“குழந்தையா இது; குட்டிச் சாத்தான்... இனியும் என்னால இதை மேய்க்க முடியாது. இதப் பார்த்துக்கிறதுக்கு நீ வேற ஏற்பாடு பண்ணிக்க; நாளையிலருந்து நான் வேலைக்குப் போகப் போறேன்....” வெடித்தாள் மரியபுஷ்பம். அவசரமாய் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த முத்துப்பாண்டி ஒரு நிமிஷம் திகைத்தான். அப்புறம் தன்னுடைய மதிய உணவுப் பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பப் போனவனை மறித்து மறுபடியும் சத்தம் போட்டாள் அவள்.

“இங்க ஒருத்தி கரடியாக் கத்திக்கிட்டிருக்கேன்; காதுலயே வாங்காதது மாதிரி நீ பாட்டுக்கு கிளம்புனைன்னா என்னப்பா அர்த்தம்? நான் வெளையாட்டுக்குச் சொல்லல.... நேத்தே நான் வேலை பார்த்த பழைய ஸ்கூல்ல பேசிட்டேன்.... நாளையிலருந்து வேலைக்கு வரச் சொல்லீட்டாங்க..... கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கிட்டு உடனே ஏற்பாடு பண்ணு... இல்லைன்னா நாளையிலருந்து நீ தான் லீவு போட்டுப் பார்த்துக்கனும்......” அதிகாலை வேளையில் சண்டை வேண்டாமென்று அமைதியாய் அலுவலகம் கிளம்பிப் போய்விட்டான் முத்துப்பாண்டி.

Mother Child அலுவலகத்தில் அவனுக்கு வேலையே ஓடவில்லை. திடுமென்று இப்படி அறிவித்தால் என்ன செய்வது? ஆனால் மரியபுஷ்பம் எப்பவுமே இப்படித்தான். புருஷனென்றாலும் புள்ளையென்றாலும் அவளின் அதிகார வரம்புக்குள் அவள் சொல்கிறபடியெல்லாம் ஆட வேண்டும்; குட்டிக் கரணம் போடச் சொன்னால் போட வேண்டும். மறுத்தால் அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. சில்வியாவிடம் அவளின் அதிகாரம் செல்லுபடியாகவில்லை. சில்வியா இவர்களின் பதினைந்து மாதக் குழந்தை.

“என்ன ரொம்ப டல்லா இருக்கேள்; உங்க குட்டி இளவரசி ரொம்ப படுத்தறாளோ.....” என்றபடி இவனுடைய டேபிளுக்கு வந்தார் வீரமணி. இவர் தான் சில்வியா இவர்களுக்குக் கிடைப்பதற்கு மூல காரணமாய் இருந்தவர். மிகவும் அற்புதமான மனிதர். எழுபது வயதைக் கடந்த கிழவர். இந்த வயதிலுல் வேலை செய்து தான் வயிற்றை நிரப்ப வேண்டுமென்கிற பரிதாபகரமான வாழ்க்கைச் சூழல் அவருக்கு.

ஒருமுறை அவர் முத்துப்பாண்டியின் வீட்டிற்கு வந்திருந்தபோது “உங்களுக்கு எத்தனை குழந்தைகள் ஸார்.....” என்று எதார்த்தமாய்க் கேட்டார். பொதுவாய் இந்தக் கேள்விக்கு முத்துப்பாண்டி எப்போதும் ‘ஒரே ஒரு பெண் குழந்தை கிராமத்தில் அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறது’ என்று பொய் தான் சொல்வான். ஏனோ அன்றைக்கு வீரமணியிடம் அவன் அப்படிச் சொல்லவில்லை.

“எங்களுக்கு குழந்தைகள் இல்ல ஸார்...” என்றான். அவர் கொஞ்ச நேரம் மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம், “பகவான் எப்பவுமே இப்படித்தான் ஸார்... நல்லவாள கஷ்டப்படுத்தி அதுல குரூர சந்தோஷம் அனுபவிப்பான்....” என்றவர், “பேசாம நீங்க ஒரு குழந்தைய தத்தெடுத்து வளருங்களேன் ஸார்....” என்றார். முத்துப்பாண்டி சிரித்தான்.

குழந்தை தத்தெடுப்பு ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமில்லை என்பதை அனுபவரீதியாய் அறிந்திருந்தான் அவன். சில வருஷங்களுக்கு முன்பே அதற்கான முயற்சிகளில் இறங்கி நிறைய அலைக்கழிப்புகள், அவமானங்களுக்கப்புறம் அது பெரிய பிஸினெஸ் என்கிற உண்மையைத் தெரிந்து கொண்டு அதிலிருந்து முற்றிலுமாய் விலகி விட்டான். அந்த கசப்பான அனுபங்களை வீரமணியிடம் விவரிக்கவும் அவரும் அதிர்ந்தார்.

மெதுவாய் “நீங்க அப்படி ஒரேயடியா ஒதுங்கிடக் கூடாது ஸார்; கண்டிப்பா பணம் பண்ண நினைக்காத சேவை மனப்பான்மையுள்ள நல்ல ஏஜென்சிகள் ஏதாவது இருக்கும் ஸார்... நான் தேடி, உங்களுக்கு ஒரு குழந்தை வாங்கித் தர்றேன்....” என்றவர் உடனே செயலில் இறங்கினார். சுற்றம் நட்பு எல்லோரிடமும் விசாரித்தார். அவரின் பக்கத்து வீட்டில் வாடகைக்குக் குடிவந்த ஒரு கிறிஸ்துவப் பெண்ணின் மூலம் பரங்கிமலையில் ஒரு குழந்தைகள் இல்லம் இருப்பதாக அறிந்து முதலில் அவர் போய் விசாரித்து விட்டு வந்தார். “குழந்தை யாருக்கு வேணுமோ அவங்கள வரச் சொல்லுங்க....” என்று சொல்லி ‘மேல் விபரங்கள் எதுவும் தரவில்லை அவர்கள்...’ என்றார்.

“ஆனா அவாளப் பார்த்தா ரொம்ப நல்லவாளாத் தெரியுது; எதுக்கும் நீங்க உங்க மனைவியோட ஒரே ஒரு தடவை போயிட்டு வந்துடுங்க....” என்று வற்புறுத்தினார். மரியபுஷ்பம், தான் இன்னொரு கசப்பான அனுபவத்திற்கு தயாரில்லை என்று மறுத்தாள். வீரமணி வீட்டிற்கே வந்து அவளை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தார்.

பரங்கிமலையின் உச்சியில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்திருந்தது அந்த இல்லம். மரியபுஷ்பமும் முத்துப்பாண்டியும் அங்கு போய் விபரம் சொல்லி விசாரித்தபோது, கொஞ்சநேரக் காத்திருப்புக்குப் பின் வந்தமர்ந்தாள் ஒரு சகோதரி. மிகவும் மெல்லிய குரலில் விசாரித்தார். அவரின் தமிழில் மலையாளம் மணத்தது. இவர்களின் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு இப்போதைக்கு தங்களிடம் பத்து மாதப் பெண் குழந்தை ஒன்றிருப்பதாகவும், விரும்பினால் எடுத்துப் போய் வளர்க்கலாம் என்றும் சொன்னார். ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் திக்குமுக்காடிப் போனார்கள் இருவரும். வரங்கொடுக்கும் தேவதையாய்த் தெரிந்தாள் அவள்.

அவர்களின் முந்திய அனுபவங்களுக்கு முற்றிலும் மாறாக மளமளவென்று காரியங்கள் நடந்தேறின. ஒரே மாதத்தில் குழந்தை இவர்களின் கைகளுக்கு வந்து விட்டது. அவர்களின் பராமரிப்பிற்கென்று மிகவும் குறைவான பணமே கேட்டார்கள். முத்துப்பாண்டி கேட்டே விட்டான் - ஏன் இத்தனை குறைச்சல்? அரசாங்கம் நிர்ணயித்த தொகையே இதை விடவும் அதிகமாயிற்றே? சிரித்துக் கொண்டே சொன்னார்கள் “எங்களுக்குப் பணம் பெரிசில்லை; குழந்தை சிறப்பாக வளர வேண்டும் அவ்வளவே.....” மரியபுஷ்பம் அழுதே விட்டாள்.

குழந்தைக்கு சில்வியா என்று பெயர் சூட்டினார்கள். முத்துப்பாண்டி தான் இந்தப் பெயரைப் பரிந்துரைத்தான். “பேரு ரொம்ப நல்லாருக்கே! எங்கருந்துப்பா புடிச்ச, இண்டர்நெட்லருந்தா... ” என்று மரியபுஷ்பம் கேட்டாள். ”அசோகமித்ரன் இந்தப் பேர்ல ஒரு சிறுகதை எழுதியிருக்கார்; அப்புறம் மேலை நாட்டுல சில்வியாபிளாத்துன்னு ஒரு பெரிய எழுத்தாளர் இருக்கார்....” என்றான் அவன். எப்படியோ பெயர் அவளுக்கும் ரொம்பப் பிடித்திருந்தது.

குழந்தையை தத்தெடுத்தபோது மரியபுஷ்பம் ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். முதலில் வேலையை விடுகிற எண்ணமெல்லாம் இல்லை அவளுக்கு. வேலைக்குக் கிளம்பும்போது சில்வியாவை ஒரு கிரீச்சில் விட்டு விட்டு சாயங்காலம் வேலை முடிந்து திரும்பும் போது மீண்டும் வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு வருவதற்கு ஏற்பாடெல்லாம் பண்ணி வைத்திருந்தார்கள். குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்த தினத்தில் அவள் முத்துப்பாண்டியிடம் கேட்டாள்.

“இவ்வளவு நாள் கழிச்சு கடவுள் நமக்கொரு குழந்தை குடுத்துருக்காரு; பேசாம நான் வேலைய விட்டுட்டு வீட்லருந்து குழந்தைய வளர்க்கட்டுமாப்பா? என் சம்பளம் இல்லாம நீ சமாளிச்சுடுவியா...?” முத்துப்பாண்டியும் உடனே சம்மதித்தான். அவனும் சில நாட்கள் விடுமுறை போட்டுவிட்டு சில்வியாவுடனே இருந்தான்.

சில்வியாவை வீட்டிற்கு கொண்டு வந்த தினத்தன்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லோரும் ஆர்வமாய் வந்து வந்து பார்த்தார்கள். “என்ன ஆன்ட்டி குழந்தை இவ்வளவு குட்டியூண்டா இருக்கு? பதினோரு மாசக் குழந்தை மாதிரியே இல்லையே!” என்றாள் பக்கத்து வீட்டு செல்வி. அப்போது சில்வியா மிகவும் எடை குறைவாகவே இருந்தாள். எப்படியும் தன்னுடைய சிரத்தையான பராமரிப்பில் அவளை நன்றாகத் தேற்றி விட முடியும் என்று நம்பினாள் மரியபுஷ்பம்.

முதல் சில நாட்கள் சில்வியா ரொம்பவும் சமர்த்தாய் இருந்தது. சாப்பாடு கொடுக்கும் போது சாப்பிட்டது. படுக்கை விரித்து வைத்து விட்டு போய், படுத்துக்கோ என்று சொன்னால் போய் படுத்துக் கொண்டது. அழுகை என்பதே அநேகமாய் இல்லை. மரியபுஷ்பமும் முத்துப்பாண்டியும் மாறி மாறி செல்லங் கொஞ்சியதாலோ என்னவோ அப்புறம் வந்த நாட்களில் தான் ரொம்பவும் அலும்பு பண்ணத் தொடங்கி விட்டது.

பாதி இராத்திரி வரைக்கும் வாய்மூடாமல் அழுகிறது - அதுவும் தூங்காமல், மற்றவர்களையும் தூங்க விடாமல். மரியபுஷ்பத்தின் மடியில் படுத்தால் தான் தூங்குவேனென்கிறது. ஆழ்ந்து தூங்குகிறதே என்று படுக்கையில் போட்டால் விழித்துக் கொண்டு வீறிடுகிறது. விழித்திருக்கும் நேரமெல்லாம் தூக்கி வைத்திருக்கச் சொல்கிறது. கீழே இறக்கி விட்டால் கத்தி ஊரைக் கூட்டுகிறது. வீடு முழுவதும் விளையாட்டுச் சாமான்களும் பொம்மைகளுமாய் வாங்கி நிறைத்திருக்கிறார்கள். ஆனால் சில்வியா எதையும் சட்டை செய்வதே இல்லை. அது எப்போதும் தானுண்டு தன் அழுகை உண்டு என்றே இருக்கிறது.

சாப்பாட்டு விஷயத்தில் இன்னும் விசித்திரமாய் நடந்து கொண்டது. என்ன கொடுத்தாலும் சாப்பிட்டது; சந்தோஷமான விஷயம் தான். ஆனால் சாப்பிடுவதையும் அழுவதையும் தவிர்த்து வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்பது போல் நடந்து கொண்டது தான் மரியபுஷ்பத்தை பயமுறுத்தியது. குழந்தைத்தனம் கொஞ்சமும் இல்லாமல் பசியே அடங்காமல் கொடுக்கக் கொடுக்க சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. வயிறு பலூன் மாதிரி உப்புவதைப் பார்த்து மரியபுஷ்பமே நிறுத்தினால் தான் உண்டு. அப்படியும் சாப்பாடு கொடுப்பதை நிறுத்தியவுடன் பயங்கரமாய் அழுதது.

டாக்டரிடம் ஆலோசனை கேட்டால் பிரச்னையின் வீரியம் புரியாமலே “குழந்தைதானே எவ்வளவு சாப்பிடப் போகுது; தாராளமாக் குடுங்க....” என்றார். அப்படியும் ஒருநாள் அபரிமிதமாய்க் கொடுத்து அன்றைக்கு இராத்திரியெல்லாம் வாந்தி எடுத்து இவர்களை பயமுறுத்தி விட்டது. டாக்டரிடம் பதறியடித்துத் தூக்கிக் கொண்டு போனால் அவர் பரிசோதித்து விட்டு “கவலைப்படுறதுக்கு ஒண்ணுமே இல்ல; வாந்தி எடுக்குறதெல்லாம் குழந்தையோட வாழ்க்கையில ரொம்ப சகஸம்...” என்று சொல்லி அனுப்பி விட்டார்.

அதைவிட கொடுமை; எவ்வளவு சாப்பிட்டும் சில்வியா நாளுக்கு நாள் மெலிந்து எடை குறைந்து கொண்டே வந்தாள். டாக்டரோ “குழந்தை எல்லாவிதத்திலும் நார்மலா இருக்கு.... எடை குறைவு என்பதெல்லாம் இந்த வயதில் ஒரு பொருட்டே இல்லை; மேலும் எடை மெஷினில் கூட வித்தியாசங்கள் இருக்கும்....” என்றார். மரியபுஷ்பத்தின் நச்சரிப்புக்கு ஆற்ற மாட்டாமல் டயட்டீசியனைப் பார்க்கச் சொல்லி பரிந்துரை சீட்டுக் கொடுத்தனுப்பினார்.

“இந்த டாக்டருக்கு தடுப்பூசி போடுறதத் தவிர்த்து வேறதுவும் தெரியாது போலருக்குப்பா...” என்று அங்கலாய்த்தபடி டயட்டீசியனைப் பார்த்தார்கள். அவர் இவள் கொடுக்கிற உணவுகளையெல்லாம் கேட்டுவிட்டு “போதுமே! தேவைக்கு மேலயே குடுக்குறீங்களே....” என்றவர், “பிறக்கும் போது எடை குறைவாயிருக்கும் குழந்தைகள் ரொம்பவும் மெதுவாய்த் தான் தேறி வரும்....” என்று சொல்லி விட்டார்.

மருத்துவ மனையில் டாக்டருக்காக காத்திருக்கும் தருணங்களில் அங்கு வரும் மற்ற கொழுக் மொழுக்கென்ற குழந்தைகளைப் பார்க்கும்போதும், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லாம் குழந்தையை தேற்றுவதற்கென்று ஆளாளுக்கு ஒரு டயட்டை பரிந்துரைக்கும் போதும் மரியபுஷ்பம் ரொம்பவும் உடைந்து போனாள். “சின்னச் சின்ன பிள்ளைங்களெல்லாம் அட்வைஸ் பண்ற மாதிரி நம்ம நெலமை ஆயிடுச்சேப்பா....ஒருவேளை உண்மையிலேயே நமக்குத் தான் குழந்தைய வளர்க்கத் தெரியலயோ.... காலம் போன காலத்துல குழந்தைய எடுத்துட்டு வந்துட்டோமோ..” என்று பொங்கிப் பொங்கி அழுதாள்.

அதைவிட தத்தெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சில்வியாவை நீதிபதியிடம் காண்பிப்பதற்காக கோர்ட்டுக்குக் கொண்டு போன போது அங்கு வந்திருந்த குழந்தைகள் இல்லத்தின் சகோதரி “என்னம்மா குழந்தை இவ்வளவு மெலிஞ்சு போச்சு; கொஞ்சம் பார்த்துக்கங்கம்மா.....” என்ற போது மரியபுஷ்பத்தை சமாதானப்படுத்தவே முடியவில்லை. அன்றைக்கெல்லாம் அழுது கொண்டே இருந்தாள்.

“ஏங்க, குழந்தைய திரும்ப வாங்கிக்குவாங்களோ?” என்று முதலில் பயந்து பயந்து பேசியவள், அப்புறம் “வேணுமின்னா நமக்கு குழந்தைய வளர்க்கத் தெரியலேன்னு நாமளே சில்வியாவத் திருப்பிக் கொண்டு போய் குடுத்துட்டு வந்துடலாமாப்பா....” என்று புலம்பத் தொடங்கி விட்டாள். முத்துப்பாண்டிக்கு ரொம்பவும் பயமாகி விட்டது இவளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று.

பத்து மாசத்திலேயே குழந்தைகள் பேசத் தொடங்கி விடுமென்று ஒரு பத்திரிக்கையில் வாசித்து விட்டு சில்வியாவிற்கு பேச்சுக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினாள் மரியபுஷ்பம். அதுவும் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. கொஞ்சம் சிரமப்படுத்தினாலும் செய்கைகளை ஓரளவிற்கு சீக்கிரமே கற்றுக் கொண்டது. முத்துப்பாண்டி வெளியிலே கிளம்பும் போது கைகளை வீசி டாடா காண்பித்தது. ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு....’ என்று பாடினால் முதுகை முன்னும் பின்னும் வளைத்து ஆடியது. ‘நிலா நிலா ஓடிவா....’ என்றால் விரல்களை நீட்டி மடக்கி நிலவை அழைத்தது. ஆனால் பேசுவதற்கு வார்த்தைகள் தான் உருப்பெறவேயில்லை. ஏய்...ஆ...ஊ....என்று சத்தம் மட்டுமே கொடுத்தது.

என்னதான் மழலைச் சொல் இனிதென்று வள்ளுவர் சொல்லி இருந்தாலும் வார்த்தைகளற்ற மழலை மிழற்றலை எத்தனை நாட்களுக்கு ரசிக்க முடியும்! மரியபுஷ்பம் பொறுமை இழந்தாள். மடியில் போட்டுக் கொண்டு தாத்தா, அத்தை என்ற எளிதாய் நாக்குப் புரளும் வார்த்தைகளைக் கூட எத்தனை தரம் சொன்னாலும் திருப்பிச் சொல்ல எந்த முயற்சியும் செய்யாமல் முரண்டு பிடித்தது; அழுதது; அவளின் மடியிலிருந்து இறங்கிப் போகத் தொடங்கியது. மரியபுஷ்பம் ஆசிரிய அவதாரம் எடுத்தாள். ஆம்! குழந்தையை அடித்துச் சொல்லிக் கொடுக்க முயற்சித்தாள்.

“எதுக்காகவும் குழந்தைய அடிக்காதம்மா.....” என்று ஆட்சேபித்தான் முத்துப் பாண்டி. “இது போட்டி நெறைஞ்ச உலகம்ப்பா; காலாகாலத்துல எதையும் கத்துக்கலைன்னா நம்ம குழந்தை பின்தங்கிடுமோன்னு பயமா இருக்குப்பா...அப்புறம் எனக்கு வாய்ச்சது மாதிரி ஒரு உதவாக்கரை வாழ்க்கை தான் இதுக்கும் கிடைக்கும்....” என்றாள் மரியபுஷ்பம். முத்துப்பாண்டிக்கு சுருக்கென்றது. இருவரும் சண்டை போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். சில்வியா இன்னும் பயந்து போய் இருவரையும் வெறித்துப் பார்த்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் முத்துப்பாண்டி இரவு வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது வீடு வழக்கத்திற்கு மீறிய அமைதியில் உறைந்திருந்தது. எப்பவும் இவன் கேட்டைத் திறக்கும் ஓசை கேட்டவுடனேயே சில்வியா ஆ..ஊ...என்று சத்தமிட்டபடி குதித்துக் கொண்டு ஓடி வரும். அன்றைக்கு வரவில்லை. ஒருவேளை தூங்கியிருக்கும் என்று நினைத்தபடி கதவைத் திறக்கவும், கதவிற்குப் பின்னால் ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தது இவன் காலைக் கட்டிக் கொண்டு கதறி அழுதது. தூக்கிக் கொண்டு மரியபுஷ்பத்தைத் தேடினால் அவள் இன்னொரு அறையில் படுத்துக் கிடந்தாள்.

“என்னப்பா ஆச்சு, குழந்தை ஏன் இப்படி கத்துது?”

“குழந்தையா இது! பிசாசு.... இத்துனூன்டு இருந்துக்கிட்டு இதுக்கு என்னமா கோபம் வருது தெரியுமா? மடியியில போட்டு சொல்லிக் குடுத்துக்கிட்டிருக்கேன்; தொடையில கடிச்சு வச்சுட்டு எழும்பிப் போகுதுப்பா....அதான் செமத்தியா வெளுத்துட்டேன்; சாயங்காலத்திலருந்து சாப்புடுறதுக்கும் ஒண்ணும் குடுக்கல.... தின்னுட்டு தின்னுட்டு மங்குனி மாதிரி நிக்குது; சத்தும் புடிக்க மாட்டேங்குது! மண்டையிலயும் ஒண்ணும் ஏற மாட்டேங்குது... வயித்தக் காயப் போட்டாத்தான் சரியா வரும்....”

“என்னப்பா இதெல்லாம்? குழந்தை கூடப் போயி சரிக்கு சரியாய்......”

“நீ சும்மா கெட; ஒனக்கு ஒரு எளவும் தெரியாது... நீ காலையில கிளம்பிப் போனா இராத்திரி தான் திரும்ப வர்ற; நான் தான் இது கூட மல்லாடுறேன். அதால என் இஷ்டத்துக்கு வளக்க விடு, இல்லையின்னா உன் கூடவே தூக்கிட்டுப் போ.....”

“உனக்குத் தான் குழந்தையோட சைக்காலஜியே புரியல; சும்மா அடியாத மாடு படியாதுன்ற கற்காலத்து கான்செப்டலயே இருக்காத... பொறுமையா சொல்லிக் குடு; எப்ப கத்துக்குதோ அப்ப கத்துக்கட்டும்; அவசரம் ஒண்ணுமில்ல; இத வளர்க்குறத விட வெட்டி முறிக்கிற வேலை எதுவும் உனக்கில்ல; புரியுதா....” முத்துப்பாண்டி கத்தவும் கோபித்துக் கொண்டு போய் படுத்துக் கொண்டாள்.

அவளின் ஈகோ காயம் பட்டு விட்டது போலும்; அது தான் அவசர அவசரமாய் நாளையிலிருந்து வேலைக்குப் போயே தீர்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். வீரமணியிடம் சொன்னபோது “அவங்க பிஸியா வேலை பார்த்துக்கிட்டு இருந்தவங்க இல்லியா? அதான் அவங்களால வீட்டுல அடைஞ்சு கெடக்க முடியல... அவங்க வேலைக்குப் போகட்டும்; நீங்க ஒரே ஒரு வாரத்துக்கு கிரீச்சுல ஏற்பாடு பண்ணுங்க... நான் ஊர்லருந்து ஒரு வயசான அம்மாவ வரவழைக்கிறேன்; அவங்க உங்க வீட்டோட தங்கி குழந்தையப் பார்த்துக்கட்டும்....” என்றார்.

முத்துப்பாண்டிக்கும் அதுதான் சரி என்று பட்டது. அவன் அறிந்திருந்த ஒரு கிரீச்சில் பேசினான். அவர்களும் “கொண்டு வந்து விடுங்கள்; பார்த்துக்கிறோம்.....” என்றார்கள். அலுவலகத்தில் பெர்மிஷன் போட்டுவிட்டு கொஞ்சம் சீக்கிரமே வீட்டிற்குப் போனான். மரியபுஷ்பம் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அது ஷோபாவிற்குப் பின்னால் ஒளிந்து கொள்ள இவள் அங்கும் இங்கும் தேடுவதாக “எங்க...எங்க... என் செல்லத்த காணல!” என்று பாவணை பண்ணி விட்டு அப்புறம் ”ஏய்... குட்டி இங்கருக்கு...” என்று கண்டுபிடித்தாள். அப்புறம் சில்வியா இன்னொரு புது இடத்தில் ஒளிந்து கொள்ள அவர்களின் விளையாட்டு தொடர்ந்தது.

இவனைப் பார்த்ததும் விளையாட்டை நிறுத்திவிட்டு இருவரும் இவனிடம் வந்தார்கள். “என்னப்பா, இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம்?” என்றாள்.

“சில்வியாவப் பார்த்துக்கிறதுக்கு நான் வேற ஏற்பாடு பண்ணீட்டேன்; நாளையிலருந்து நீ வேலைக்குப் போய்க்கலாம்.....” என்றான் முத்துப்பாண்டி.

“இதச் சொல்றதுக்கா இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்த! நான் என் முடிவ காலையிலேயே மாத்திக்கிட்டாச்சு..... இனிமே எப்பவுமே நான் வேலைக்குப் போகப் போறதில்ல.....”

“ஏன் என்னாச்சு? உன்னோட ஸ்கூல் பசங்க மேல கருணை வந்து பாவம் பொழைச்சுப் போகட்டுமின்னு இந்த முடிவுக்கு வந்துட்டியா.....” கிண்டல் பண்ணினான்.

“ஏய்.. நீ உதை படப் போற! என் முடிவ மாத்துனதுக்குக் காரணம் நம்ம பொண்ணு....” என்றபடி சில்வியாவை அழைத்து “குட்டி, நான் யாருன்னு அப்பாட்டச் சொல்லு...” என்றாள். சில்வியா உதடை மடித்து அழுத்தம் திருத்தமாக “அம்மா...” என்றது.

(நன்றி : கல்கி 11.01.2009)

- சோ.சுப்புராஜ்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It