ஒருவர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மாதிரிக்கருவி மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியிலான கருவி 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும். இந்தக்கருவி அதிவேகத்தில் இயங்கி வைரஸ்களைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி எங்கும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு.

Virus Detectorஒவ்வொரு நுண் உயிரியுடனும் வினைபுரியக்கூடிய ஓர் எதிர் உயிரி உண்டு. இந்த எதிர் உயிரியை நாம் ஏற்பி (receptor) என்கிறோம். கருவியில் உள்ள நுண்குழாய்களில் இந்த ஏற்பி உட்பூச்சாக பூசப்பட்டிருக்கும். இப்போது பீதியைக் கிளப்பி வரும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிர் உயிரி கண்டுபிடிக்கப்பட்டவுடன் ஒரு சில நிமிடங்களில் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை இந்தக் கருவியைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். பயங்கரமான வைரஸ்நோய்கள் வேகமாகப் பரவுவதை தடுப்பதற்காக இதுபோன்ற விரைவான சோதனைக் கருவிகள் அவசியம் இல்லையா?

வைரஸ்கள் இருப்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி, பாக்டீரியா, புரதங்கள் மற்றும் டி என் ஏ மூலக்கூறுகள் இவற்றையும் இந்தக் கருவியைக் கொண்டு கண்டுபிடிக்க இயலும். இக்கருவியை பயன்படுத்துவோருக்கு சிறப்புப் பயிற்சிகள் ஏதும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு.

இந்தக்கருவியில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதி ஒரு சின்னஞ்சிறிய ஆய்வகத்தை உள்ளடக்கிய ஒளிஉணரும் ‘சில்லு’ (chip) ஆகும். இரண்டாவது பகுதி எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு (portable detector) ஏற்பியாகும். ‘சில்’லில் உள்ள பல்வேறு துளைகள் வழியாக சோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் இரத்தம் அல்லது எச்சில் மாதிரி உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த துளைகளின் உட்புறம் நுண் உயிரிகளுடன் வினைபுரியும் ஏற்பிகள் உட்பூச்சாக பூசப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அதிர்வெண்கொண்ட லேசர் ஒளிக்கற்றையும் இந்த நுண் உயிரிகளுடன் அனுப்பப்படுகிறது. ஏற்பிகளாகிய எதிர் உயிரிகளுடன் வைரஸ்கள் வினைபுரியும்போது லேசர் ஒளிக்கற்றையின் அதிர்வெண் மாறுபடுகிறது. இக்கருவியில் பெறப்படும் அளவீடுகள் மிகநுண்ணியதாக இருப்பதால் குறிப்பிட்ட வைரஸை இனங்காணுவது மிக எளிதான காரியம். மேலும் ஒவ்வொரு வைரஸிற்கும் வெவ்வேறு அளவில் இந்த அதிர்வெண் மாற்றம் இருக்கும்.

தகவல்: மு.குருமூர்த்தி

Pin It