நகர்ந்து செல்லும்
பெருநகரின் வாயிலாய்
சிறு வனாந்திரங்களை
காவு வாங்கிச் செல்லும்
சிறுநகரின் ஒற்றைக் கிளையில் நின்று
நித்தமும் ஓலமிடுகிறது சாக்குருவி.

சாக்குருவி கத்தினால்
சனத்துக்கு ஆகாதென
நகர் நுழைபவரெல்லாம்
கிட்டியதை எறிந்து விரட்டுகின்றனர்.

தன்னை தீண்டும்
மிரட்டலுக்கும், அதிகாரத்திற்கும்
தீய்ந்து போகாத தீவிரத்தோடு
கிழமை தவறாது
ஓலமிட்டு ஓய்கிறது சாக்குருவி
முளைக்க வைக்கும் கல் மரத்தால்
தன் இனத்தின் உறைவிடமும்
இயற்கையின் வனப்பும்
மழையின் வருகையும்
மண்ணின் வாசமும்
மறுதலிக்கப்படுவதை
மன்னிக்க முடியாத பெருங்கோபத்தில்!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.