8600 ச.கி.மீ பரப்புள்ள காவிரி-பாலாற்றுப் படுகையை முகேஷ் அம்பானியின்  ரிலையன்சு இந்தியா கம்பெனிக்கு தாரை வார்த்துள்ளது இந்திய அரசு. இப்பகுதியில் அதிக அளவில் இயற்கை எரிவளியும் கச்சா எண்ணெயும் இருப்பதைக் கண்டறிந்துள்ள  ரிலையன்சு இங்குள்ள பெட்ரோல் வளத்தை எடுக்கும் உரிமையை 100 விழுக்காடு தன்னிடமே வைத்துள்ளது.

பெட்ரோலிய வளங்கொழிக்கும் தமிழ் மண்ணான இப்பகுதிக்கு துருபாய்-53 என தன் தந்தையின் பெயரைச் சூட்டி மகிழ்கிறார் மார்வாடி முகேஷ் அம்பானி. இதற்கான ஆய்வுகள் பலமுறை செய்ததில் இப்பகுதியில் இயற்கை எரிவளியும், கச்சா எண்ணெய்யும் பெருமளவில் இருப்பது உறுதியானது.

மாடுலர் டைனமிக் டெஸ்டிங் எனும் ஆய்வு செய்தபோது 37 மில்லியன் ஸ்டாண்டர்ட் கன அடி எரிவளியும் (அதாவது 3 கோடியே 70 இலட்சம் ஸ்டாண்டர்ட் கனஅடி எரிவளி) 1100 பாரல்(1 இலட்சத்து 74 ஆயிரத்து தொள்ளாயிரம் லிட்டர்) கச்சா எண்ணெய்யும்  56/64 அங்குலம் அளவுள்ள குழாய் மூலம் ஒரு நாளைக்கு கிடைத்தது என்றால் இப்பகுதி பெட்ரோலிய வளத்தை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழினம்  காவிரி, பாலாற்று நீரை மட்டும் இழக்கவில்லை, இவ்வாற்றுப்படுகைகளின் பெட்ரோலிய வளத்தையும் இழந்து நிற்கிறது. தமிழகத்துக்குத் தேவையான பெட்ரோலியப் பொருட்கள் தமிழ் மண்ணில் கிடைத்தும் தில்லியை விட அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையில் தமிழர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

தில்லிக்காரன் படைகொண்டு தமிழன் வளங்களைக் கைப்பற்றவில்லை. நம் கையில் வாக்குச்சீட்டைக் கொடுத்து அமைதியான முறையிலேயே நம் வளங்களைக் கொள்ளை அடித்துச் செல்கிறான். தில்லி அரசும், வடநாட்டுப் பெருமுதலாளிகளும் இணைந்து இக்கொள்ளையில் ஈடுபடுகின்றனர்
Pin It