ஊருலகம் உன்நடிப்பை உணர்ந்த பின்னும்

உளறுகிறாய் நாள்தோறும் உண்மை கொன்றே!

ஒரிலக்கம் தமிழர்களின் உயிர்பறித்தான்

உனக்கவனே தம்பியென உரைத்தாய் என்னே!

பேருக்குக் குழுவெனவே பிணைத்துப் பத்துப்

பேரனுப்பி ஏமாற்ற முனைந்த தெல்லாம்

யாருக்கும் தெரியாதென் றெண்ணும் உன்னின்

இழிவறியா உலத்தார் இல்லை இன்றே!


ஈகிகளைக் குறைகூறி இழிவு செய்தாய்!

இரண்டகத்தால் இனமழிக்கத் துணையும் போனாய்!

சாகின்ற தமிழரைக்காத் திடுக வென்றே

தமிழுலகே கதறியதே! தன்ன லத்தால்

வாகெனவே வந்ததிந்த வாய்ப்பென் றெண்ணி

வஞ்சகமாய் உன்பதவி நிலைத்தி டற்கும்

பாகமென உன்குடும்பம் பதவி ஏற

பழிக்கஞ்சா ரோடேஒப் பந்தம் போட்டாய்!


இனங்கொல்லத் துணைநின்றாய்! இங்குள் ளோரை

ஏய்த்துநடித் தேமாற்றி இருக்கை யுற்றாய்!

மனச்சான்றைக் கொன்றாயே! மக்க ளெல்லாம்

மாவெழுச்சிக் கிளர்ச்சியொடு திரண்டெ ழுந்து

சினமுற்றே ஈழப்போர் நிறுத்து கென்றே

சீறியகால் தன்னலத்தால் சிறிது கூட

மனங்கொள்ளா துளத்தியலால் மக்கள் நெஞ்சை

மயக்குதற்குப் பலபொய்கள் மலியச் சொன்னாய்!


இலங்கையிலே கொடுங்கோலன் இராச பச்சே

இளிக்கின்ற படத்தோடே எதற்கு மஞ்சா

இலங்கலறு பொய்ம்முகத்தின் இத்தா லிப்பேய்

இருக்கின்ற படத்திலும்நீ இடம்பெற் றாயாம்!

புலங்கெட்ட உருவனென பொலிவி ழந்த

பொய்யனுன்றன் படமுமதில் பொருத்தம் தானே!

துலங்கலறப் பழியுற்றாய்! தொலைத்தாய் மானம்!

தூயருமிழ் வினையோனே! தூ!ஏன் வாழ்வோ?


- தமிழநம்பி

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.