பெரியார் முதன்முதலாக விடயபுரம் பயிற்சி வகுப்பில் உருவாக்கிய கடவுள் மறுப்பு வாசகத்திற்க்கு விளக்கம் அளித்து பெரியார் எழுதிய கருத்தாழமிக்க கட்டுரை:

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பினவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று கூறி வருவது கண்டு, பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பதுபோல் துள்ளுகிறார்கள்; துள்ளிக் குதிக்கிறார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவி விடுகிறார்கள்.

periyar 412பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்; எதிர்பார்க்கின்றேன். காரணம், போராட்டம் துவக்கினால், எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு, மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவதுதான்.

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான், கடவுளை உண்டாக்கியவன் முட்டான் என்றால், எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ள வேண்டும்? "உண்டாக்கியவன் முட்டாள்" என்றால், உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கின்றவனே! நீ, கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா? உனது முட்டாள் தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய்; ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம், ஆதாரம் என்ன?

முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, அது ஒருவனால் கண்டுபிடிக்கப் பட்டது என்கிறாயா? அல்லது, கடவுள் யாராலும் உண்டாக்கப் படாமல், யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால் எதற்காக வரும்? நான் சொல்வதைக் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே, உண்டாக்கினவனை நான் முட்டாள் என்கின்றேன் என்று நீ கோபிக்க வேண்டும்?

மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே கோபம், ஆத்திரம் வர வேண்டும்? நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக் கொள்கிறாய் என்றுதானே அர்த்தம்?

அது மாத்திரமல்லாமல், நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்றுதானே கருத்தாகிறது?

இப்போது நீ நினைத்துப் பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா? (கிரியேஷனா) (creation) அல்லது, கடவுள் கண்டுபிடிக்கப் பட்டதா? இன்வென்ஷனா (Invention) அல்லது, கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? நேச்சரா (Nature) இதை முதலில் முடிவு செய்துகொள்.

நான் சொல்வதன் கருத்து கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதுமல்ல, தானாகத் தோன்றியிருப்பதுமல்ல, முட்டாளால் உண்டாக்கப் பட்டது என்பதாகும். அதை அதாவது, கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது, அதை நீ ஒப்புக் கொண்டாலோதானே கடவுளை உண்டாக்கினவன் முட்டாள் என்றால், நீ கோபித்துக் கொள்ள வேண்டும்?

நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் 'கடவுள்' ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல. "தானாக, சுயம்புவாகத் தோன்றி யிருக்கிறது" என்பதுதான் இன்று கடவுள் நம்பிக்கைக்காரர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆகையால், நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு, 'அதற்காகக் கோபிப்பவனை, ஆத்திரப்படுபவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.

இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதியாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ அவனுக்கும், கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக்கியத் தனங்களை மறைத்துக் கொள்ள வேண்டியவனுக்கும்தான் கோபம் வர வேண்டும். அதை நான் சமாளித்துக் கொள்ளுகிறேன்.

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்" என்பதற்கு விளக்கமாக இவ்விளக்கம் எழுதப்படுகிறது.

கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே “கடவுள் தத்துவத்திற்கு" ஏற்பக் கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன், அல்லது பிரசாரம் செய்பவன், அல்லது கற்பித்துக் கொள்பவன் அல்லது கடவுளுக்காகவென்று கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள், மற்றும் அதற்கு ஆகக் கோவில்கள் கட்டி, அவற்றுள் உருவங்களை வைத்தவன்கள், கடவுளுக்காகவென்று பூசைகள், உற்சவங்கள், பண்டிகைகள் முதலியவைகளை நடத்துகிறவன்கள், செய்கிறவன்கள் யாவருமே நாணயத்தையோ, யோக்கியதையோ, ஒழுக்கத்தையோ ஆதாரமாக வைத்துக் கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவதில்லை.

"கடவுளுக்கு உருவமில்லை; குணமில்லை" என்று ஆரம்பித்துக் "கடவுள் சர்வ வல்லமையுடையவர், சர்வத்தையும் அறியக்கூடிய சக்தி (சர்வஞ்ஞத்துவம்) கொண்டவர்," "கருணையே வடிவானவர்", "அன்பு மயமானவர்," "அவரின்றி அணுவும் அசையாது" என்பன போன்ற கடவுளின் எல்லாக் குணங்களையும், சக்திகளையும், தன்மைகளையும் அடுக்கடுக்காகக் கடவுளுக்குக் கற்பித்து மக்களை நம்பச் செய்துவிட்டு, இந்தக் குணங்களுக்கும் தன்மைகளுக்கும் மாறான குணங்களை, தன்மைகளை அதற்கு ஏற்றி, அதற்காகக் கோவில்கள் சுட்டியும், உருவங்கள் உண்டாக்கி வைத்தும், நடவடிக்கைகளை ஏற்றியும், அவைகளை ஆதாரமாய்க் கொண்டு பூசை, உற்சவம், பண்டிகை முதலியவைகளைக் கொண்டாடச் செய்தவன் மூலம் கடவுளைப் பரப்புவதென்றால், இக்காரிய முயற்சியில் ஈடுபட்ட மக்கள் அயோக்கியர்களா, அல்லவா? என்று சிந்தித்துப் பார்க்கும்படி கேட்கிறேன் .

இக்கூட்டத்தார் மக்களை ஏய்க்கவல்லாமல், வேறு எக்காரியத்திற்காக இக்காரியங்களில் ஈடுபடுகிறார்கள், ஈடுபட வேண்டியவர்களானார்கள் என்று சொல்ல முடியுமா?

இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, தங்கள் பெருமைக்காக. தங்கள் வாழ்க்கை நலத்திற்காக, தங்கள் பிழைப்பிற்காக இக் காரியங்களைச் செய்யும் அயோக்கியர்களாக, முட்டாள்களாக இருந்து வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு கருத்து, காரணம் என்ன சொல்ல முடியும்?

இன்று இந்தப்படியான அயோக்கியர்களால் பரப்பப்பட்டிருக்கும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வீடு, உணவு, பெண்டாட்டி, வைப்பாட்டி, குழந்தைக் குட்டிகள், நகைகள், சொத்துக்கள், சுல்யாணம், உற்சவம், ஊர்வலம் முதலியவை செய்து, கூட்டத்தைக் கூட்டி, ஆயிரம், பல ஆயிரம், இலட்சம், பல இலட்சம் ரூபாய்கள் செலவு ஏற்படும்படியும் அதுபோலவே மக்களுக்கும் நாள் கணக்கில் மெனக்கேடு ஏற்படும்படியும் செய்வதோடு, கோடிக்கணக்கான மக்களை இழிசாதி மக்கள்களாகவும் இருக்கும்படி செய்கின்றனர்.

(தொடரும்...)

 விடயபுரம் பயிற்சி முகாம் வரலாறு!

'கடவுள் வணக்கம்’ கூறுவதைப் போல இனி நாம் எல்லா நிகழ்ச்சிகளும் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொல்லித்தான் தொடங்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தார் பெரியார். அன்றுமுதல் இன்றுவரை திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கடவுள் மறுப்பு வாசகம் சொல்லப்படுவது வழக்கமான ஒன்று. அத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க வாசகம் முதன்முதலில் சொல்லப்பட்ட இடம் விடையபுரம்."

2018-ஆம் ஆண்டு திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அங்கிருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது. அதைப்போல தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை ஒருநாள் உடைக்கப்படும் என்று பதிவிட்டார் ஒருவர். எதிர்ப்புகள், வழக்குகளுக்குப் பிறகு தனது அட்மின் மீது பழியைத் தூக்கிப் போட்டார். அதுபோல, பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசுவார்கள், செருப்பு மாலை அணிவிப்பார்கள். நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டால், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி பிணை கேட்பார்கள். மறைந்த அரை நூற்றாண்டுக்குப் பிறகும் எதிரிகளை இப்படி பெரியார் அச்சுறுத்துகிறார் என்றால், அவருடைய சித்தாந்தம் ஒரு காரணம். மற்றொன்று, அவரது சிலைக்குக் கீழே பீடத்தில் தவறாமல் எழுதப்பட்டிருக்கும் கடவுள் மறுப்பு வாசகம்.

அந்த கடவுள் மறுப்பு வாசகத்தை அகற்ற வேண்டுமென்று நீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்தார்கள். “யாருக்குச் சிலை வைக்கப்படுகிறதோ அவரின் கருத்துகள் சிலை பீடத்தில் பொறிக்கப்படுவது சரியானதே” என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அப்படி கடவுள் மறுப்பு வாசகத்தை பெரியார் முதன்முதலில் கூறிய இடம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விடையபுரம் கிராமத்தில்தான்.

1967-ஆம் ஆண்டு திருவாரூர் பகுதியில் ஒரு பயிற்சிப் பள்ளி நடத்த விரும்பிய பெரியார், தனது அணுக்கத் தொண்டரான வி.எஸ்.பி.யாகூப்பிடம் கூறினார். காவாலக்குடியைச் சேர்ந்த ச.மாரிமுத்து, ப.நடேசன், வி.எம்.ஆர்.பதி ஆகியோரிடம் வி.எஸ்.பி.யாகூப் ஆலோசித்ததில், அவர்கள் கூறிய இடம் விடையபுரம் பண்ணைத்தோட்டம். இதுதொடர்பாக, வாசுதேவ நாயுடுவிடம் அவர்கள் பேசினர். தனது தந்தையான அப்புசாமி நாயுடு பண்ணையாரிடம் வாசுதேவ நாயுடு இதனைத் தெரிவிக்க, மகிழ்ச்சியோடு ஏற்பாடுகளைச் செய்தார். விடையபுரம் பண்ணை அப்புசாமி நாயுடுவுக்கும் பண்ணையாட்களுக்கும் ஏற்பட்டிருந்த தகராறுகளை பெரியார் தலையிட்டுத் தீர்த்து வைத்தார். அதற்கு விசுவாசமாக இந்த பயிற்சிப் பள்ளியைப் பயன்படுத்திக் கொண்டார் அப்புசாமி நாயுடு. 24.05.1967 அன்று அங்கே பயிற்சிப் பள்ளி தொடங்கியவுடன், பெரியார் தனது கைப்பட கடவுள் மறுப்பு வாசகம் ஒன்றை எழுதித் தந்தார்.

‘கடவுள் இல்லை

கடவுள் இல்லை

கடவுள் இல்லவே இல்லை

கடவுளைப் உண்டாக்கியவன் முட்டாள்

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

கடவுள் இல்லை

கடவுள் இல்லை

கடவுள் இல்லவே இல்லை’

என்று அவர் எழுதியதை பெரியாரின் உதவியாளர் மகாலிங்கம் வாசிக்க, மாணவர்கள் எல்லோரும் திரும்பக் கூறினர். 07.06.1967 ‘விடுதலை' இதழில் இதை பதிவுசெய்து, ‘கடவுள் வணக்கம்’ கூறுவதைப் போல இனி நாம் எல்லா நிகழ்ச்சிகளும் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொல்லித்தான் தொடங்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தார் பெரியார். அன்று முதல் இன்றுவரை திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கடவுள் மறுப்பு வாசகம் சொல்லப்படுவது வழக்கமான ஒன்று. அத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க வாசகம் முதன்முதலில் சொல்லப்பட்ட இடம் விடையபுரம். இன்றும் அதற்கான கல்வெட்டு அடையாளங்கள் விடையபுரத்தில் உள்ளன.

காலத்தால் அழியாத இந்த கல்வெட்டு அடையாளம் மட்டுமல்ல, கருப்புச் சட்டைகளும் விடையபுரம் சுற்றியுள்ள பல கிராமங்களில் திராவிடர் கழகத்தின் வீரியமிக்க வரலாற்றுக்குச் சான்றாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

(ர.பிரகாசு முரசொலியில் எழுதியது 30.05.2025)