நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி 15 மாதங்களில் இல்லாத வகையில், சரிவை சந்தித்துள்ளது. விற்பனை, உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையால், நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, சரிவை சந்தித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், இரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின், ஆகஸ்ட் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கையை வெளியிட் டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி குறித்த, பி.எம்.ஐ., குறியீடு, 51.4 புள்ளிகளாக சரிந்துள்ளது. இது, 2018, மே மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட குறைந்த அளவாகும். 2018, மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 52.5 புள்ளிகளாக இருந்தது. கடந்த ஜூலை மாதம் முதலாகவே, பெரும்பாலான அளவீட்டுக்கான குறிகாட்டிகள் வீழ்ச்சியடைந்ததால், உற்பத்தி வளர்ச்சி, தன் வேகத்தை இழந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி, வேலைவாய்ப்பு, புதிய ஆர்டர்கள் ஆகிய முக்கியமான, பி.எம்.ஐ., குறியீடுகள் சரிவடைந்து உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதலாவது காலாண்டில், ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், 5 சதவீதமாக சரிவை கண்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், 15 மாதங்களில் இல்லாத வகையில் விற்பனை வளர்ச்சியும் குறைந்துள்ளது. மேலும், உற்பத்தி வளர்ச்சியும், வேலைவாய்ப்பு உருவாக்கமும் குறைந்துள்ளது.

இவை எல்லாவற்றையும் விட, 2018 மே மாதத் துக்குப் பிறகு முதல் முறையாக, ஆகஸ்ட் மாதத்தில் தொழிற்சாலைகள், உற்பத்திக்கு தேவையான உள்ளீட்டு பொருட்களை வாங்குவதும் குறைந் துள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கான விற்பனை குறைந்தது மட்டுமின்றி, போதுமான நிதி கிடைப்பதிலும் சிக்கல்கள் இருந்துள்ளது, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

முன்னணி வாகன துறை நிறுவனங்கள் வீழ்ச்சி

ஆகஸ்ட் மாதத்தில், வாகன விற்பனை சரிந்துள்ளது. நாட்டின் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையில் சரிவை கண்டுள்ளன. முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களான, ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹோண்டா’ உள்ளிட்ட நிறுவனங்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இரட்டை இலக்க விற்பனை சரிவை கண்டுள்ளன. மாருதி சுசூகி நிறுவனம், 32.7 சதவீதம் அளவுக்கு விற்பனையில் சரிவை கண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்நிறுவனம், 1.58 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஆகஸ்டில், 1.06 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதே போல் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், 58 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஆகிய நிறுவனங்களின் விற்பனையும் முறையே, 51 சதவீதம் மற்றும் 21 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளன.

“சந்தை நிலைமை, தொடர்ந்து சவாலாகவே இருந்து வருகிறது. இருப்பினும், நிறுவனம், சில்லரை விற்பனையில் அதிக கவனம் செலுத்துகிறது” என, விற்பனை நிலை குறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், பயணியர் வாகன வணிகத்தின் தலைவர், மயாங் பரீக் தெரிவித்து உள்ளார்.

மாருதி சுசூகி நிறுவனம், ஆகஸ்ட் மாதத்தில், 32.7 சதவீதம் அளவுக்கு விற்பனை சரிவை சந்தித்திருக்கிறது. உள்நாட்டு விற்பனை, 34.3 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. மகிந்திரா அண்டு மகிந்திராவின், உள்நாட்டு விற்பனை, 26 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது. இந்நிறுவனத் தின் பயணியர் வாகன விற்பனை, 32 சதவீத சரிவை கண்டுள்ளது. வர்த்தக வாகன பிரிவும், 28 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

முக்கிய எட்டு துறைகள் : நாட்டின், முக்கிய எட்டு தொழில் துறைகளின் வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில், 2.1 சதவீதமாக குறைந்துள்ளது என்று நடுவண் அரசே ஒப்புக் கொள்கிறது. இதுவே, கடந்த ஆண்டு, ஜூலையில் 7.3 சதவீதமாக இருந்தது.

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் திரட்டிய கடன், கடந்த ஜூலை மாதத்தில் 35,850 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

‘கோல் இந்தியா’ நிறுவனத்தின் உற்பத்தி, ஆகஸ்ட் மாதத்தில், 10.3 சதவீதம் அளவுக்கு சரிந்து, 34.77 மில்லியன் டன் ஆக குறைந்துள்ளது.

பொதுத் துறை உருக்கு தயாரிப்பு நிறுவனமான, ‘செய்ல்’ அதன் இரண்டு துணை நிறுவனங்கள் சரியாக செயல்படாததால் அவற்றை மூடிவிட முடிவு செய்துள்ளது.

Pin It