‘களைப்போடிருப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
இளைப்பாறுதல் தருகிறேன்’
என்றவரைக் களைப்போடு
சந்திக்கச் சென்றேன்.
மெல்ல ஊர்ந்த
நீண்ட வரிசையில்
கடைசி ஆளாக
நின்று கொண்டிருந்த
எனக்குப் பின்னும்
ஒருவர் வந்து சேர்ந்தார்.
திரும்பிப் பார்த்தேன்
களைப்போடு காணப்பட்டார்
மேற்கண்ட
வாசகத்துக்குச் சொந்தக்காரர்.

-----------------------------
சாப்பிட வாருங்கள்
நண்பர்களே..
எனது செங்குருதியினை
கடுகு தாளித்து பொரியலாகவும்
எனது எலும்புகளை
இஞ்சி பூண்டு தட்டிப் போட்டு சூப்பாகவும்
எனது மூளையினை
சிறிது மிளகு சேர்த்து வறுவலாகவும்
எனது வலுவற்ற தசைகளை
அரிந்து குழம்பாகவும்
இடையிடையே அருந்த
எனது துயர்மிகு நினைவுகளையும்
மேசை மீது வைத்துள்ளேன்.
உங்களில் யாராவது
சோறாக சமைய சம்மதமெனில்
அமரலாம்.
ஒரு போர் முடிவுக்கான
ஆயத்தத்துடன்..

- இசை ப்ரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.