மத உணர்வைப் புண்படுத்துகிறார்கள் என்று எதற்கெடுத்தாலும் கூறிக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதும் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதும் சங்கிகளின் வழக்கமாகி விட்டது.
கமலஹாசனின் ‘தக் லைஃப்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும் நீதிமன்றத்தின் வழியாக கருத்துரிமையை நிலைநாட்டி இருக்கிறது.
தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது என்று கமலஹாசன் பேசியதற்காக கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த பேச்சுக்காக கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது.
இப்போது உச்ச நீதிமன்றம் எவரையும் மன்னிப்பு கேட்க வைக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்குக் கிடையாது, என்று கர்நாடக நீதிமன்றத்தின் தலையில்குட்டு வைத்திருக்கிறது. படத்தைத் திரையிடவும் உத்தரவிட்டுள்ளது. தணிக்கைக் குழு அனுமதித்ததற்குப் பிறகு ஒரு படத்தை திரையிட முடியாது என்று சட்டத்தை எவரும் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள் என்று கூறி கருத்துரிமை பறிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது.
"In india...there will never be an end to the hurt sentiment pheno- menon. But for that, right to free speech cannot be jeopardised"
இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. "உணர்வுகளைப் புண்படுத்துவது என்ற கூற்றுக்கு முடிவே கிடையாது எதற்கு வேண்டுமானாலும் அதை கூறிக் கொண்டிருக்கலாம் அதற்காக கருத்து உரிமையை முடக்கி விடக்கூடாது".
மூன்று மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு வழக்கில் இதே உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மற்றொரு கருத்தையும் வெளியிட்டது. "எண்ணிக்கையில் பெரும்பான்மையினர் ஒரு கருத்தை விரும்பாவிடினும் அந்த கருத்தை மதிக்க வேண்டும்; கருத்துரிமையைக் காப்பாற்ற வேண்டும்"
"Even if a large number of persons dislike the views expressed by another, the right of person to express the views must be respected and protected" (Pratapgarhi case)
மதஉணர்வு புண்படுகிறது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டு பல நீதிமன்றங்கள் வழங்கிய தவறான தீர்ப்புகளுக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது!
நேற்று முன் தினம் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நெற்றியில் இட்ட விபூதியை அழித்துக் கொண்டார் என்றும் இந்துக்களை புண்படுத்தி விட்டார் என்றும் காவல் நிலையத்தில் சங்கிகள் புகார் கொடுத்து இருக்கிறார்கள். இந்த அர்த்தமற்ற வெற்று மிரட்டல்களுக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இது ஒரு Landmark Judjement.
- விடுதலை இராசேந்திரன்