எங்கள் தெருக்களில் குழந்தைகளைக்
காணவில்லை
குழந்தைகளின் கனவுகளை மிதித்துக்கொண்டு
இராணுவ வாகனங்கள் விரைந்து செல்கின்றன
முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன
குழந்தைளின் உலகங்களின் அற்புதங்களை
ஆயுதங்கள் தின்னத்தொடங்கிவிட்டன
சுண்டல்க்காரன் வெறுமனே கூவித்திரிகிறான்
ஜஸ்பழவான்கள் தரிக்காது செல்கின்றன
தெருநாய்கள் அச்சமற்றுத்திரிகின்றன
லான்மாஸ்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்லை
குழந்தைகளை இழந்த தெருக்கள்
தெருக்களாயிருப்பதில்லை
இராணுவ வாகனங்களின் புகை
மரங்களில் இருளாய் படிந்திருக்கிறது
மின் கம்பங்களில் தொங்குகின்ற பட்டங்கள்
காற்றில் கிழிபடுகின்றன
மரக்கிளைகளில் கீச்சிடும் குருவிகளின் குரலாய்
உதிர்கின்றன இலைகள்
பலூனும் முகமூடியும் விற்கும் முதியவனின்
பாடல்களில் வழிகிறது
குழந்தைகளை இழந்த தெருக்களின் துயர்
மரநிழல் குடிசையில் முடங்கிக்கிடக்கும்
சிறுவன்
தனது குரும்பட்டித்தேரையும்
கறள் ஏறிய சைக்கிள் வளையத்தையும்
அதன் ஓட்டு தடியையும்
எடுத்துப்பார்த்து விடும் பெருமூச்சை
உஸ்ணம் நிரம்பிய காற்று குடிக்கின்றது
ஊஞ்சல்களில் குந்தியிருக்கிறது
சிறகுகள் கத்தரிக்கப்பட்ட வெறுமை
குழந்தைகளின் சுவடுகள் தொலைந்த தெருக்களில்
இராணுவத்தடங்கள் பெருகிக்கிடக்கின்றன
விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்கு காவுகொடுத்த
தாயின் ஒப்பாரி.
- சித்தாந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!