இப்பொழுதுதான் அவனைப் பற்றி
பேசி விட்டு வந்தேன்
ஒவ்வொருவர் நாக்கிற்கும்
ஒவ்வொரு சுவையாய் மாறிப் போயிருந்தான்.
பட்டினத்தார் கைக்கரும்பென
சுவைத்த பற்களை
நாக்கு மட்டும்
பல்லாங்குழி ஆடிக் கொண்டிருந்தது.
எடுத்துச் செல்ல ஆயத்தப் படுத்துகிறார்கள்
யார் யாரோ
என்னென்னவோ பேசுகிறார்கள்
அவனைப்போல் உத்தமன் இல்லை
இவனைப் போல் இன்னொருவன் பிறக்க முடியுமா
இப்படி ஒருவன் இனி பூமியில் பிறக்க முடியாது
பேசுபவர்கள் கன்னத்தில் அறைய
ஆசைதான் அவனுக்கும்
கைகளும் கால்களும் கட்டப்பட்டு விட்டன
பிணமாய்க் கிடப்பவன்
எழுந்திருக்கக் கூடாதாம்
வேறு என்ன செய்ய முடியும்
ஊர் வாயில் விழுந்து செத்தவன்
எரிவாயில் எரிய
வானத்தைப் பார்த்து
போய்க் கொண்டிருக்கிறான்

- உடுமலை கி.ராம்கணேஷ்

More articles by உடுமலை கி.ராம்கணேஷ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.