இருள் வடிந்த நேரத்தில்
பல் குச்சியுடன்
ரயில்பாதையோரம் போராடுகிறான்
அழுக்கில் வாசம் செய்யும்
பரட்டைத் தலைச் சிறுவன்.

தொலைவைத் தொலைத்து
வரும் ரயில்
காதில் நுழைவதை
எதிர் நோக்கி
புன்னகைத்து நிற்கிறான்
வாழ்வைப் பிளந்து செல்லக்
காத்திருக்கும் கிழவன்.

அதிர்வின் பேரோசையுடன்
செவியைக் கிழித்து
வெளியேறுகிறது ரயில்.

தாண்ட இயலாத பூனை கண்டு
மௌனத்தின் நாக்குகள் நீள
இருளை இழுத்துக் கண்ணில் போட்டு
மனதைக் கிடத்துகிறான் தண்டவாளத்தில்.

கணங்கள் கனத்து
காணாமல் போனபோது
ரயிலும் கிழவனும்
போய்விட்டிருந்தார்கள்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.