வாலில் நூல் கட்டி
என் கட்டுக்குள் பறக்க வைத்த தும்பி
வஞ்சத்தோடு திரும்பிப் பார்க்கிறது.

பாதை மாற்றிவிட
தண்ணீரில் மூழ்கிய
எறும்பின் உலுத்துப்போன சடலம்
என் பாதைகளை அரித்து
புதைகுழி ஆக்குகிறது.

ஒற்றை ரூபாய்க்காய்
தும்பையால் சிறகொடித்து
புதைத்து வைத்த பட்டாம்பூச்சி
காத்திருக்கிறது
என் சிறகொடிக்க.

ஊர்ந்து போனதொரு குட்டித்தேளின்
கொலையினூடே
தொடர்கிறது என் குரூரம்.

தொலைந்துபோன குழந்தைப் பருவத்தின்
வக்கிரச் சுவடுகள் மறந்து
தேவதையெனப் பிரகடனப்படுத்திக் கொள்கிறேன்
என்னை

Pin It