கணினியில் பயன்படுத்தப்படும் உறக்கம் (Sleep), செயலற்ற நிலை (Hibernate) ஆகியவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.  சிலர் பயன்படுத்தியிருப்போம்.  

இயங்கிக்கொண்டிருக்கும் கணினியின் செயல்பாட்டை உடனே நிறுத்த வேண்டும், மீண்டும் கணினியை இயக்கும் போது முன்பு கணினியில் இயங்கிக் கொண்டிருந்த நிரல்களை (Program) அதே நிலையில் மீண்டும் பெற வேண்டும். இவ்விரண்டு வேலைகளையும் ஒரே சொடுக்கில் செயல்படுத்த உறக்கம், செயலற்ற நிலை ஆகியன வாய்ப்பளிக்கின்றன.

ஒருவகையில் இந்த இரண்டுமே ஒரே பணியைச் செய்தாலும் அவற்றின் அடிப்படை வேறுபாடுகளை அறிந்துகொள்வது பயன்பாட்டுத் தேவையை எளிமைப்படுத்தும்.

1.உறக்க நிலை:

உறக்கநிலையானது பொதுவாக ஆங்கிலத்தில் “Standby” என்று வழங்கப்படுகிறது. பயனாளர் கணினியில்“Sleep” விசையைச் செயல்படுத்தும் போது, கணினியின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் அகநிலை நினைவகத்தில் (Internal Memory) சேமிக்கப்பட்டு விடும்.  அதன் பின் கணினியின் முதன்மைப் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் கணினியின் “Power” பொத்தான் இயக்கத்தில் இருப்பதைப் பார்க்க முடியும்.

 

2. செயலற்ற நிலை

செயலற்ற நிலையில், கணினியின்  தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் நிலைவட்டில் (Hard disk) சேமிக்கப்பட்டு, கணினி அணைக்கப்படுகிறது. ஒரு கோப்பு வழியாகப் பேணப்படும் இந்த இயக்கம், மீண்டும் கணினியைத் தொடங்கும்போது,  அதன் முந்தைய செயல்பாடுகள் அனைத்தும் அகநிலை நினைவகத்தில் ஏற்றப்பட்டு பயனாளிக்கு முன்பு இருந்த அதே நிலையைக் கொடுக்க வழி செய்கிறது.

இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

  • உறக்கநிலையிலிருந்து மீண்டும் கணினியைத் தொடங்க “Power” பொத்தானை இயக்க வேண்டியதில்லை; கணினிச்சுட்டியின் அசைவோ அல்லது ஏதோவொரு விசையின் அசைவோ போதுமானது.  ஆனால் செயலற்ற நிலையில் “Power” பொத்தானை மீண்டும் இயக்க வேண்டும்.
  • சிலப் புதுவகைக்கணினிகள் மின்சாரத்தின் அளவு குறையும்போது தானாகவே உறக்க நிலையிலிருந்து செயலற்ற நிலைக்கு மாறிவிடும். இச்சூழ்நிலையில் “Power” பொத்தானை மீண்டும் இயக்க வேண்டியது கட்டாயம்.
  • இந்த இரண்டில் செயலற்ற நிலையானது உறக்கநிலையைக் காட்டிலும் சிறிதளவு குறைவான மின்சாரத்தையே பயன்படுத்தும்.
  • கணினியைச் செயலற்ற நிலைக்கு மாற்றுவதற்கும்,  “Startup Time” என்று சொல்லப்படும் மீண்டும் கணினி இயங்கு நிலைக்கு வர ஆகும் தொடக்க நேரமும் உறக்கநிலையோடு ஒப்பிடும்போது செயலற்ற நிலைக்குச் சற்று அதிகம்.

கணிப்பொறியின் இந்த இருவகை ஏது(வசதி)களையும் நாம் கணினியை அணைத்து மீண்டும் இயக்கப்போகும் கால இடைவெளியைப் பொறுத்து சரியான வகையில் பயன்படுத்தி நிறைவான பயனைப் பெறலாம்.

- பா.திரு(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It