வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் ‘நிறுவனங்களைத்’ தொடங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பல வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியக் கல்விச்சந்தையைக் குறிவைத்துக் கல்லாப்பெட்டியுடன் களமிறங்கத் தயாராகிவிட்டன. இந்தியாவின் கல்விச்சந்தை மிகவும் பெரியது; விரிவானது. இவ்வளவு நாளாக இதில் உள்நாட்டு முதலாளிகளே கொள்ளை கொள்ளையாக அறுவடை செய்து வந்தனர். இதனை வெளிநாட்டு முதலாளிகளும் கொஞ்சம் அனுபவித்துவிட்டுப் போகட்டுமே என்கிற மத்திய அரசின் ‘பெருந்தன்மை’ மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நுழைவதால் உண்டாகப் போகும் விளைவுகள் பற்றி அறிஞர்களிடையே பலத்த விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்தப் பல்கலைக்கழங்களின் வரவால் உண்டாகும் போட்டியால் இந்தியப் பல்கலைக்கழகங்களின் தரமும் உயரும் என்பது ஒரு தரப்பின் வாதம். இதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் உயரப்போவது என்ன மாதிரியான தரம் என்பதில்தான் சிக்கல். வெளிநாட்டுப் பல்கலைக்கழங்கள் இங்கு கல்விச்சேவை புரிய வரவில்லை என்பது கபில்சிபலுக்கும் தெரியும்; கையில் பணத்துடனும் கண்ணில் கனவுடனும் காத்திருக்கும் பெற்றோர்களுக்கும் தெரியும். கல்வி என்பது இங்கே கொழுத்த வியாபாரமாகிப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நிலை மேலும் தீவிரப்படும். இங்கு வரும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டுக்கு இடம் இருக்காது என்று பூடகமாகத் தெரிவிக்கப்பட்டு விட்டாயிற்று. ‘கையில காசு; வாயில தோசை’ என்று கடைச்சரக்காய் பட்டங்கள் கூவிக் கூவி விற்கப்படலாம்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதியளித்ததன் மூலம் உலகவங்கி உள்ளிட்ட பன்னாட்டு நிதியமைப்புகளின் நீண்ட நாள் விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளதாகவே தோன்றுகிறது. இந்தியாவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் உலகவங்கி உள்ளிட்ட நிதியமைப்புகளின் நீண்ட நாள் கனவு. கலை மற்றும் மனிதத்துவம் சார்ந்த கல்விப் பாடங்களை (வரலாறு, பொருளாதாரம், இலக்கியம், மெய்யியல், சமூகவியல் போன்றவை) நீக்க வேண்டும் என்பது இவ்வமைப்புகளின் விருப்பம். அதற்குப் பதிலாக உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்பப் படிப்புகளை மட்டும் வழங்கும்படி தொடர்ந்து நிர்ப்பந்தித்து வருகின்றன. இந்த விருப்பத்தைக் ஒட்டுமொத்த இந்தியாவின் கல்விக்கொள்கையாக உருவாக்குவதற்காக மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்விநிலையை ஆராய்வது என்ற பெயரில் உண்டாக்கப்பட்ட குழுக்களில் கல்விப்புலம் சாராத தொழில் அதிபர்களே பெரும்பாலும் இடம் பெற்றிருந்தனர். இதுவே இந்தக் குழுக்களின் நோக்கம் என்ன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தின.

உயர்கல்வி என்று குறிப்பிடப்படும் அந்தஸ்தை கலைப்பாடங்கள் இங்கு ஏற்கனவே இழந்துவிட்டன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான ‘மாணவ எந்திரங்களை’ உருவாக்கித் தரும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள் மட்டுமே இங்கு உயர்கல்வி என்று ஊடகங்களின் உதவியுடன் தொடர்ந்து அடையாளம் காட்டப்படுகின்றன. இதனுடன் வணிகம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம். நிறுவனங்களின் லாபக் கொள்கைகளை நிர்வகிக்கும் வெறும் ‘உற்பத்திப் பொருட்களாக’ மாணவர்களை உருவாக்கித் தருவதாகவே இங்குள்ள மேலாண்மைப் படிப்புகள் விளங்குகின்றன. சூடு, சொரணையின்றி நிறுவனம் சொல்வதைப் புன்னகையுடன் கேட்டு அடிபணிவதே ‘ஸ்ட்ரெஸ் மேனஜ்மென்ட்’ என்று இங்கு கற்றுத் தரப்படுகிறது. ‘சிந்தித்துக் கொண்டிருக்காதே; சொல்வதை மட்டும் கேள்’. இதுவே மாணவர்களுக்கான நம் நாட்டின் கல்விக் கொள்கையாக மாறிப் போயுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களின் நலன் சார்ந்த விருப்பங்களே இங்கு மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தக்கூடிய கல்வி எனும் கருத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாளாக நம் நாட்டுக் கல்வி நிலையங்களின் வழியாக இந்நிறுவனங்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு வந்தன. அதாவது அவர்களுக்குத் தேவையான ‘பொருட்களை’ நம்முடைய கல்வி நிலையங்கள் உற்பத்தி செய்து கொடுத்தன. இப்போது இந்த உற்பத்தியில் மத்திய அரசு உதவியுடன் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகக் களத்தில் குதிக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. குறைந்த செலவில் தரமான அடிமைகளை உருவாக்க இந்தியாவை விடச் சிறந்த இடம் வேறு இருக்க வாய்ப்பில்லை. இதனால் அடிமைகள் உற்பத்தியில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் உள்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் கடும் போட்டியைச் சந்திக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

நம்முடைய கல்விமுறை உருவாக்கியுள்ள புதிய தலைமுறை இளைஞர்கள் மிகப்பெரும் கவுரவப் பொறுப்புகளாக நினைக்கும் வேலைகளை இரண்டு விதமாகப் பிரித்துவிடலாம். ஒன்று, வெளிநாட்டில் வேலை பார்ப்பது; இரண்டு, வெளிநாட்டுக்காக வேலை பார்ப்பது. இப்படி ஒரு  தலைமுறையை உருவாக்கும் கல்விக் கொள்கையால் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் இந்தியா தன்னுடைய செவ்வியல் மதிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாகச் சில மேல்நாட்டு அறிஞர்களே எச்சரித்துள்ளனர். ஆனால் அடிமைகளாய் இருப்பதில் பேரானந்தம் கொள்ளும் நம் அறிவுக்கு அதெல்லாம் உரைப்பதேயில்லை; உரைக்க விடுவதுமில்லை. கல்வியின் வழியாக நம்மைக் காலனி நாடாக்கும் சதி வலையில் தெரிந்தே வீழ்ந்திருக்கிறோம். ‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?’ என்று ஏங்கிய பாரதி சீக்கிரம் செத்துப்போனதும் நல்லதுதான்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வரவால் சில நேர்மறை விளைவுகளும் உண்டாகக்கூடும். தனியார்மயமாக்கல் எனும் மோசமான கொள்கையால் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்கள் வெட்டவெளிச்சமானது போல் நம் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மண்டிக்கிடக்கும் ஊழல்களும் முறைகேடுகளும் இனி பொதுமக்களின் பார்வைக்கு வரலாம். இங்குள்ள சில பல்கலைக்கழகங்களில் பணமில்லாமல் எந்தப் பருப்பும் வேகாது. தொழில் ரீதியிலான நேர்த்தியான நிர்வாக முறையுடன் களமிறங்கப் போகும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் முன்னால் ஒழுங்கற்ற நிர்வாகம் மற்றும் தரமற்ற பேராசிரியர்களை வைத்துக்கொண்டு நம் பல்கலைக்கழகங்கள் போட்டி போட முடியாமல் பல்லிளித்துக்கொண்டு நிற்கும்.

எது எப்படியோ, எல்லாக் கூத்துகளையும் மெல்லிய புன்னகையுடன் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறது காலம். நாமும் வேறு வழியின்றி அந்த நிலையில்தான் இருக்க வேண்டியிருக்கிறது. ‘வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு தொழில் செய்ய அனுமதித்ததால் இன்று முதல் நீ திறந்த வீட்டில் நுழையவிட்ட புலிகேசி என்று அன்போடு அழைக்கப்படுவாய்’! ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் இந்த வசனம் உங்களுக்கு மறந்திருக்காது. இன்றைய சூழலில் இந்தப் ‘பெருமை’க்குரிய பட்டம் யாருக்குப் பொருந்தும் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

-     கணேஷ் எபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It