அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் - இடிந்தகரை மக்களுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்வதையும், மிரட்டுவதையும் மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும்!

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் - இடிந்தகரையில் அமைந்துள்ள அணு உலையை மூட வேண்டுமெனக் கோரி கடந்த 1988லிருந்து போராடி வரும் அப்பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களாக போராட்டங்களை தீவிரப்படுத்தி தொடர் உண்ணாவிரதம், சாலை மறியல், அணு உலை முற்றுகை என வீரியத்தோடு போராட்டத்தில் முன்னேறி வருகின்றனர். மக்களின் நியாயமான கோரிக்கையை நேர்மையாகப் பரிசீலிக்க மறுக்கும் மத்திய அரசு போராட்டத்தை ஒடுக்குவதற்கு பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் அணு உலைகள் தொடர்பான பொய்களைப் பிரச்சாரம் செய்வது, போராட்டக் குழுவில் பிளவை உண்டாக்குவது, மதரீதியாக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது, வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என அவதூறு செய்வது எனப் பல தவறான முயற்சிகளைச் செய்து வருகிறது.

இதற்கு ஆதரவாக கைக்கூலி எதிர்போராட்டக்காரக் குழுவினர், மக்கள் ஆதரவின்றி வாய்ச்சவடால் அடித்து வருகின்றனர். காங்கிரசு, பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ்., அப்துல் கலாம், துக்ளக் சோ, சுப்பிரமணியசாமி, சேதுராமன், கிருஷ்ணசாமி போன்றோர் இதற்கு துணை நிற்கின்றனர். கூடுதலாக போராட்டக் குழுவினர் மீது 66 வழக்குகள், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும், முப்படை பாதுகாப்பு என மிரட்டுகிறார்கள்.

மத்திய அரசின் மிரட்டல்களும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர், சட்ட மற்றும் தார்மீக ரீதியாக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் ஆதரவு கோரியுள்ள நிலையில், இப்பிரச்சனை குறித்து ஆராய்ந்த நாங்கள் கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வருகிறோம்.

1. மக்களின் மின்சாரத் தேவைக்காக அணுஉலை என்பது பொய். நேர்மையான சமூக நோக்குடைய இந்திய விஞ்ஞானிகளின் கருத்துப்படி மக்களையும், சுற்றுச் சுழலையும் பாதிக்காத நமது நாட்டில் அதிகம் கிடைக்கக் கூடிய சூரியஒளி மூலம் போதுமான மின்சாரம் தயாரிக்க முடியும். இதே போல் காற்று, நீர், கடல்அலை என சுயசார்பு மின் திட்டங்களை உருவாக்கலாம்.

2. அணு உலைகள் கட்டுவதென்பது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் அமெரிக்க, ரசிய, ஐரோப்பிய நாடுகளின் அரசுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பல லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை இந்திய அரசு தாரை வார்ப்பதாகும்.

3. இந்திய அணுசக்தித் துறை 1970ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை 2000மாவது ஆண்டில் அணு உலைகள் மூலம் 43,500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியுமென்றது. ஆனால் 2010 ஆம் ஆண்டில் கூட 2720 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதும் 1970ல் சொன்னது போன்ற தவறான தகவல்களை இந்திய அணு சக்தித்துறை பரப்புகிறது.

4. வெளிநாடுகளில் வாங்கப்படும் யுரேனியத்தைச் சார்ந்தே இந்திய அணுஉலைகள் செயல்படும் என்ற நிலையில் 2008ல் போடப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப்படி 36 அணுஉலைகள் அமைக்கப்பட்:டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் மின்சாரத்தின் விலையும், பெட்ரோல் விலை போல உயரும். மின்சாரத்திற்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டியது வரும். நாட்டின் சுயசார்பு அழியும்.

5. இயற்கைச் சீற்றங்கள் தவிர சாதாரணமாக மனிதத் தவறினால் அணுஉலை விபத்து ஏற்பட்டால் கூட தமிழகத்தின் தென்பகுதி அழியும் அபாயம் உள்ளது.

6. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகள் அணு உலையை மூட முடிவெடுத்துள்ளனர். மேற்குவங்கம், கேரள மக்கள் அணு உலைகளை தங்கள் மாநிலத்தில் அமைக்கவிடாமல் தடுத்துள்ளனர். உச்சநீதிமன்றம் சுகாதாரமாக வாழும் உரிமை மக்களின் அடிப்படை உரிமை. என அங்கீகரித்துள்ள நிலையில் தமிழக மக்களுக்கும் அரசியல் சட்டப்படி அணு உலையை மூடக் கோரும் உரிமை உண்டு. இடிந்தகரையில் பெண்களும், குழந்தைகளும், முதியோரும் வெயில், மழை பாராது தொடர்ந்து போராடி வருவது பொழுதுபோக்குக்கு அல்ல. போபால் விபத்து போல அணு உலையால் தங்கள் வாழ்க்கை அழிக்கப்படும் எனக் கருதி மக்கள் போராடுகிறார்கள்.

7. அணு உலை கழிவுகளைப் பாதுகாப்பதற்கு வளர்ச்சி அடைந்த நாடுகளே திணறிவரும் நிலையில் இந்திய அரசு பெரும் பொருட் செலவில் அணுக் கழிவுகளை பாதுகாக்கும் செலவையும் அணுமின் உற்பத்தியோடு சேர்த்தால் யூனிட்டுக்கு மின் கட்டணம் ரூ.25ஃ- வரும். பொதுமக்கள் தான் இத்தொகையை செலுத்த வேண்டி வரும். அணு உலை கழிவுகளை பாதுகாக்கும் செலவுகளை அணுமின் உற்பத்தி செலவுடன் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8. சமூகப் பொருளாதார வளர்ச்சியடைந்தவர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் ஒரு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் கூட அதற்கு எதிராக மேல் தட்டு வர்க்கத்தினர் போராடும் சூழலில் அணுமின் கதிரியக்க பேராபத்தின் நடுவே வாழும் உழைக்கும் மக்கள் தங்கள் நியாயமான எதிர்ப்பை காட்டுவதைக் கூட வெளிநாட்டு சதி, மத அமைப்புகளின் பணம் எனக் கொச்சைப்படுத்துவது ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை இழிவுபடுத்துவதாகும். போராடுவது மக்களின் அடிப்படை உரிமை. 

மேற்குறிப்பிட்ட காரணங்களோடு இன்னும் பல காரணங்களால் இடிந்தகரை சுற்றுப்புற மக்களின் போராட்டம் சரியானது எனக் கருதுகிறோம். ஆகவே மக்களின் நியாயமான போராட்டத்தை ஒடுக்க முயலும் மத்திய அரசின் சதிகளை முறியடிக்க, போராடும் மக்களுக்கு சட்ட ரீதியான உதவிகளைச் செய்ய மதுரை உயர்நீதிமன்றத்தில் கீழ்க்காணும் வழக்கறிஞர் குழு அமைக்கப்படுகிறது.

குழு உறுப்பினர்கள்:

திருவாளர்கள். தி. லஜபதி ராய், எம். திருநாவுக்கரசு, எம். இமாம் உசேன், எஸ். தமிழரசன், ஆர். காந்தி, ஜி. பகத்சிங், எஸ். அருணாச்சலம், எம்.எம். இக்பால், அ. ஜான் வின்சென்ட், வி. ராஜீவ் ரூபஸ், ஆர். அழகுமணி, எஸ்.எம்.ஏ. ஜின்னா, எஸ். வாஞ்சிநாதன், வி. ராஜேந்திரன், எஸ். லூயிஸ், டி. அன்பரசு, டி.எஸ். மெல்ட்யூ, ஜெ.லாரன்ஸ், இ.ராபர்ட், ஆர்.கருணாநிதி, தி. திருமுருகன், ஆர். விஜயலட்சுமி, இ.பினேகாஸ், அ. வல்லரசு, எம். மாறன், எஸ். சதீஸ், தி. லஜபதி ராய்,     எம். திருநாவுக்கரசு

இடம் : மதுரை
தேதி : 15.11.2011     

ஒருங்கிணைப்பாளர்: எஸ்.வாஞ்சிநாதன், 98653 - 48163

Pin It