வில்லாகிப் பிரிகின்றன
சேர்ந்திருந்த நான்கு கால்கள்
நடுவே வளரும் சிறு அம்பின் கால்கள் மோதி
பயணிக்கும் ஆழ்துயிலில் நிகழ்கின்றன
கனவின் வெவ்வேறு வேட்டைகள்.

அம்பு முழுவதும் ஊடுருவிய உடலுடன்
குளத்துக்கு நீரருந்தச் செல்லும் மான்
கடைசி வரைக்கும்
வேடன் பெயரைச் சொல்லாமலேயே
வயிற்றை வீங்க வைக்கிறது

கன்றின் காலில் மருந்திடும்
களிறும் பிடியும்
அதை
வெவ்வேறு இடங்களுக்கு
மாற்றிக் கொண்டே இருக்கின்றன
ஆறாமலேயே இருக்கிறது நகரும் காயம்.

வலிக்கும் முயலின் காதுகளில்
சொற்களின் திரவத்தைக்
காய்ச்சி ஊற்றுகிறார்கள்
அது குதிக்கும் பாதையெல்லாம்
கசியும் கவிதைகளைப்
புதைத்தபடியே செல்கிறது.

- இரா.கவியரசு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.