இங்கிலாந்தின் கிராமப் பகுதியொன்றில் தன் ஓவியப் பொருட்களோடு நுழையும் சூனியக்காரனின் வருகையோடு துவங்கி தற்போதைய தமிழகத்தின் வடமேற்கு எல்லையிலுள்ள இராயக்கோட்டையில் குடித்து போதையில் தள்ளாடி விழும் வண்டியோட்டியோடு முடிகிற இந்நாவல் ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் இடையில் 950 பக்கங்களைக் கடந்திருக்கிறது.

நெடிய இப்பக்கங்களில் விளிம்புநிலை  இனங்களின் பாடுகளை இங்கிலாந்தின் அரசியல் மற்றும் பிரெஞ்சுப் புரட்சியோடு இணைத்து கிழக்கிந்திய கம்பெனியர், ஹைதர் மற்றும் திப்பு அவர்களுக்கு முன்பு மைசூர் நாட்டை ஆண்ட உடையார்கள் அவர்களுக்கு முன்பிருந்த ராயர்கள், சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் நடைபெற்ற அபினி வியாபாரம் இவற்றுக்கிடையில் கிருத்துவின் மீதான விசாரணைகள், மாற்று மருத்துவம், நாட்டார் கதைகள், தொன்மங்கள் அவற்றின் மிகப் பழைய தொன்மமான ஆண், பெண் உறவுச் சிக்கல்கள், இந்திய, மேற்கத்திய கதை மரபு, கதைகளை வாசிக்கிற முறைகள் இந்தப் பட்டியலையும் தாண்டி விடுபட்டுப் போகக்கூடிய வாய்ப்புகளும் உள்ள வேறு சில விசயங்களை யும் சேர்த்துப் பேசுகிறது இந்நாவல். இத்தனை விசயங்களைக் குறித்து விவாதிக்க இவ்வளவு பக்கங்கள் தேவை தான் என்றாலும் நாவலின் முடிவு எந்த விசயத்தைக் குறித்துப் பேசுகிறதோ அதுவே நாவல் சுழலும் மையப் புள்ளி எனக் கொண்டால் விளிம்புநிலை மக்களின் மீதான பொருளாதார, அரசியல், சமூகச் சுரண்டல் அதன் உலகளாவிய வடிவம் இவைகளைத்தான் இந்நாவல் முதன்மையாகச் சொல்லிச் செல்கிறது. தீர்வு சொல்லப்படுகிற தோரணையில் அணுகப்பட்டுள்ள நாவலின் ஒரே விசயமும் இதுதான்.

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் திரியும் நாடோடிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வரலாற்றை சொல்வதாக 30 சர்க்கங்கள் வரை புரிந்து கொண்டு வாசிக்கப்படும் வாய்ப்புள்ள இந்நாவல் கடைசி 8 சர்க்கங்களில் வரலாற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டு கதைக்குள் செல்வதன் மூலம் அதன் முன்னிருந்த வரலாற்றையும் கதையாக மாற்றிவிடுகிறது (பக்கம் 903). கதையை எழுதுகிற கதைசொல்லி கதைக்குள்ளாகவே வைக்கப் பட்டிருப்பதும் பிரதான கதைசொல்லி அவளாகச்(எலினார்) சித்தரிக்கப் பட்டிருந்தாலும் கதையை இன்னொரு முனையிலிருந்து எழுத வாய்ப்பி ருப்பதாக வேறு கதை சொல்லிகளையும் (துயிலார்களை) நாவல் தனக்குள் வைத்திருக்கிறது. நாவலின் இறுதிச் சர்க்கமாக கதையை எழுதிக் கொண்டிருக்கும் கதை சொல்லி அதன் முடிவைச் சொல்ல முடியாத நிலையை கதை அடைந்து விட்ட பின்பு மெய்யாகவே இந்நாவலை எழுதின கதைசொல்லி அதற்குள் புகுந்து கொண்டு கதையை முடித்து வைப்பதென பிரதிக்கு உள்ளேயும் வெளியேயும் ஊட்டாட்டத்தை நிகழ்த்தியிருக்கும் எழுதுமுறை கோணங்கியால் பாழியில் துவக்கி வைக்கப்பட்ட கதை சொல்லல் முறையின் தொடர்ச்சி எனலாம். ஆதாரமான பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு அவற்றை வரலாற்றுக்கு இடையில் வைத்து துப்பறியும் நாவல் பாணியில் உம்பர்த்தோ ஈகோ பிரபலப்படுத்தியிருக்கிற எழுதல் முறையை தமிழில் இந்நாவல் அறிமுகப்படுத்தியிருக்கிறது. துயிலார் கதைப்பாடலின் "நீலவேணியின் பாதை" என்கிற பகுதி திப்புவின் சர்க்காரால் எல்லையை ஒட்டின இரகசியப் பாதையாகப் புரிந்து கொள்ளப்பட்டு ஸ்வப்னஹள்ளி என்கிற  ஊர் எரிக்கப்பட்டு கம்பெனி அதிகாரத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பிற்குள் அகதிகளாக இடம்பெயரும் துயிலார்களில் சிலர் காணா மல் போகிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான துப்பு அவர்களின் தெய்வமான தாண்டவராயன் கதைப்பாடலில் தடை செய்யப்பட்ட பகுதியில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப் படுகிறது. அதன் பிறகு கதையினுடையதும், கதை மாந்தர் மற்றும் இந்நாவலை வாசிப்பவர் ஆகியோரது சிக்கல்களும் விடுவிக்கப்படுகின்றன.

சாகஸக்காரனாக வாழவேண்டுமென விரும்புகிற ட்ரிஸ்ட்ராம் காதலிக்கவும் சேர்ந்து வாழவும் தனக்குப் பொருத்தமில்லாத நாட்டுப்புறப் பெண்ணோடு (எலினார்) காதல் வயப்பட்டு சாபக்காடு என அழைக்கப் படும் ஏடன் தோட்டத்தினுள் (இங்கே வனம்) கலவியில் ஈடுபடும் போது புகழ்பெற்ற பாரிஸ் மருத்துவராலும் கதைசொல்லியாலும் மருத்துவக் காரணங்கள் ஏதும் சொல்லப்படாத பார்வையிழத்தலுக்கு ஆளாகிறாள். பிரெஞ்சுப் புரட்சி நடக்கும் சமயத்தில் மைசூரிலிருந்து திப்புவின் பிரதிநிதி கள் பிரெஞ்சு முடி யாட்சியினரிடம் உதவி கேட்டு அது கிடைக்காததற்கு இடையில் எலினார்  கொல்லப்படுவதிலி ருந்து காப்பாற்றும் சொக்க கௌட என்பவனால் கட்டுக் கதைகளால் விலக்கி வைக்கப்பட்ட வனத்தினுள் கலவி யில் ஈடுபட்டு கண் பார்வையிழந்ததால் அதன் சொஸ்தம் கதைக்குள் தான் இருக்கிறது எனச் சொல்லப்படுகிற விளக்கத்தை ஏற்று (எலினார் வற்புறுத்தி) கதைகளின் நிலமாகச் சொல்லப் படும் இந்தியாவின் தென்பகுதியைச் சேர்ந்த மெட்ரா ஸிற்கு வந்து பணியிடமாக இராயக்கோட்டைக்கு வரும் ட்ரிஸ்ட்ராம் அதைக் கண்டுபிடிப்பதன் மூலம் அபினி வியாபாரமும், ஆண் பெண் உறவுச் சிக்கல்களும், மக்கள் எழுச்சிகள் குறித்த விவாதமும் நாவலில் துவக்கியும் முடித்தும் வைக்கப்படுகின்றன.

பாரிஸ் புரட்சியின் போது பிணவறையில் நிகழும் கலவி யின் மூலம் எலினார் சிசு உண்டாகாத கர்ப்பம் அடைகி றாள். இந்நாவல் புரட்சியைக் குறித்து விவாதிக்கிற தோரணையை வைத்துப் பார்த்தால் எலினாரின் போலிக் கர்ப்பம் பாரிஸ் புரட்சியை வெற்று எழுச்சியாக குறீயீடு செய்வதாக எண்ணிக் கொள்கிற சாத்தியம் இருக்கிறது. துயிலார்களின் சரித்திரத்தை கதையாக எழுதிவைப்பவர் ஒரு பிராமணர், அதன் பிரதியை திப்புவின் நூலகத்திலிருந்து எடுத்துவர உதவி செய்பவர் ஒரு அய்யங்கார் என்பதை மனதில் வைத்தால் விளிம்பு நிலை நாடோடிகளின் சரிதமாக வேதங்களையும் அதுவே விடுதலைக்கான பிரதியெனவும் அபாயகரமாக யோசிக்க வைக்கிற சாத்தியத்தையும் இந்நாவல் அளிக்கிறது. மேற்கு மற்றும் கிழக்கின் அதிகாரமற்றவர்களின் இன் னல்கள் ஒன்றே போலிருந்தாலும் அவற்றைத் தீர்த்துக் கொள்ளக் கிடைக்கிற வடிவங்கள் இரண்டிற்கும் பொருந்திப் போவதில்லை. வெவ்வேறு நிலவியலில் வாழும் மக்களுக்கான விடுதலைக்கான கோட்பாடுகள் அம்மக்களிடமிருந்தே எழவேண்டுமென்றும் இறக்குமதி செய்யப்படும் கோட்பாடுகள் எல்லா நிலங்களுக்கும் பொருந்துவதில்லை எனவும் நாவல் விவாதிக்கிறது.

ஒரு சம்பவத்திற்கான அல்லது பாத்திரங்களின் செயலுக் கான காரணங்களை, சாத்தியங்களை அடுக்கி வாசிப்பவர் கள் புதிதான ஒன்றை யோசிக்க வைக்கிற வாய்ப்பை இந் நாவல் கொடுத்திருந்தாலும் சொல்லப்பட்டுள்ள சாத்தி யங்களையும் காரணங்களையும் தாண்டி யோசிக்க வேண்டுமென்றால் கடவுள் உதவி செய் தால் தான் உண்டு என்கிற அளவிற்கு நாவல் அவைகளை விவரித்திருக்கிறது. அது சில இடங்களில் (இந்தியாவில் வரலாறுகள் கதை களாக மாறுவது) சுவாரசியமூட்டியும் சில இடங்களில் அலுப்பூட்டவும் வைக்கிறது.

நாவலின் அனைத்து பாத்திரங்களும் ஒரேமாதிரி தோன்று கிற வகையில் அவர்கள் அனைவருமே விவாதத்திலும் விசயஞானத்திலும் தேர்ச்சியுற்றவர்களாக இருக்கிறார் கள். சொக்க கௌடவும், பிச்சையாபிள்ளையும் கதை களைக் குறித்து போர்ஹே அளவிற்குப் பேசுகிறார்கள். இங்கிலாந்தின் ட்ரிஸ்ட்ராமின் அம்மா பேசுவதற்கும் இந்தியாவில் பறைப்பெண்ணான கெங்கம்மா போர் குறித்து பேசுவதற்கும் பெயர்களையும் இடங்களையும் தவிர்த்துப் பார்த்தால் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இருக்காது. வெள்ளைக்காரர்களுடன் பழகியிருந்தாலும் போரைக் குறித்தும் புரட்சி குறித்தும் அவளிடம் தர்க்கிக் கிற அளவிற்கு அவள் வெள்ளைக்காரர்களுக்கும் சீனர் களுக்கும் வாத்தியார் உறவோ அல்லது வழிகாட்டி உறவோ வைத்திருக்கவில்லை. நாவலின் பலவீனங் களில் ஒன்றாகத் தோன்றும் இப்பகுதி எலினார்தான் இதைக் கதையாக எழுதியிருக்கிறாள் என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டால் (ட்ரிஸ்ட்ராமையும், மெய்யான கதை சொல்லியும் தவிர வேறு யாரும் இதை நாவலில் ஏற்றுக் கொள்ளவில்லை) இங்கிலாந்தின் கிராமப்புறப் பெண் ணான அவளுக்கு சாதிமுறைகளைப் பற்றி இவ்வளவு தான் தெரிந்திருக்க முடியும் என்கிற தர்க்கத்தை ஏற்றுக் கொண்டு இப்பலவீனத்தை தாண்டிப் போகவும் முடிகிற வாய்ப்பையும் இந்நாவல் தன்னுள் வைத்திருக்கிறது.

800 பக்கங்களில் தடுக்கும் பலவீனங்களை கடைசி 150 பக்கங்களின் தர்க்கம் தாண்டிப் போக வைக்கிறது. லவணர்கள் என்கிற நாடோடி இனத்தவர் கதையில் அடிக் கடி வந்து போகிறார்கள். அவர்கள் போர் முடிந்து திரும்பிப் போகும் மைசூர் படைகளிடம் கொள்ளை யடிக்கப் போய் அங்கே ஹைதரின் பிணத்தைக் காண்பது போன்று வரலாற்றோடு கதைகளை இணைக்கும் இடங் கள் சிறப்பாக வந்திருக்கிற வேளையில் வரலாற்று தகவல்கள் வெறும் தகவல்களாகவே எஞ்சியிருக்கின்றன (வில்லியம் செஷ்லர் ட்ரிஸ்ட்ராமிடம் பேசும் போது "சீரங்கப்பட்டிண உடன்படிக்கையின் ஆறாம் ஷரத்து" எனத் துல்லியமாகப் பேசுவது, தான் ஜங்கம முறைப்படி தலையை மழுங்கச் சிரைத்திருப்பதாக ஜங்கம பூசாரியே சொல்வதுபோல தகவல்கள் தகவல்களாகவே எஞ்சி யிருக்கின்றன.) மேலும் இங்கிலாந்து மற்றும் பாரீஸைக் குறித்து வருகிற பகுதிகள் என்ன தெருவில் என்ன இருந்தது என்கிற தகவலாகவே உள்ளது. கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட இனமொன்றிற்கு துயிலார் என சுத்தத் தமிழ்ப் பெயர் இருக்குமா?.

உபகதைகளாக வரும் இருட்டுச் சத்திரம், செல்லி, வன மோகினி ஆகியவற்றின் ஊடாக விவரிக்கப்படும் தனி அறைகளில் இருப்பவன் மோகினிகளைக் காண்பது, போர் வீரர்களால் சீரழிக்கப்படும் பெண், கண்ணாடியில் ட்ரிஸ்ட்ராம் பார்க்க அங்கே கிரிஃபித் அப் ஓவைன் தெரி வது எதுவுமே திரும்பத் திரும்ப எழுதப்படுகிற கதை களே அல்லாமல் புதிதானவையில்லை. ஒளிரும் மூங்கி லும், கண்ணீயும், நாகாயக் களிம்பும், காற்றுப்புலிக்காக வைக்கப்படும் பொறியும் நாவலின் தர்க்கத்தைத் தாண்டிப் போகாமல் கதையோட்டத்திற்கு வலுசேர்க்கும் துணைக்கதைகள்.

"மனப் புத்தகத்தில் கற்பனையின் எழுதுகோலால் எழுதத் துவங்கினாள்" (பக்கம் 735), "மீர் சாதிக் சர்க்கார் சார் பாகக் கும்பெனி அரசைக் கண்டித்து அறிக்கை விடுவித்தி ருக்கிறார்" (பக்கம் 711), "செல்லியின் தந்தை அவர்களி ருவரையும் பக்கத்துச் சேரியில் தனிக்குடித்தனம் வைத் தார் (பக்கம் 398), "அவனும் கொக்கரித்தான்" (பக்கம் 678) மடை திறந்த வெள்ளம் போல், யானைப்பசிக்கு சோளப்பொறி போன்று எழுதியிருப்பது நெடிய வாசிப் பினிடையில் அலுப்பூட்டுவதாக உள்ளன. பயணத்தின் ஆறு நிலைகள், இதிகாசக் குதிரைகளின் கதைகள் படிக்கப் புதிதாக இருந்தாலும் அவை ஒரு இடத்தில் பொருத்தமாகவும், இன்னொரு இடத்தில் அவசரப்பட்டு எழுதியதைப் போல இரண்டு முறை நாவலில் இடம் பெறுகின்றன. இந்நாவலின் மொத்த பலமும் தலைப்பிற்குக் காரண மான தாண்டவராயன் கதையில் தான் உள்ளது. சாதிகள் உருவாக்கத்தில் தெய்வங்களை இணைத்தல், நாட்டார் தெய்வங்களை பெருமத தெய்வங்களின் வழித்தோன்ற லாக சித்தரித்தல், மேல் வருணத்தவரால் துன்பம் நேர்கை யில் இத்தெய்வங்கள் வன்முறையில் இறங்குதல் என நாட்டார் கதைகளின் மரபு மற்றும் வடிவம் கச்சிதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாவலின் மொழியும் இப்பகுதி களில்தான் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது - "வாயு ராசன் வழிதூர்க்க வருணராசன் தீர்த்தமிட" (பக்கம் 628). நீலகண்ட சாஸ்திரி எழுதும் பிதிர் சஞ்சார மார்க்க போதினி எனும் நூலின் பகுதிகளில் நாட்டார் கதைகளுக் கும் பிராமணக் கதைமொழிக்கும் உள்ள வேறுபாடு சரி யாக வெளிப்பட்டுள்ளது. சரியான இடங்களில் புதிய ஏற்பாட்டின் பொருத்தமான வசனங்கள் எடுத்தாளப்பட் டிருப்பதும் வாசிப்பானுபவத்தைக் கூட்டுகின்றன. ஆண் பெண் உறவில் ஏமாற்றமே அடையும் பெண்களின் மன நிலையை கதைசொல்லி தனது தீர்க்கமான முடிவின் மூலம் இங்ஙனம் முன்வைக்கிறார்,

"காதலின் சாதூர்யங்களும் தந்திரங்களும் அனுபவப் பட்ட பின் எந்தப் பெண் தன்னுடைய கன்னிமையின் காலங்களைத் திரும்ப வாழும் ஏக்கச் சிலுவையை சுமக்காதவளாய் இறந்து போகிறாள்" (பக்கம் 747).

மொத்த நாவலும் வெவ்வேறு இடங்களைக் கோர்க்கும் துப்பறியும் பாணி நாவல்களுக்கே உரிய புத்திசாலித்தனத் தில் தான் வாசிக்க வைக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த புத்திசாலித்தனம் தமிழில் தீவிர இலக்கிய நாவல்களுக்கு அனேகமாகப் புதிது எனலாம். பா.வெங்கடேசனின் இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்பு ஆகிய வற்றிற்குப் பின் பல ஆண்டுகள் உழைப்பில் வெளிவந்தி ருக்கும் இந்நாவல் ஆரம்பத்திலிருந்து கடைசிப் பக்கம் வரைக்கும் இடைவிடாது தர்க்கச்சரடை தண்டவாளம் போல முடிவில்லாமல் ஓடவிட்டிருக்கிறது. இன்னும் பக்கங்களைக் குறைத்தும் விவாதிக்க சில விசயங்களை அடுத்த நாவலுக்கு வைத்துக் கொண்டும் எழுதியிருந்தால் அவருடைய முதல் நாவலே வெற்றி பெற்ற நாவலாக மாறியிருக்கக் கூடும் என்றாலும் இது தோல்வி கண்ட நாவலும் அல்ல.

சூனியக்காரன் வரைந்த ஓவியம் கருப்பு வெள்ளையில் ஒரு குடும்பத்தை பேய்களைப் போல சித்தரித்திருந்தா லும் அதற்காக அவன் கொல்லப் பட்ட பின்னும் அவன் வரைந்த அந்த சாப ஓவியத்தை யாரும் அழிப்பதில்லை என்பதை இந்நாவலுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

- பாலசுப்பிரமணியன்

Pin It