electricity india

இம் மாதம் 6ம் தேதி கொச்சியில் நடைபெற்ற அனைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாடு புதிய மின்சாரச் சட்டத்திருத்தம் குறித்து விவாதித்துள்ளது. 2010 தொடங்கி, 2012ல் ஆலோசனைக் குழுக்களின் பரிந்துரையென விரிவடைந்து 2013ல் சட்டத் திருத்த வரைவு கொண்டு வரப்பட்டது. 2014 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இச்சட்டதிருத்தம், மின்சாரக் கட்டமைப்பை தனியாருக்கு முழுமையாக மாற்றும் கடைசி முயற்சியாகும். அதன் பிறகு மின்சாரத்துறை முழுமையாக தனியார் வசமாகிவிடும். கிராமப்புற மக்களிடையே வணிகம் செய்வது மட்டும்தான் அரசுத் துறை நிறுவனங்களிடம் எஞ்சியிருக்கும்.

மின்சாரம், அரசியல் அமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ளதால், அனைத்து மாநிலங்களின் ஒப்புதலோடு இந்த திருத்தங்களை நடுவண் அரசு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கையே இம்மாநாட்டின் குறிக்கோளாகும். உண்மையில், இது மாநிலங்களை மிரட்டி பணிய வைக்கும் ஒரு நடவடிக்கையாகும். மின்சாரத் துறையில் R-APDRP என்று பெயரிடப்பட்டு இன்று IPDP எனப் பெயரிடப் பட்டிருக்கும் வினியோக மேம்பாட்டுத் திட்டம், மற்றும் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் RGGVY திட்டம், மின்சார மேம்பாட்டு நிதி இவைகளில் கடனும், மானியமும் பெற வேண்டுமானால் நடுவண் அரசின் திருத்தங்களை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பெறமுடியும். இந்தத் திருத்தம் மாநில அரசுகளின் தொண்டைக்குள் திணிக்கப்பட்ட ஒப்புதலாகத்தான் இருக்க முடியும்.

 இந்தத் திருத்தம், இன்று சந்தைப் படுத்த முடியாத தனியார் மின்சார உற்பத்தியாளார்கள் தங்களது சில்லறை விற்பனைக் கூடங்களை திறந்து கொள்ள வழிசெய்கிறது. அதுவும் நகர்ப்புற வினியோகத்தில் மட்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளாக R-APDRP மூலம் அனைத்து மேம்பாட்டுப் பணிகளும், மானியம், அரசுக் கடன்கள் மூலம் இந்த நகர்ப்புறம் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மின்சார மீட்டர்கள் கூட புதிதாக மாற்றப்பட்டன. ஆக சீவி, சிங்காரித்து, தனியாரிடம் ஒப்படைக்கும் சட்ட நடவடிக்கையே இந்தச் சட்ட திருத்தம். வினியோகப் பகுதியின் பெரும் வணிகமும், லாபமும் கிடைக்கும் நகர்ப் பகுதியை தனியாருக்குத் தந்துவிட்டு கிராமப்பகுதியை மட்டும் பொதுத்துறைக்கு ஒதுக்குகிறது. நகர்ப் பகுதியில் கிடைத்து வரும் லாபத்தைக் கொண்டே கிராமப்பகுதியில், எளியவர்களுக்கும் எட்டும் விலையில் மின்சாரம் வழங்கி வந்தது வாரியம். இனி இது சாத்தியமற்று போய்விடும். இதுவரையில் முதலீடு செய்யப்பட்ட மூலதனக் கடன்களை அரசுத்துறையிடம் விட்டுவிட்டு பெரும் வணிகப் பகுதிகளை தனியாருக்குத் தருகிறது சட்டத்திருத்தம். இன்னமும் விடையில்லா பல கேள்விகள் இருக்கின்றன.

சுரமிருக்கும் பொழுது ,சும்மா இருந்துவிட்டு சுடலைக்குப் போகும் பொழுது, தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பி கூட்டம் போட்டுள்ளன. வெறும் அரசியல் நோக்கமும், வாக்கு வங்கி தந்திரங்களும் தீர்வைத் தரப்போவதில்லை. காலம் கடந்த, உறுதியற்ற, நோக்கமில்லாத இதுபோன்ற நடவடிக்கைகள் எந்தப் பயனையும் தரப்போவதில்லை.

இந்த திருத்தங்களின் நோக்கம் பற்றி தெளிவு இல்லாமல், இதனை எதிர்கொள்ள முடியாது

இத் திருத்தங்களுக்கு அரசு சொல்லும் காரணங்கள்:

1* அரசு வினியோக நிறுவனங்கள் பெரும் கடனில் மூழ்கியுள்ளன

2* இந் நிறுவனங்கள் பெற்றுள்ள வங்கிக்கடன்கள், வங்கிகளின் வாராக்கடனாக மாறி வங்கி செயல் பாட்டையே அச்சுறுத்துகின்றன.

3* வினியோகப் பகுதி தனியாரிடமிருந்தால்தான் போட்டி அதிகமாகி சந்தை விலை குறையும்-- என காரணங்களை அடுக்குகின்றது.

அரசு சொல்லும் வங்கிகளிடம் பெறப்பட்டுள்ள கடன் 3.15 லட்சம் கோடி என்கிறது. இதில் ராஜஸ்தான், தமிழ்நாடு, உ.பி, அரியானா என நான்கு மாநிலங்கள் மட்டுமே 1.97 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளன. எஞ்சிய 26 மாநிலங்களின் கடன் 1.18 லட்சம் கோடி எனக் கொள்ளலாம். இவற்றில சில நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன. சொல்லப்பட்டுள்ளவற்றில் மூலதனக் கடன் எவ்வளவு எனக் குறிப்பிடப்படவில்லை.. மூலதனக் கடன் என்பது கட்டுமானங்களின் வணிக வருவாயில் சேர்ந்துவிடும். எனவே சொல்லப் பட்ட வங்கிக்கடன் என்பது நான்கு மாநிலங்களைச் சார்ந்த பிரச்சனையாகவே பார்க்க முடியும். 97 நிறுவனங்களில் 4 மாநிலங்களைச் சார்ந்த 9 நிறுவனங்களின் கடனைக் காட்டி இந்த திருத்தங்களை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் 9 நிறுவனங்களைத் தவிர மற்ற கடன்கள் அச்சுறுத்தக் கூடியவையல்ல. இன்று பல தனியார்  நிறுவனங்கள், 88 நிறுவனங்களைவிட பல மடங்கு வங்கிக் கடனை பெற்றுள்ளன. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், அதானி குழுமம், பிர்லாவின் இன்டால்கோ முறையே 16000 கோடி, 15,000 கோடி, 14,700 கோடி கடனைச் செலுத்தாமல் 15 ஆண்டுகால தவணை பெற்றுள்ளன. இந்த வரிசை இன்னமும் நீளமானது. இவர்களைவிட அரசு நிறுவனங்கள் மூழ்கிப் போவதல்ல. 9 நிறுவனங்களின் பிரச்சனையை பொதுமையாக்குவது நியாயம் தவறிய நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது.

11-12, 12-13, 13-14 ஆண்டுகளுக்கான அனைத்து மாநிலங்களின் வரவு செலவை ஆய்வு செய்தால், தமிழ்நாடு, ராஜஸ்தான், காஷ்மீரம் மட்டுமே தொடர்ந்து ஒரே அளவான இழப்பைச் சந்தித்துள்ளன. உதாரணமாக பீகார் மாநிலம் 11-12ல் அதன் வருவாயில் 80 சதவீதம் அளவுக்கு இழப்பைச் சந்தித்துள்ளது. ஆனால் 12-13ல் இது 34.33 சதமாகவும், 13-14ல் 8.62 சதமாகவும் குறைந்துள்ளது. எனவே மேலே சொன்ன மாநிலங்களில் கையாளப்பட்ட விதம் குறித்து ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமே அல்லாது, தனியாரே தீர்வு என்பது எப்படி சரியானதாகும்?

நாட்டின் 30 மாநிலங்களின் மொத்த இழப்பு 11-12ல் 76,738 கோடியிலிருந்து 12-13 ல் 70,564 கோடியாகவும், 13-14ல் 62,462 கோடியாகவும் குறைந்து வந்திருக்கின்றன. குறிப்பாக, 13-14 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ம.பி, உ.பி, ஹரியானா என ஐந்து மாநிலங்களின் மொத்த இழப்பு 56,610 கோடியாகும். 30 மாநிலங்களின் இழப்பிலிருந்து இது கழிக்கப்பட்டு விட்டால், 25 மாநிலங்களின் இழப்பு 3,852 கோடியாகும். எனவே வினியோக நிறுவனங்களின் இழப்பு என்பது 4, 5 மாநிலங்களில் இருப்பதேயன்றி நாடு முழுமைக்குமானதல்ல. இந்த காரணத்திறகாக சட்டதிருத்தம் என்பது, வேறு அழுத்தங்களுக்காகவோ, வேறு நோக்கங்களுக்காகவோ இருக்க முடியுமே தவிர வங்கிக்கடனுக்காகவோ, போட்டி மூலம் விலை குறையும் என்பதற்காகவோ அல்ல.

விடுதலை பெற்ற இந்தியாவில், நாட்டின் முழுமைக்குமான கட்டமைப்பை மின்வாரியங்கள் வெற்றிகரமாக செய்துள்ளன. விவசாயம், பாதுகாப்பு, குடிநீர், பொழுதுபோக்கு என பல அடிப்படைத் தேவைகளை மின்சாரம் எளிதாக்கியிருக்கிறது. மக்கள் மேம்பாட்டில் இந்த செலவினம் முழுமையாக பயன் பட்டிருக்கிறது. இன்னமும் மின்சாரம் பெறாத கிராமங்கள் இருக்கின்றன. 2011 ஆம் கணக்குப் படி 247.6 மில்லியன் வீடுகளில் 80 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. 2001லிருந்து 2011 வரையில் முன்எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 61 மில்லியன் வீடுகளுக்கு தான் மின்சாரம் எட்டியிருக்கிறது. அதுவும் குடிசை இணைப்புகளே பெரும் பகுதி. நாட்டின் ஒட்டு மொத்த சமுகத்திற்கும் மின்சாரம் சென்றடையவில்லை. நாட்டின் மூன்றில் ஒரு பங்கு வீடுகளுக்கு இது எட்டப்பட வேண்டும்.

சமுதாய முதலீட்டு தேவை முடிந்துவிடவில்லை. எளிய மக்கள் அதிகம் இருப்பதையே உணர்த்துகிறது. அவர்களையும் மின் கட்டமைப்பில் இணைப்பது எஞ்சியிருக்கும் பணியென்றால், அவர்களுக்கு எட்டும் விலையில் இருக்க வேண்டும் என்பது மற்றொறு தேவையாகிறது. இந்த சமுதாய நெருக்கடிக்குள் இருக்கும் மாநில அரசுகளும், வாரியங்களும் தங்களுக்குள் இந்த தேவைகளைச் சந்திக்குமளவுக்கு, நடுவண் அரசின் கொள்கைகள் இருந்திருக்க வேண்டும். இந்த திசைநோக்கி மாநிலங்களை தள்ளும் திட்டங்களைச் செயல் படுத்தியிருக்க வேண்டும். பரிதாபமாக, தனியாரின் வரவுக்காக மின்வாரியங்களை பலியிட்டுவிட்டது நடைமுறைக் கொள்கை முடிவுகள். 11-12 மற்றும் 12-13 ஆண்டுகளில் பல மாநிலங்களில இழப்பு கூடுவதற்கு தனியார் மின்சாரத்தின் விலையே காரணம். இந்த விலையை மக்கள் மீது சுமத்த முடியாது. நடுத்தர மக்கள் கூட இந்த விலையைத் தர முடியாது. 06-07 ஆண்டு தொடங்கி 13-14 ஆண்டுக்குள் பல லட்சம் கோடி அதிக லாபத்தை தனியார் உற்பத்தியாளர்கள் பெற்றுவிட்டனர். இன்றைய வினியோக நிறுவனங்களின் இழப்பைவிட இரண்டு, மூன்று மடங்கு லாபத்தை பெற்றுவிட்டனர். இவர்களின் அசுர வளர்ச்சியே இதனைத் தெளிவுபடுத்தும். மின்உற்பத்தியில் தனியார் என்ற கொள்கைத் திணிப்பின் விளைவே வினியோக நிறுவனங்களின் இழப்பிற்கு ஒரே காரணம்.

1957 ஆண்டு தொடங்கி 2001ஆம் ஆண்டுவரை கட்டமைப்பை ஏற்படுத்தி சேவையாற்றிய வாரியங்களுக்கு 44 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பு 33,000 கோடி.. கட்டமைப்புகளில் 2001 ஆண்டில் தனியார் மின்சாரம் நுழைந்த பிறகு ஏற்பட்டிருக்கும் இழப்போ 3.15 லட்சம் கோடி. அதுவும் 14 ஆண்டுகளில். உற்பத்தியில் புகுந்து வினியோகத்தைப் பிடிக்கின்றனர். வினியோகத்திலிருந்து புனல் மின்நிலையங்களை பிடிப்பார்கள். ஒரு ரூபாய்க்கு கீழேயிருக்கும் மின்சாரம் கொள்ளை லாபம் தரும் என்பது இரண்டாம் நிலை, அவர்கள் குறி தண்ணீர். அனைத்து நீர் நிலைகளையும் கையகப்படுத்தி விடுவார்கள்.

வரப்போகும் திருத்தமோ, வினியோகப் பகுதியில் தனியார் என்கிறது. அதுவும் எந்த முதலீடும் செய்யாமல், வணிகப்பகுதியில் அமர்ந்து கொள்ளப் போகிறார்கள். உணவு விடுதியில் சமையலறை தொடங்கி மேஜை வரை உணவைக் கொண்டுவரும் செலவும், பொறுப்பும் அரசு நிறுவனங்களின் வேலை. கல்லாவில் அமர்ந்து கொள்ளும் தனியார் வசூலை எடுத்துக்கொண்டு வேலைக்கு கூலி என அரசுத் துறைக்குத் தரும். சட்டத்திருத்ததின் சாரம் இதுதான். என்ன கொள்கையோ- அல்லது என்ன கொள்ளையோ?

சமுதாயத்தின் தேவை – எட்டும் விலையில், எல்லோருக்கும் மின்சாரம் என்பதுதான். பற்றாக்குறையும், தேவையும் இருக்குமிடத்தில், வணிகம் கொள்ளை லாபம் தரும் என்பது முதலாளிகளுக்குத் தெரியும். இவர்களின் கணக்கு சரியானதுதான் என்பதை வினியோக நிறுவனங்களின் இழப்பு உறுதிப்படுத்திவிட்டது. யூனிட் ரூ2.50க்கும், 3.50க்குமானதை ரூ20.00 வரை விற்கப்பட்டிருக்கிறது. இதனைத்தான் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையென்கிறது அரசு. பற்றாக்குறையும், தேவையும் வளர்ந்து கொண்டு போகும் நாட்டில் சந்தைப் போட்டியில் விலை குறையும் என்ற சித்தாந்தம் எப்படி செல்லுபடியாகும்? தேவைதான் விலையை நீட்டிக்கொண்டு போகும். வெங்காயம் தொடங்கி துவரம் பருப்பு வரை இதுதான் கதை – அரசு அறிய மறுக்கும் கதை. தனியாரிடம் கவர்ச்சி அப்படி..

அரசு கூறும் இந்த காரணங்களும், சப்பைக்கட்டுகளும், முன்னதாக தென்அமெரிக்கவின் நாடுகளில் உலக வங்கி நடைமுறைப்படுத்தியவைதான். இன்று பொலிவியா, பெருவும் நேற்று வெனின்சுலாவும் கற்று வெளிவந்த பொறிகள். இன்று ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டம். அதே வடிவம்தான் இன்று இந்தியாவில்

இதன் அடுத்தபடி புனல்மின்நிலையங்களை தனியாருக்கு வழங்கி புண்ணியம் தேடுவதுதான். இந்த படி மின்சாரத்திற்காக அல்ல. தண்ணீர்க்கானது. மாநிலங்களின் அனைத்து தண்ணீரும் தனியாரிடம் போய்விடும். உலக வங்கியும், உலக நிதியமும் இதனைச் செயல்படுத்தும்.

கொச்சி மாநாட்டில் கேரளத்தின் மின்துறை அமைச்சர், ஆரியன மகமது, நடுவண் அரசின் நிறுவனம் மூலம், புனல் மின் நிலையங்களைத் தனியார் மயப்படுத்துவதை கடுமையாக எதிர்த்துள்ளார். கேரளத்தின் மொத்த உற்பத்தியும் புனல் மின்நிலையங்களே. 1950 மெகாவாட் நிறுவுத்திறன் ஆகும்

ஆக இது நகர்ப்புற் வினியோகத்துடன் நிற்கப்போவதில்லை. காடுகளில் இருக்கும் புனல் மின்நிலையங்களை நோக்கி நகர இருக்கும், அமெரிக்க ஹரிக்கேன்.

       மக்கள் விழிப்படைய வேண்டும்

       சட்டத்திருத்தம் ஒரு தேர்ந்த ஏமாற்று வேலை.

- சா.காந்தி

Pin It