நூல் அறிமுகம்: “என்ன செய்யலாம் இதற்காக?”

அவரவருடைய இயல்பான வாழ்வை ஒவ்வொரு மனிதரும் வாழ ஆதிக்க நிலையிலுள்ளோர் அனுமதிப்பதில்லை. மற்றவர் வாழ்வை அபகரிப்பதை தமது வாழ்வியலாகவும், வாழ்வியல் மகிழ்ச்சியாகவும், நிலைப்புக் கோட்பாடாகவும் கொண்டுள்ளனர். வசதிபடைத்தோராக, சமுதாய உயர் சாதிகளாக, உள்நாட்டு முதலாளிகளாக, பன்னாட்டுத் திமிங்கலங்களாக, இன வெறியர்களாக இவர்கள் பலவாக உள்ளனர்.

   eelam_234சிந்தித்தவாறு இயங்கும் குணம் கொண்டது மனிதமனம். சிந்திப்பு ஒருக்காலும் தூக்கநிலை கொள்வதில்லை. தூக்க நிலையிலும் சிந்திப்பின் வெளிப்பாடுகளே கனவுகளாக அடையாளம் கொள்கிறது. தொடர்ச்சியாய் சிந்திப்பிலுள்ள மனசு பொருளாதாரச் சிதைப்பு, பண்பாட்டு அழிப்பு, உரிமை பறிப்பு, உறவுகள் உடைப்பு எனப் பல்வேறு நெருக்கடி கொள்கிறபோது எதிர்வினையாற்றுகிறது. தனது உயிர்பறிப்பைக் கூட, தாங்கிக்கொள்கிற ஒரு மனித ஜீவன், ரத்த உறவுகளின் வாழ்வு அழிப்பை சகித்துக்கொள்வதில்லை. தன்னைவிட, தன்னைச் சுற்றியிருக்கும் உயிர்கள் முக்கியமானவையாகக் கருதும் இயல்பால், எதிர்வினை ஆற்றுகிறார்கள்., எதிர்வினை ஆர்ப்பாட்டமாக, ஆர்ப்பாட்டம் போராட்டமாக, போராட்டம் ஆயுதரூபமானதாக பரிணாமம் கொள்கிறது. இந்தப் பரிமாணத்திற்கு ஆதிக்க சக்திகளே மூலகாரணம். 

           என் தோள்களில் ஒரு போர்வை இருந்தது

          என் கைகளில் ஒரு புல்லாங்குழல் இருந்தது

           நான் எங்கும் செல்லவில்லை

            ஏதொன்றும் செய்யவில்லை

           என் தோள்களில் துப்பாக்கி வந்தது எப்படி?

           என் கைகளில் பிணங்களைத் தந்தது யார்?”

   பஞ்சாபிக் கவிஞர் மிண்டரின் கவிதைக் கேள்விகளுக்கு இன்றைய நாட்களின் நிகழ்வுகள் சாட்சியம் அளிக்கின்றன. குறிப்பாக இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாத கொடூரத்துக்கு ஆளான ஈழத் தமிழினம் சாட்சி ரூபமாகிறது.

      கலை மேன்மை, படைப்பு மேதமை போன்றவை யுத்தத்துக்குள் மாட்டுப்படாத, நிதானச் சூழலில் கொண்டாடப்படுபவை, ஆற அமர அவை பற்றி சிலாகித்து, சிரசில் அடிக்கும் அளவுக்குப் பேசி, கௌரவிக்க இயலும், அப்போது மட்டுமே தனியொரு மேதமை பற்றி பெரிதினும் பெரிதாய்ப் பதிவு செய்ய முடியும். இசைக் கலைஞர் எம்.எஸ்சுப்புலெட்சுமி பற்றி வெளியான புகைப்பட ஆல்பம், எழுத்துக் கலைஞர் கி.ராஜநாராயணனின் படைப்பாக்க ஆளுமையைப் பேசிய ஆல்பம் “ராஜ பவனம்” –போன்றவை – அமைதியான சூழலை உத்திரவாதப் படுத்தியவை.  

     யுத்தம் திணிக்கப்பட்டு, மக்கள் மேல் மரணம் கவிகிற சூழலில், இத்தகைய கலை மேன்மைகள் கொண்டாடப்பட நேரமுண்டா? கொண்டாடும் மனமாவது உண்டாகுமா? வாழ்தலே கொடுங் கனவாகிப் போனபோது, வாழ்தலின் பெருங்கனவையும், வாழ்தலின் துயரத்தையும், ஒரு முகமாய்த் திரளும் மக்களது போராட்ட ஆற்றலையுமே பதிவு செய்ய வாய்க்கும் என்பதை அழுத்தமாய்க் காட்டுகிறது இந்த ஆவணம். “இலங்கையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிங்கள இனவெறிக்கு ஆளாகிவரும் ஈழத் தமிழின மக்களின் துயரக் காட்சிகளைப் பதிவு செய்கிறது”. 

      நிறுத்தி வைக்கப்பட்ட எறிகணை வீசி (Artillery) சுற்றிச் சுற்றி ஷெல் அடிக்கும். நட்டுக்க நின்றவாறு வட்டமடிக்கும் எறிகணை வீசி புல்தரையில் நீர் தெளிக்கும் “ஸ்பிரிங்குலர்” நீரடிப்புக் குழாய் போல, சுற்றி எறிகணைகளை பாய்ச்சியபடி 20 முதல் 25 கி.மீ சுற்றளவிலுள்ள மனிதர்களை வீழ்த்தும். ஒரு தடவையின் அய்ம்பது, அறுபது ரவுண்டுகள் வட்டமடிக்கும் எறிகணை மழைக்குள் நடந்தோ, குனிந்தோ செல்ல முடியாது. வளர்த்தியான ஆளென்றால் நெஞ்சிலும், உயரம் குறைவானால் தலையிலும் அடித்துப் பிளக்கும். குறிப்பிட்ட உயரத்துக்கு மேலாக வரும் குண்டு வீச்சுக்குள் ஊர்ந்து கடந்தார்கள் தமிழ் மக்கள். போரில் வாழுதல் இத்தகைய தந்திரோபாயங்களைக் கொண்டது. ஊர்ந்து வாழும் உபாயங்களையும், மேலிருந்து “வண்டு” (குண்டடிக்கும் விமானம்) வரும் சத்தம் அறிந்து பதுங்குகுழிகளுக்குள் ஒடுங்குதலையும் ஈழ மக்கள் கற்றிருந்தார்கள். அன்றாடம் உயிர்பிழைத்தலை ஒரு நேர்த்தியான கலையாகச் செய்ய முடியாதவருக்கு யுத்தத்தில் வாழுதல் சாத்தியமில்லை.

   eelam_256பதுங்கு குழியிலிருந்த ஒரு குழந்தை சாப்பிட்டதும், கை கழுவ மேலே வந்தது. கை கழுவ எவ்வளவு நேரம்? மேலே வந்த குழந்தை விமான வெடிகணை வீச்சில் சல்லடையாகிச் சாய்கிறது. குண்டு வீசி விமானம் திரும்பிப் போகிறவரை, மீட்கப்படாமல் குழந்தை உடல் கிடக்க – பார்த்தபடியே கதறும் தாய் தந்தையின், சகோதரியின் கண்களை மனசில் கற்பனை செய்து பாருங்கள், அந்தக் கோர துயரத்தை ஒரு புகைப்படத்தால் கொண்டு வர முடியும். எழுத்தில் கொண்டுவர இயலுமா? புகைப்படக்காரனும் அந்த நேரத்தில் கொல்லப்படாதிருக்க வேண்டும்.

   மனித உயிர் அழிவுக்கு-சின்னா பின்னமாயக் கிடக்கும் உடல் சிதைவுக்கு – கண்ணீருக்கு – ரத்தத்துக்கு “என்ன செய்யலாம் இதற்காக” புகைப்பட ஆவணத்தொகுப்பு (ஆல்பம்) யுத்த சாட்சியாகியிருக்கிறது.

   போர்க் குற்ற அத்துமீறல்களை விண்கோள் (Satelite) மூலமாகவும் ஆளில்லா வேவு விமானங்கள் மூலமாகவும் இந்தியா சேகரித்து வைத்திருக்கிறது. யுத்தம் நடைபெறுகையில், களத்திலிருந்த இந்திய இராணுவ பொறியியல் வல்லுனர்கள் - புகைப்படங்களாய், அறிக்கையாய் இந்தியாவுக்கு தந்திருக்கிறார்கள்.

   குறிப்பாக முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக வானிலிருந்து எடுக்கப்பட்ட காணொளி ஆதாரங்கள், இந்திய புலனாய்வுத் துறையான “ரா” (RAW) வசம் உள்ளன. தமிழர் மீதான தாக்குதல் தீவிரமடைந்தபோது சோனியா காந்தியின் முகவர்களான தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனும், இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எம்.கே.நாராயணனும், கொழும்பிலும் டெல்லியிலும் மாறி மாறி இருந்தபடி வழிகாட்டுதல் தந்தனர். 2009 மே-இந்திய நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் தெரிவதற்குள் எல்லாவற்றையும் முடித்து விடும்படி ஆலோசனைகள் தந்தது மட்டுமல்ல. அவ்வப்போது கொழும்பிலேயே இருந்து விரைவுபடுத்தினர். பொதுமக்கள் மத்தியில் இணைந்துள்ள விடுதலைப் புலிகளை அழிக்க, பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை வலிந்த தாக்குதல் தொடுங்கள் என கட்டளையிட்டனர். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை “ரா” (Raw) எடுத்துள்ள காணொளிகளை வைத்து, போரின் இறுதி நாட்களில் அளவுக்கதிகமாக பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு, இலங்கை அரசு தான் பொறுப்பு, அதற்கான ஆதாரங்கள் எம்வசம் உள்ளன என புதுடில்லி குற்றம் சுமத்தி மிரட்ட முயன்றன. 

. “அனைத்து வகையிலும் எனது கட்டுப்பாட்டின் கீழ் நீ இரு, அனைத்து வர்த்தக கொள்கை ஒப்பந்தங்களிலும் கையெழுத்துப் போடு என்பது இதன் உள்ளார்த்தம்”.

   இந்தப் பூச்சாண்டி வேலையை என்னிடம் காட்ட வேண்டாம் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய புதுடில்லியின் மீதே அதைத் திருப்பியடித்தார். போர்க்குற்றச்சாட்டினை இலங்கை எதிர்கொள்ள நேர்ந்தால் அதற்கு புதுடில்லியும் உடந்தையாக இருந்ததை எம்.கே.நாராயணனும், சிவசங்கர மேனனும் நடத்திய உரையாடல் பதிவுகளை அம்பலத்துக்குக் கொண்டு வருவதாக எதிரடி தந்தார். ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய போரினால் உலகத்தின் முன் உடுத்திய ஆடை அவிழ்ந்து அம்பலப்பட வேண்டியது நடக்கும் எனத் திருப்பினார்.

   “இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்” என்று இராசபக்சே சொன்ன வாசகம், இப்போது பொருத்திப்பார்க்கிற நிலையில் அதன் முழுமையான பொருள் பரிமாணம் புலப்படுகிறது. தனது அரசியல் பழிவாங்குதலுக்காக – அரசியல், பொருளாதார லாபங்களுக்காக, இந்தப் போரை நடத்தியது இந்தியா.

   கோத்தபயவின் மிரட்டல்களில் பயந்து ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையின் போர்க்குற்ற, மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக சில மேற்குலக நாடுகள் மேலெடுத்த முயற்சியை, இந்தியா பிறநாடுகளையும் துணை சேர்த்துக்கொண்டு முறியடித்தது. நீண்ட பல காலங்களுக்கு தனது சொற்படி இந்தியாவினை ஆட்டுவிக்கக்கூடிய பிடி இலங்கையின் கையில் இருக்கிறது. (Ground Report -எம்.எஸ்.ஆர்.சுப்பிரமணியம்) 

   இந்தியத் தென்கோடி முனையில் வாழ்பவர்கள் தமிழர்கள். இந்தியாவின் எந்தக் கோடியில் வாழபவராயினும் கவலையில்லையென, மைய நீரோட்டத்தின் இந்தியர்கள் நினைக்கிறார்கள். இந்த நினைப்பில் அவலங்களாக வடகிழக்கின் அசாம், மணிப்பூர், நாகாலாந்து –மக்கள் நிற்கிறார்கள். மைய நீரோட்ட இந்தியர்களுக்கு கடலுக்கு அப்பால் வாழுகிறவர்கள் தமிழர்கள் என்பதும் அவர்களின் மூளையில் பதிந்தது இல்லை. அவர்களுக்கு ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப்புலிகள் தமிழர்கள் என்ற ஒன்று மட்டும் தெரிந்திருந்தது. ஈழத்தமிழினம் அழிக்கப்படுவது பற்றி அவர்களும் அவர்களது ஊடகங்களும் சரியான செயல் என்றே கருதினர். இத்தகைய பிழையான முடிவுகளிலிருந்து வட இந்தியத் தொலைக்காட்சிகளும் செய்தி இதழ்களும் நடந்து கொண்ட போது நாம் செயல் அறியாது திகைத்து நின்றோம்.

   2008-ல் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல் நடத்தியபோது, 800 பேர் கொல்லப்பட்டனர். உலக முழுதுமுள்ள ஊடகங்கள் இஸ்ரேலுக்கு எதிராய் கண்டப் போரைத் தொடங்கியபோது எட்டு நாளில் இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்பட்டது. இங்கு இலட்சக்கணக்கில் தமிழர்களின் கொலை நிகழ்வானவேளையில், இந்திய ஊடகங்கள் வாய்க்குப் பிளாஸ்திரி போட்டுக்கொண்டதையும் இராசபக்ஷேக்களுக்கு ஆதரவாய் நின்றதையும் அறிவோம். 

“முக்கியமான விடயம் தமிழர்கள் திராவிடர்கள்; கறுப்பு நிறத்தவர்கள்; இந்தியாவின் தலையாகவும், ஊடகங்களின் மூளையாகவும் உட்கார்ந்திருக்கிற ஆரியர்கள் சிவப்புத் தோல் கொண்டவர்கள். தமிழர் அழிக்கப்படுவதில் நிறவேற்றுமை செயல்பட்டது” என இல்லிணய்ஸ் பல்லைக்கழக மனித உரிமைப் பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல் குறிப்பிடுகிறார்.

   தமிழகத்தின் அரசுத் தலைமையிலிருந்த கருணாநிதி எண்ணியிருந்தால், இந்த இனப் படுகொலையை நிறுத்தியிருக்க முடியும். இந்தியத் தலைமையை ஆட்டுவிக்கும் வல்லமை கொண்டவராக அரசுப் பொறுப்பிலிருந்தார் அவர். இந்தச் செயலாற்ற ஆட்சித் துறப்புக் காரியம் கூட தேவைப்பட்டிருக்காது. சன் டி.வி. சன் செய்திகள், கே.டி.வி., கலைஞர் டி.வி., கலைஞர் செய்திகள், இசையருவி, சுட்டி டி.வி., ஆந்திரத்தில் ஜெமினி, கர்நாடகத்தில் உதயா, கேரளத்தில் சூர்யா என்று அவர் குடும்பத்தின் கைவசமிருந்த அத்தனை தொலைக்காட்சிகள் பேசியிருந்தாலே யுத்தம் நிறுத்தப்பட்டிருக்கும். அத்தனை தொலைக்காட்சிகளும் வட இந்திய ஊடகங்களைப் போலவே நடந்து கொண்டன. இந்த காட்சி ஊடகங்கள் பேசியிருந்தால், தமிழக மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்சிப் படுத்தியருப்பார்கள். காட்சி ஊடகங்களின் ஆற்றல் அத்தகையது. இப்படியொரு நூல் உலகின் கைகளில் தரப்படுவதைகூட கருணாநிதியால் தடுத்திருக்க முடியும். இங்கு மௌனம் கொலையின் சம்மதமாகியது.

   “என்ன செய்யலாம் இதற்காக” என்ற இந்த ஆவணத் தொகுப்பு, நிர்வாணமாய் எரிக்கப்பெற்ற தமிழர்கள், பாலியல் வன்முறை செய்யப் பெற்ற பெண்கள், மூளை சிதறி, குடல் வெளித்தள்ளி, அடுக்கடுக்காய் குவியல்குவியலாய் கிடக்கும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உடல் சிதைவுகள், வன்னி வெளியெங்கும் பரவிக் கவிந்த மரணம் - இவைகளுக்கெல்லாம் நீங்களும் நானும் பங்காளிகள் என்று சுட்டிக் காட்டுகிறது. இன்னும் வெளிவராத ஒரு ஈழத்து நாவலில் வருகிற ஒரு வாசகம்: “என் தலைமுறை முழுக்க எப்பொழுதுமே – ஒரு வேளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கக்கூடும் கதை சொல்லக் கூடிய வலிமை”.

இன அழிப்பின் துயரங்களும் எதிர்த்து நின்ற போர்க்குணமும் இந்த பூமிப்பந்தில் கதைகளாக, வீரயுகத்தின் சான்றுகளாக, நாட்டார் நாவில் பாடல்களாக, குறும்படங்களாக எரியும் கலைச் சாட்சியங்களாய் வெளிப்படும். இரண்டாம் உலகயுத்தத்தின் பின் ருசியாவின் அழிவுகள், சிதைப்புகள், அவலம், அவ்வளவும் பல ரூபங்களில் தொடர்விளைச்சலாகியது போல் ஈழவிடிவுக்கு அப்பாலும் இதுபோன்ற பதிவுகள் வெளிப்படும்.

   விடுதலைக்குத் தக்க விலைதான் கொடுக்கலாம். அதற்கு மேல் கொடுக்க முடியாது – கொடுக்கப்பட்ட விலைக்கு ஈழ விடுதலையும் ஈடுகட்டுவதாக இருக்காது.

   ஆவணத் தொகுப்பினூடாக மனவலியோடு பயணித்தேன். எனக்குள் ஓடிய மானுடநேயத்தில் இதைக் கடக்க பத்துநாட்களுக்கு மேலானது. ஒவ்வொரு வரும் மானுடராயின் இந்த நெடுந்துயர அனுபவம் தொடரும்.

   இலங்கையின் ராசபக்ஷேக்கள் மீது, ஐ.நா.வினால் நியமிக்கப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைக்குழுவிடம் இந்நூல் கையளிக்கப்பட்டு, ஒரு சாட்சியமாய் ஏற்கப்பட்டுள்ளது. புகைப்படங்களின கீழே தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மூன்று மொழிகளிலும் தரப்பட்டுள்ள குறிப்புகள் சாட்சியம் சொல்லத் துணை செய்வன.

   இரண்டாம் உலகப்போரில் “நாஜி இனப்படுகொலை” பற்றிய ஒரு புகைப்பட ஆவணத்தொகுப்பு 1950-களில் வெளியாகி, சர்வதேச தாக்கத்தை ஏற்படுத்திற்று. அதுபோலவொரு தாக்கத்தை இந்தொகுப்புக்குள் உண்டாக்கும். தகிப்பு இதற்குள் ஜீவிக்கிறது.

   எந்தவொரு சார்புத்தன்மையும் அற்று தொகுப்பு வெளிப்பட்டுள்ளது. இங்குள்ள அரசியல் தலைமைகள், ஈழ ஆதரவு வட்டாரங்கள் என எவரொருவரின் அணிந்துரையும் பெறப்பட்டிருக்குமாயின், இது வேறுபட்ட முகம் கொண்டிருந்திருக்கும். இந்தியாவின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், அமெரிக்க மருத்துவர், மனித நேயர் எலன்சாண்டர் (Ellyn Shander) தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் இலங்கை ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சிறிதுங்க ஜெயசூர்யா, ஜெர்மனி சர்வதேச மனித உரிமைக் கழகத்தின் தலைவர் விராஜ்மெண்டிஸ் (Mr.Viraj Mendia) ஆகியோரது அணிந்துரைகளுடன் தனது சார்பற்ற முகத்தை துலக்கப்படுத்துகிறது.

   eelam_205புகைப்படம் என்பது தனியொரு மொழி. புகைப்படக் கலைஞர் தேர்வு செய்யும் கோணமும் படம் எடுக்கப்படும் உத்தியும் இணைந்த ஆற்றல்தான் அம்மொழி. தொகுப்பாளர் நேரடியாக களத்தில் நின்று படமெடுத்தவர் அல்ல படங்களைத் தெரிவு செய்த முறையும் தொகுத்த விதமும் படம் எடுக்கப்பட்டதினும் கூடுதலான வீச்சைத் தருகிறது. ஒன்றுக்குப் பக்கத்தில் அதற்கு இணைவான புகைப்படத்தையும், அதுபோல் ஒன்றுக்கு எதிரான (Contrast) மற்றொன்றையும் இணைத்த முறை புகைப்பட மொழியை உச்சத்திற்கு எடுத்துப் போகிறது. ஈழத்தில் பொங்கல் விழா, மகிழ்ச்சியில் பள்ளிச் சிறுவர்கள், மீன் பிடித்து மகிழும் கடற்கரைச் சிறுவர்கள் என்ற காட்சிகளை அடுத்து 1956ன் ஈழ இனப்படுகொலை, 1958ன் இனப்படுகொலை என (பக்கம் 22-23) எதிர்க்காட்சிகளை அடுக்கி ஆதிக்க முரணை வெளிக்கொண்டு வந்துள்ளது. படங்கள் வெளிப்படுத்திய மொழி ஒன்றென்றால், அவை தொகுக்கப்பட்ட விதம் வெளிப்படுத்தும் மொழி இன்னொரு மொழி கூடுதல் பரிமாணத்தை வழங்கி நிற்கிறது.

   ஒரு பெரிய பசுமாட்டுக் கூட்டம் எறிகணை வீச்சில் வீழ்ந்து கிடக்கிறது (பக்கம் - 124) மனிதர்கள் கொத்துக்கொத்தாய் வீழ்ந்து கிடக்கும் காட்சி, மனக்கண்ணில் காட்சிப்படுகிறது.

   3+2=5 என்பது ஒரு உண்மை. மறுப்போ மாற்றுக் கருத்தோ இல்லை. இந்தப் படங்கள் மறுக்கப்பட முடியாத உண்மைகள். குறிப்பிட்ட காலத்தின் தெளிவான வரலாற்றுப் பதிவு. வரலாற்றில் சில மணித்துளிகளேயாயினும் அது பற்றிய சிறப்பான பதிவு, அக்கால கட்டத்தின் முழுவரலாற்றுப் போக்கையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிடும். நூற்றாண்டுகளுக்கும் மேலாக தாவிச் செல்லக்கூடிய வரலாற்று நினைவாக ஆகிவிடுகிறது. எடுத்துக்காட்டு நூலின் பக்கம் 164-ல் வியட்னாமிய ஆக்கிரமிப்புப் போரில் குண்டுவீச்சில் கதறியோடும் சிறுமியின் படம் போலவே, காலங்களை நூற்றாண்டுகளைக் கடந்து தாவிச் செல்லக்கூடியவை இப்படங்கள்.

   அறிவு ஜீவிகள் என்போரில் பலர், அற்பஜீவிகளாய் மாறிவிட்ட காலக்கொடுமையில், இதுபோன்ற ஆவணச் சாட்சியங்களைப் பதிவாக்கிய மனித நேயத்தொகுப்பாளர்கள் நமது மரியாதைக்குரியவர்கள்.

   “அன்பிற்குரிய உலக மக்களே!

   உங்கள் ஆதரவு நாகரிகத்திற்கா காட்டுமிராண்டித்தனத்திற்கா எனும் கேள்வி இனவிடுதலைக்கா, இனப்படுகொலைக்கா என உங்கள் முன் வருகிறது. இனவிடுதலையை ஆதரித்து நாகரிகத்திற்கே எனப் பதிலளியுங்கள்”.

   விடையை வாசகரிடமிருந்தும், உலக மக்களிடமிருந்தும் கோரும் வேண்டுகோளுடன் புகைப்படங்களின் அடுக்கம் முடிவு பெறுகிறது. உலகப்பிரமுகர்களான பேரா. நாம்சாஸ்கி, பேரா. பிரான்சிஸ்பாய்ல், எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான அருந்ததி ராய், அமெரிக்க முன்னாள் இணை சட்டத்தரணி புரூஸ் பெயின், பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர் டாக்டர் ராகேல் சாய்ஸ், சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீகுவான்யே ஆகியோரின் ஈழம் குறித்த கருத்துக்கள் பின் தொடர்ச்சியில் தரப்பட்டடுள்ளன.

•  ஈழத் தமிழினப் படுகொலைகள் 1956-2009

•  தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும்

•  ஈழத் தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள்

•  இலங்கைத் தீவில் தமிழரின் பூர்வீகம்

என இறுதி 36 பக்கங்களில் நான்கு பிரிவாய் வரலாற்று அட்டவணைகள் தரப்படுகின்றன. வரலாற்று ஆதாரங்களுடன் முடிவு பெற்ற போதும், இன்னும் முடியவில்லை இனப்போர் என்று மீதம் எழுத வேண்டியதையும் மனிதகுலத்துக்கு விட்டுச் செல்கிறது. எதை நோக்கிய திசையில் உலகமக்களை ஈர்க்க வேண்டுமோ, அந்த மையம் நோக்கிய பயணத்தில் பிசிரற்ற வெற்றியை நூல் பெற்றுவிட்டது.

   “என்ன செய்யலாம் இதற்காக”

   What is to be done about this?”

   ஆசிரியர் ஜெ.பிரபாகரன்

   பென்னிகுயிக் பதிப்பகம்,

4/1411 செந்தில்நாதன் தெரு, தாசில்தார் நகர்,

   மதுரை-625 020

   பேசி: 9994497418, 9080530200

   விலை: ரூ.500/-

(நன்றி: உயிர்மை)

Pin It