இயற்கைல அவங்கவங்களுக்கு பிடிச்ச விஷயங்கள இப்போ என்கிட்ட சொல்லப் போறீங்க?’ புதிதாக வந்த பயாலஜி டீச்சர் இப்படிச் சொல்லவும் கல்லெறியப்பட்ட நீர் நிலையில் உண்டாவது போல வகுப்பறையில் ஒரு சலசலப்பு உண்டாகி வெகு நேரத்துக்கு அடங்காமல் இருந்தது. ஒன்பதாம் வகுப்பின் முதல் நாள். எதற்கெடுத்தாலும் கூச்சப்படும் வயசு! பசங்களுக்கு மீசையும் பெண் பிள்ளைகளுக்கு மாத விலக்கும் புது அனுபவமாகும் பருவம். பயம், தயக்கம், வெட்கம்...டீச்சருக்கு பதில் சொல்ல முதலில் யாருமே முன்வரவில்லை.

ம்ம்...நீங்களா எழுந்து சொல்றீங்களா? இல்ல நான் பேரக் கூப்பிடவா? டீச்சர் கேட்டதும் மீண்டும் சலசலப்பு.

சரி, கடைசி பெஞ்சில் இருப்பவர்கள் சொல்லத் தொடங்குங்க?

schoolgirl இந்த மிஸ்ஸுக்கு இதெதுக்கு தேவையில்லாத வேலை? வந்தமா பாடத்தை நடத்துனமா ...போனமானு இல்லாம? கடைசி இருக்கைவாசிகள் கிசுகிசுத்தனர். இருந்தாலும் மெட்ராஸிலிருக்கும் ஒரு பெரிய பள்ளியில் வேலை பார்த்த அனுபவத்தில் பயாலஜி டீச்சர் பிள்ளைகளை உற்சாகப்படுத்தும் நோக்கோடு விடாமல் தொடர்ந்தார்.

‘ கம் ஆன்...எவ்ளோ சாதாரணமான கேள்வி கேட்ருக்கேன். இதுக்கேன் இப்படி யோசிக்கிறீங்க?

தயங்கி தயங்கி தங்கக்குமார்தான் முதலில் எழுந்தான்.

வகுப்பறை மொத்தமும் இப்போது தங்கக்குமாரின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தது.

‘மழை’ என்று சொல்லிவிட்டு படக்கென்று உட்கார்ந்து கொண்டான்.

ம்ஹ¨ம்...இப்படி ஒரு வார்த்தையில பதில் சொல்லக் கூடாது. விளக்கமா சொல்லுங்க. ஏன் பிடிக்கும்? எதுக்கு பிடிக்கும்?

இப்போது தங்கக்குமார் அவஸ்தையோடு மீண்டும் எழுந்தான். ‘டேய் மாப்ள மாட்டிக்கிட்டான்டா’ என்றான் ஜோஸப்.

‘மழை வந்தா நல்லாயிருக்கும் மிஸ். எங்க ஊரே மழைக்காகதான் காத்துக் கிடக்குது’’ இந்த பத்து வார்த்தைகளையும் படபடவென பேசி முடித்தான் தங்கக்குமார். அவனுடைய இந்த விளக்கம் வகுப்பறையின் மொத்த கூச்சத்தையும் உடைத்தெறிந்தது.

அடுத்தடுத்து எழுந்தனர்...

நிலா...இருட்டுல பளீர்னு பாக்க அழகாயிருக்கும்ல. அம்மா சின்ன வயசுல நிலாவைக் காட்டிதான நமக்கு சோறு ஊட்டினாங்க – வெட்கமும் சிரிப்புமாக சொன்னாள் கவிதா

எனக்கு காடு பிடிக்கும் மிஸ். எங்க ஊரே காட்டுக்குள்ளதான் இருக்கு. பெரிய பெரிய மரம், பறவை, பூச்சி மிருகம்னு நெறைய பாக்கலாம். எவ்ளோ தூரம் நடந்தாலும் அலுப்பே தெரியாது -_

இது கொடைக்கானல் ஷபீகா

டீச்சர் ரொம்ப ஆர்வமாகிவிட்டார்.

குட்...எல்லாரும் நல்லா பேசுறீங்க. ம்ம்...அடுத்து யாரு?

‘எல்லா பூவும் பிடிக்கும்னாலும் செவ்வந்திக் காடுன்னா நான் உயிரையே விட்ருவேன் மிஸ். எங்களுக்கு சொந்தமா செவ்வந்திக்காடு இருக்கு.

காலையில, மதியானம், ராத்திரினு அந்த பூவோட மணமில்லன்னா எங்களுக்கு பொழுதே போகாது. நான் கொண்டு வர்ற சாப்பாட்டுல கூட பூ வாசம் வீசுறதா இவங்கள்லாம் சொல்லுவாங்க இப்படி சிலாகித்துச் சொன்னது சசிரேகா.

அருவி, ஆறு மலை வண்ணத்துப்பூச்சி என எல்லோரும் பேச்சில் ஆர்வமாகிவிட, தன் மேஜையின் மீது சாய்ந்து நின்றிருந்த டீச்சர்... இப்போது மெதுவாக இடப்பக்கமாக நகர்ந்து... ‘நீ சொல்லு’ என்றார்.

நோட்டில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த சுந்தரி நிலைகுலைந்து படக்கென எழுந்தாள்.

‘மிஸ்...’

‘சொல்லு. உன் பேரென்ன? என்ன எழுதிட்டிருக்க’

சுந்தரி தன் பெயரை சொல்ல வாயெடுப்பதற்குள், ‘கறுப்பு சுந்தரி’ என்று கத்தினான் சாஸ்தா.

‘ஒரு விடுகதை போடுறேன் மிஸ். எனக்கு என்ன பிடிக்கும்னு நீங்க கண்டுபிடிங்க’ என்றவுடன்...மாணவ மாணவிகளிடையே மீண்டும் அதிர்ச்சி கிசுகிசுப்பு. கவிதா, சுந்தரியின் கையை பிடித்துக் கிள்ளினாள். “என்னடி சொல்ற?’ என்றாள் மெல்லியக் குரலில்.

இன்ட்ரஸ்டிங்...! விடுகதையைச் சொல்லு. முயற்சி பண்றேன்’ என்றார் டீச்சர் சிரித்துக்கொண்டே.

‘பறக்கும் ஆனால் பறவையல்ல...

ஓடும் அது மானல்ல

அலையாய் திரியும் கடலுமல்ல

முகமாகும், எழுத்தாகும்

உருமாறும், உருகி நீராகவும் ஓடும்’

‘இதைதான் எழுதிட்டிருந்தியா?’ என்ற டீச்சர் கண்கள் சுருக்கி, உதடு சுழித்து சிந்தித்தாள். மாணவிகளில் சிலர் ‘நான் சொல்றேன் நான் சொல்றேன்’ என்றனர்.

‘மேகம். சரியா?’

‘கார் மேகம் மிஸ். கறுப்பா இருக்குமே அது. அது மட்டுமில்ல சுந்தரிக்கு இருட்டு, காக்கா, கண்மை எல்லாம் கூட ரொம்பப் பிடிக்கும் என்று சத்தமாகச் சொன்னான் ரூபன். உடனே எல்லோரும் கலகலவென்று சிரித்தனர்.

சுந்தரி திரும்பி ரூபனைப் பார்த்து ‘ரூபன் வேணாம். உங்கிட்ட யாராவது கேட்டாங்களா? வாயை மூடு’ என்றாள் காட்டமாக.

பாய்ஸ் பேசாம இருங்க. ஏன் பிடிக்கும் சொல்லு என்று டீச்சர் கேட்க, சுந்தரி பளிச்சென சிரித்தாள். ‘அதான் சொன்னேனே மிஸ், பறக்கும் ஆனால் பறவையல்ல, ஓடும் அது மானல்ல, அலையாய் திரியும் கடலுமல்ல, முகமாகும், எழுத்தாகும், உருமாறும், உருகி நீராகவும் ஓடும். ஒரு நாள் முழுக்ககூட என்னால மேகத்தை மட்டும் பாத்துக்கிட்டு இருக்க முடியும் மிஸ். அவ்ளோ அழகு. பஞ்சு மேகத்து மேல படுத்து மிதந்துகிட்டே தூங்கினா நல்லாயிருக்கும்ல’’

சுந்தரி சொல்லி முடிக்க புத்தகத்துக்குள் ஒளித்து வைத்திருந்த ஒரு புதுப்பேனாவை எடுத்து அவளிடம் நீட்டினார் டீச்சர். ‘குட். உனக்கு என்ன பிடிக்கும்னு என்ன யோசிக்க வச்சதுக்காக இந்த கிப்ட். வச்சுக்கோ’ இது அந்த டீச்சரின் பழக்கம். ஒவ்வொரு வகுப்பிலும் தன்னை உற்சாகப்படுத்துகிறவர்களுக்கு இப்படியரு பரிசு வழங்குவார் என்பது பின்பு தெரிந்தது. சுந்தரிக்கு இந்தப் பரிசு புதிதல்ல. பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் அவள்தான் முதலிடம். சாமர்த்தியக்காரியாகவும் இருந்தாள். எட்டாம் வகுப்பில் இருந்த போது மாநில அளவில் பள்ளிகளுக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டிக்கு முந்திக்கொண்டு பெயர் கொடுத்தாள். அவளுடைய தோழி ஜெயஞானமேரி நன்றாக வரையக் கூடியவள். ‘ஏய் எதுக்கு எங்க ஏரியாவுக்குள்ள வர்ற?’ என்றதற்கு ‘சும்மா ட்ரை பண்றேன். அடிச்சா லக்கி ப்ரைஸ்தானே?’ என்றவள் சீரியஸாகவே வரைய உட்கார்ந்து விட்டாள். நீள அகலமான ஹாலில் வரிசையாக உட்கார்ந்து எல்லோரும் ஓவியம் தீட்ட ஆரம்பித்தனர்.

ஜெயஞானமேரி அழகான கிளியொன்றை நேர்த்தியாக வரைந்தாள். சுந்தரியோ ஒரு வயல்வெளியில் நெற்கதிர்கள் செழித்து வளர்ந்திருப்பதை போலவும் கரையோரம் நின்ற பெரிய மரங்கள் அசைந்தாடுவதை போலவும் தீட்டினாள். மேலே மேகங்கள் வரைந்து அவற்றுக்கு இரு கண்களும் கொடுத்தாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து மழையாக பொழிவதை போல உணர்த்தி ஓரமாக இப்படி எழுதினாள். ‘மேக மகளின் கண்ணீரால் பூமிக்கு என்ன அப்படியரு கொண்டாட்டம்?!’ கெமிஸ்ட்ரி டீச்சரான சந்திரா மிஸ் சுந்தரியின் சார்ட்டை வாங்கி ஓவியத்தை உற்றுப் பார்த்தாள்.

சுந்தரியின் முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டி, ‘படம் வரையச் சொன்னா கவிதை எழுதியிருக்க’ என்றாள் காதைப் பிடித்து திருகியபடி. சுந்தரிக்கு வலியில் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. இந்த சந்திரா மிஸ் எப்போதும் இப்படிதான். சும்மா நடந்து போய் கொண்டிருக்கும் போதே பட்டென்று முதுகில் ஒரு அடி வைப்பாள். இல்லையென்றால் காதில் ஓட்டை விழும் அளவுக்கு கிள்ளித் திருகுவாள். முன்பு ஒருமுறை சுந்தரி காதில் இவள் திருகியதால் பதிந்த தடம் அப்படியே இருக்கிறது. இதே போன்ற விழுப் புண்கள் சந்திரா மிஸ் பாடம் நடத்தும் வகுப்பு மாணவர்களில் பலருக்கும் உண்டு. சுந்தரி இப்போது சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் சந்திரா மிஸ் கையில் இருக்கும் சார்ட்டை வாங்குவதற்காக நின்றாள்.

‘இரு வர்றேன்’ என்று சொல்லிவிட்டு சார்ட்டோடு போனவள், மற்ற டீச்சர்களையும் அழைத்து சுந்தரியின் ஓவியத்தைக் காட்டி ஏதோ கிசுகிசுத்தாள். சுந்தரிக்கு கலக்கம் பிடித்தது. ஆனால் சந்திரா மிஸ்ஸோ சிரித்துக் கொண்டே சார்ட்டைத் திருப்பித் தந்தாள். சீக்கிரம் வரைந்து முடித்து விட்டதால், யார் யார் எப்படி வரைகிறார்கள் என்று பார்க்க ஒரு ரவுண்டு வந்தாள். பலர் படுநேர்த்தியாக இயற்கை காட்சிகளை வரைந்து அசத்தியிருந்தனர். அதன் பின்பு சுந்தரி இந்த போட்டி குறித்து சுத்தமாக மறந்து போய் விட்டாள்.

சில மாதங்களில் ஒருநாள் ப்ரேயர் டைமில் பரிசு அறிவிக்கப்பட்ட போது சுந்தரி வயிற்றுவலி காரணமாக வகுப்பறையில் படுத்திருந்தாள். ஜெயஞானமேரி தான் ஓடி வந்து, சுந்தரிக்கு மாநில அளவில் இரண்டாவது பரிசு கிடைத்திருப்பதாகவும் பதக்கத்தை பெற பிரின்சிபால் அழைப்பதாகவும் கூறினாள். சுந்தரிக்கு ஆச்சர்யமில்லை. ஏனென்றால், அவள் இதை எதிர்பார்த்தாள். அவளுக்கு அவள் தீட்டிய ஓவியத்தின் மீது நம்பிக்கையில்லை. ஆனால் சந்திரா மிஸ்ஸையே புன்னகைக்க வைத்த அந்த கான்செப்ட் நிச்சயம் கவனத்தை பெறும் என்று எதிர்பார்த்தாள். அதுதான் நடந்தது. இதுதவிர, ஆண்டுதோறும் நடக்கும் போட்டிகளில் சுந்தரிக்கு நிச்சயமான பரிசுகள் எப்போதும் காத்திருந்தன. தன் திறமைக்கான அங்கீகாரத்தை அவள் எப்போதுமே எதிர்பார்த்திருந்தாள்.

சுந்தரி இந்த பள்ளிக்கு இரண்டாம் வகுப்பு படிக்கையில் வந்து சேர்ந்தாள். பள்ளி இருக்கும் அந்த சிறிய நகரத்தை சுற்றிலும் கிராமங்கள் என்பதால் எல்லா மாணவ மாணவிகளுமே பட்டிகளில் இருந்து வந்து தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரே ஆங்கில மீடியப்பள்ளி என்று பெருமை வேறு இந்த பள்ளிக்கு இருந்தது. பெரிய விளையாட்டு மைதானம். விசாலமான கட்டிடம், வகுப்பறைகள், பெரிய தோட்டம் என பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் பள்ளிதான். ஆங்கில மீடியம் என்றுதான் பெயர். ஆனால் அங்கு டீச்சர்களும் சரி, மாணவர்களும் சரி யாருமே ஆங்கிலத்தில் பேசுவதில்லை. திடீரென ஏதாவது ஒருநாள் ப்ரேயரில் பிரின்சிபால் வந்து கடுமையான முகத்தோடு, ‘ஆல் ஆப் யூ ஷட் ஸ்பீக் இன் இங்கிலீஷ் ஹியர் ஆப்டர். ஸ்டூடண்ட் ஹ¨ டாக்ஸ் இன் தமிழ் வில் பி ஃபைன்ட் 50 ரூபீஸ்’’ என்று எச்சரிப்பார்.

வகுப்பிற்கு ஒன்றோ இரண்டோவாக இருக்கும் சில ஆங்கிலப் புலிகள் யார் தமிழில் பேசுகிறார்கள் என கண்களில் விளக்கெண்ணைவிட்டு கண்காணித்து பெயர் எழுதி க்ளாஸ் டீச்சரிடம் போட்டு கொடுப்பதை வேலையாகக் கொண்டிருப்பார்கள். அதிகபட்சம் போனால் ஒரு வாரம் பத்து நாள் இந்த கெடுபிடி நீடிக்கும். முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு யாரும் யாருடனும் பேசவே அஞ்சுவார்கள். எதையோ சொல்ல வாயெடுத்து, அப்படியே சிரித்து மழுப்பி நழுவிவிடுவர். ஒன் பாத்ரூம் போகலாமா? போன்ற அத்தியாவசிய தகவல்களை சைகை மூலமாக பரிமாறிக் கொள்வார்கள் அல்லது கிசுகிசுவென பேசிக் கொள்ள வேண்டியதுதான். ஒருவார காலம் பள்ளியே மவுன விரதம் இருப்பது போல இருக்கும். உருதட்டி, மனப்பாடம் செய்து ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கிவிடுகிறவர்கள் கூட ஸ்போக்கன் இங்கிலீஷ் என்றவுடன் வாயை மூடிக் கொள்வார்கள்.

இதில் சுந்தரி மட்டும் என்னவாம்? வகுப்பில் முதல் அல்லது இரண்டாவது மதிப்பெண் வாங்கிவிடுவாள் ஆங்கிலத்தில். ஆல் அபவுட் எ டாக், கிப்ட் ஆப் மேகி, தி லாஸ்ட் சைல்ட் மாதிரியான கதைகள் அவளுக்கு கட்டுரைகளாக அத்தனை மனப்பாடம். இங்கிலீஷ் டீச்சரான மாலாவின் காலடியில் உட்கார்ந்துதான் படிப்பாள். ஒரு முறை இப்படிதான், சந்தேகம் கேட்கிறேன் பேர்வழி என்று, ‘மிஸ், எம்ப்ரேஸ்னா என்ன அர்த்தம் மிஸ்’ என்று சத்தமாக கேட்டுவிட்டாள். அவ்வளவுதான். மாலா டீச்சர் அவ்வளவு வெட்கப்பட்டு அவள் பார்த்ததேயில்லை. அவள் கன்னங்கள் சிவந்து ஒரு மாதிரியாகி விட்டாள்.

சுந்தரி விடாமல் மறுபடியும் அதே கேள்வியை கேட்க, ‘ஏய் இதுக்கெல்லாமா அர்த்தம் சொல்லுவாங்க. போய் டிக்ஷ்னரியை பார்த்து தெரிஞ்சுக்கோ’ என்றாள் கோபமாக. ஏதாவது கெட்ட வார்த்தையாக இருக்குமோ என்று தோன்றியது சுந்தரிக்கு. பின், ச்சச்ச...கெட்டவார்த்தை எப்படி எஸ்சேல வரும்? என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். வகுப்பு முடிந்ததும், தீபா அவளை தேடி வந்து விளக்கம் சொன்னாள். எம்ப்ரேஸ் என்றாள் கட்டியணைப்பதாம்! இதைச் சொல்ல இந்த மிஸ் எதுக்கு இவ்வளவு தயங்கினாள் என்று புரியவில்லை சுந்தரிக்கு. அதன் பின் அவள் எந்த சந்தேகமும் மாலா மிஸ்ஸிடம் கேட்பதில்லை.

சுற்றுவட்டாரத்தில் வேறு நல்ல பள்ளிக்கூடம் இல்லையென்பதால், அங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் +2 வரை அங்கேயே முடித்துதான் வெளியேறுவார்கள். இரண்டாம் வகுப்பில் அவள் சேர்ந்தபோது இருந்த அதே மாணவர்கள்தான் இப்போதும் இருக்கிறார்கள். குண்டாக, கொழுகொழுவென்றும் கருகருவென்றும், பெரிய கண்களோடு அவள் அந்த வகுப்புக்கு வந்த போது ஏற்கனவே அவள் பெயரில் ஒரு மாணவி இருந்தாள். இவளுக்கு அப்படியே முரணாக இருந்தாள் அவள். ஒல்லியாகவும் சிவப்பாகவும். சுந்தரி என்று அழைத்தால் இருவரும் திரும்பிப் பார்ப்பதும், எழுந்து நிற்பதும், மிஸ் கூப்பிட்டார்கள் என மூச்சிரைக்க ஆள்மாறி ஓடுவதும் வழக்கமாக இருந்தது. இதனால் மாணவர்கள் இருவரையும் பிரித்து அடையாளம் காண இவளை கறுப்பு சுந்தரி என அழைக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் இந்த பெயரில் தன்னை அழைப்பது சுந்தரிக்கு பிடிக்கவில்லை. அவளை வேணும்னா சிவப்பு சுந்தரினு கூப்பிட்டுக்கோங்க. என்னை கறுப்பு சுந்தரினு கூப்பிட்டா மிஸ்ட்ட சொல்லிருவேன்’ என்று மிரட்டினாள். ஆனால் என்ன, நாளடைவில் டீச்சர்களே அடையாளத்துக்காக, கறுப்பு சுந்தரி என்று குறிப்பிடத் தொடங்கிவிட்டார்கள். இன்னொரு சுந்தரி அடுத்த ஆண்டே வேறு பள்ளிக்கு போய் விட்டாள் என்றாலும் கறுப்பு சுந்தரி என்ற பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.

இத்தனைக்கும் அவளுக்கும் மற்ற மாணவர்களுக்கும் அப்படியொன்றும் பெரிய நிற வித்தியாசமெல்லாம் இல்லை. ஒரு இன்ச் முன்னப்பின்ன இருக்கும். அவ்வளவுதான். ஏறக்குறைய இவளை ஒட்டி இருக்கும் கவிதா கூட சண்டை போடும் நேரத்தில், ‘போடி கறுப்பு’ என்று கத்திவிட்டு ஓடிவிடுவாள். அப்போதெல்லாம் சுந்தரிக்கு வருமே கோபம். இதற்காகவே ஒரு நாள் பளார் என்று அடி வாங்கினாள் கவிதா. சாஸ்தாவும், ஜோஸப்பும் கூட அடி வாங்கியிருக்கிறார்கள். ஆனால் சுந்தரியை வம்பிழுப்பது அவர்களுக்கு சிறந்ததோர் பொழுதுபோக்காக இருந்தது. இவ்வளவு இருந்தாலும் சுந்தரிக்கு தன் நிறம் குறித்த கவலை எப்போதுமே வந்ததில்லை. கறுப்பு நிறத்தில்தான்தான் மிக அழகாக இருப்பதாக அவள் நம்பினாள். அவள் பாட்டி கூட ஒரு முறை ஒரு தங்கச் சங்கிலியை அணிவித்து, ‘கறுப்புக்கு தங்கம் போட்டு கண்ணார பாரு, செகப்புக்கு தங்கம் போட்டு சிரிப்பா சிரி’ என்று பாடினாள். தன் நிறம் குறித்து தாழ்வாக எந்த எண்ணமும் இல்லாததால் சுந்தரி இந்த கிண்டல்களை எல்லாம் சமாளித்து உற்சாகமாகவே திரிந்தாள்.

குழந்தைகள் தினம், விளையாட்டு தினம் மாதிரியான கொண்டாட்டங்கள் வந்தால் சுந்தரிக்கும் அது திருவிழாதான். காரணம். எல்லா போட்டிகளையும் சேர்த்து குறைந்தபட்சம் ஐந்து பரிசுகளாவது அவளுக்கு நிச்சயம் உண்டு. ஆனால் ஆண்டு விழாவை மட்டும் அவள் தீயாக வெறுத்தாள். ஏனென்றால் ஆண்டு விழாவில் பெரும்பாலும் நடன நிகழ்ச்சிகளும் நாடகங்களும் தான் இருக்கும். அவற்றில் பங்கேற்கும் மாணவர்கள் ரோஜா நிறத்திலும், பளீர் வெள்ளையிலும், வான நீலத்திலும் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்ட ப்ராக்கை அணிந்து மாணவிகள் வலம் வரும் போது சுந்தரிக்கு ஏக்கமாக இருக்கும். சுந்தரி நன்றாக ஆடக்கூடியவள் என்றாலும் இந்த எட்டாண்டுகளில் ஒருமுறை கூட அவள் நடனம் ஆடவோ நடிக்கவோ தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

பரத நாட்டியம், வெஸ்டர்ன், சினிமா பாடல்கள், கிராமிய இசை நாடகம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு மிஸ் பொறுப்பேற்று தங்களுக்கு தேவையான மாணவ மாணவிகளை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இதுவரை எந்த டீச்சரும் சுந்தரியை தேர்ந்தெடுத்ததில்லை. வகுப்பிலேயே வெள்ளை நிறமாக இருக்கும் மாணவ மாணவிகளை பொறுக்கி எடுத்துக் கொண்டு ப்ராக்டீஸை ஆரம்பித்து விடுவார்கள். கவிதாவும்கூட நன்றாக ஆடக் கூடியவள்தான். ஆனால் கூச்சம் அதிகம். அதனால் அவள் மேடையில் ஆட விரும்புவதில்லை. ஆனால் சுந்திரிக்கு தானும் ப்ராக்டீசுக்குபோக வேண்டுமென்றும், ஆடி அசத்த வேண்டுமென்றும் ஒரே ஆர்வம். ஒவ்வொரு ஆண்டும் டீச்சர்கள் வரும் போதும் சுந்தரி பரபரவென்று ஆகிவிடுவாள். ஆனால் எப்போதும் அவள் பெயரை யாரும் அழைப்பதில்லை.

மாலா மிஸ் ஆங்கில நாடகம் போடுவாள். ஆனால் ஆங்கிலம் பேசக் கூடியவர்கள் சிவப்பாக இருக்க வேண்டுமென்பது அவள் எண்ணம். வகுப்பிலேயே மக்கான ரூபனையும், மேனகாவையும் அவர்கள் மாட்டேன் என்று மறுக்க மறுக்க வற்புறுத்தி நடிக்க வைத்தாள். ஆண்டுவிழா சீசன் தொடங்கிவிட்டாலே சுந்தரிக்கு டென்ஷன் கூடிவிடும். எட்டாம் வகுப்பின் போது ஒருநாள் தமிழ் டீச்சரான செந்தமிழ் செல்வி, சுந்தரியை அழைத்து தன் நாடகத்தில் நடிக்க சொல்லவும் சுந்தரிக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. நாடகப் பயிற்சிக்கு ஒழுங்காக போய்விடுவாள். எல்லோரும் நடித்துக் கொண்டிருப்பார்கள். பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள். தனக்கு என்ன கதாபாத்திரமோ என சுந்தரி பதட்டத்தோடும் ஆவலோடும் அதை பார்த்துக் கொண்டிருப்பாள். ஆனால் கடைசி நாள்வரை அவளுடைய கதாபாத்திரம் அவளுக்கு விளக்கப்படவில்லை.

இதனால் டீச்சரிடம் போய், மிஸ் நான் என்ன பண்ணனும்’ என்று கேட்க, ‘அய்யய்யோ நீ இருக்கேல்ல...பாத்தியா உன்ன மறந்தே போயிட்டேன்’ என மிஸ் தலையில் கைவைத்தவள், வேக வேகமாக ஸ்கிரிப்ட் பேப்பரை எடுத்துப் பார்த்து, “நாடகத்தின் இரண்டாவது காட்சில நீ வர்ற. இந்த பசங்களுக்கு நீதான் அப்பா. வேட்டி சட்டை போட்டுட்டு ஒட்டு மீசை வச்சுக்கிட்டு, ஜடையை தூக்கி உள்ளே மடிச்சுக் கட்டிக்கணும். அந்த சீன்ல ஓரமா ஒரு சேர் போட்ருப்போம். அப்படியே நடந்து வந்து அந்த சேர்ல உட்கார்ந்து டேபிள் மேல இருக்கிற நியூஸ் பேப்பரை எடுத்து படிக்கணும். சீன் முடியற வரை புரட்டிப் புரட்டி படிச்சுட்டே இருக்கணும்”

சுந்தரிக்கு வந்ததே பார்க்கணும் ஒரு கடுப்பு! ஆனால் டீச்சரிடம் அப்படியெல்லாம் சட்டென மறுத்துவிட முடியாது. கடைசி நாள் வேறு... உடம்பு சரியில்லை என்று காரணம் சொன்னாலும் நிச்சயம் திட்டு விழும். இந்த அவமானத்தை தடுக்கும் வழி அவளுக்கு தெரியவில்லை. தினமும் நாடகப் ப்ராக்டீசுக்கு சுந்தரி கிளம்பும் போதெல்லாம், ஜோஸப்பும், சாஸ்தாவும் ரூபனும் சும்மாவே சவுண்டு கொடுப்பார்கள். இது மட்டும் தெரிந்தால்? “இதுக்குத்தான் இவ்ளோ பந்தாவா? என மானத்தை வாங்கிவிடுவார்கள்.

‘சனியம்புடிச்சு மிஸ். ஒரே ஒரு வரி டயலாக்காவது குடுத்திருந்தா கூட சந்தோஷமா செஞ்சிருக்கலாம்’ என்று மனசுக்குள் திட்டினாள். டீச்சரிடமே பேசிப் பார்க்கலாம் என்று முடிவு செய்து, ஸ்டாப் ரூமுக்கு சென்று, ‘மிஸ் எனக்கு டயலாக் எதுவும் கிடையாதா’ என்றாள். அவளை பார்த்து சிரித்த மிஸ், ‘இல்லையே சுந்தரி’ என முதுகில் தட்டிவிட்டு நகர்ந்தாள். அன்றிரவு சுந்தரிக்கு தூக்கமே வரவில்லை. வயிற்று வலி, காய்ச்சல் என போகாமலும் இருக்க முடியாது. மற்ற போட்டிகளில் வென்றதற்கான பரிசுகளை வாங்கியாக வேண்டுமே! வேறு வழியே இல்லை. மறுநாள் காலையில் சுந்தரி கிளம்பினாள்.

பள்ளிக்கூடம் ஜே ஜே என்றிருந்தது. வண்ண வண்ண காகிதங்கள், கொடிகள் என அலங்காரமும், பெரிய பெரிய ஸ்பீக்கர்களில் பாட்டும் களைகட்டியது. சுந்தரி சோகமாக நடந்து வந்தாள். வழியில் அவளை பார்த்த தமிழ் மிஸ், நாலு மணிக்கு ஸ்டாப் ரூமுக்கு வந்திரு. மேக் அப் ஆரம்பிச்சுருவோம் என்று சொல்லிவிட்டு பரபரப்பாக ஓடினாள். ‘ஆமாமா அது மட்டுந்தான் குறைச்சல்’ என்று முனகியபடி நகர்ந்தாள். கடைசியில் அந்த நாடகம் அரங்கேறியேறியது. ஒரு நாள் விடுமுறைக்கு பின் சுந்தரி வகுப்புக்கு திரும்பியபோது நடந்ததை அவள் தன் வாழ்நாளில் மறப்பாளா தெரியவில்லை.

‘அப்பா...’ என்று கத்தினான் ரூபன்

‘நீ சுமந்த பிள்ளை’ என்றான் ஜோஸப்

‘சிறகொடிந்த கிள்ளை’ என்றான் சாஸ்தா.

சுந்தரி ஒன்றுமே பேசாமல் தன் இருக்கையில் உட்கார்ந்தாள். ‘அது அப்பா இல்லடா அம்மா’ என்றான் தங்கக்குமார். ‘டேய் இப்போல்லாம் அம்மாதான்டா அப்பாவா நடிக்கிறாங்க’ என்றான் சாஸ்தா நக்கலாக. சுந்தரிக்கு கோபம் தாங்க முடியவில்லை. டேபிள் மேல் இருந்த டஸ்டரை எடுத்து அந்த பக்கமாக எறிந்தாள். அது ஜோஸப் முகத்தில் பட்டு விழுந்தது. அவன் முகம் முழுக்க டஸ்டரில் இருந்த சாக்பீஸ் துகள். எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். வகுப்பறையே அமைதியாக இருந்தது. ரூபன் மட்டும், ‘கறுப்பு சுந்தரி ஒழிக’ என்று கத்தினான். சுந்தரி அவனையும் அடிக்கப் பாய்ந்தாள். கவிதாவும் ஷபீகாவும் தீபாவும் அவளை இழுத்துப் பிடித்துத் தடுத்தார்கள்.

இந்த சம்பவத்துக்கு பின் சுந்தரி அந்த மூவருடனும் பேசுவதில்லை. ஆனால் அவர்களுக்கு சுந்தரியிடம் பேசாமல் இருக்க முடியாது. இதனால், ஒரு சில நாட்களிலேயே ‘எக்ஸ்க்யூஸ் மீ, உங்க ப்ராக்டிகல் நோட் தர்றீங்களா?’ என்று வம்பிழுக்க தொடங்கி விட்டார்கள். கவிதாகூட கேட்டாள். ஏன்டா அவகிட்ட திட்டு வாங்கலேன்னா உங்களுக்கு தூக்கம் வராதா?’ என்று. ‘ஆமாமா வராது’ என்றார்கள் நக்கலாக. இப்படியே பேசிப்பேசி சுந்தரியை சமாதானப்படுத்தி விட்டனர் என்றாலும் கூட அதற்கப்புறமும் அவளை சீண்டுவதிலேயே அவர்களின் பொழுது கழிந்தது. இந்த சம்பவத்தையொட்டி சுந்தரி ஒரு முடிவெடுத்திருந்தாள்...அடுத்த ஆண்டு எப்படியாவது டான்ஸ் ப்ரோகிராமில் கலந்து கொண்டு ஆட வேண்டும் என்பதே அந்த சபதம்.

ஆண்டு விழாவுக்கான அறிவிப்பு வந்தது. இதற்குள் சுந்தரி பயாலஜி டீச்சருக்கு பிடித்த மாணவியாகி இருந்தாள். பயாலஜி மிஸ் இந்த முறை ஒரு பாடலுக்கு பொறுப்பேற்றிருந்தது, சுந்தரி தன் சபதத்தை நடைமுறைப்படுத்த ஏதுவாக இருந்தது. அவள் டீச்சரிடம் சென்று, ‘மிஸ் எனக்கு டான்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். என்னையும் உங்க டீம்ல சேர்த்துக்கறீங்களா?’ என்றாள்.

‘ஓ ஷ்யர் சுந்தரி. நாளைக்கு வந்து எனக்கு ஆடிக் காட்டு’ என்றார். சுந்தரிக்கு தலைகால் புரியவில்லை. உற்சாகம் பெருக்கெடுக்க துள்ளி குதித்தாள். அன்று இரவும் தூக்கம் தொலைந்தது. மறுநாள் அவள் பயாலஜி டீச்சரை தேடிப் போனபோது டான்ஸ் ப்ராக்டிஸ் நடந்துகொண்டிருந்தது. இதயத்தைத் திருடாதே படத்தின் ‘ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்‘ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சுந்தரியைப் பார்த்ததும் பயாலஜி மிஸ் புன்னகைத் தாள். சுந்தரி பையை வைத்துவிட்டு ஓரமாக நின்றாள். ‘வா சுந்தரி, இந்த பாட்டுக்கு ஆடிக் காட்டு’ என்று உடனே அழைத்ததும் சுந்தரி தடுமாறிப் போனாள். மேனகாவும் ரூபனும் அங்கு நின்றிருந்தார்கள். சுந்தரி, சுடிதார் துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டினாள். ஏழு நிமிடங்கள் கழித்து எழுந்த கைதட்டல் அடங்க ரொம்ப நேரம் பிடித்தது. தான் என்ன செய்தோம் என சுந்தரிக்கே நினைவில்லை. ஆனால் முழு பாடலுக்கு சிறு தடுமாற்றமும் இன்றி அவள் ஆடி முடித்திருந்தாள்.

பயாலஜி மிஸ்சுக்கு சந்தோஷம் தாளவில்லை. ‘சுந்தரி நீதான் இந்த பாட்டுக்கு சென்டர்ல ஆடுற. நீ போட்ட ஸ்டெப்ஸ் ரொம்ப நல்லாயிருந்தது. அதையும் யூஸ் பண்ணிக்கலாம்’ என்று பயாலஜி மிஸ் சொன்னபோது சுந்தரி ஒரு கனவு உலகத்தில் இருப்பதை போல உணர்ந்தாள். ரூபன் கூட அவளிடம் வந்து வாழ்த்துச் சொன்னான். நம்பவே முடியாத அந்த பொழுதில் தாங்கவே முடியாத உணர்வோடு அவள் கிளம்பினாள். அன்றிலிருந்து ப்ராக்டீஸ். தான் டான்ஸ் ப்ராக்டிஸ் போகிறோம் என்பதையே சுந்தரி பெரும் சாதனையாக நினைத்தாள். தன் மனதுக்கு பிடித்த விஷயத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் நிறைவும் நிம்மதியும் அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. அதன்பின் வீட்டிலும் கூட எப்போதும் ஆட்டம்தான். ஏதாவது பாடலை பாடிக் கொண்டோ, டேப் ரெக்கார்டரில் ஓடவிட்டோ ஆடிக் கொண்டிருந்தாள்.

முழுப் பாடலுக்கான பயிற்சியும் ஒத்திகையும் முடிந்திருந்த சமயம், பிரின்சிபால் ரவுண்ட்ஸ் வந்தார். அவருக்கு இப்போது ஆடிக்காட்ட வேண்டும். சுந்தரி தயாராக இருந்தாள். முழு ஆட்டத்தையும் கண் கொட்டாமல் பார்த்த பிரின்சிபால், பயாலஜி மிஸ்ஸை அழைத்து ஏதோ சொல்லிவிட்டுப் போனார். இப்போது மிஸ் முகம் சோர்ந்து போனது. க்ரூப்பில் ஆடிக் கொண்டிருந்த மேனகாவை சென்டரிலும், சுந்தரியை கடைசி வரிசையிலும் மாற்றச் சொன்னதுதான் அவரின் சோர்வுக்கு காரணம். கறுப்பான பொண்ணை எப்படி சென்டர்ல போட்ருக்கீங்க? பார்க்க பளிச்சுனு இருந்தா தானே நல்லாயிருக்கும்! என்று கேட்டாராம்? எல்லோருக்குமே தர்மசங்கடமாகிவிட்டது.

இதுவரை வந்து இப்படி திசைமாறிப் போனதில் சுந்தரி மனமொடிந்து போனாள். பயாலஜி டீச்சரும், மற்ற மாணவர்களும் அவளுக்காக பரிதாபப்பட்டார்கள். அந்த கணத்தை அவள் வெறுத்தாள். எதுவும் பேசாமல் பையை எடுத்துக் கொண்டு ‘போய்ட்டு வர்றேன் மிஸ்’ என்றாள் மெல்லிய குரலில். ‘சுந்தரி ஆனா நீ க்ரூப்ல இருக்க’ என்றாள் மிஸ். சுந்தரி ஏதும் பேசாமல் வெளியேறினாள். இந்த முறையும் மேடையில் ஆடும் அவள் எண்ணம் அழிந்தது. காரணம் இந்த நிறம்...ச்ச என்றிருந்தது அவளுக்கு. தன் தோலைக் கிழித்து நிறத்தை மாற்றிவிடலாமா என்று கூட தோன்றியது, முதல் முதலாக. கூடவே பாட்டி, தாத்தா, அம்மா அப்பா சித்தி, சித்தப்பா, தங்கை தம்பி இப்படி தன் குடும்பத்தில் எல்லோருமே கறுப்புதான். அதை எப்படி அழிக்க முடியும்? என்ற சிந்தனையும் வந்தது. சிந்தனையிலேயே நடந்து வகுப்புக்கு வந்து சேர்ந்தாள். நடந்ததை ரூபன் எல்லோருக்கும் சொல்லியிருந்தான். கவிதா தான் சுந்தரியின் கையைப் பிடித்து இருக்கையில் அமர்த்தினாள். ‘நானும் தான்டி கறுப்பு. இதோ எல்லோரையும் பாரு...எல்லாம் அப்படியே தகதகன்னுமின்னுறாங்களா என்ன?’ என்றாள். சுந்தரி அப்படியே சுற்றி எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தாள். ஜோஸப், சாஸ்தா, ரூபன் மூவருமே கூட சோகமாக இருந்தார்கள்.

‘உனக்கு டான்ஸ் ஆட பிடிக்காது. எனக்கு பிடிக்கும்! இந்த ஸ்கூல் ஸ்டேஜ்ல ஆடணும்னு எட்டு வருஷமா ஏங்கிட்டிருக்கேன். ஒரு வாய்ப்பு கிடைச்சது. அதுவும் போயிடுச்சு. கறுப்புங்கறதுக்காக கவலைப்படல கவி. ஆனா அது என் வாய்ப்பை பறிச்சுடுச்சுல்ல. அதான்...’ என்று பேசிக் கொண்டிருக்கும் போதே...!

‘சுந்தரியக்கா உங்கள பயாலஜி மிஸ் பிரின்ஸிபல் ரூமுக்கு வரச் சொன்னாங்க’ என்றாள் ஒரு சிறுமி.

‘எதுக்குடி?’ என்றாள் கவிதா.

‘தெரியல. இனி நான் இந்த ஸ்டேஜ்ல ஆடப் போறதில்ல. சென்டர்லயோ, க்ரூப்லயோ’. என்றாள் சுந்தரி.

(நன்றி: முற்றுகை காலாண்டிதழ்)

Pin It