குண்டும்குழியும் நமது சாலைகளில் எப்பொழுதும் இடம்பெற்றிருக்கும் அணிகலன்கள். அரசியல் பாதாளத்தில் வாழும் ஆட்சியாளர்களின் கருணை மிகுந்த பார்வை தேர்தல் நேரத்தில் சாலைகளில் ஒட்டுப் பிளாஸ்திரி போடுவதோடு முடிந்து விடுகிறது. மற்ற நேரங்களில் குண்டும் குழியுமே நமது சாலைகளின் நிரந்தர அடையாளங்கள்.

ஆனால் சாலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் நம்மூரில் குறைவதே இல்லை. கடன் வாங்கியாவது கார்கள், இருசக்கர வாகனங்கள் வாங்குவது சகஜமாகிவிட்டது. ஆனால் இந்த வாகனங்களால் ஏற்படும் மாசுபாடு, எரிபொருள் செலவு, போக்குவரத்து நெருக்கடி, உடல்நலக் கேடு, நேர விரயம் போன்றவற்றை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை.

இவற்றை மீறி வாகனங்களை பயன்படுத்த நாம் துணிந்து விட்ட பிறகு, அந்த வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். இவை எல்லாமே இயந்திரங்கள், சரியாகப் பராமரிக்காவிட்டால் பழுதாகி செலவு வைப்பதுடன், நிறைய பிரச்சினைகளையும் கூடவே கொண்டு வரும்.

முதல் கட்டமாக வாகனங்களின் டயர் காற்றழுத்தத்தை அதற்குரிய வகையில் சரியாக பராமரிக்க வேண்டும். டயரின் காற்றழுத்தம் 2 கிலோ குறைவாக இருந்தால் 5 - 8 சதவீதம் பெட்ரோல்/டீசல் விரயமாகும். இது டயரின் செயல்பாட்டுத் திறன், ஆயுளையும் குறைக்கும்.

வண்டியை ஓட்டும்போது அந்த வண்டிக்கான "ஆப்டிமம் ஸ்பீட்" என்று வண்டியில் குறிப்பிடப்பட்டுள்ள வேக எல்லைக்குள் ஓட்டினால் நிறைய எரிபொருளைச் சேமிக்க முடியும். உங்கள் வண்டியில் உள்ள ஸ்பீடா மீட்டரில் இந்த எல்லையை சிவப்பாக குறித்திருப்பார்கள். அதேபோல் வண்டியை வேகமாக - ஒரு குறிப்பிட்ட கியரில் ஓட்டிச் சென்று சடாரென்று வேகத்தைக் குறைப்பதும் எரிபொருள் செலவை அதிகரிக்கும், எஞ்சினின் திறனையும் குறைக்கும்.

போக்குவரத்து சிக்னலில் வண்டி நிற்கும் போது,  வண்டியை அணைத்துவிடுவது நல்லது. திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது செலவாகும் பெட்ரோலும், 14 விநாடிகள் எரியும் பெட்ரோலும் ஒரே அளவுதான். எனவே, சிக்னலில் குறைந்தபட்சம் 14 விநாடிகள் நேரமிருந்தாலே வண்டியை அணைத்து விடலாம்.

ஒரு வாகனத்தில் 40 கி.மீ வேகத்தில் ஒரு நிமிடத்துக்கு பயணம் செய்ய 15 மில்லி பெட்ரோல் தேவை. அப்படிச் செல்லும்போது ஒரு நாளைக்கு 7 சிக்னல்களில் வண்டியை அணைத்து வைத்தால் 100 மில்லி பெட்ரோலை சேமிக்க முடியும். இப்படி மாதத்தில் 3 லிட்டர் வரை சேமிக்கலாம். ஊரிலுள்ள அனைத்து வாகனங்களும் இதைப் பின்பற்றினால் ஒரு மாதத்தில் பல லட்சம் லிட்டர் பெட்ரோலை சேமிக்க முடியுமே.

காரில்தான் செல்ல வேண்டும் என்று நாம் நினைத்தால், குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே காரை பயன்படுத்தலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்பவர்கள், ஒரே திசையில் பயணிக்கும்போது காரை பகிர்ந்து கொண்டு செயல்படலாம்.

மேலும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும்போது, நமது வேலைகள் அனைத்தையும் திட்டமிட்டு, ஒரே முறையில் முடித்துவிடுவது எரிபொருள் செலவு, அலைச்சல், நேரம் அனைத்தையும் குறைக்கும்.

பொதுவாக மின்ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன் படுத்துவது சிக்கனமானது, மாசுபாட்டை குறைக்கக் கூடியது, அயர்ச்சியைத் தவிர்க்கக் கூடியது. ஓரளவு தொலைவுக்கு சைக்கிளையும், அதைவிட குறைந்த தூரத்தை நடந்தும் கடப்பது நல்லது.

Pin It