"உள்ளீனும் தீராப் பெருமகிழ் செய்தாலால் 

கள்ளீனும் காமம் இனிது"

anbaadhavan poemsகள் அருந்தும் போது ஏற்படும் மகிழ்ச்சியினும் நினைக்குந்தோறூம் இன்பம் பெருகும் காதல் இனிது, இது கவிதையின் உயிர்முடிச்சு. மழையின் தரிசனம் சூரியக் கற்றையின் பிரகாசம். காதல் வாழ்வின் மையம். காமம் அதன் அச்சாணி. அன்பின் மிகுதியால் காமம் பெருகுவதைக் காமப்புணர்ச்சி எனக் கூறுகிறார் தொல்காப்பியர்.

ஒத்தப்பிறப்பு, குடி, ஆண்மை, ஆண்டு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பண்புகள் நிறைந்த ஓர் ஆண் பெண்ணைக் கண்டு காதல் தலைப்படுவதையும் உள்ளத்தால் இணைந்து வாழ்வதையும் குறிப்பிடுகின்றது களவியல் நூற்பா. இத்தகைய பண்புகள் நிறைந்த ஓர் ஆண் பொருள்வயின் பிரிந்தலோ, முரண்பாடுகளால் விலகினாலோ அல்லது இணைந்தே வாழ்ந்தாலோ ஆண் பெண் இருவரிடையே அவர்களை இயக்குவது காதல் தான் என்பதை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன.

கண்ணனை நேரே கண்டு காதல் கொள்ள ஒத்துழைத்தால் கிளியும் பால்சோறும் தந்து பசியாற்றுவேன் என்ற ஆண்டாளின் குரலோ, மனதில் வைப்பாய் வைத்துப் பாதுகாக்கும்! காரைக்காலம்மையாரின் எண்ணமோ! யாரும் இல்லைதானே கள்வன் தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ எனப்புலம்பும் சங்கத் தலைவியோ

'அங்கு மழை
இங்கு வெயில்
அங்கு குளிர்
இங்கு கூதல்
அங்கு நீ
இங்கு நான்
பிரிக்கும் பூமி
இணைக்கும் வானம்' என்ற நவீன கவிஞர் அன்பாதவனோ ஒவ்வொருவரின் உயிரிலும் இந்தக் காதல் மழையாய்ப் பொழிவதையே சுட்டுகிறது.

ஊடலும் கூடலும் அன்பின் வலியது - இதுதான் தலைமுறைச் சரடு. ஆறறிவின் முதிர்ச்சி. இதன் இழை தொடர்ந்திடத் தான் பயணங்கள். இது இரயில் தண்டவாளங்களாய் நீள்கின்றன.

ஏறும் இடத்தில் ஏறவும், இறங்க வேண்டிய இடத்தில் இளைப்பாறுதலையும் அகலாது அணுகாது கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. முரண்கள் பெருக, உயிர் மேகம் வறண்டுவிடும், காற்று வெப்பமாகும், புழுக்கம் வியர்வையைக் கசியச் செய்யும் களைப்பாகும். உயிர்க்காற்று ஒலியிழக்கும். இறப்பு நிகழும். இந்த இயக்கம் அன்பின் மிகையானாலும், குறைவானாலும் அறுபடும். ஏங்கச் செய்யும், எதிர்ப்பார்ப்பைக் கூட்டும். இணைந்து வாழத் துடிக்கும். இத்தகைய உயிரியக்கம் தான் அன்பாதவனின் 'உயிர் மழை பொழிய வா' கவிதைகளின் உள்ளார்ந்த சூக்குமம்.

வல்லுறவுகளால், வன்முறைகளால் மனதிலும் உடலிலும் பெருகும் வன்மம் தவிர்த்து வதைமனம் தவிர்க்கும் மெல்லிதான மூச்சுக்காற்றை ஆராதிக்கிறார். இந்த மூச்சுக்காற்றுதான் உயிர் மழையாய்ப் பொழிகிறது. மண் செம்மண் நீராகிறது. பெண் நிலமாகிறாள். ஆண்மகனைத் தாங்கிக் கொள்ளும் சுமைதாங்கியாகி பெருமனம் பெறுகிறாள். ஆணின் உயிராகி வாதை தவிர்க்கிறாள். கூதல் போக்குகிறாள்.

எப்பொழுதும் தாயாகவும் மனைவியாகவும் மகளாகவும் மருமகனாகவும் பேத்தியாகவும் பாட்டியாகவும் விஸ்வரூபமெடுக்கிறார். எத்தனை உறவுகளின் படிமங்களால் உயிர்ப் பெற்றாலும் காதலால் கசிந்துருகி கண்ணீர் மல்கும் காதலியாக, மனைவியாக பேறு பெறுகிறாள்.

தூய்மையின் பரிவூரிய மென்கரங்களால் பிசைந்தூட்டிய உணவு உயிராகிறது எனக்கு அழுந்த துடைத்தால் வலிக்குமெனத் துவலையால் ஒத்தியெடுக்கிறாயென் உணர்வுத் துளிகளை
உயிர்மழை பொழிய வா ப :61

"என் நிர்வாணத்தின் இரகசியம் மீது
வெளிச்சம் விழாமல்
உனது நிர்வாணத்தால் எனைமூடி
துழாவித் தேடி போர்த்துகிறாய் ஆடைகளை
கிறக்கம் உலர்ந்ததும்
ஊட்டிக் கொள்கிறோம்
சன்னமான சந்தோஷங்களின் துளிகளை" ப:61

காதலன் பெண்மொழியைப் பெண் தான் எழுத முடியும் என்று அழுத்தமாகக் கூறினாலும், ஆணிற்குள்ளும் பெண்மை பூத்திருக்கும் என்பதற்கான சாட்சியாக இக்கவிதைகள் அமைகின்றன.

அன்பாதவன் கவிதைகளில் சங்க அகமரபு பொதிந்து கிடக்கிறது. எனினும் நவீனத்துவத்தின் யுகத்தின் தாக்கத்தால் கவிதை மொழி மாறுகிறது.

நதியில் குளித்து திளைப்பது
பறை இசை
களைத்துக் கரையில் கிடப்பதோ
குழலிசை
தீப்பற்றி எரியுமோ நதி
தீண்டினால் தெரியும் சேதி
கரைகளை ….. அணைகளை….. எல்லைகளை
மீறுது நீரு
மீறல் தானே ஆறு
மனுசப் பயல்களைப் பார்த்து நமட்டு சிரிப்போ
கண் சிமிட்டுகின்றன
மழை ….
மலை ….
கடல் ….
நதி ….
போங்கடா … நீங்களும் உங்கள் விதிகளும்
ப:67

இந்தக் கவிதையில் பெண்ணும் ஆணும் களவி கொள்வதான படிமம் மிக அற்புதமாகப் பதிவாகியிருக்கிறது.

நதியில் குளித்து திளைப்பது
பறை இசை
களைத்துக் கரையில் கிடப்பதோ
குழலிசை ….

பறையும், குழலும் முறையே பெண்ணாகவும் ஆணாகவும் படிமப்படுத்தப்பட்டுள்ளன.

கரைகளை அணைகளை எல்லைகளை
மீறுது நீரு
மீறல் தானே ஆறு

நவீனத்துவச் சித்தாந்தம் அன்பாதவனின் கவிதைகளில் ஒளவையார் இந்தப் பறை பெண் அந்தரங்க உறுப்பையும், குச்சி ஆணின் அந்தரங்க உறுப்பையும் நினைவுபடுத்துவதாக கவிதையை
அமைத்திருப்பார். இது கவிஞனின் கவி ஆளுமை.

அன்பாதவன் உயிர் மழை பொழிய வா கவிதையின் அட்டைப் படம் ஒர் அரச இலையில் இணை பாம்புகள் படம் அமைந்திருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. அரச இலை பெண்ணாகவும், பாம்பு ஆணாகவும்
உருவகப்படுத்தப்பட்டு உயிர் மழை பொழிய அழைப்பு விடுக்கும் இந்தக் கவிதைத் தொகுதிக்குள் கவிஞனின் அன்பும் காதலும் பயிர்களில் பனியாய் பரவிக்கிடக்கிறது.

பெண்மனம் பரங்கிப் பூவென மலர் களவிக்கு அழைப்பு விடுக்கிறது. நதியாய்ப் பெருகும் நிலம் நனைத்து ஆண் மனம் மகிழ்ந்து குழலூதும் இவருடைய கவிதைகளில் பொருள்வயின் பிரிவு பற்றிய ஒரு கருத்தாக்கத்தை வரைந்து கொள்ள உதவுகிறது. (Inter personal intelligency) உட்பக திறன் பெற்ற இவர் ஆண்களின் மன உணர்வுகளில் பதிவாகியிருக்கும் நிர்பயாக்களை வதைத்த பிரியங்காவைக் கொலைச் செய்தவர்களைக் கண்டிப்பதோடு நையாண்டி செய்கிறார்.

பெண்ணின் தனி ஆளுமை சிதைக்கப்படாத பெண் உரிமைகள், உணர்வுகள் மதிக்கப்படக் கூடிய சகப் பயணியின் தோழமை நிறைந்த உணர்வுகள் தான் பெரும்பாலான கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன. அழகுக்காக திருமணம் செய்து கொள்வதும், பின் அதே அழகை வைத்து அவளை மன வதை செய்வதும் ஒர் ஆணுக்கான எழுதப்படாத சட்டமாக அங்கீகார அதிகாரம் அன்பாதவனின் கவிதைகளில் இல்லை என்பது தான் அவர் பெண் விடுதலை உணர்வுக்கு அவர் தரும் அடையாளம். அவர் பெண் விடுதலை உள்ளடக்கிய கவித் தேடல்.

உடலங்களின் இசை நிகழ்வு
ஓய்ந்த தருணமொன்றில் முகிழ்த்த
மகா மெளன மலரின் சுகந்தம்
நிரம்பி வழிகிறது வீடெங்கும்.
ப:3

இந்த சுகந்தம் தான் இருவருக்கான மன இசைவு வீடு கலவியால் நறுமணம் பெறுகிறது. ஆணுக்கு அது கூடுதல் மகிழ்ச்சியையும், பெண்ணுக்கு அது குறைவான சுகத்தையும் தருவதாக எங்கும் பதிவில்லை. செம்புலப்பெயல் நீராய் இரண்டறக்கலந்து மாமழைப்போற்ற வைக்கிறது.

மலையும் கடலும் காடும் மருதமும் புணர்தலில் இனவிருத்தி விதைகளை உற்பத்தி செய்யும் கவிதைகளை அன்பாதவன் தந்திருப்பது உலகத்தின் தொடர் மரபே. பிரிவைப் பேசும் பல கவிதைகளில் பொருள்வயின் பிரிதலில் ஆண் கடமைகளோடு களைந்துவிடுவதும் பெண் குடும்ப பொறுப்பைச் சுமந்து அவன் நினைவுகளை எண்ணி ஏங்குவதும் மிக நுட்பமான வெளிப்பாடாகப் பார்க்க முடிகிறது பல நேரங்களில் கடமை மீறி கசியும் காம வேட்கையை…

வறண்ட நிலம்
தாகத் தவிப்பு
உயிர் மழை பொழிய வா

எனப் பாடி கனைப் பற்றிக் கொள்ளுதலையும் படம் பிடித்திருக்கிறார். மாதவிடாய் நாட்களிலும் கூட ஆணின் உடற்தேவையை மகிழ்விக்கும் பெண் அன்பில் கரையும் அவன் பல நேரங்களில் வெட்கப்படுவதையும் மனக்கினிய வைப்பாக பெண்ணை வைத்து இன்புறும் ஆண்களையும் காண முடிகிறது.

பெண்களைக் கட்டுப்படுத்தி ஒடுக்குவதற்கும், பெண்களோடு உறவாடுவதற்கு ஆண்களின் அதிகாரம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். இச்சமுகத்தில் பொருள்வயின் பிரிந்து செல்லும் ஓர் ஆணின் பிரிவில் பெண்ணின் உடல் அவள் உயிர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை

உனக்காகவே காத்திருந்தது போல்
மகிழ்வோடு திறந்து வரவேற்கிறது
எனக்குள்ளொரு புதிய கதவு
ப:31

உடல்களின் இசைவைப் பாடும் கவிஞன் பிரிவின் வலியையும் விட்டு வைக்கவில்லை.

என் மீதான உனது கோபம்
பனிப்பாறையாய் இருப்பின்
காத்திருப்பேன் அது கரையும் வரை
பிரிவின் இடைவெளியில்
உருகும் கோபம்
பேரன்பின் பெரு நதியாய் பெருக்கெடுக்குமெனும்
நம்பிக்கையில்
ப:33

ஒவ்வொரு நாளும் காதல் வரியின் அகம் உணரும் ஒர் அற்புத காதலனின் காதல் மொழியில்

முதை சுவல் கலந்த முற்றன இனம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம்
பெருந்தோளோயே – குறுந்தொகை 24

மேட்டில் துளிர்த்த முற்றாழை இளம்புல்லை உண்பதைப் போல காமம் மிகையினும் குறையுனும் நோய் செய்வதை உணர்த்தும் அந்த குறுந்தொகைப் பாடலின் நீட்சியை அன்பாதவனின் கவிதையினும் காண முடிகிறது.

புணர்ச்சி இயல்பானது, தவிர்க்க முடியாதது காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ.நற்றிணை -39

இந்த சங்க அக கவிதையில் கூறப்பட்டுள்ள காமம் காதலால் பெருகுவதை உயிர் மழை பொழிய வா கவிதை தொகுதி முழுவதும் காணமுடிகிறது.

காதலின் சுவையும்
மோகத்தின் சுகந்தமும்
கலந்து உயிர்த்த வானவில் பூங்காவில்
உடல் கோர்த்தலைந்தோம்
இச்சை வழியும் வியர்வைகளில் காமத்தீ

"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்." – இந்த உயிரிழை தான் வாழ்க்கையைச் சுவைக்க வைக்கிறது.

"உயிர் மழை பொழிய வா"
அன்பாதவன்
நறுமுகை வெளீயீடு, 2016

- அரங்க.மல்லிகா

Pin It