புத்தகம் பேசுது இதழுக்காக அ. மார்க்ஸ் அவர்களை நான் எடுத்த நேர்காணல் குறித்து ‘யாருக்காக பேசுகிறார் அ. மார்க்ஸ்’ என்ற கட்டுரையை கீற்று இணையதளத்தில் எழுதியது மட்டுமல்லாமல் நகலெடுத்து தான் செல்லுமிடமெல்லாம் விநியோகித்து வருகிறார் பா. செயப்பிரகாசம். நேர்காணல் செய்தவன் என்ற முறையில் சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. அ. மார்க்ஸிடம் ஈழப் பிரச்சனை குறித்து மட்டுமே நேர்காணல் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் எங்களின் ஆசிரியர் குழுவின் முடிவின்படி தொகுத்தெடுத்துக் கொண்ட கேள்விகளுக்கான பதிலை அவரிடம் பெற்று வெளிவந்த நேர்காணல் அது. ஆய்வுபூர்வமான அடிப்படையில், சிந்திக்கத்தக்க, ஆழமான கருத்துகளைக் கொண்டு இருந்தது அந்த நேர்காணல். இனவெறி, மொழி வெறி அற்றவர்கள் மத்தியிலும், தமிழகம் அயல்நாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு மூத்த எழுத்தாளர் பா.செ. தரங்கெட்ட மொழியிலும் முற்றிலும் அவதூறுமிக்க ஒரு எதிர்வினையை அந்நேர்காணலுக்கு எழுதி இருப்பதும், அதை பெருமைக்குரிய செயலாக செல்லுமிடமெல்லாம் விநியோகித்துக் கொண்டு திரிவது மிகவும் கேலிக்குரியது. தன்னைப் பற்றிய கவன ஈர்ப்புக்காக எதையும் செய்பவர், எதையும் குளறுபடியாக விதைப்பவர், கேள்வியும் நானே பதிலும் நானே என அவதூறுகளில் அவர் சரண் புகுவதில் இருந்தே மார்க்ஸ் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அவரிடம் தரவுகள் இல்லை என்பதையே காட்டுகிறது.

2. சிவத்தம்பி, கைலாசபதி, குணவர்த்தனே ஆகியோரின் கருத்துகள் மற்றும் வரலாற்று தகவல்கள் அடிப்படையில் அ.மா. சில கருத்துகளை முன்வைத்துள்ளார். இதில் தேவையில்லாமல் பின்நவீனத்துவத்தை இழுப்பதும், மார்க்சியத்தை எள்ளி நகையாடுவதும் அ.மா. எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் அவரிடம் சரக்கு இல்லாததையே காட்டுகிறது.

அந்த நேர்காணலில் பின்நவீனத்துவம் என்ற சொல்லையோ, மார்க்சியம் என்ற ஆய்வு முறையையோ அ.மா. சுட்டிக்காட்டவில்லை. இலங்கைத் தமிழர் என்ற சமூக உருவாக்கம் எண்பதுகளுக்குப் பிறகு ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர் தனது பதிலைச் சொல்லி உள்ளார். இங்கே தேவையில்லாமல் பின்நவீனத்துவமும், மார்க்சியமும் எங்கே வந்தது?

3. பா. செயப்பிரகாசம் பின் நவீனத்துவத்தைக் காட்டிலும் மார்க்சியத்தையே தாக்குகிறார். தங்களின் தவறான செயல்பாடுகளின் மூலம் மக்களின் விடுதலையை சிதைத்த புலிகளின் முகவர்களில் ஒருவரான பா.செயப்பிரகாசத்திற்கு ந. சண்முகநாதன் போன்ற மார்க்சியர்களையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் குறை சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இன்று ராஜபக்ஷேயின் கொடும் பாசிச ஆட்சியை எதிர்த்து வருவது மட்டுமல்ல மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக சிங்கள பேரினவாத அரசால் அறிவிக்கப்பட்ட போதும் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்தான்.

4. சோவியத் பின்னடைவிற்குப்பின் உலகெங்கிலும் தேசிய முரண்பாடுகள் மேலெழுந்தன எனவும், மார்க்சிஸ்டுகள் இதைக் கவனிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார் பா.செ. தேசிய இன அடையாளம் மட்டுமல்ல, பல்வேறு அடையாளங்களும் தங்களை உறுதி செய்து கொள்ளும் அரசியல் மேலெழுந்தது என்பதை அ.மா. ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டுகிறார்-

இந்தியாவில் தலித், நேபாளத்தில் ஜனசாதி, மாதேசிகள், ஈழத்தமிழர்கள் மத்தியில் தலித்கள், முஸ்லிம்கள், கிழக்கு மாகாணத்தினர் என்றெல்லாம் இன்று அடையாள உருவாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்ளாததோடு வன்முறையாக ஈழத்தில் எழும்பிய அடையாள எழுச்சியை ஒடுக்க முயற்சித்ததின் விளைவாகத்தான் இன்று புலிகள் களத்தில் மட்டுமல்ல அரசியலிலும் தோற்றுப்போய் உள்ளனர்.

ஈழத் தமிழ் சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த அடையாள விகசிப்புகளுக்கு முஸ்லிம்களால் நடத்தப்படும் ‘பெருவெளி’, தலித்துகளால் நடத்தப்படும் ‘தூ’ கிழக்கு மாகாணத்தவர்களால் நடத்தப்படும் ‘எக்ஸில்’ போன்ற சஞ்சிகைகளே சான்று பகரும்.

இதுகுறித்து பா.செயப்பிரகாசத்தின் கள்ள மௌனத்திற்கு அர்த்தம் என்ன?

5. ம.க.இ.க.வினர் புலிகளை பாசிஸ்ட் இயக்கம் என சொல்வதாக அ.மா. சொல்கிறார். இதற்குப் பதிலாக பா.செ. என்ன சொல்கிறார் என கீற்று வாசகர்கள் படிக்கவும். ம.க.இ.க.வினர் அப்படி குரல் எழுப்பினார்கள், இப்படி குரல் எழுப்பினார்கள் எனச் சொல்லும் பா.செ. ம.க.இ.க.வினர் புலிகளை பாசிஸ்ட் இயக்கம் எனச் சொல்லவில்லை என எந்த தரவுகளோடும் மறுக்க முயலவில்லை.

6. வடக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்களை வன்முறையாக வெளியேற்றியதற்கு புலிகள் வருந்தி முஸ்லிம்களை திரும்ப அழைத்தார்களாம். இராணுவம்தான் அவர்களை தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். கீற்று வாசகர்கள் எல்லோரும் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என பா.செ. நம்புவதுபோல் தெரிகிறது. வெறுமனே வருத்தம் தெரிவித்தல் போதாது மீண்டும் அவரவர் இடத்திற்கு வரலாம் என அதிகாரப்பூர்வமாக புலிகள் அறிவிக்க வேண்டுமென்றுதான் முஸ்லிம்கள் கெஞ்சினார்கள். புலிகளின் இரக்கமற்ற மனம் கடைசி வரை அதைச் செய்யவில்லை. ‘பெருவெளி’ அக்டோபர் 07 கட்டுரையை பா.செ. வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

முஸ்லிம்களை இராணுவம் தடுத்து வைத்திருக்கிறது என்பதும், முஸ்லிம்கள் சிங்கள பேரினவாதத்திற்கு துணைபோகிறார்கள் என எழுதுவதும் (தாரகா) முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது என்பதுவும் உங்களிடமுள்ள இந்து மனத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

7. தீராநதியில் ஷோபா சக்தியின் பேட்டியின் வழியாக அ.மார்க்ஸ் உடன்பட்ட கருத்துக்கும், பின்னர் அவர் புத்தகம் பேசுது நேர்காணலில் வெளியிட்ட கருத்துக்கும் ஏதோ பெரிய வேறுபாடு இருப்பதாக மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டதாக சொல்கிறார் பா.செயப்பிரகாசம்.

கருணா மற்றும் பிள்ளையானை ஷோபா சக்தியோ அ.மார்க்ஸோ அந்த நேர்காணலிலும் இந்த நேர்காணலிலும் ஆதரித்தது கிடையாது. அங்கு ஒரு தேர்தல் நடந்தது மக்கள் விரும்பி பங்கேற்றார்கள். தேர்தலுக்குப்பின் ஒப்பீட்டளவில் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். இப்பொழுது வேண்டுவது அமைதி மட்டுமே. பேட்டியில் சொல்லப்பட்ட கருத்துகளை தனது காஷ்மீர் பயண அனுபவத்தையும் இணைத்து அ.மா. சொல்லியுள்ளார். 30 ஆண்டு காலப் போரில் அனைத்தையும் இழந்து களைத்துப் போன மக்கள் அமைதி வேண்டுவதை மையப்படுத்தியே ஷோபாவின் பேட்டியும் மார்க்ஸின் பேட்டியும் அமைந்துள்ளது.

கொலைகள், ஆள் கடத்தல் குறிப்பாக குழந்தைகளை கட்டாயமாக போர்க்களத்திற்கு இழுத்துச் செல்வதெல்லாம் ஒப்பீட்டளவில் குறைந்திருக்கிறது என தீராநதி நேர்காணலில் ஷோபா கூறி இருந்தார். இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை என மார்க்ஸ் கூறுகிறார். இதிலென்ன முரண்பாட்டை அவர் கண்டார்.

8. புலிகளின் முகவர் என பா.செயப்பிரகாசத்தையும், அவரையொத்தவர்களையும் மார்க்ஸ் சொல்வதால் செயப்பிரகாசத்திற்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே!

இராஜபக்ஷேவையும், கருணாவையும் மார்க்ஸ் ஆதரிப்பதனால் அவர்களின் ஏஜெண்ட் என மார்க்ஸை சொல்லலாமா என ரொம்பவும் புத்திசாலித்தனமாக கேட்கிறார் பா.செ. ராஜபக்ஷேவையும், கருணாவையும் மார்க்ஸ் எந்த இடத்தில் ஆதரித்தார்? நேர்மை இருந்தால் ஒரு சிறிய ஆதாரத்தையாவது அவர் தரட்டுமே.

‘எதுவரை’ என்றொரு சஞ்சிகை பிரிட்டனிலிருந்து வெளிவருகிறது. அவ்விதழில் ராஜபக்ஷேவின் அரசு கொடூரமான இனவாத பாசிச அரசாக உள்ளது என்பதை இதுவரையும் சொல்லாத தரவுகளோடு எழுதி உள்ளார். அந்தச் சஞ்சிகையையும் பா.செயப்பிரகாசம் வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மார்க்ஸ் மீது புலிகளுக்கு உள்ள காழ்ப்பெல்லாம் அவர் ராஜபக்ஷேவை, கருணாவை ஆதரிக்கிறார் என்பதற்காக அல்ல. அவர் ஆதரிக்கவில்லை என்று புலி முகவர்களுக்கு தெரியும். பிரச்சனை என்னவெனில், ராஜபக்ஷே, கருணா ஆகியவர்களோடு புலிகளின் அக்கிரமங்களையும், பாசிச நடவடிக்கைகளையும் கண்டிக்கிறார் என்பதுதான்.

ஒருவரை முகவர் என வரையறை செய்வதற்கான காரணிகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்த இயலுமென நினைக்கிறேன்.

_ யாருக்கு முகவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் செயல்பாடுகளுக்கும், அநீதிகளுக்கும் ஒத்தூதுவது.
_ அவர்களுக்காக தங்கள் வாழும் இடத்தில் லாபி செய்வது
_ அவர்களுக்குப் பயன்படுவது, அவர்களால் ‘பயன்’ பெறுவது

எல்லாம் போகட்டும் முகவர் என மார்க்ஸ் சொன்னதற்காக பா.செ. இவ்வளவு பொங்குகிறாரே கருணாநிதி தனது பத்திரிகையில் புலிகளின் பேரால் காசு சுருட்டும் காகிதப் புலிகள் என எழுதினாரே அப்போது எங்கே போனார்கள் முகவர்கள்? கருணாநிதிக்கு எதிராக பா.செ. தான் செல்லுமிடமெல்லாம் துண்டறிக்கை ஏன் விநியோகிக்கவில்லை? அவர் கையில் உளவுத் துறை இருக்கிறது என்ற அச்சமா? ஒரு பெரியவர், மூத்த அரசியல்வாதி இப்படிப் பேசலாமா என்கிற ரீதியில் தானே நசுக்கி, நசுக்கி புலி முகவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

புலிகளுக்காக எதையும் செய்யக்கூடியவர்தான் பா.செ. என்பதை நவீன தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும். ஈழம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த டெல்லிக்கு சென்ற ‘தோழமையின் குரல்’ நவீன தமிழ் இலக்கிய குழாமிற்கு பயணச்சீட்டு இரயிலில் வாங்குவதற்கு ரூபாய் முப்பத்தி நான்கு ஆயிரத்தை அனாயசமாக உருவித் தந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பா.செயப்பிரகாசம். தமிழகத்தில் நடக்கும் எந்தப் போராட்டத்திற்கும் இந்த மாதிரி உதவி செய்ததாக நமக்குத் தெரியவில்லை. (பின்னால் புலிகளுக்கு ஆதரவான முழக்கத்தை ஆர்ப்பாட்டத்தின்போது வைக்க முடியாது என அவர்கள் மறுத்ததால் அவர்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டது வேறு கதை). தலித்துகள் மீது தமிழகத்தில் நடத்தப்படும் வன்முறைகளை ஒரு தமிழன் இன்னொரு தமிழன் மீது வன்முறையை நிகழ்த்த வேண்டாம் என வன்முறையை நிகழ்த்தும் மேல்சாதி தமிழனை பார்த்து எந்தப் புலி முகவர்களும் தமிழின ஒருமைப்பாடு பேச முன்வரவில்லையே. ஏன்?

புலி ஆதரவு, தமிழ் ஆதரவு, தமிழர் ஆதரவு என்ற பெயரால் இங்கே எப்படியெல்லாம் காசு சுரண்டப்படுகிறது என்பதை கீற்று வாசகர்களுக்கு விளக்கத் தேவையில்லை. ஓவியர் புகழேந்தி மென்பொருள் துறையைச் சேர்ந்தவர்களிடம் காசு பறித்ததை கீற்று நந்தன் எழுதியதை வாசித்திருப்பீர்கள். அந்தச் சம்பவம் ஒன்று தான் வெளிவந்திருக்கிறது. வெளிவராத சம்பவங்கள் இன்னும் நிறைய.

பத்மநாபா உள்ளிட்ட இதர போராளிகளை புலிகள் கொன்றதெல்லாம் இந்திய உளவுத் துறையின் ஊடுருவலைத் தடுக்க, ராஜீவ் காந்தியைக் கொன்றது சந்திரசாமி, ஈழத்தில் நடக்கும் போரை இந்தியாவே நடத்துகிறது. தமிழினமே என்ற அடையாளமே இல்லாமல் செய்ய இந்தியா மூலசக்தியாக இயங்குகிறது என்றெல்லாம் பல ‘அதிரடியான’ உண்மைகளை அடுக்குகிறார். இப்படி விஷயங்களை மிக எளிமைப்படுத்தி பார்ப்பதுதான் புலி ஆதரவாளர்கள் வழக்கம்.

இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய ஆயுத மற்றும் பொருளாதார உதவி வழங்குகிறது. இந்தியாவின் விரிவாக்க நோக்கத்திற்கு உட்பட்ட செயல் இது என்றுதான் நாம் கூறமுடியுமே தவிர, இந்தியாவே போரை நடத்துகிறது என்று சொன்னால் அதன் பொருள் என்ன? ஆதாரங்கள் இருக்கிறது என்கிறாரே சொல்லுங்களேன்.

பத்மநாபன் இந்திய உளவுத்துறையின் ஆள் எனச் சொல்கிறீர்கள். சரி வைத்துக் கொள்வோம். மாத்தையாவைப் புலிகள் கொன்றார்களே அவர் இந்திய உளவாளியா? விபச்சாரிகள் என்றும் திருடர்கள் என்றும் மின் கம்பத்தில் கட்டி வைத்து சுடப்பட்ட தமிழர்கள் எல்லாம் இந்திய உளவாளிகளா? பள்ளி வாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை சுட்டுக் கொன்றது அவர்கள் இந்திய உளவாளி என்பதாலா? முஸ்லிம்களை இருபத்து நான்கு மணி நேரத்தில் 500 ரூபாய் பணம் அல்லது அத்தொகைக்கு நிகரான பொருளோடு வெளியேற வேண்டும் என்று புலிகள் உத்தரவு போட்டார்களே இதெல்லாம் எதனால்? அவர்கள் இந்து வெள்ளாள மனநிலைதான் என்பது கூடவா உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு எல்லாம் தெரியும். புலிகள் தமிழர்களை காப்பாற்ற மாட்டார்கள் என்று கூட உங்களுக்குத் தெரியும்.

அவர்கள் தமிழர்களை காப்பாற்ற மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகளே சான்று. தமிழர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி அபயம் தேடுகிறார்கள். புலிகள் தப்பிச் செல்லும்போது தமிழர்களை கொன்றொழிக்கிறார்களே இதுவும் உங்களுக்குத் தெரியாதா என்ன?

ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை பிரபாகரனே அது ஒரு துன்பியல் சம்பவம் என ஒத்துக்கொண்ட பிறகு நரசிம்மராவுக்காக சந்திராசாமி, சுப்பிரமணியசாமி தான் ராஜீவைக் கொல்வதற்கு துணைபோனார்கள் எனச் சொல்வது நல்ல நகைச்சுவை.

அ. மார்க்ஸ் புலிகளை ஆதரிக்கும் எல்லோரையும் முகவர் எனச் சொல்லவில்லை. புத்தகம் பேசுது நேர்காணலின் கடைசிப் பதிலை ஊன்றிப் படித்துப் பாருங்கள். மாவோயிஸ்டுகளைக் கூட அப்படிச் சொல்லவில்லை. உங்களைத்தான் உங்களைப் போன்றவர்களைத்தான் அப்படிச் சொல்ல முடியும்.

சி.பி.எம்.முக்கும், அ.மார்க்சுக்கும் நிறைய கருத்து முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் உண்டு. அவரும் எங்களை விமர்சனம் செய்வதுண்டு. நாங்களும் அவரை விமர்சிக்கத்தான் செய்கிறோம்.

ஈழம் தொடர்பான கருத்து நிலைகளில் கூட அவருக்கும் எங்களுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது. எங்கள் இருவருக்கும் ஈழப்பிரச்சினையில் ஒத்த கருத்து இல்லை என சி.பி.எம்.மையோ, அ.மார்க்ஸையோ அவதானிப்பவர்களால் விளங்கிக் கொள்ள முடியும். அது உங்களால் முடியாது. ஏனென்றால் நீங்கள் ஈழத் தமிழ் மக்களை நேசிப்பவர் அல்ல. புலிகளை ஆதரிப்பவர். நாங்கள் மக்களை நேசிப்பவர்கள். அந்தப் புள்ளியில் மட்டும்தான் இந்த நேர்காணல் புத்தகம் பேசுது இதழில் வெளியானது. அவ்வளவே.

‘பெருவெளி’ இதழின் வழியாக முஸ்லிம்கள் ‘சோனகர் தேசம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கிறார்கள். அவர்கள் இந்த கருத்து நிலைக்கு தள்ளப்பட்டதற்கு புலிப் பாசிசம்தானே காரணம். மார்ச் 10, 2009 அன்று நடைபெற்ற மீலாது விழாவில் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிகழ்வுக்கு பா.செயப்பிரகாசம் என்ன விளக்கமளிக்கப் போகிறார்? புலிகள் தலித்துகள், முஸ்லிம்கள் விரோதி மட்டுமல்ல; மனிதகுல விரோதிகள். அவர்களின் நடவடிக்கைகளை, படுகொலைகளை மீலாது ஊர்வலத் தாக்குதல் வரை தொகுத்துப் பாருங்கள். ஒரு தேர்ந்த மார்க்சியவாதி நீங்கள். ஒரு மார்க்சியவாதிக்கு மட்டுமே உண்மைகளை மிக எளிதாக அடையாளம் காணமுடியும்.

Pin It