1) வாஜ்பாய் ஆட்சித் திட்டங்களையே காங்கிரஸ் பின்பற்றியது என்று மோடியும் மன்மோகன் ஆட்சித் திட்டங்களையே மோடி அமுல்படுத்துகிறார் என்று காங்கிரசாரும் குற்றம் சாட்டுகிறார்கள். - செய்தி

எல்லா ஆட்சிகளுமே மக்களுக்கு எதிராகத் திட்டம் போடுவதில் ஒன்றாக நிக்குறோம்னு சொல்றீங்க...

2) மாட்டுக்கறி சாப்பிட்டாலோ விற்றாலோ 5 ஆண்டு சிறை.  - மராட்டிய அமைச்சரவை உத்தரவு

இனிமே, செத்த மாட்டை தூக்கிக்கிட்டுப் போய் அடக்கம் பண்ணும் வேலையையும் அமைச்சர்களே எடுத்துக்குங்க.

3) பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவில் 1,158 பேர் பலி. - செய்தி

உலக ‘சேஷமத்துக்கு’ யாகம் நடத்தும் சங்கராச்சாரிகளே! இதுக்கெல்லாம் யாகம் நடத்த மாட்டேளா?

4) விவசாயிகள் தற்கொலை 26 சதவீதம் அதிகரித்துள்ளது. - மத்திய அமைச்சர் குந்தாரியா

 மனிதர்கள் சாவுக்குக்கூட சதவீதக் கணக்குப் போட்டு, அப்புறம் சதவீதத்தைக் கட்டுப்படுத்த நிபுணர் குழுவைப் போடுவீங்க போலிருக்கு!    விளங்கிடுவீங்க...!

5) அதிக அளவில் வரி செலுத்துகிறவர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களுக்கு மான்யம் எதுவும் வேண்டாம் என்று கூற வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.  - அமெரிக்காவில் ஜெட்லி பேட்டி

இந்த கோரிக்கையை அமெரிக்கர்களுக்கு வைக்கிறீங்களா? அல்லது இந்தியர்களுக்கா? எதுக்கும் புரியும்படி விளக்கிடுங்க.

6) தெலுங்கானா முதலமைச்சர், வாஸ்து பண்டிதர் ஒருவரை அரசு ஆலோசகராக நியமித்துள்ளார். - செய்தி

வாஸ்துப்படி முதலமைச்சரை உடனே மாத்தனும்னு ஆலோசனை சொன்னா, என்ன செய்வீங்க சார்?

7) மோடியின் ‘சூட்’டை 4.31 கோடிக்கு குஜராத் வைர வியாபாரி ஏலம் எடுத்தார். - செய்தி

ஏலம் போனது மோடியின் ‘சூட்’ அல்ல; அவரது ‘எளிமை வேடம்’!

Pin It