45 நாட்களுக்குப் பிறகு
உன்னைச் சந்திக்கும் மகிழ்ச்சியில்
ஆப்பிள் துண்டத்தை
கையிலேந்தி நிற்கும்
இறக்கை முளைத்த
குட்டி தேவதையொன்றை
பரிசளிக்கிறேன்..

பெற்றுக் கொண்டு
இதை வைத்து நான்
என்ன செய்யப்
போகிறேனென்றாய்..
துளிர்க்கும் கண்ணீரை
ஒத்திவைத்து
வேதனையுடன்
வீடு திரும்புகிறேன்..
உன் கடும் சொற்களை
பரிசாகக் கொண்டு..

---------------

என் செல்பேசி
வந்து விழுமுன்
குறுஞ்செய்திகளுக்கு
எப்போதும் இடம் கொடுக்கிறது..

உன் செல்பேசி
வந்து விழுமென்
குறுஞ்செய்திகளுக்கு
எப்போதும் இடம் தடுக்கிறது?

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
அலைபேசியில் சேமிக்கப்படும்
குறுஞ்செய்திகளுக்கும் தான்..

‘பழையன கழி’ அது போகி என்கிறேன்
‘எப்போதும் சுவைக்கப்படுகிற பொங்கல்’ என்கிறாய்
இனிக்கிறது நம் காதல்..

------------------

என்று நம்பிக்கை இழக்கிறேனோ
அன்று என் உடலை மட்டுமே
தாங்கியிருக்கும்
இந்த பூமி

------------------------------------

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It