மெலிந்த குச்சியின்
உடல் முழுவதும்
நறுமண திரவியங்கள்...
அது அவளாகத்தான்
இருக்கக்கூடும்...
சற்றே தடிமனான 
திரியை சூழ்ந்த
மெழுகுப்பூச்சுகள்...
இது நானாகவே
இருக்கக்கூடும்...
அவள் மண வீசவே 
தன்னைத்தான் இழக்கிறாள்...
நான் ஒளி வீசவே
என்னை நான் துறக்கிறேன்...
அவள் ஆலயங்களுக்காகவே
வாழ்கிறாளோ என்னவோ?!
நான் தேவாலயங்களுக்காகவே
வாழ்கிறேனோ என்னவோ?!
உன் வாசனையில் 
என் வசந்த கால நியாபகங்கள்..
என் ஒளியில்
உன் கார் கால நினைவலைகள்...
துர்நாற்றத்தை 
விரட்ட அவள் போதும்...
புற இருளை
அகற்ற நான் போதும்...
அது சரி...
உனையும் எனையும்
பற்ற வைக்காமல் வைத்திருந்தால்
நீயும் நானும் 
வாழ்ந்தொரு பயனுமில்லையே!
பற்ற வையுங்கள்...
பற்றி வையுங்கள்...
இந்த ஊதுபத்தியையும் மெழுகுவர்த்தியையும்...
காத்திருக்கிறோம்..
தீக்குச்சிகளே உங்களால்
நாங்கள் வீழ்ந்திட அல்ல..
எல்லோருக்குள்ளும் வாழ்ந்திட!

- ம.சக்திவேலாயுதம்

 

More articles by ம.சக்திவேலாயுதம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.