கழகம் நடத்திய சட்டப் போராட்டம் வெற்றி:

பெரியாருடைய சிந்தனைகளை 21 மாநில, உலக மொழிகளில் வெளியிடு வதற்கு தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெளிவந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் மகிழ்ச்சியுடன் இதை வரவேற்கிறது.

பெரியாருடைய நூல்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும், இந்தியா முழுவதும் பரவ வேண்டும். மக்களுக்கு அவை எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெரியார் திராவிடர் கழகம் நீண்ட போராட்டத்தை நடத்தியது.

28 தொகுப்பாக பெரியார் எழுத்து சிந்தனைகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டபோது அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் வந்தன. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் அந்த வழக்கைத் தொடர்ந்தது. அந்த வழக்கை பெரியார் திராவிடர் கழகம் எதிர்கொண்டது. அப்படி பெரியாருடைய நூல்களை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் மேல் அமர்வு தெரிவித்துவட்டன.

அந்த வழக்கு இப்போதும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வெளிடக்கூடாது என்று வைக்கப்பட்ட கோரிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்கிய காரணத்தினால் பெரியாருடைய சிந்தனைகள் இன்று பல்வேறு பதிப்பகங்களால் பல இலட்சக்கணக்கில் வெளியிடப்பட்டு பல மக்களிடையே சென்று சேர்ந்திருக்கிறது.

அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசும் அந்த முயற்சிகளை மேற்கொண்டு வட இந்தியாவிற்கும் பெரியார் தேவைப்படுகிற காலத்தில் இந்தி உட்பட

21 மொழிகளில் மொழிபெயர்க்க முன் வந்திருப்பது உண்மையிலேயே பெரியாரியலுக்கு செய்கின்ற மகத்தான தொண்டு. திராவிடர் விடுதலைக் கழகம் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

அதேபோல, கடந்த 10 ஆண்டுகளாக கேட்பாரற்று முடங்கிக் கிடந்த பெரியார் சமத்துவபுரங்களை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தக சந்தைகள், இலக்கிய விழாக்கள் நடத்துவதற்கு அரசு முன்வந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நிலை பற்றாக்குறை குறைந்துள்ளது என்ற அறிவிப்பும் நிதி அமைச்சரால் வெளியிடப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி வரவேற்போம்.

தாலிக்கு தங்கம்வழங்கும் திட்டத்தை அரசு மாற்றியது பாராட்டுக்குரியது

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு பதிலாக பெண்களின் உயர் கல்விக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இது உண்மையிலேயே முற்போக்கான வரவேற்க வேண்டிய ஒரு திட்டம். ஆனால் இத்திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. “மூவலூர் இராமாமிர்தம்” பெயரால் இதுவரை செயல்பட்டு வந்த திட்டம். 2011ஆம் ஆண்டுவரை, பட்டம், பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு திருமணத்தின் போது 50,000, மற்ற பெண்களுக்கு 25,000 நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. இது பெண்களின் கல்வி முன்னேற்றம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டம்.

2011 இல் ஜெயலலிதா முதலமைச்சராக வந்ததற்குப் பிறகு கல்விக்கான இந்தத் திட்டத்தை, திருமணத்துக்கான திட்டமாக மாற்றி இந்த நிதி உதவியோடு 4 கிராம் தங்கத்தை தாலிக்காக வழங்குவது என்ற ஒரு திட்டத்தை பெண்களை கவருவதற்காக கொண்டு வந்தார். பிறகு அதை 8 கிராமாகவும் உயர்த்தி அறிவித்தார்.

பெண்களின் உயர்கல்வி முக்கியமா? அல்லது 12 ஆம் வகுப்பு படித்த பெண்களை திருமண வாழ்க்கைக்கு கொண்டு போவதை அரசு ஊக்குவிப்பது முக்கியமா? இரண்டு கேள்விகளுக்கு விடை தேடுகிற போது, பெண் உரிமையில், பெண் முன்னேற்றத்தில் கவலை கொள்பவர் எவரும் திருமணச் சந்தையில் தள்ளிவிடுவதைவிட, அவர்கள் உயர்கல்வி பெற்று முன்னேறுவதையே விரும்புவர்.

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்தேறியுள்ளது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி, திருமணத்துக்கு தாலி வழங்கும் திட்டத்தின் வழியாக குழந்தைத் திருமணங்கள் குறையும், வரதட்சணை வாங்குவது குறையும் என்றெல்லாம் மதிப்பீடு செய்யப்பட்டது முழுமையாக தோல்வியடைந்துவிட்டது.

திருமணம் என்ற ஒரு நிகழ்ச்சிக்காக தாலிக்கு தங்கம் வழங்குவதை விட பெண்களின் கல்வி வளர்ச்சிக்கான திட்டமாக மாதம்தோறும் அவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கி அவர்களை உயர்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் சமூக மாற்றத்திற்கு சரியான முற்போக்குப் பார்வை. இதில் முற்போக்கு பேசுகிற, இடதுசாரி அமைப்புகள் கூட தாலிக்கு தங்கம் வழங்க வேண்டும்; அத்திட்டத்தை நிறுத்தக்கூடாது என்று பேசுவது தான் நமக்கு வியப்பாக இருக்கிறது. தாலிக்கு தங்கம் வழங்குவது கூட ஒரு மதம் சார்ந்த நடவடிக்கை தான். தாலியை பெண்ணடிமையின் சின்னம் என்றே பல படித்த முற்போக்குச் சிந்தனை கொண்ட இளம்பெண்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

நிச்சயமாக தமிழ்நாடு அரசினுடைய இந்த திட்டம் மிகச் சரியான திட்டம். பெண் உரிமையில், பெண் விடுதலையில், பெண் கல்வியில் நம்பிக்கையுள்ள அனைவரும், தாலி கட்டிக் கொண்டு 12 ஆம் வகுப்பிலேயே திருமண வாழ்வில் நுழைவதை விட அந்தப் பெண்கள் மேலும் மேலும் உயர்கல்வி பெற்று அந்த ஊக்கத் தொகையை பெறுவதே முக்கியம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It