கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இணையத்தில் என்மீது சோபா சக்தி தொடுத்த பாலியல் தாக்குதல் குறித்து பேசியிருக்கிறேன். பேச்சு என்பதை விட சற்று ஆவேசமாகவே நியாயம் கோரினேன். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டியிருந்தேன்.

ஆணாதிக்கத் திமிரோடு சோபா சக்தி எம் மீது நிகழ்த்த முயன்ற அத்துமீறிய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பல கட்டுரைகள் எழுதினேன். அதற்கு மறுவினையாக சோபாவிடம் சிறு விளக்கமும் இல்லை.

shobasakthi_350சில நாட்களுக்கு முன் ப்ரியா தம்பி தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதிய விவாதம் கீற்று தளத்தில் 'ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?' என்ற தலைப்பில் பிரசுரமானது. கடந்த 3 வருடங்களாக ஒரு பெண், பாலியல் தாக்குதல் குறித்து எழுதியபோது பாராமுகமாய் இருந்த இந்த சோபா சக்தி, பிரச்சினை கீற்று மூலமாக அதிகமான பேரைச் சென்றடைந்தபோது மிரண்டு போய் விளக்கம் கொடுக்கிறார். "தமிழச்சியின் விருப்பத்தின் பேரிலேயே உடல் சார்ந்த உறவாய் இருந்தது. இதைச் சொல்லுவதால் தமிழச்சி பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அவதூறாளர்களே என்னை பேச வைத்தார்கள்" என்கிறார்.

இது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்? இதையும் தாண்டி இக்கட்டுரை வெளியிடப்பட்ட உடன் சோபாவின் நண்பர்கள் ‘இது எனக்கு முன்பே தெரியும்’ என்று பின்னூட்டமிடுகிறார்கள். ஓர் அயோக்கியனுக்கு உதவியாய் குழுவாய் இணைந்து ஒரு கட்டுக்கதையின் உருவாக்கத்திற்கு இவ்வளவு ஆர்வமாய் மின்னல் வேகத்தில் விழும் கருத்துக்களுக்கு பின் எந்த அரசியலும் இல்லையா? அல்லது இவர்கள் என் படுக்கை அறைக்குள் நுழைந்து பார்த்தவர்களா?

'இதுவரை யாரிடமும் இதுகுறித்துப் பேசியதில்லை' என்று சோபா சக்தி சொல்வது உண்மையென்றால், அவரது நண்பர்கள் முன்னமே எங்களுக்குத் தெரியும் என்று சொல்வது எப்படி? பெண்களை எப்போதும் படுக்கையறைப் பொருளாக பார்க்கும் புத்தி இருப்பதால் மட்டுமே, சோபாவால் அவரது நண்பர்களிடம் இப்படி பேச முடிந்திருக்கிறது.

இந்த மாதிரி அசிங்கம் பிடித்த வேலைகளை 3 வருடங்களுக்கு முன்பு சோபா செய்தார் என்றுதான் உதை கொடுத்து அனுப்பினேன்.

சோபாவுடன் எனக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது?

இலக்கியம், பெரியாரியம், கம்யூனிசம் என்று பொது நலன் சார்ந்து இயங்கும் நபராக ஆனந்த விகடன் இதழில் சோபா சக்தியின் பேட்டி வந்தது. 'பிரான்ஸில் பெரியாரியம் பேசும் ஆளா' என்ற மகிழ்ச்சியில் அவரைத் தொடர்பு கொண்டேன். அவரது தங்கைதான் எடுத்தார். சோபா அப்போது வீட்டில் இல்லை. மாலையில் சோபாவிடம் இருந்து போன் வந்தது. பெரியாரின் கருத்துக்களை பேசுவதற்கே ஆளில்லாமல் இருந்த எனக்கு, பெரியார் குறித்தும், பெண்விடுதலை குறித்தும் சோபா பேசியது உற்சாகமளித்தது. ஏற்கனவே பழகியவரிடம் பேசுவது போல் அவரது பேச்சு பகடி கலந்து இருந்தது. அரைமணி நேரம் பேசியிருப்போம்.

ஒரு வாரம் கழித்து சோபாவே மறுபடியும் பேசினார். 'அன்றைக்கு அவ்வளவு நேரம் பேசினீர்கள். அதோடு மறந்து விட்டுட்டீங்களா?' என்றார். என்னை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். ஒரு பெரியாரிஸ்ட் மற்றும் ஈழப் போராளியாக இருந்தவரைச் சந்திக்கும் ஆவல் எனக்கும் இருந்ததால் வீட்டிற்கு வரச் சொன்னேன்.

சோபா சக்தி பிரியாவிற்கு அளித்த பதிலில், அவரது பொய்க்கு வலு சேர்க்க உண்மைகளை மறைத்தும், திரித்தும் எழுதியிருக்கிறார். எனக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். சிறுவயது முதல் என்னை நன்கு அறிந்த ஒரு குடும்ப நண்பர்தான் எனக்கு கணவராக வாய்த்திருக்கிறார். சோபா எனது ஊருக்கு வந்தபோது, ரயில்வே ஸ்டேஷன் சென்று அழைத்து வந்ததும் என் கணவர்தான்.

இதையெல்லாம் சோபா ஏன் சொல்லவில்லை? வீட்டிற்கு அழைத்தவளை, படுக்கையறைக்கு அழைத்ததுபோல் ஏன் பேச வேண்டும்? அப்போதுதானே அவர் சொல்லும் 'மூன்றாவது சந்திப்பு உறவுக்கு' வலு சேர்க்க முடியும்!!

நான் பிரான்சில் பல ஆண்டுகள் வசித்திருந்தாலும் பொதுவெளியில் தமிழ் மக்களுடன் எனக்குத் தொடர்பே இருக்கவில்லை. உறவினர்கள், நண்பர்களைத் தவிர பொதுவாழ்க்கையில் நான் சந்தித்த முதல் நபர் சோபா சக்திதான்.

என் கணவருடன் வரும்போதே சோபா முழுபோதையில் இருந்தார்; கைகளில் நடுக்கம் இருந்தது. பெரியாரின் கட்டுரைகளை நான் வலையேற்றுவதைப் பாராட்டினார். 'சாதிதான் தமிழ்ச்சமூகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது. என்னைப்போல் ஒரு தலித்தாக இருந்தால்தான் அதன் வலி உங்களுக்கு இன்னும் அதிகமாகப் புரியும்' என்று பேசினார். தமிழகத்தில் சில தலித் எழுத்தாளர்கள் பெரியாரை விமர்சிக்கும்போது, பெரியாரைப் பின்பற்றும் ஒரு தலித் எழுத்தாளர் என்று தெரிந்தபோது அவர் மீதான மரியாதை அதிகமானது. அரை மணி நேரம்தான் அந்த சந்திப்பு நீடித்தது. பின்னர் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். பெரும்பாலும் பெரியார், பெண்விடுதலை, சாதியொழிப்பு பற்றியே பேச்சு இருக்கும்.

இரண்டாவது முறை எனது ஊருக்கு வந்தபோது, ஒரு ரெஸ்டாரெண்டில் சந்தித்தோம். நான் குழந்தைகளுடன் சென்றிருந்தேன். 'ஏன் குழந்தைகளை அழைத்து வந்தீர்கள்' என்று கேட்டார் சோபா. அதன் அர்த்தம் அப்போது எனக்குப் புரியவில்லை. 'அவர்களையும் வெளியே கூட்டி வந்த மாதிரி இருக்குமல்லவா?' என்றேன். 'எப்போதும் குடும்பத்தை சுமந்து கொண்டு இருக்காதீர்கள்' என்று பகடி செய்தார்.

சோபா சொன்ன பொய்களில் ஒன்று எனது வலைப்பக்கத்தை அவர்தான் ஆரம்பித்துக் கொடுத்தார் என்பது. உண்மை என்னவென்றால், நான் ஏற்கனவே வலைப்பக்கம் வைத்திருந்தேன். பெரியாரது கட்டுரைகளை தட்டச்சு செய்து இணையத்தில் ஏற்றும் வேலையைச் செய்துவந்தேன். தட்டச்சு செய்வது, வலையேற்றுவது தவிர இணையம் தொடர்பான தொழில்நுட்பங்கள் எனக்குத் தெரியாது. இரண்டாவது சந்திப்பின்போது சோபா, எனது வலைப்பக்கத்தின் வடிவமைப்பு நன்றாக இல்லை, அதை மாற்றித் தருவதாக சொன்னார். நானும் சரியென்றேன். அதன் விபரீதமும் அப்போது எனக்குப் புரியவில்லை. 'நான் தனியாளாக டைப் செய்து பெரியார் கட்டுரைகளைப் போட்டு வருகிறேன், பெரிய அளவில் வாசிக்கப்படுவதில்லை' என்று சொன்னபோது, சோபா சக்தி 'தமிழ்மணம் என்ற ஒரு திரட்டி இருக்கிறது. அதில் உங்கள் வலைப்பக்கத்தை இணைக்கலாம்' என்று சொன்னார். அதுபோல் இணைத்தும் கொடுத்தார்.

‘பெரியாரின் பார்வையில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் அப்போது ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தேன். அதை தொலைபேசியில் சோபாவிடம் சொன்னபோது, அந்த எழுத்துப்பிரதியைப் பார்க்க ஆர்வமாக இருப்பதாகச் சொன்னார். ‘வேறொரு வேலையாக அந்தப் பக்கம் வர வேண்டியிருக்கிறது. அப்படி வந்தால், அந்தப் பிரதியைத் தர முடியுமா’ என்று கேட்டார். அப்படித்தான் மூன்றாவது சந்திப்பு நடைபெற்றது. அவர் என் ஊருக்கு வந்தபோது, இரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்த பார்க்கிங் பகுதியில் எனது காரை நிறுத்தி, பேசிக்கொண்டிருந்தோம். எழுத்துப் பிரதியைப் படித்து விட்டு, ‘பெரியாரைத் திரிக்கிறீர்கள்’ என்று சொன்னார். நான் மறுத்து, விவாதித்தேன்.

ஆனால் இப்போது 'இந்த சந்திப்பில்தான் எங்களிடையே உடல்ரீதியான உறவு ஏற்பட்டது' என்கிறார். தெரியாமல்தான் கேட்கிறேன், பகற்பொழுதில் தெருவில் காமம் கொள்ள அவர் என்ன நாய் ஜென்மமா? இல்லை என்னைப் போன்ற பெண்கள்தான் அப்படித் திரிகிறோமோ?

2007 காலகட்டங்களில் சோபா சக்தி அடிக்கடி வெளிநாடு போய்வந்து கொண்டிருப்பார். கியூபா, மலேஷியா, கொரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளுக்குப் போய் வந்ததை சொல்வார்.

‘அரசு உதவிப் பணத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு வெளிநாடுகளுக்கு எப்படிப் போய்வர முடிகிறது?’ என்று கேட்டபோது, சிரித்துச் சமாளித்தார். ‘நண்பர்கள் கொடுத்து உதவுவார்கள்’என்று வேறொரு முறை சொன்னார்.

ஒரு முறை கடும்போதையில், பேச்சுவாக்கில் தோழர் சுகுணா திவாகருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகச் சொன்னார். 'நீங்களே இங்கு காசில்லாமல் நண்பர்களிடம் வாங்குவதாகச் சொல்லும்போது, சுகுணாவுக்கு எப்படி ஒரு லட்சம் கொடுக்க முடிகிறது? உங்களிடம் ஏது இவ்வளவு பணம்? எந்நேரமும் குடிப்பதற்கு எப்படி பணம் கிடைக்கிறது' என்று கேட்டேன். வழக்கம்போல் பகடியாக, 'பணம்காய்ச்சி மரம் வைத்திருக்கிறேன்' என்று சொல்லி எனது கேள்வியைக் கடந்துபோய்விட்டார்.

எங்களுக்கு இடையே பல்வேறு முரண்கள் இருந்ததாக சோபா சொல்கிறார். ஆனால் அது என்னவென்று சொல்லதாதில்தான் அவரது கள்ளத்தனம் இருக்கிறது. ஈழப்போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து என்னிடம் பேசிவந்தார். 'புலிகளுக்கு ஆதரவான எனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார். நான் கடுமையாக மறுத்தேன். 'மக்கள் அங்கு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் மனிதாபிமானமற்றவை. சமரசமில்லாமல் போராடி வருவது புலிகள் தான்' என்று சொன்னேன். ஈழப்போராட்டத்திற்கு எதிராக சோபா சொல்வது எல்லாம் மிகத் தவறானவை என்று கொள்கை ரீதியாக தொடர்ந்து மறுத்து வந்தேன்.

புலி எதிர்ப்பு அரசியலை என்மீது திணிப்பதில் அவர் தீவிரமாக இருந்தார். என்னுடன் பேசிய பொழுதுகளில் பெரும்பாலான நேரத்தை அதற்குச் செலவிட்டார். ஆனால் தொடர்ந்து கடுமையான வாதங்களால் மறுப்பு தெரிவித்து வந்தேன். ஈழப் பிரச்சினையில் என்னிடம் எதிர்க்கருத்தை உருவாக்க முடியாது என்று தெரிந்த பின்பு அது குறித்து பேசுவதை நிறுத்திவிட்டு, பாலியல் சுதந்திரம் தொடர்பாக தனது கருத்தைத் திணிக்கத் தொடங்கினர். ஆண், பெண் மட்டுமல்லாது மூன்றாம் பாலினத்தவரோடும் தான் உறவு வைத்திருப்பது குறித்து பேசினார். நான் அறிந்தவரை மேலை நாடுகளில் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள் எதிர்பாலினருடன் உறவு வைத்துக் கொள்ளமாட்டார்கள். அதை ஒரு ஒழுக்கமாகவே அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அதற்கு எதிரான செயலுக்கு பாலியல் சுதந்திரத்தை காரணமாக சோபா சொன்னார்.

'ஒரே கணவருடன் எப்படி இத்தனை ஆண்டுகள் உங்களால் வாழ முடிகிறது. பெண்ணிற்கு பாலியல் சுதந்திரம் வேண்டும்' என்றார். 'ஆண் இரண்டு பொண்டாட்டிகள் வைத்துக்கொண்டால், பெண்ணும் இரண்டு புருஷன்கள் வைத்துக் கொள்ள வேண்டும்' என்று பெரியார் பேசியதை சோபா குறிப்பிட்டபோது, அதை மறுத்து, பெரியார் அதற்கு முன்னும் பின்னும் சொன்னதைச் சொல்லி, ‘பெரியார் எதிர்ப்பது கற்பைத் தான், பாலியல் ஒழுக்கத்தை அல்ல’ என்று பதில் கூறினேன். பல பெண்களை மணந்த கடவுளர்களையும், மன்னர்களையும் பெரியார் கடுமையாக சாடியிருப்பதை எடுத்துக்காட்டிப் பேசினேன்.

அதன்பின்பு பெரியாரை விட்டுவிட்டு, பின்நவீனத்துவம் பேசத் தொடங்கினார். கட்டற்ற பாலியல் சுதந்திரம், கூட்டுக் கலவி பற்றியெல்லாம் பேசினார்.

தமிழகத்துப் பெண்கள் சிலரை உதாரணம் காட்டினார். 'பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் முற்போக்கானவர்கள்; நாங்கள் எல்லாம் கூட்டுக்கலவி செய்வோம்; அவர்கள் போல மற்ற பெண்கள் இருக்க வேண்டும், அப்போதுதான் ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் விடுபட முடியும்' என்றார். ஒழுக்கம் பற்றிய எனது கருத்துக்களை மாற்ற முயற்சித்தார். நான் கடுமையாக மறுத்தேன்.

'பிற்போக்கான தமிழ்ச் சமூகத்திலிருந்து மக்களை முன்னேற்ற விரும்புவர்கள், பொதுவாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் அவர்கள் பின்னே அணி திரளுவார்கள். சொந்த வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்வது மக்களுக்குத் தெரியவந்தால், அவர்கள் நம்மை மட்டுமல்ல, நமது சித்தாந்தங்களையும் சேர்த்தே நிராகரிப்பார்கள்' என்று பதில் கூறினேன். இந்தப் பேச்சுக்கள் எல்லாம் ஒரு தொலைபேசி பேச்சில் நடந்ததல்ல. வெவ்வேறு நாட்களில் எந்தத் தொடர்ச்சியும் இல்லாமல் பேசியவை. ஆனால் பேசியதன் சாராம்சம் இதுதான்.

இவ்வளவு முரண்பாடுகளுக்கு இடையிலும் சோபாவுடன் நட்பைத் தொடர்வதற்கான காரணங்களும் இருந்தன. பெரியார் எழுத்துக்களை இணையத்தில் பரப்புவதை ஊக்கப்படுத்தினார். இணையத்தோடு மட்டும் நின்றுவிடாமல், செயல்பாடுகளில் இறங்கி, பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியபோது சோபா என்னை அதிகமாக உற்சாகப்படுத்தினார். பாரீஸில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதற்கு துண்டறிக்கை அச்சிட உதவினார். இவை அனைத்திற்கும் மேலாக சோபா ஒரு ஈழப்போராளி, பெரியாரியவாதி என்பதும், தலித் என்று சொல்லியதும் அவருடனான நட்பைத் தொடரச் செய்தது.

எனது வலைப்பக்கம் தமிழ்மணம் வாயிலாக அதிகமான பேர் வாசிக்கும் தளமாக மாறியது. வலைப்பதிவர்களிடையே தமிழச்சி பெயர் பரிச்சயமாகி இருந்தது.

ஒரு நாள் சுவிஸிலிருந்து சோபா போன் செய்தார். வழக்கம்போல் போதை. 'தமிழச்சி எனக்கு நெருங்கிய தோழி என்று சொன்னால் எனது நண்பர்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் பேச முடியுமா?' என்று கேட்டார்.

ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. அதன்பின்பு இந்த மாதிரி போன் செய்வது அடிக்கடி நடந்தது. எதிர்முனையில் பலரின் சிரிப்புச் சத்தம் கேட்கும்போது இதில் ஏதோ உள்விளையாட்டு இருக்கிறது என்று தெரிந்து, போனைத் துண்டிக்கத் தொடங்கினேன்.

பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தைப் பாராட்டி கி.வீரமணி எழுதிய மின்னஞ்சல் நான் படிப்பதற்கு முன்பாகவே வேறு யாரோலோ படிக்கப்பட்டிருப்பதை அறிந்து, சோபாவுக்கு போன் செய்தேன். ஏனென்றால் எனது வலைப்பக்கத்தின் பாஸ்வேர்டும், மின்னஞ்சலின் பாஸ்வேர்டும் ஒன்றாகத்தான் இருந்தது. வலைப்பக்கத்தின் வடிவமைப்பை மாற்றுவதற்காக சோபா என்னிடம் பாஸ்வேர்ட் வாங்கியிருந்தார். 'வீரமணியின் மெயிலைப் படித்தீர்களா' என்று கோபமாகக் கேட்டபோது, 'ஏன் படிக்கக்கூடாதா? நான் உனக்கு நெருங்கிய நண்பனல்லவா! நமக்குள் என்ன ரகசியம்?' என்று கேட்டார். கடுமையாகத் திட்டி போனை வைத்தேன்.

'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று இன்னொரு நாள் சோபா பேசியபோது, கோபத்தை அடக்கிக் கொண்டு எனது ஊருக்கு வரச் சொன்னேன். இரயில்வே ஸ்டேஷனிலேயே வைத்து சராமாரியாக அடித்தேன். போதையில் இருந்த சோபா, அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு, ஐ லவ் யூ என்றார். மேலும் கோபமடைந்து உடனே அங்கிருந்து கிளம்பி, சோபாவின் நடத்தையையும், அவரை அடித்ததையும் எனது வலைப்பக்கத்தில் பதிவாகப் போட்டேன். வலைப்பதிவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சில நாட்களில் திடீரென எனது வலைப்பதிவுகள் முழுக்க அழிந்துபோனது. இணையத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை வைத்துப் பார்த்தபோது, பெரிய ராணுவக் கேந்திர இணையதளங்களையே முடக்கும் வைரஸ் ஒன்று எனது வலைதளத்தில் செலுத்தப்பட்டிருப்பதாக சொன்னார்கள். எனது நேரத்தையெல்லாம் உருப்படியாக செலவழித்து இணையத்தில் ஏற்றி வைத்திருந்த சுமார் 1600 பெரியார் கட்டுரைகளும் அதோடு அழிந்துபோனது. எனது கணிப்பொறியும் பயன்படுத்த முடியாத அளவிற்கு வைரஸ் தாக்கி, புது கணிப்பொறி வாங்க வேண்டி வந்தது.

இரண்டாவது முறையாக சோபா என்னிடம் அடிவாங்கியதும் நடந்தது. ஒரு நாள் இரவு 8 மணிக்கு சோபா எனக்குப் போன் செய்து, ‘தமிழச்சிக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது என்று சொன்னால், எனது நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள். அவர்களிடம் பேச முடியுமா?’ என்று கேட்டார். ‘முன்பின் தெரியாதவர்களை எல்லாம் என்னுடன் பேச வைக்க முயற்சிக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு தொலைப்பேசியைத் துண்டித்தேன்.

அன்று இரவு 11.45 மணிக்கு மீண்டும் சோபாவிடம் இருந்து போன். நான் இருக்கும் ஊரில் இருப்பதாகவும், ஒரு நண்பனைப் பார்ப்பதற்கு காரில் அழைத்துப் போக முடியுமா என்றும் கேட்டார். நான் முடியாது என்று சொல்லிவிட்டு, காலையில் போன் செய்து விசாரித்தேன். நான் இருக்கும் ஊரில் உள்ள ஹோட்டலில் இருப்பதாகவும், உடல்நலம் சரியில்லை என்றும் சொன்னார். மனம் பொறுக்காமல் பார்க்கச் சென்றேன். அந்த காலை நேரத்திலும் போதையில் இடுப்பில் ஒரு துண்டுடன் இருந்தார். குகன் என்பவர் சோபாவைத் தொலைபேசியில் அழைக்க, சோபா அவரிடம் 'நான் தமிழச்சியுடன் ஹோட்டலில் இருக்கிறேன்' என்றார். அடுத்து வந்த 3, 4 அழைப்புகளிலும் இதேதான் சொன்னார். எனக்கு ஆத்திரமாகி ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, இடுப்பில் இருந்த துண்டை அவிழ்த்துவிட்டு, என் கைபிடித்து இழுத்தார். நான் கோபத்தில் அவரை பலமாகத் தாக்கினேன். அடித்தும், உதைத்தும் அவரைக் கீழே விழச் செய்தேன். சோபா அழத் தொடங்கிவிட்டார். அன்றோடு துண்டாகிப் போனது சோபாவுடனான எனது நட்பு. அதுதான் நான் அவரைக் கடைசியாக சந்தித்தது.

என்னை புலியெதிர்ப்பு அரசியல் பேச வைக்கவும், பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தவும் முயற்சித்து தோல்வி கண்ட சோபா, என்னை அவரது படுக்கையறைப் பெண்களுள் ஒருவராக நண்பர்களிடம் சித்தரித்து அற்ப சுகம் கண்டார். சோபாவின் நண்பர்கள் சிலர் அண்ணி என்று அழைக்க ஆரம்பித்தது, தமிழ்மணத்தில் என்னைப் பற்றி பலவாறு செய்திகள் வந்தது, இதிலெல்லாம் சோபாவின் கள்ளத்தனம் இருந்ததை பின்னர்தான் நான் உணர முடிந்தது.

சோபாவை மொத்தம் 12 முறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன். புதுவை எழுத்தாளர் பிரபஞ்சன் பிரான்ஸ் வந்தபோது சந்தித்தது, பெண்கள் சந்திப்பின்போது சந்தித்தது, பகுத்தறிவு பிரசுரங்களை அச்சடிக்க உதவியபோது சந்தித்தது, பிரசுர விநியோகத்தின்போது ஒரு முறை, தலித் மாநாட்டில் இரண்டு முறை, மாசிலாமணி வீட்டிற்கு கணவருடன் சென்றபோது ஒரு முறை, கடைசியாக இரண்டு முறை அடி கொடுத்தது என மொத்தம் 12 முறைதான் சோபாவை சந்தித்திருக்கிறேன். அதில் கடைசி இரண்டு சந்திப்புகளிலும் அவர் அடி வாங்கினார். பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். அப்படி பேசியது எல்லாம் கருத்தியல் விவாதங்கள்தான். அவ்வளவுதான் எங்களுக்குள் இருந்தது. அவரிடம் காதல் கொள்வதற்கான எந்த காரணமும், அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. வரைமுறையற்ற பாலியல் உறவு, முழுநேரமும் போதை என இருக்கும் ஒருவர், ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு பெண்ணிடம் எந்த வகையிலேனும் பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியுமா?

அவரது நட்பால் நான் இழந்ததுதான் அதிகம். நான் தட்டச்சு செய்திருந்த பெரியார் கட்டுரைகள் முழுக்க அழிந்து போனது. ஆபாசப்படங்களில் எனது முகத்தை ஒட்டி, நான் நிர்வாணமாக இருப்பதாகக் காட்டியது நடந்தது. எனது கேரக்டரைப் பற்றி தவறான செய்தி பரப்பப்பட்டது. இவற்றையெல்லாம் கடந்த மூன்றரை ஆண்டுகளாக எனது இணையதளத்தில் கடுமையாக திட்டி எழுதி வந்திருக்கிறேன் (இணைப்புகளைப் பார்க்கவும்). அப்போதெல்லாம் கள்ள மௌனம் சாதித்து வந்தார் சோபா சக்தி.

என்னைப் பற்றி தவறாக செய்தி பரப்பியதுபோல்தான், மற்றவர்களைப் பற்றியும் என்னிடம் தவறான செய்தி சொல்லியிருந்தார். வளர்மதி, மாலதி மைத்ரி ஆகியோர்களைப் பற்றி வேறுவிதமாக திரித்துப் பேசினார். இவர்களை எல்லாம் நான் தவறாகப் விமர்சித்ததற்குக் காரணம் சோபாதான். ஆனால் எந்தக் கூச்சமும் இல்லாமல் சோபா சக்தி தொடர்ந்து இப்போதும் பொய்களேயே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நட்பை காமமாகப் பார்ப்பதும் பெண்ணை ஆபாசமாய்ப் பேசுவதும், உண்மை தெரியவரும்போது பாலியல் ரீதியாக தாக்குதல் தொடுக்கவும் தயாராய் இருப்பவருக்கு சமூகப் பிரச்சனை குறித்துப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது?

பெரியாரைப் படித்த நான் எப்போதும் மனவுளைச்சலுக்கு ஆளாக மாட்டேன். எதையும் துணிவுடன் சந்திக்கும் குணம் எனக்கு உண்டு. கீற்றுவில் எழுதியதாலேயே நான் இவ்வளவு நாகரிகமாக எழுதியிருக்கிறேன். சோபா மேலும் பொய்களையே பேசுவார் என்றால், தொடர்ந்து என்னிடம் நாசூக்கை எதிர்பார்க்காதீர்கள். வழக்கமான பாணியில் என்னுடைய இணையதளத்தில் பதில் சொல்ல வேண்டி வரும்.

இவ‌ரை பின்ந‌வீன‌த்துவவாதி, முற்போக்காளர், நாகரிகமானவர் என்று சொல்லும் பெண்க‌ளைப் பார்த்தால் சிரிப்பாகவும், ப‌ய‌மாக‌வும் இருக்கிறது. உங்க‌ளுக்குள் எந்தப் பிரச்சினையும் வ‌ராத‌ வ‌ரைக்கும்தான் சோபா உங்க‌ளுக்கு தேவகுமாரனாகவே காட்சியளிப்பார். முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கினால், நான் ச‌ந்தித்த யூதாஸையே நீங்க‌ளும் ச‌ந்திக்க நேரிடும்.

இணைப்புகள்:

ஆண்குறி அரசியல் வெறிக்குள் பெண்குறி! (http://tamizachi.com/index.php?page=date&date=2010-01-14)

28-வது பெண்கள் சந்திப்பு: ´புலியெதிர்ப்பு பெண் தாதாக்களின் முகத்திரை கிழிந்தது.´ (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1562)

"ரா" கூலிக் கூட்டத்தினரை அம்பலப்படுத்துவோம்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1009)

இலக்கியவாதிகளின் "அறநெறி" கோட்பாட்டு கட்டுடைப்புகள்! - தொடர்ச்சி:2 (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=482)

இலக்கியவாதிகளின் "அறநெறி" கோட்பாட்டு கட்டுடைப்புகள்..! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=468)

பெண்கள் சந்திப்பு : உள்ளாடை புரட்சி பெண்களுக்கும், நளினி ஜமீலாவுக்கும் உள்ள வித்தியாசங்கள்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=426)

சோபா சகதியின் அரசியல் விபச்சாரம் - தொடர்ச்சி : 3 (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=399)

பின்ஈனத்துவத்துக்கு வக்காலத்து வாங்கும் பொட்டை பொறுக்கி நாய்களை செருப்பால் அடிக்க வேண்டும்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=364)

பிழையான புரிதலில் பெண்ணீயம்..! (http://tamizachi.com/index.php?page=date&date=2008-09-20&article=2013)

பாரீசில் தாதாக்கள் நடத்திய 1983-2008 நெடுங்குருதி..! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=258)

27- ஆம் வருட பெண்கள் சந்திப்பும், தீவிரவாதமும், கேள்விகளும்! - மீள் ஆய்வு (http://tamizachi.com/index.php?page=date&date=2008-08-16)

"ங்கொய்யாலா" (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=297)

27 -ஆம் வருட பெண்கள் சந்திப்பும் - "Sho" காட்டுதலும்…! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=290)

"sho" பா சக்தியின் டாவு? (http://tamizachi.com/index.php?page=date&date=2008-07-18)

விவகாரமான "மாமா" பதிவர்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=945)

(சிறுகுறிப்பு: சோபா சக்தி என்னிடம் திரித்துப் பேசிய தகவல்களின் அடிப்படையிலேயே தோழர் மாலதி மைத்ரியைத் தவறாகப் புரிந்து கொண்டு சில கட்டுரைகளில் விமர்சிக்க நேர்ந்தது. அந்தப் பகுதிகளை விரைவில் நீக்குவேன். தோழர் மாலதி மைத்ரியிடம் இப்போது வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்)

- தமிழச்சி

Pin It