ஜூன் 25 விபி.சிங் பிறந்தநாள். சமூக நீதி காவலர், மண்டல் பரிந்துரைகளை அமுலாக்கி இன்றுவரை ஒன்றிய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் இடம் பெறுகிறார்கள் என்று சொன்னால் அதற்கு வாய்ப்புக் கதவை திறந்து விட்ட ஒருவர் தான் விபி.சிங். 11 மாதங்கள் தான் அவருடைய ஆட்சி நீடித்தது. நேர்மைக்கும் ஊழலற்ற ஆட்சிக்கும் வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார். ஆனால் நாட்டில் ஊழல் பெருகி விட்டது, அரசியலில் நேர்மை இல்லை என்று வாய்கிழிய பேசுகிறவர்கள், விபி.சிங்கை பாராட்ட மனம் வருவதில்லை. காரணம் அவர் சனாதனத்தை எதிர்த்தார். சமூக நீதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

v p singh 336இன்று வரை விபி.சிங் அவர்களுக்கு ஒரு தபால் தலை கூட எந்த ஒரு ஒன்றிய அரசும் வெளியிடவில்லை. அவரது சொந்த ஊரான அலகாபாத்தில் ஒரு வீதிக்கு கூட அவரது பெயர் சூட்டப்படவில்லை. எந்த ஒரு அரசு அலுவலக கட்டிடத்துக்கும் அவரது பெயர் சூட்டப்படவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் தமிழ்நாடு நன்றியுள்ள மாநிலம் என்று காட்டுகின்ற வகையில் சென்னையில் விபி.சிங் அவர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற ஒரு மகத்தான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கடற்கரை சாலையில் இந்த சிலை நிறுவப்படவிருக்கிறது.

இந்த நிலையில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். விபி.சிங் எதிர்க்கட்சியில் இருந்தபோது செயிண்ட் கீட்ஸ் என்ற ஒரு தீவில் தன்னுடைய மகன் ஜெயா சிங் பெயரில் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருந்தார் என்று ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதற்காக செயின்ட் கீட்ஸ் தீவில் First Trust Corporation என்ற வங்கியில் போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. விபி.சிங் அவரது மகன் ஜெயா சிங் கையெழுத்தோடு வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் போட்டு வைத்திருப்பதற்கான ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

விபி.சிங் பிரதமராக வந்ததற்கு பிறகு தன்னைப் பற்றிய இந்த குற்றச்சாட்டிற்கு சிபிஐ விசாரணை நடத்த அவரே உத்தரவிட்டார். சிபிஐ விசாரணை செய்தது, மத்திய தடயவியல் ஆய்வு ஆவணங்களில் பல உண்மைகள் வெளியே வந்தன. விபி.சிங் பெயரும் அவரது மகன் ஜெயா சிங் பெயரும் கையெழுத்துகளும் அவருடைய பாஸ்போர்ட் விண்ணப்பத்திலிருந்து போலியாக நகலெடுத்து இந்த பொய்யான ஆவணங்கள் உருவாக்கப்பட்டன என்று கண்டறியப்பட்டது. இதற்குத் துணையாக இருந்தவர்கள் அன்றைய காங்கிரஸ் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவ், ஒன்றிய அமைச்சராக இருந்த கே.கே.திவாரி, அமெரிக்காவில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள், First Trust Corporation வங்கியின் மேலாளர் மற்றும் சந்திரா சாமி ஆகியோர் இணைந்து இந்த போலி ஆவணங்களை தயாரித்தார்கள். அமலாக்கத்துறை இதற்கு முழுமையாக உடன்பட்டு நின்றது.

அமலாக்கத்துறை இயக்குனராக இருந்த ஏ.பி.நந்தே அப்ரூவராக மாறி அமலாக்கத் துறையின் உதவியோடு தான் இந்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன என்பதை ஒப்புக் கொண்டார். அவர் அப்ரூவராக மாறியதற்குப் பிறகு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். தன்னைப் பற்றிய குற்றசாட்டிற்கு தன்னையே சிபிஐ விசாரணைக்கு உட்படுத்திய ஒரு மாபெரும் தலைவர் தான் விபி.சிங். குற்றம் சாட்டப்பட்டவர்கள் - பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

Pin It