காட்டிலிருந்து
வெட்டிக்கொண்டுவரப்பட்ட
மரம் காத்துக்கொண்டிருந்தது
தன் கதை தன் மேலேயே
அவனால் எழுதப்படும் என்று.

வெட்டுப்படுதலும், பின் துளிர்த்தலும்,
மழை வேண்டிக்காத்திருப்பதும்
வேண்டாத இலைகளைக் களைவதும்
அழையா விருந்தாளிகளைத் தாங்கி நிற்பதும்,
அண்டி வரும் எவருக்கும்,
யாரெனத் தெரியாமல் நிழல் தருவதுமான
மரத்தின் நினைவுகள்
மறக்கடிக்கப்பட்டு
எழுதுபவனின் அவமானங்களும்
மகிழ்வும்,சோகமும்
அப்பிக்கொண்டன
எழுத்தாக அதன் மேல்.

மரமும் அதைக்கொஞ்சம்
வாசிக்க முயன்று
பின் தன்னைத்தானே
தேற்றிக்கொண்டது
ஏதோ ஒரு வகையில்
அவை தன் கதையை
ஒத்திருப்பதாக.

- சின்னப்பயல் ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.