நடிகர் கமல்ஹாசன் தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று கூறியதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். பெரியார் கருத்து இதுவாகவே இருந்து இருக்கிறது. அவரது எழுத்தில் இருந்து சில பகுதிகள்;

மொழிவாரி மாகாணம் பிரிக்கப் படப்போகிறது. மொழி வாரி வித்துவான்கள் நியமிக்கப்பட்டு மொழி வாரி இலக்கணங்களும் செய்யப்பட்டு திராவிட மொழியைப் பாழாக்கத் திட்டம் தீட்டியாகி விட்டதே!.... பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நாலு அக்கா தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. இத்திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள்தான். அது தமிழ்தான். அந்த ஒன்றைத்தான் நாம் நாலு பேரிட்டு அழைக்கிறோம். 

நாலு இடத்தில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய நாலிடத்திலும் பேசப்படுவது தமிழ் ஒன்றுதான். நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. ஒன்றுதான் நாலாக நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது. இதை நிரூபித்துக் காட்டவும் என்னால் முடியும்.

நாலு தனி இடங்களில் வசித்து வந்த மக்கள் போக்கு வரவுத் தொடர்பு இல்லாததால் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப இயற்கையாகவே அவர்கள் பேசிய வார்த்தைகளில் சில சப்த மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதைச் சாதகமாக வைத்துக் கொண்டு நம்மை நாலு ஜாதியாகப் பிரித்து வைத்த ஆரியம் நம் மொழியையும் நான்காகப் பிரித்து வேண்டுமளவும் வடமொழியை அவற்றிற்குள் புகுத்தித் திராவிட மொழியை கெடுத்து விட்டது. அன்றைய பண்டிதர்கள் ஆரிய மதத்திற்கு அடிமைப்பட்டிருந்ததால் அதைத் தடுத்தார்கள் இல்லை. இன்னும் நமது பண்டிதர்களுக்கு அந்த ஆரிய மோகம் தீர்ந்த பாடில்லை.

ஆரிய மோகம் அற்ற ஒரு தெலுங்குப் பண்டிதர், ஒரு கன்னடியப் பண்டிதர், ஒரு மலையாளப் பண்டிதர், ஒரு தமிழ்ப் பண்டிதர் ஆகிய நால்வர் ஒன்றாக உட்கார்ந்து நாலு அகராதிகளை வைத்துக் கொண்டு அவற்றிலுள்ள வடமொழி அத்தனையும் நீக்கி விடுவார்களானால் எஞ்சியிருப்பவை அத்தனையும் தமிழ் வார்த்தைகளாகவே இருப்பதைக் காண்பார்கள். 100-க்கு 5 வார்த்தை கூடத் தமிழ் அல்லாத வார்த்தையாக இருக்காது. அதற்குள்ள சற்று நீட்டலையோ குறுக்கலையோ எடுத்து விட்டுப் பார்த்தால் அவையும் தமிழாகவே முடியும்... 

இவை நான்கும் ஒரே உதிரத்தில் இருந்து உதித்தது அல்ல. அந்த உதிரமேதான் இவை நான்கும். என்னருந் தமிழே, நீயேதான் தெலுங்கு; நீயேதான் மலையாளம்; நீயேதான் கன்னடம் என்றுதான் நான் கூறுவேன். இவை வெவ்வேறு மொழிகளாயிருந்தால் இவைகளுக்கு முதல் நூல்கள் எங்கே? தமிழுக்குத்தான் முதல் நூல்கள் எத்தனை யுள்ளன? அத்தனையும் ஆடிப்பெருக்கில் ஒழித்த ஆரியக் கூட்டமும் அவர்களின் அடிவருடிகளும்தானே இன்று தமிழ், தமிழ் என்று கூப்பாடு போடுகிறார்கள்?......தமிழ் என்றால் இனிமை என்பது தவிர வேறேதாவது உனக்குத் தெரியுமா? தமிழர் என்பது மொழிப் பெயர். திராவிடர் என்பது

(இனப்பெயர். -விடுதலை 08.12.1947)

 ----------------------

ஒரு பொருளுக்குத் தமிழில் உள்ள பல சொற்களே ஒவ்வொரு நாட்டிலும், தனித்தனியாக வழங்கி வேறு மொழியாக நிற்கிறது. உதாரணமாக, `வீடு' என்ற சொல்லுக்குத் தமிழில் மனை, இல், அகம், அறை, வளவு என்றிருக்கிறது. தமிழர் 'வீடு' என்பார்கள். தெலுங்கர் `இல்' என்பார்கள். கன்னடியர் 'மனை' என்பார்கள். மலையாளிகள் அறை, பொறை என்பார்கள். ஆரியர்கள் அகம் என்பார்கள். இப்படியாக ஒரு பொருளுக்கு உள்ள பல சொற்களை 2 இடங்களில் பல மாதிரியாகப் பேசுகிறார்கள். இப்படியாக ஒரே சொல்லுக்குப் பல பொருள் உள்ளவைகளைப் பலர் பல இடங்களில் பல மாறுபாட்டோடு உபயோகிக்கிறார்கள் என்ப தைத் தவிர, கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என்ற மொழிகள் வேறு மொழிகளும் அல்ல - கிளை மொழிகளும் அல்ல.

 (குடிஅரசு 02-02-1946 பக்-3), 09-02-1946 பக்-1).