(1906-1963)
1998
எல்லோராலும் ஜீவா என்று அழைக்கப்படும் ப. ஜீவானந்தம் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்கையில் ஈடுபட்டவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தனித் தமிழ்ப் பற்றாளராக, பொதுவுடமை இயக்கத் தலைவர் என்று படிப்படியாக உயர்ந்தவர். இருபதாம் நூற்£ண்டின் தொடக்கம் மற்றும் இறுதியில் சைவம் சார்ந்த பிரிவினர் புலமைத் தளத்தில் விரிவாகச் செயல்பட்டனர். இந்தச் சூழல் என்பதை நீதிக்கட்சியின் செயல்பாடுகளுக்கும் சைவத்திற்குமான உறவுமுறையாகப் புரிந்து கொள்ள முடியும். பேச்சு மரபை முதன்மைப்படுத்தி அடுக்குத் தொடர் மொழி சார்ந்த அரசியல் சொல்லாடல் உச்சம் பெற்றிருந்த காலத்தில் ஜீவாவின் மேடைப் பேச்சு உணர்ச்சி கரமாகப் பாமரர்களின் அரசியலையும் சோவியத் கலை இலக்கிய பாரம்பரியத்தையும் பேசியது.
திராவிட இயக்கம் இராமாயணக்கதை சார்ந்த பண்பாட்டை விமர்சனம் செய்து, எரிக்க முற்பட்ட போது இதற்கு மாற்றாக ஜீவா இராமாயணத்தை காப்பியமாக புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டவர். ஆளும் வர்க்க மனநிலை கொண்ட காங்கிரஸ்காரர்கள் புரிந்து கொண்ட கம்பனுக்கும் திராவிட இயக்கம் புரிந்து கொண்ட கம்பனுக்கும் பொதுவுடமை இயக்கம் சார்ந்து செயல்பட்ட ஜீவா புரிந்து கொண்ட கம்பனுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. இலக்கியத்தில் ஜீவா எதார்த்தவாதத்தை முதன்மைபடுத்தினார். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். தமிழ்வழிக் கல்வி, தமிழ் ஆட்சி மொழி குறித்து விரிவான உரையாடலை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது நிகழ்த்திக் காட்டியவர். பாரதியின் பாடல்களைத் தெருவெல்லாம் பாடி மக்கள் இயக்கமாக மாற்றியவர். இவர் சமதர்மம், அறிவு, ஜனசக்தி, தாமரை போன்ற இதழ்களின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். கலை இலக்கியப் பெருமன்றம் என்ற பண்பாட்டு செயல்பாட்டிற்கான இயக்கத்தை உருவாக்கியவர்.
நூல்கள்
1. ஜீவாவின் பாடல்கள்
2. பாரதி வழி
3. புதுமைப் பெண்
4. கலையும் இலக்கியமும்
5. இலக்கியச் சுவை
6. மதமும் மனிதவாழ்வும்
7. மொழியைப்பற்றி ஜீவா
8. இலக்கியத்தில் சோஷலிஸ்ட் எதார்த்த வாதம்
9. சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள்
10. பாரதியைப் பற்றி ஜீவா
11. சோஷலிச தத்துவங்கள்
(ஜீவாவின் ஆக்கங்கள்
4 தொகுப்பு நூல்கள் பேரா. வீ. அரசு தொகுத்து என்.சி.பி.எச். வெளியிட்டுள்ளது)
மொழி பெயர்ப்பு
12. நான் ஏன் நாத்திகன் ஆனேன்