தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி - 3 கப்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 கப்
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
பச்சரிசி மாவை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி எடுத்து வைக்க வேண்டும். மிளகினை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். சீரகத்தையும் சற்று கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, தேங்காய் துருவல், பொடித்த மிளகு, சீரகம் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ள வேண்டும். மாவு கட்டியில்லாமல் நன்கு பதமாக இருக்கவேண்டும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி காய விட வேண்டும். பிசைந்து வைத்துள்ள மாவில் ஒரு கையளவிற்கு எடுக்க வேண்டும். சூடேறிய தோசைக்கல்லில் மாவை அடைப் போல் தட்ட வேண்டும். கையினால் அழுத்தி விட்டு சற்று பெரிய அடை போல் பரப்ப வேண்டும். சற்று கனமான அடையாக தட்ட வேண்டும்.
அடை லேசாக வெந்ததும் அதன் மேல் எண்ணெய் ஊற்றி சில நொடிகள் வேகவிட வேண்டும். பிறகு அடையைத் திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய்யை மேலே விட்டு வேகவிட வேண்டும். சற்று நிறம் மாறி இருபுறமும் வெந்ததும் எடுத்துவிட வேண்டும்.