“நியாயத்திற்குப் புறம்பாக எந்த ஒரு தனி நபரின் உரிமையோ, உடைமையோ. உயிரையோ பறிக்கக்கூடாது".

விழுப்புரம் வட்டம், சொரப்பூர் கிராமத்தில் 2-9-89 அன்று காலை 7-45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும். அதில் பனையடிக்குப்பத்தைச் சார்ந்த கந்தன் (28), சேகர் (25) ஆகிய இரு அரிசன இளைஞர்கள் இறந்துவிட்டனர் என செய்திகள் அன்று மாலையே வெளியாயின. இது ஒரு அத்துமீறிய துப்பாக்கிச் சூடு எனவும் மேலும் இத்துப்பாக்கிச் சூடு புதுவை மாநிலத்தில் உள்ள பனையடிக் குப்பத்தில்தான் நடந்தது எனவும் மக்கள் மத்தியில் பரவலாக கருத்து இருந்தது. எனவே, இது தொடர்பான உண்மைகளை அறியும் பொருட்டு 11-9-89 அன்று மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் தேவநாதன் அவர்கள் தலைமையில் 12 பேர் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவானது 13-9-89 காலை 9-00 மணியிலிருந்து மாலை 7-00 மணி வரை பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடி ஆய்வு செய்தது. பனையடிக்குப்பம் காலனி, பனையடிக்குப்பம் ஊர், சொரப்பூர் ஊர் ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து இக்குழு விசாரித்தது.
சொரப்பூர் மற்றும் வீராணம் காலனிகள் வெறிச்சோடி ஆள் நட மாட்டம் ஏதுமின்றிக் காணப்பட்டன. எனவே, 14-9.89 மற்றும் 17-9-89 ஆகிய தேதிகளில் சொரப்பூர் மற்றும் வீராணம் காலனியைச் சேர்ந்த மக்களை புதுவை மற்றும் பாகூர் சுற்று வட்டாரங்களுக்குச் சென்று இக்குழு விசாரித்தது.

சொரப்பூர் காலனியில் 150 வீடுகளும், வீராணம் காலனியில் 100 வீடுகளும், பனையடிக்குப்பம் காலனியில் 150 வீடுகளும் உள்ளன. இம்மூன்று காலனிகளும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. சொரப்பூர் ஊர், சொரப்பூர் காலனிக்கு மேற்கே 500 மீட்டர் தொலைவில் உள்ளது. இதில் 100 வீடுகள் உள்ளன. பனையடிக்குப்பம் மற்றும் வீராணம் ஊர், பனையடிக்குப்பம் காலனி; வீராணம் காலனிகளுக்கு 200 மீட்டர் கிழக்கில் உள்ளன வீடுகள் உள்ளன. இரு ஊர்களிலும் முறையே 70,75 வீடுகள் உள்ளன.

மேற்சொன்ன மூன்று ஊர்களிலும் உயர் ஜாதி மக்களும், பிற் படுத்தப்பட்ட மக்களும் உள்ளனர். இதில் ஒரு சிறுபான்மையினர் நில உடைமையாளர்களாகவும், மீதி பேர் நடுத்தர விவசாயிகளாகவும், கூலி விவசாயிகளாகவும் உள்ளனர். மூன்று காலனிகளிலும் சிறுபான்மையினர் சிறு நில விவசாயிகளாகவும், பெரும்பான்மையினர் கூலி விவசாயிகளாகவும் உள்ளனர். இந்த மூன்று ஊர் நில உடைமையாளர்களுக்கும். காலனி மக்களுக்குமிடையில் கூலிப் பிரச்சினை தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாகவே முரண்பாடு இருந்து வருகிறது.

துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு 20 நாட்களுக்கு முன்னிருந்தே சொரப்பூர் ஊர் மாரியம்மன் கோயில் கூழ் திருவிழாவை முன்னிட்டும். திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழாவை முன்னிட்டும் சொரப்பூர் ஊர் மக்களுக்கும் சொரப்பூர் காலனி மக்களுக்குமிடையே தொடர்ந்து சிறுசிறு மோதல்களும் சச்சரவுகளும் இருந்து வந்திருக்கின்றன. அதே சமயத்தில் இரு தரப்பினருக்குமிடையில் சமரச முயற்சியாக இரு பஞ்சாயத்துக்களும் நடந்துள்ளன. 2-9-89 அன்று காலையும் கூட ஒரு பஞ்சாயத்து நடப்பதற்கான முயற்சியும் நடந்துள்ளன. இது ஊர் மக்களும் காலனி மக்களும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய சமூக பொருளாதார நிலையினையே விளக்குகிறது.

திரௌபதி அம்மன் தீமிதி விழாவிற்கு பின்பு இருபது போலீசார் சொரப்பூர் ஊரில் தொடர்ந்து பாதுகாப்புக்காக இருந்து வந்துள்ளனர். 1-9-89 அன்று பிற்பகல் ஊருக்கும், காலனிக்குமிடையில் ஒரு பதட்ட நிலை நிலவியிருக்கிறது. சொரப்பூர் காலனிக்கு ஆதரவாக வீராணம். மற்றும் பனையடிக்குப்பம் காலனியைச் சேர்ந்தவர்களும் சென்றிருக் கின்றனர். இப்பதட்ட நிலையானது பெரிய மோதலாக வராதபடி இந்த 20 போலீசாரே தடுத்து விட்டனர். 1-9-89 அன்று இரவு 100 க்கும் மேற்பட்ட போலீசார் சொரப்பூர் ஊரில் குவிக்கப்பட்டிருக் கின்றனர். 2-9-89 அன்று காலை இப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதனையொட்டி உண்மையறியும் குழு மூன்று நாட்கள் விசாரித்ததின் அடிப்படையில் ஆய்வு செய்து கீழ்க்காணும் முடிவுகளுக்கு வந்துள்ளது. 

I. துப்பாக்கிச் சூடு புதுவை மாநிலத்தில் உள்ள பளையடிக்குப்பத்தில்தான் நடந்தது என்பது கீழ்க்காணும் ஆதாரங்கள் அடிப்படையில் உறுதியாகிறது.

1.துப்பாக்கிச் சூட்டினை நேரில் பார்த்த தைலம்மாள் (50), சின்னராசு (40), இளங்கோவன் (25), முத்துக்கண்ணு (30) ஆகியோரின் கூற்றுப்படி பனையடிக்குப்பம் காலனி மாரியம்மன் சேகரின் தாயார் கோவிலுக்கு தெற்கே 50 மீட்டர் தொலைவில் உள்ள சின்னராசுக்குச் சொந்தமான வயலில்தான் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது என உறுதியாகிறது.

2 சம்பவம் நடந்த 1 மணி நேரத்திற்குள் கரையாம்புத்தூர் (புதுவை மாநிலம்) போலீசாருடன் அந்த இடத்திற்கு வந்த பக்தவச்சலம் ரெட்டியார் மேற்குறிப்பிட்ட இடத்தில் தேங்கிக்கிடந்த இரத்தத்தை பார்த்திருக்கிறார்.

3.உண்மை அறியும் குழுவும் மேற்சொன்ன இடத்தில் இரத்தக் கறையை நேரில் பார்த்தது. அதே சமயத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக போலீசார் சொல்லும் சொரப்பூர் ஊரில் இரத்தக் கறை ஏதும் காணப்படவில்லை.

4. சொரப்பூர் ஊர் மக்கள் தாங்கள் துப்பாக்கிச்சூட்டினை நேரில் பார்க்கவில்லை என்றும், ஊருக்கு அருகில் உள்ள ரோட்டிலும். ஊருக்கு கிழக்கே உள்ள வயலிலும் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் சொன்னதாகவே கூறினார்கள்.

5. துப்பாக்கிச்சூட்டில் இறந்த சுந்தன், சேகர் ஆகிய இருவருமே பனையடிக்குப்பம் காலனியை (புதுவை மாநிலம்) சேர்ந்தவர்கள் ஆவர். 6. மேற்சொன்ன இடத்தில் இக்குழு பார்வையிடும்போது பூக்களா லும், சாணி பிள்ளையார் பிடித்து வைத்தும், பொட்டு வைத்தும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். இந்து மதவழி முறை சடங்குபடி உயிர் பிரிந்த இடத்தில்தான் இம்முறையில் அஞ்சலி செலுத்துவர்.

7. 18-9-89 அன்று தினத்தந்தி கடலூர் பதிப்பில் வெளியான செய்திப்படி "பாண்டிச்சேரி பனையடிக்குப்பம் துப்பாக்கிச் சூட்டில் பலியான சேகர், கந்தன் ஆகியோர் குடும்பத்தினரை அமைச்சர் வைத்திலிங்கம் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்"

8. சம்பவம் நடந்த 1 வாரத்திற்கு பின்பு வீராணம் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் கிருஷ்ணமூர்த்தி செட்டியார். பக்தவச்சலம் ரெட்டியார் மற்றும் முத்து சுப்புராய செட்டியார் ஆகியோர் முன்னிலையில் விழுப்புரம் தாசில்தார், இறந்தவர்களின் பெற்றோர்களீடம் "சொரப்பூர் திருவிழா கலவரத்தில் குண்டடிப்பட்டு இறந்த என்னுடைய மகனுக்காக ரூ. 10,000/- பெற்றுக்கொள்கிறோம்" என பேப்பரில் எழுதி கையெழுத்திட கேட்டிருக்கிறார். ஒருவருக்கு தமிழ்நாட்டில் வேலை கொடுக்கிறோம் எனவும் ஆசை காட்டியிருக்கிறார். இதில் பனையடிக் குப்பத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் என மாற்றி எழுதினால் கையொப்பமிடுகிறோம் என அப்பெற்றோர்கள் சொல்லி அவர்கள் நீட்டிய பேப்பரில் கையெழுத்திட மறுத்து விட்டனர்.

9. துப்பாக்கிச்குடு நடந்த இடத்திலேயே கந்தன் (28) இறந்து விட்டார். ஆனால் சட்டக்கல்லூரி மாணவர் சேகர் (22) காலில் குண் டடிபட்டு அப்படியே கீழே உட்காருகிறார். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்துக்கொண்டு துப்பாக்கியின் பின்புற கட்டையாலும், கற்களாலும் அடித்துக் கொன்றிருக்கின்றனர். மேற்சொன்னவை துப்பாக்கிச் சூட்டினை நேரில் பார்த்தவர்களின் கூற்றிலிருந்து தெள்ளத் தெளிவாகிறது.

II. 2-9-89 அன்று துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான சூழ்நிலை உருவாகவில்லை என்பது கீழ்க்கண்ட ஆதாரங்களின் அடிப் படையில் தெளிவாக புலனாகிறது.

1.புதுவை மாநிலத்தில் உள்ள பனையடிக்குப்பத்தில் தான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என்பது உறுதியாவதால், சொரப்பூர் ஊரில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான சூழ்நிலை இருந்தது என்பதை நம்ப முடியாது.

2. சொரப்பூர், வீராணம் மற்றும் பனையடிக்குப்பம் காலனி மக்க ளின் கூற்றிலிருந்து சம்பவம் நடந்த 2-9 - 89 அன்று காலை இக்காலனி மக்கள் எவரும் திரண்டு சொரப்பூர் ஊரை தாக்கச் செல்லவில்லை என்பது உறுதியாகிறது. 100 வீடுகள் உள்ள சொரப்பூர் ஊரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுத போலீசார் சுற்றி நிற்கும்போது எப்படி காலனி மக்கள் சென்று தாக்க முனைவர்.

3) சம்பவத்திற்கு முன்பு 20 நாட்கள் வரையிலும் 20 போலீசாரை வைத்தே பெரும் மோதலை தவிர்க்க முடித்த போலீசாருக்கு 100-க்கும் மேற்பட்ட ஆயுத போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுக் கடங்காத கலவரம் 2-9-89 அன்று காலை நடந்தது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

4) சொரப்பூர் ஊரில் உள்ள தனது வீடு எரிந்து போன ராஜீ நாடார் கூற்றுப்படி 2-9-89 அன்று காலை 7-00 மணி வரையிலும் சொரப்பூர் ஊரில் எந்த விதமான பதட்ட நிலையும் நிலவவில்லை. என்பது தெரியவருகிறது.

5) 2-9-89 அன்று காலை வீராணம் மற்றும் சொரப்பூர் காலனியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கன் பனையடிக்குப்பத்தில் உள்ள பக்தவச்சலம் ரெட்டியார் அவர்களை சந்தித்து சொரப்பூர் ஊருக்கும் காலனிக்கும். சமாதானம் செய்து வைக்க வேண்டியிருக்கிறார்கள். இதிலிருந்து, இக்காலனி மக்கள் திட்டமிட்டு 2-9-89 அன்று சொரப்பூர் ஊரில் உள்ள போலீசாரை திரண்டு சென்று தாக்கினர் என்ற போலீசாரின் கூற்று மறுக்கப்படுகிறது.

6. சொரப்பூர், வீராணம் மற்றும் பனையடிக்குப்பம் காலனி மக்களின் கூற்றுப்படி போலீசார் 2-9-89 அன்று காலை சொரப்பூர் காலனியில் திடுதிப்பென்று நுழைந்து மக்களை தாக்கியதோடு அவர் களை விரட்டிக்கொண்டு பனையடிக்குப்பம் காலனியின் கிழக்கு எல்லை வரை சென்றிருக்கின்றனர். இதனை பனையடிக்குப்பத்தில் வைத்து போலிசாரால் தாக்கப்பட்ட பள்ளி சமையல்காரர் பனையடிக்குப் பத்தைச் சார்ந்த பிச்சைக்காரன் (35), சாரதா (30), பஞ்சவர்ணம் (30), சுமதி (20).ரோகினி மற்றும் மாரி ஆகியோரின் கூற்றுகள் கூறுகி செய்கின்றன.

III. 2-9-89ல் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பின்பு சொரப்பூர் ஊர் மற்றும் சொரப்பூர் காலனி, வள்ளுவன் மேடு ஆகிய இடங் களில் உள்ள வீடுகளுக்கு போலிசாரே தீயை வைத்துள்ளனர். இதனை கீழ்க்காணும் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

1.) துப்பாக்கிச் சூடு நடந்த பின்பு சொரப்பூர் காலனி அருகில் உள்ள வள்ளுவன் மேட்டில் உள்ள ஒரு வீட்டினை போலிசார் சுற்றி நின்று கொண்டு எரித்ததை காலனி மக்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள்

2.) துப்பாக்கிச் சூடு நடந்த பின்புதான் சொரப்பூர் ஊரில் உள்ள வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிவதை பனையடிக்குப்பத்தில் இருந்தும், வயல் வெளிகளில் இருந்தும் பார்த்திருக்கிறார்கள்.

3.) 2-9.89 அன்று காலை காலனி மக்கள் திரண்டு சென்று சொரப்பூர் ஊரை தாக்கவில்லை என்பது உறுதியாவதாலும் போலீசார்தான் அங்கு வீடுகளை கொளுத்தினார்கள் என்பது உறுதியாகிறது.

4.) 2-8-80 அன்று காலை புதுவை மாநில போலீசாருடன் (நான்கு பேர்) சம்பவம் நடந்த இடத்தைப் பார்த்துவிட்டு சொரப்பூர் ஊருக்கு 9-30 மணிக்கு செல்லும் பக்தவச்சலம் ரெட்டியாரால் கொழுந்துவிட்டு எரிந்த வீடுகளை பார்க்க முடிந்திருக்கிறது. போலீசார் கூற்றுப்படி காலை 7-00 மணிக்கே காலனி மக்களால் வீடுகள் தீ வைக்கப்பட்டிருந் தால் எரிந்து போய் உள்ள சிறுசிறு குடிசைகள் 2 மணி நேரங்கள் எரிய சாத்தியமில்லை.

5.) எரிந்துபோய் உள்ள வீடுகள் எல்லாமே சிறியவையாகும். ஆங்காங்கு தனித்தனியாகவே எரிந்துள்ளன. பக்கத்தில் மிக அருகாமையில் இருக்கும் வீடுகளுக்கும் கூட தீ பரவவில்லை.

IV. போலீசார் காலனி மக்களுக்கு எதிராகவும் ஊர் மக்களுக்கு ஆதரவாகவும் ஒரு நிலை எடுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

1. சம்பவத்திற்கு முன்பும் பின்பும் போலீஸ் பாதுகாப்பு என்பது சொரப்பூர் ஊருக்கு மட்டுமே உள்ளது. சொரப்பூர் காலனிக்கோ, வீராணம் காலனிக்கோ எந்தவித போலீஸ் பாதுகாப்பும் இல்லை. இது வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் காலனியைச் சேர்ந்தவர்களே.

V. சம்பவத்தின் பின்னணி

இக்குழுவின் ஆய்வில் இருந்து 2-9-89 அன்று காலை பதட்டமான சூழல் ஏதும் இல்லாதபோது சொரப்பூர், வீராணம், பனையடிக்குப்பம் காலனிகளில் போலீசார் திடுதிப்பென்று புகுந்து அடித்து பனையடிக் குப்பத்தில் துப்பாக்கிச்சூடும் நடத்தியிருக்கிறார்கள் தங்களுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்த போலீசாரே வீடுகளுக்கு தீயும் வைத்துள்ளார்கள். இதிலிருந்து நமக்கு கீழ்க்காணும் ஐயம் எழுகிறது

இப்பகுதியில் 1970-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் பனையடிக்குப்பம் காலனியைச்சேர்ந்த திரு. வையாபுரி அவர்கள் தலைமையில் நிலமீட்சி போராட்டம் நடந்துள்ளது. 1974ல் வலுவானதொரு கூலி உயர்வு போராட்டம் நடந்துள்ளது. 1981ல் ஜூலை 21 அன்று இரவு அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்யும்போது காலனி மக்கள் திரண்டு தடுத்திருக்கின்றனர். இவற்றை எல்லாம் வஞ்சம் தீர்ப்பதற்காகவே போலீசார் இத்திட்டமிட்ட தாக்கு தலை நடத்தினார்களா? -என்ற ஐயம் இக்குழுவுக்கு எழுகிறது.

சம்பவம் நடந்து இருவாரங்கள் கழித்தும்கூட சொரப்பூர் மற்றும் வீராணம் காலனியைச்சேர்ந்த மக்கள் இதுவரை தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பவில்லை இம்மக்கள் தங்கள் மாமூல் வாழ்க்கை திரும்ப தமிழக அரசு ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை. புதுவை மாநில பகுதியில்தான் துப்பாக்கிச்சூடு நடந்தது என்பது ஊர்ஜிதமான பின்பும்கூட புதுவை அரசும் இதுதொடர்பான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் இருக்கிறது. இப்போக்கிற்கு சொரப்பூர் ஊரில் உள்ள நில உடைமையாளர்களுக்கு இவ்விரு அரசு களிலும் உள்ள உயர்மட்ட செல்வாக்கும் காரணமாக இருக்குமோ? என இக்குழு ஐயப்படுகிறது.

VI. இக்குழுவின் பரிந்துரைகள்

1. இச்சம்பவங்கள் நடந்த இடங்கள் இருமாநில அரசு நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் ஆகும். ஆகவே, விசாரணை அறிக்கை முழுமை அடைய மத்திய அரசு ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை வைத்து விசாரனை நடத்த வேண்டும்.

2. இந்நீதி விசாரணை பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் எளிதில் பங்கு கொள்ளும் விதத்தில் சம்பவம் நடந்த பகுதியில்தான் நடத்தப்படவேண்டும்.

3.பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

4. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும். மேலும் மேற்கொண்டு யாரையும் கைது செய்யக்கூடாது. அத்துமீறி புதுவை எல்லை நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் அதிகாரிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்யவேண்டும்.

5. போலீஸ் நடவடிக்கையால் பீதியுற்ற மக்கள் திரும்பவும் மாமூல் வாழ்க்கையில் ஈடுபடவும் அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

உண்மை அறியும் குழு உறுப்பினர்கள்

குழுத்தலைவர்

அ. தேவநாதன், பி.ஏ.பி.எல்.,வழக்கறிஞர், தலைவர், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு

உறுப்பினர்கள்

பி.வி. பண்டெரிநாதன், ஜனதா தளம், கடலூர்.
ம. இலட்சுமணன், தெ.ஆ. மாவட்ட செயலாளர், இந்திய மக்கள் முன்னணி(ஐ.பி.எப்)
டி.பவணந்தி பி.எஸ்சி.பி எல்., மாவட்டக்குழு, உறுப்பினர். இந்திய மார்க்சியப் பொதுவுடை மைக்கட்சி [ எம்.சி.பி.ஐ. ]
டி.புருஷோத்தமன், எம்.ஏ.எம்.ஃபில்,, பி எல்., வழக்கறிஞர், புதுவை.
பா. கல்யாணி, மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்.
எஸ். பாலசுப்ரமணியம், தேசிய கவுன்சில் உறுப்பினர், அகில இந்திய தொழிற்சங்கங் சுளின் மைய கவுன்சில்,( ஏ.ஐ.சி.சி.டி.யு.)
ஆர் சங்கர், அமைப்பாளர். இந்திய மக்கள் முன்னணி, புதுவை
கோ.சுகுமாரன், அமைப்புச் செயலர், தமிழ்நாடு மாணவர் பேரவை,
ஆர். அழகிரி, செயலாளர், கா.கா.தே.கா, புதுவை
தாயகராஜன், புதுவை மாநில இளைஞர் இயக்கம், புதுவை
கீழை. இலக்கியன். புதுவை

Pin It