கு விளக்குவது உசிதமாக இருக்கும்.

குடியமர்ந்த குலங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு பின்கண்டவற்றை மனத்திற் கொள்வது அவசியம், எல்லாக் குலங்களுமே ஒரே சமயத்தில் குடியமர்ந்த வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. சில குலமரபுக் குழுக்கள் ஓரிடத்தில் நிலையாக குடியமர்ந்தன. வேறு சில குழுக்கள் தொடர்ந்து நாடோடி வாழ்க்கையை பின்பற்றின. நாம் நினைவிற்கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம், குலங்கள் பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று சமாதானமாக, அமைதியாக வாழ்ந்ததில்லை. எப்போதும் அவை சண்டை சச்சரவில் ஈடுபட்டிருந்தன. அனைத்துக் குலங்களும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவற்றினிடையே போர்கள் நிகழ்வதற்கு பின்வரும் மூன்று பிரதான காரணங்கள் இருந்தன: 1.கால்நடைகளைக் கவர்ந்து செல்லுவது 2.பெண்களைக் கடத்திச் செல்லுவது 3.மற்ற குலங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளைத் திருட்டுத்தனமாக மேயவிடுவது. சில குலங்கள் ஓரிடத்தில் குடியமர்ந்து நிலையான வாழ்க்கையை மேற்கொண்டபோது இன்னமும் தொடர்ந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த குலத்தினர் குடியமர்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த குலத்தினர்மீது அடிக்கடி தாக்குதல் தொடுப்பது தங்களுக்கு மிகுந்த அனுகூலமாக இருப்பதைக் கண்டனர்; இதர நாடோடிக் குழுக்கள் மீது போர்த்தொடுப்பதை விட இது அவர்களுக்கு மிகவும் ஆதாயம் ஆளிப்பதாக இருந்தது. குடியமர்ந்த குலத்தினர் இரண்டு மடங்கு செல்வச்செழிப்பில் மிதப்பதை நாடோடிக் குலத்தினர் தெரிந்து கொண்டனர். நாடோடிக் குலத்தினரைப் போன்றே இவர்களிடம் ஏராளமான கால்நடைகள் இருந்தன. கால்நடைகள் மட்டுமன்றி, தானியமணிகள் மிகுந்திருந்தன. இவை நாடோடிக் குலத்தினரிடம் இல்லை. எனவே அவர்கள் தானிய மணிகள் மீது பெரிதும் நாட்டம்கொண்டிருந்தனர். குடியமர்ந்த குலத்தினரின் செல்வங்களைக் கவரும் நோக்கத்தோடு நாடோடி குலத்தினர் அவர்கள் மீது திட்டமிட்டு பல தாக்குதல்களைத் தொடுத்துவந்தனர். இதிலுள்ள மூன்றாவதொரு அம்சத்தை இங்கு குறிப்பிட வேண்டும். குடியமர்ந்த குலத்தினர் அதிக ஆதாயம் தரும் தொழிலில் ஈடுபட்டிருந்ததால், அவர்களால் தங்கள் கலப்பைகளை போர்வாளாக மாற்ற முடியவில்லை. தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறி, திடீர் தாக்குதல் தொடுக்கும் குலத்தினரைத் துரத்திச் சென்று அவர்களுடன் பொருதவும் இயலவில்லை. இதில் விந்தை எதுவும் இல்லை. நாகரீகமடைந்த மக்கள் போதிய பாதுகாப்பு சாதனங்களும் வசதிகளும் இல்லாமையால், காட்டுமிராண்டிகளின் தாக்குதல்களைச் சமாளித்து நிற்க முடிவதில்லை என்பதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. குடியமர்ந்த பிரிவினர் இடைப்பட்ட காலத்தில் தங்களைத் தற்காத்து கொள்ளும் பிரச்சினையை எப்படி, ஏன் எதிர்ப்பட்டனர் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

சிதறுண்ட குலத்தினரின் பிரச்சினை எவ்வாறு எழுந்தது என்பதைப் புரிந்துகொள்வது சிரமம் ஒன்றுமல்ல. ஆரம்பகட்டத்தில் பல்வேறு குலமரபுக் குழுவினரும் தங்களுக்குள் ஓயாது ஒழியாது போரிட்டுக் கொள்வது அவர்களுக்கு சகஜமாகிவிட்டது. இதிலிருந்து எழுந்ததே சிதறுண்ட குலத்தினரின் பிரச்சினை. ஒரு குலப்போரில் எந்த ஒரு குலத்தினரும் பூண்டோடு ஒழித்துக்கட்டப்படுவதில்லை; மாறாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டு நிலைகுலையச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு தோற்கடிக்கப்பட்ட குலத்தினர் பல சந்தர்ப்பங்களில் துண்டுதுண்டாக சிதறுண்டு போயினர். இதன் விளைவாக ஆரம்ப காலத்தில் சிதறுண்ட குலத்தினர் அடங்கிய ஒரு பிரிவினர் எல்லாத் திசைகளிலும் சுற்றித் திரிந்தனர். சிதறுண்ட குலத்தினர் பிரச்சினை எழுவதற்கு என்ன காரணம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு பூர்வீக சமுதாயம் அடிப்படையில் ஒரு குலமரபு அமைப்பாக இருந்துவந்தது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் பூர்வீக சமுதாயம் இவ்வாறு குலமரபு அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பது இரண்டு விஷயங்களைக் குறித்தது. முதலாவதாக, பூர்வீக சமுதாயத்தில் ஒவ்வொரு தனிநபரும் ஒரு குலமரபைச் சேர்ந்தவராக இருந்தான். இன்னும் சொல்லப்போனால் அவ்வாறு அவன் ஒரு குலத்தைச் சேர்ந்தவனாக இருப்பது அவசியம். குலத்துக்கு வெளியே எந்தத் தனிநபரும் இருக்கமுடியாது. அவ்வாறு அவன் இருந்தால் சுத்த பூஜ்யம்தான். இரண்டாவதாக, குலமரபு அமைப்பானது பொதுக்குருதித்தொடர்பு, பொதுப்பண்பொற்றுமையின் அடிப்படையில் அமைந்திருந்ததால் ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்த ஒருவன் இன்னொரு குலத்தில் சேர்ந்து அதன் அங்கமாக முடியாது. எனவே, சிதறுண்ட சமூகத்தினர் ஆங்காங்கு தனித்தனி நபர்களாகவே வாழ வேண்டியிருந்தது. ஒரு குலம் இன்னொரு குலத்தை எதிர்த்துப் போராடி வந்த பூர்வீக சமுதாயத்தில் சிதறுண்ட தனிநபர்களின் ஒரு திரள் இருந்து வருவதானது அத்திரள் தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் எப்போதுமே இருந்துவந்தது. இந்நிலைமையில் எங்குபோய் புகலிடம் தேடுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. யார் தங்களைத் தாக்குவார்கள் என்பதும், பாதுகாப்பாக யாரை நாடிச்செல்வது என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. எனவேதான் புகலிடம் தேடுவதும் பாதுகாப்பு நாடுவதும் சிதறுண்ட பிரிவினரின் பிரச்சினையாக உருவெடுத்தது.

பூர்வீக சமுதாயத்தின் பரிணாமம் குறித்த மேலே கண்ட தொகுப்பு எதைக் காட்டுகிறது? பூர்வீக சமுதாயத்தின் வாழ்க்கையில் இரண்டு குழுக்கள் இருந்து வந்ததைக் காட்டுகிறது. இவற்றில் ஒரு குழு குடியமர்ந்த குலங்களைக் கொண்டது; நாடோடி குலத்தைச் சேர்ந்த வம்புச் சண்டைக்காரர்களின் தாக்குதல்களுக்கு எதிராக இரவு பகல் காவல் செய்யும் ஒரு கூட்டத்தை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பிரச்சினை இந்தக் குழுவின் முன் எழுந்தது. தோற்கடிக்கப்பட்ட குலங்களைச் சேர்ந்த சிதறுண்ட பிரிவினருக்கோ வேறொரு பிரச்சினை; தங்களுக்கு உணவும் தங்கிடமும் தரக்கூடிய புரவலர்களை, காப்பாளர்களைத் தேடும் பிரச்சினை அவர்களுடையது.

இங்கு அடுத்த கேள்வி எழுகிறது: இவ்விரு குழுக்களும் தமது பிரச்சினைகளுக்கும் எவ்வாறு தீர்வு கண்டன? இரு தரப்புகளும் தமக்குள் ஒரு பேரம் செய்துகொண்டு, இப்பிரச்சினைகளுக்கு முடிவுகட்டின; இதன்படி குடியமர்ந்த குலத்தினருக்கு காவல் பணிபுரிய சிதறுண்ட பிரிவினர் ஒப்புக்கொண்டனர்; இதற்கு பிரதியாக இவர்களுக்கு உணவும் புகலிடமும் தருவதற்கு குடியமர்ந்த குலத்தினர் இணக்கம் தெரிவித்தனர். முக்கியமாக பரஸ்பரம் ஒருவர் ஒத்துழைப்பு மற்றவருக்குத் தேவைப்படும் நிலைமையில் இத்தகைய ஓர் உடன்பாடு ஏற்பட்டிருக்கவில்லை என்றால் அது இயற்கைக்கு மாறானதாக இருந்திருக்கும்.

இந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதில் ஒரு சிரமம் ஏற்பட்டிருக்கக்கூடும்; அதுதான் தங்கிடம் பற்றியது. சிதறுண்ட பிரிவினர் எங்கே தங்குவது? குடியமர்ந்த சமூகத்தினர் மத்தியிலா அல்லது அச்சமூகத்தினருக்கு வெளியேயா? இந்தப் பிரச்சினையைத் தீர்மானிப்பதில் இரண்டு விஷயங்கள் தீர்மானமான பங்காற்றியிருக்கக்கூடும். ஒரு விஷயம் குருதி உறவு சம்பந்தமுடையது. இரண்டாவது விஷயம் நடைமுறை உத்தி சம்பந்தப்பட்டது. பூர்வீக சமுதாயத்தில் நடைமுறையிலிருந்த விதிமுறைகளின்படி ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதாவது குருதி தொடர்புடைவர்கள்தான் ஒன்று சேர்ந்து வாழமுடியும். ஓர் அந்நியன் அந்தக் குலத்துக்குச் சொந்தமான வளாகங்களில் வசிக்கமுடியாது. சிதறுண்டவர்கள் அந்நியர்கள்; குடியமர்ந்த குலத்திலிருந்து வேறுபட்ட குலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, குடியமர்ந்த குலத்தினர் மத்தியில் வசிப்பதற்கு அவர்களை அனுமதிக்க முடியாது. நடைமுறைத் தந்திரக் கண்ணோட்டத்திலிருந்து நோக்கினால்கூட இந்த சிதறுண்ட பிரிவினர் கிராமத்தின் எல்லையில் வசிப்பதுதான் உசிதமானது. அப்போதுதான் பகைக் குலங்களைச் சேர்ந்தவர்களின் தாக்குதல்களைச் சமாளிக்கமுடியும். இந்த இரண்டு அம்சங்களுமே அவர்களது குடியிருப்புகளைக் கிராமத்திற்கு வெளியே அமைப்பதில் தீர்மானமான பங்காற்றியிருக்கக்கூடும்.

தீண்டப்படாதவர்கள் கிராமத்துக்கு வெளியே ஏன் வசிக்கிறார்கள் என்ற பிரதான கேள்விக்கு இப்போது வருவோம். இந்தக் கேள்விக்கான பதிலை மேலே கண்ட விளக்கங்களிலிருந்து பெற முடியும். இந்து சமுதாயம் நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து குடியமர்ந்த கிராம சமூக வாழ்க்கைமுறைக்கு மாறிக்கொண்டிருந்த போது இந்தியாவில் இதே நிகழ்வுக்போக்குகள் நடைபெற்றிருக்க வேண்டும். பூர்வீக இந்து சமுதாயத்தில் குடியமர்ந்த குலமரபுக் குழுக்களும், சிதறுண்ட பிரிவினரும் இருந்திருக்க வேண்டும். குடியமர்ந்த குலங்கள் கிராமத்தையும் கிராம சமூகத்தையும் உருவாக்கின. சிதறுண்ட பிரிவினர் வேறுபட்ட குலத்தையும் வேறுபட்ட குருதி உறவையும் கொண்டவர்களாதலால் கிராமத்துக்கு வெளியே வசித்து வந்தனர். இவ்வகையில் பார்க்கும்போது தீண்டப்படாதவர்கள்தான் ஆதியில் சிதறுண்ட பிரிவினராக இருந்தனர் என்று கூறலாம். அவர்கள் சிதறுண்ட பிரிவினராக இருந்தால்தான் கிராமத்துக்கு வெளியே வசித்தனர்.

ஆக, தீண்டப்படாதவர்கள் ஆரம்பம் முதலே கிராமத்துக்கு வெளியேதான் வசித்து வந்தனர், அவர்கள் கிராமத்துக்கு வெளியே வசித்ததற்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று ஊகிப்பது முற்றிலும் இயல்பானதே என்பதே இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

இந்த ஊகம் மிகவும் புதுமையானதாக இருப்பதால் நமது விமர்சகர்கள் மேலும் சில கேள்விகளை எழுப்பாமல் திருப்தியடையமாட்டார்கள். அவர்கள் பின்வருமாறு கேட்பார்கள்:

  • தீண்டப்படாதவர்கள்தான் இந்த சிதறுண்ட பிரிவினர் என்று கூறுவதற்கு எதார்த்த பூர்வமான சான்று ஏதேனும் இருக்கிறதா?
  • மேலே கண்ட உடன்பாடு உண்மையில் எந்த நாட்டிலேனும் செய்து கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு ஆதாரம் உண்டா?

சிதறுண்ட பிரிவினர் கிராமத்துக்கு வெளியே வசிப்பது அனைத்து சமுதாயங்களிலும் காணப்பட்ட ஒரு பொது அம்சம் என்றால் இவர்களது தனிகுடியிருப்பு வட்டாரங்கள் இந்தியாவுக்கு வெளியே எங்கும் இல்லாதிருப்பதும் இந்தியாவில் மட்டும் அவை நீடித்திருப்பதும் ஏன்?

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 3)

Pin It