பொன் தூவி வாழ்த்தும்
என் ரசனைகளின்
ஒளிப்பந்தல்
உன்னையே
வண்ணங்களாய்ச்
சுற்றித் திரியும்
என் நினைவுகளின்
நிறத்தோட்டம்
ஆனால்...
வாகனம் மூடிக்கிடக்கும்
வெண்பனிப் பொழிவைப்போல
அவை உன்னால்
வரவேற்கப்படாததாய்
ஆனபின்...
உன்
நினைவுகளின் கதகதப்புகள்
எனக்கு
வேண்டவே வேண்டாம்
என்று முடிவெடுத்து
நிறுத்திக்கொள்ள
நினைத்ததுதான் தாமதம்...
என் காடு கொள்ளாத
பட்டாம் பூச்சிகளாய்
உன் நினைவுகள் பெருக்கெடுத்துப்
படபடத்துப் பறப்பது
ஆச்சரியம்...
அந்த ஆச்சரியத்தில்
உன் மீதான என் பிரியம்
அந்தியின் உந்து காற்று ஏறிய
செம்மஞ்சள் அலைகளாய்
மேலும் மேலும் உயர்ந்து
உன்னையே
இன்னமும் இறுக்கமாய்த்
தழுவுகிறது...
என்றால்...
என் நெஞ்சப் பொதியே...
உன் மீதான என் பிரியத்தின்
உயிர்ப் பிடியிலிருந்து
நான் தப்பிப்பதுதான்
எப்படி?
- புகாரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
RSS feed for comments to this post