இடி முழக்கம் மின்னல் என
இசை கவிய
தாலாட்டும் சுரத்தில்
உரத்து ஒலிக்கிறது
குளிர்மிகு கீதமாய் வானப் பாடல்
தாய்ப்புலம் சேர்ந்த மகிழ்வில்
மடி சுரக்க மார்பு திறந்து
பச்சைப் பாலூட்டும் மழை
மண் செழிக்க
நீர் விதை நடும் பிரியத்தில்
வழிந்தோடும் அருவிகள்
பூமியை பூக்களால் வணங்கி
வேர் தரித்து நிற்கும்
விருட்சங்கள்
பச்சிலைகளின் கூட்டுப் பிரார்த்தனைகளால்
நிழல் சொரியும் காடு
அறியாமையின்
முதுகு சொறிந்தபடி
பணம் புரட்டும் பசப்பில்
இயற்கையின் கால்களை
வெட்டிச் சாய்த்து
கைத்தடியுடன்
நா வறட்சியாய் நான்
வேட்டைப் பற்களால்
மரங்களுக்குச் செய்த பாவத்துடன்
கோடாரிக் காம்பாய் நின்றபோது
காற்றில் வெடித்த சிறு வித்து
கை கோர்த்து என்னை
அழைத்துச் செல்கிறது
வாழ்வின் உயிர்ப்பின் பால்!
- ரோஷான் ஏ.ஜிப்ரி