செங்கல்பட்டு சிறப்புமுகாமிலிருந்து விடுவிக்கக் கோரி ஈழத் தமிழ் உறவுகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத அறப்போர் 11வது நாளாகத் தொடர்வதும், அதனால் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரின் உடல்நிலை மோசமடைந்திருப்பதும் எங்களைக் கவலை கொள்ள வைத்துள்ளது. 

சிறப்பு முகாம் என்கிற தடுப்பு முகாமிலிருந்து திறந்தவெளி முகாமுக்குத் தங்களை மாற்றவேண்டும் என்பதுதான் உண்ணாவிரதம் இருக்கும் நம் உறவுகளின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த அதிகாரிகள் தவறியதால்தான், உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் இறங்கியுள்ளனர். சிறப்பு முகாமிலிருந்து படிப்படியாக திறந்தவெளி முகாமுக்கு மாற்றும் நடவடிக்கை திடீரென நிறுத்திவைக்கப்பட்டதே, இப் பிரச்சினை பெரிதாகக் காரணமாக இருந்திருக்கிறது. 

தாய் மண்ணிலிருந்து தப்பிப் பிழைத்துத் தமிழ் மண்ணுக்கு வந்திருப்பவர்கள் அந்தச் சொந்தங்கள். அவர்களை அரவணைத்து, அவர்களது குறைகளைக் கேட்டறிந்து, அவர்களது இந்த நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறோம். உயிருக்கு ஆபத்தான நிலையிலும் அவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர். அதை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில், அந்த உயிர்களைக் காப்பாற்றும் விதத்தில், மேலதிக காலதாமதமின்றி மனிதநேயத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அன்புடன் கோருகிறோம். 

நன்றி! 

என்றும் அன்புடன், 

புலவர் புலமைப்பித்தன்

கவிக்கோ அப்துல்ரகுமான்

கவிஞர் இன்குலாப்

கவிஞர் தாமரை

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்

கவிஞர் அறிவுமதி

கவிஞர் சூரியதீபன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.