சிவகங்கையின் பிரதான தளம் சிவகங்கை அரண்மனையே. இது கி.பி.1730ல் கட்டப்பட்டது. முத்து வடுகநாதர், ராணி வேலுநாச்சியார் ஆகியோர் இதைக் கட்டியதில் பிரதானமானவர்கள். இந்த அரண்மனையின் வேலைப்பாடு சிறப்பானது. சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதில் சுவர் உயரமானது. விருந்தினர்கள் தங்குவதற்கு அழகான அறைகள் பல உள்ளன. இங்கு வரையப்பட்ட ஓவியங்கள் நூற்றாண்டுகள் கடந்த பின்பும் மங்காமல் அழகுடன் திகழ்கின்றன. போர்க்கருவிகள் வைப்பதற்கு தனி அறை உள்ளது.

அழகிய அந்தப்புரமும், அரண்மனைக்கு உள்ளே உள்ள குளமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள கோயிலில் நவராத்திரி விழா 10 நாள் சிறப்பாக நடைபெறும்.

பிள்ளையார்பட்டி

தமிழகத்தின் சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றாகும். இங்குள்ள விநாயகரை கற்பகவிநாயகர் என்பர். பிள்ளையார் சதூர்த்தி அன்று பதினெட்டுப்படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைக்கப்படுவது இங்கு சிறப்பு.

குன்றக்குடி

திருப்புகழில் அருணகிரி நாதரால் பாடப்பெற்ற திருத்தலம். இம்மலையின் அமைப்பு மயில் போன்றது. மலைமீது முருகன் கோயிலும், மலையின் கீழ் சிவன் கோயிலும், தோகை போன்று வடிவமைப்புள்ள இடத்தில் கோகையடி விநாயகர் கோயிலும் உள்ளது. குடைவரைச் சுவர்களில் செதுக்கப்பட்ட இறை உருவங்கள் அணிவதற்கு சின்ன மருது பொற்கவசம் அளித்துள்ளார். நாட்டரசன் கோட்டையில் கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. கம்பர் சமாதி இங்குதான் உள்ளது.

மதகுபட்டி

இங்கு மண் மலை காடு உள்ளது. மண்மலைபட்டிக்கு அருகில் இந்த காடு அமைந்துள்ளது. இங்கு 150 எண்ணிக்கையில் மான்கள் உள்ளது. மலைப் பாம்புகளும் உள்ளது. வனத்துறையினர் பாம்புகளையும், மான்களையும் பாதுகாக்கின்றனர்.

பரம்புமலை

முல்லைக்கு தேர்தந்து, ஈகைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்டதும் இம் மண்ணில்தான். பாரி வாழ்ந்த காலத்தில் இருந்த பரம்புமலை இன்று பிரான்மலை என அழைக்கப்படுகிறது. இம்மலை சுற்றுலாத்தலமாக மக்களால் போற்றப்படுகிறது. 2440 அடி உயரம் உள்ள இம்மலையில் இந்து, -முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மலை உச்சி மீது ஷேக் அப்துல்லா அவுலியா பள்ளிவாசலும், பிரான்மலையை அடுத்த தனிக் குன்றில் மூன்று நிலைகளில் மூன்று கோயில்களும் உள்ளன. மலையடிவாரத்தில் உள்ள பெரிய கோயில் சம்மந்தரால் தேவாரத்தில் பாடப்பட்டது. குன்றின் நடுப்பகுதியில் வயிரவர் கோயில் உள்ளது. குன்றின் உயர்ந்த பகுதியில் அம்மையப்பர் வடிவில் மங்கை பாகன் கோயில் உள்ளது. இங்கு மலையில் குடையப்பட்ட திருவுருவங்கள் பல உள்ளது. தீபாவளி திருநாளன்று இங்கு விஷேசம்.

கானாடுகாத்தான்

இங்கு அழகான அரண்மனை உள்ளது. இதற்கு செட்டிநாடு என்ற இன்னொரு பெயர் உண்டு. இங்கு குட்டி ரயில்வே ஸ்டேசன் ராஜாக்கள் மட்டுமே ஏறுவதற்காக முன்னொரு காலத்தில் கட்டப்பட்டது. 96 செட்டிநாடு கிராமங்கள் உள்ளது. காரைக்கடி, ஆத்தங்குடி, பள்ளத்தூர், கோட்டையூர், நாட்டரசன்கோட்டை ஆகிய ஊர்களில் செட்டியார்கள், நகரத்தார்கள் வாழ்ந்த பெரிய பிரமாண்டமான வீடுகள் உள்ளது. நகரத்தார் கோயில்கள் 9 உள்ளது.

காளையார்கோவில்

மூன்று சிவன் கோயில்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பு. இக்கோபுரத்தின் உயரம் 157அடி. சிங்களப்படையை வென்ற வேங்கை மார்பன் ஆட்சி செய்த ஊராகும். இக்கோயிலின் உச்சியில் நின்று பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுரம் தெரியுமளவிற்கு இக்கோபுரம் அமைந்திருப்பது இதன் சிறப்பு.

மதுரை கோபுரம் தெரிய செய்த மருதுபாண்டியர்கள் பாருங்கடி....என்ற கும்மி பாட்டு காளையார் கோயில் பற்றிய பாடலாகும்.

கொல்லுகுடி பட்டி சரணாலயம்

திருப்பத்தூர் வேடப்பட்டி அருகே கொல்லுகுடிபட்டியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் வருகிறது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இங்கு வந்து போகும். இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழல் இங்கு இருப்பதால் 15000 முதல் 20000 வரை பறவைகள் ஒரு பருவ காலத்திற்குள் வந்து செல்கிறது.

(இளைஞர் முழக்கம் அக்டோப‌ர் 2011 இதழில் வெளியானது)

More articles by எம்.தங்கராஜ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.