இசையுடன் துளியும் தொடர்பற்றவோர் கும்பல்

பாடல்களற்ற உலகில்

பலவந்தமாய் எனை எறிந்துவிட்டிருக்க

அவ்வுலகத்துச் சூன்யம்

முதலில் என் உதடுகளைக் கத்தரிக்கிறது

பிறகு தலையில் தீ வைத்து

எனதுடைகளை உரித்துரித்து அதில்போட்டு

அந்நெருப்பை மேலும் பெரிதாக்கிவிட்டு

சர்ப்பமொன்றை கழுத்தில் சுற்றிக்கொண்டு நின்றவனை

புணரச்சொல்லி வற்புறுத்தி

முதுகுத்தண்டின் முடிவில் ஆணிகளையடித்துத்

துன்புறுத்தியதில்

வலி தாளாது கண் விழிக்கிறேன்.

கனவுலகினுள் நுழையவே முடியாத

எனதுலகப்பாடல்கள் அனைத்தும்

விளையாட்டுப்பொருள் கிடைக்காத கோகுலைப்போல

விசும்பிக்கொண்டிருப்பது

படுக்கையறையின் மங்கியவொளியில்

சோகையாய்த் தெரிகிறது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.