“அவசர நிலை காலம் மீண்டும் வருமா?” என்ற விவாதங்கள் ஒரு பக்கம் நடந்தாலும், அந்தக் காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களைவிட இன்னும் மோசமான உரிமை மீறல்கள் இங்கே நடந்து கொண்டுதான் இருக் கின்றன. இது குறித்த செய்திகளின் தொகுப்பு:

மனித உரிமைப் போராளி சாய்பாபா

அவரால் நடமாட முடியாது; சக்கர வண்டிதான் அவரை நகர்த்தும்; உடலில் ஊனமானாலும் உள்ளத்தில் உறுதியோடு போராடும் சமூகப் போராளி; அவர் பெயர் ஜி.என். சாய்பாபா. மனித உரிமையாளர்களிடையே பிரபலமானவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் பேராசிரியர். சமூகநீதிக்காகவும், பழங்குடி மக்களின் உரிமைக்காகவும் குரல்கொடுத்த குற்றத்துக்காக அவர் ஒரு ‘மாவோ’ தீவிரவாதி என்று காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டு, 2014 மே 9ஆம் தேதி, பல்கலைக் கழகத்திலிருந்து காரில் வீடு திரும்பும்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து நாக்பூருக்கு விமானத்தில் கொண்டு போகப்பட்டு, சித்திரவதை முகாமாகக் கருதப்படும் முட்டை வடிவத்திலுள்ள அண்டா சிறையில் அடைக்கப் பட்டார். அடுத்த 72 மணி நேரம் - அவர் கழி வறையைப் பயன்படுத்தக்கூட அனுமதிக்கப்பட வில்லை. மிக மோசமாக நடத்தப்பட்ட நிலையில் அவர் உடல்நிலை மேலும் மோசமாகியது. 14 மாத சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த வெள்ளிக் கிழமை (ஜூலை 3) பம்பாய் உயர்நீதிமன்றம் அவருக்கு மூன்று மாதம் ‘பரோலில்’ விடுதலை செய்துள்ளது.

1990ஆம் ஆண்டு மண்டல் பரிந்துரைக்கு ஆதரவாக அதை எதிர்த்த பார்ப்பன சக்திகளுக்கு எதிராக போராடத் தொடங்கினார். பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று, அவர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவது பற்றிய தரவுகளை சேகரித்து அம்பலப்படுத்தினார். பழங்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக பல பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தடுத்து நிறுத்தப்பட்டன. 2009-லிருந்து 2012 வரை மனித உரிமையாளர்கள் அறிவுலக சிந்தனையாளர்களை ஒன்று திரட்டி, ‘மக்கள் மீதான யுத்த எதிர்ப்புக் குழு’ ஒன்றை உருவாக்கினார். அவருடைய கணினியி லிருந்து போலீசார் கைப்பற்றிய சில பத்திரிகை களுக்கான அறிக்கைகள் மட்டுமே அவரை பயங்கரவாதியாக சித்தரிப்பதற்கு காவல்துறை முன் வைத்துள்ள ஒரே ஆதாரம். தனது செயல்பாடுகளை முடக்கவே அரசு சிறையிலடைக்கிறது என்கிறார் சாய்பாபா.

பலமலைகிராமங்களுக்கு இந்த ஊனமுற்ற போராளியை பழங்குடி மக்கள் தோளில் சுமந்து சென்றனர். உரிமைப் போராளியாக உறுதியுடன் புறப் பட்டவர்களுக்கு ஊனம் ஒரு தடையல்ல. சாய்பாபாக் களின் இந்த அர்ப்பணிப்புகள், சமூகநீதி மனித உரிமைப் போராளிகளுக்கு நிச்சயமாக உரம் சேர்க்கும்.

வடகிழக்கில் நடக்கும் இராணுவ ஆட்சிகள்

காஷ்மீரிலும் வடகிழக்கின் பெரும்பாலான மாநிலங்களிலும் இன்றைக்கு ஜனநாயகத்தைச் செல்லரித்துக் கொண்டிருக்கும் ஆயுதப் படை களுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் உருவாக்கி யிருக்கும் சூழல் நெருக்கடிநிலைச் சூழலுக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.

சட்டம், ஒழுங்குப் பராமரிப்பின் பெயரால், ஆயுதப் படையினருக்கு உச்சபட்ச அதிகாரம் அளிக்கும் சட்டம் இது. நாட்டின் எந்தவொரு பகுதியில் இந்தச் சட்டம் அமலாக்கப்படுகிறதோ, அந்தப் பகுதி கலவரப் பகுதியாகக் கருதப்பட்டு, அந்தப் பகுதியின் எந்த இடத்திலும் அனுமதியின்றி நுழையவும் சோதனையிடவும் எங்கு வேண்டுமானா லும் தாக்குதல் நடத்தவும் எவரை வேண்டுமானாலும் பிடியாணையின்றிக் கைது செய்யவும் தேவைப்பட் டால் சுட்டுக் கொல்லவும் ஆயுதப் படைகளுக்கு இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திதான் கடந்த 15 ஆண்டுகளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார் இரோம் ஷர்மிளா.

அரசு இந்தச் சட்டத்தின் எதிர்காலம் குறித்து ஆராய 2004இல் நியமித்த நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி ஆணையம் தனது 147 பக்கப் பரிந்துரையில், இந்தச் சட்டத்தை ஏன் முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும் என்பதன் நியாயத்தை உரக்கப் பேசுகிறது. இந்திய அரசோ ஆயுதப் படைகளின் நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டு இந்தச் சட்டத்தைத் தொடர்ந்து மக்கள் மீது திணித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டிலேயே முதல் முறையாக 1958இல் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் கொண்டு வரப்பட்ட மாநிலம் அசாம். இன்றைக்கும் குவாஹாட்டி நீங்கலாக ஏனைய பகுதிகளில் அங்கு இந்தச் சட்டம் அமுலில் இருக்கிறது. நாகாலாந்து 1961இல் தனி மாநிலமாக உருவானது. அதற்கும் முன்பிருந்தே இங்கு இந்தச் சட்டம் தொடர்கிறது. காஷ்மீரில் இன்றுவரை நீடிக்கும் பல மனித உரிமை மீறல் குற்றங்களுக்கான அடிப்படை பலத்தை ஆயுதப் படையினருக்குத் தருவது இந்தச் சட்டம்தான் என்கிறார்கள் காஷ்மீரிகள்.

காஷ்மீரில் மட்டும் ஆயுதப் படைகளால் கடந்த 26 ஆண்டுகளில் 94,195 பேர் கொல்லப்பட்டிருப் பதாகவும் 1.28 லட்சம் பேர் கைது செய்யப்பட் டிருப்பதாகவும் சொல்லும் ‘காஷ்மீர் ஊடக மையம்’, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 416 பேர் கைது செய்யப் பட்டிருப்பதாகவும் பட்டியலிடுகிறது. 2008இல் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி நீங்கலாக ஏனைய ஊடகங்கள் அத்தனையையும் முடக்கிப்போட்டது அரசு.

2010-ல் குறுஞ்செய்திகள் அனுப்பத் தடை விதித்தது. குறுஞ்செய்தி அனுப்பும் அனுமதியைத் திரும்ப எல்லோரும் பெற நான்கு ஆண்டுகள் ஆயின. 2012-ல் ஒருமுறை ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதளச் சேவை முடக்கப்பட்டது. 2013-ல் இணைய ஊடகங்கள் மீதான அரசின் அடக்கு முறையை எதிர்த்து ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆனால், சில நாட்களுக்கு முன்புகூட காஷ்மீரில் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் நீடிப்பதற்கான நியாயங்களைப் பேசியிருக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்.

நாடு கடத்தப்பட்ட மனித உரிமை ஆய்வாளர்

கடந்த 2014 நவம்பர் மாதம் கிறிஸ்டின் மேத்தா என்ற இளம்பெண் ஆய்வாளர், இந்திய ஆட்சியால் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டிருக்கிறார். கிறிஸ்டின் மேத்தாவின் பெற்றோர்கள் இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள். ஆய்வாளர் மேத்தா, காஷ்மீரில் இந்திய இராணுவம் மனித உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய பிரிவுக்காக காஷ்மீரில் தங்கி கள ஆய்வுகளை மேற்கொண்டார். காஷ்மீரானாலும் வடகிழக்கு மாநிலங்களானாலும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வுகள் நடப்பதை இந்திய தேசிய பார்ப்பன ஆட்சிகள் விரும்புவது இல்லை. அரசு தரும் தகவல்களை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆய்வுகள் செய்வதற்கான நோக்கத்தோடு ‘விசா’க் களைப் பெற்று இந்தியாவுக்கு வரும்போது, அந்த ஆய்வுகள் மனித உரிமை தொடர்பானதாகவோ அல்லது சுற்றுச் சூழல் தொடர்பானதாகவோ இருக்குமானால், அதை அனுமதிப்பது இல்லை. ஆனால், மருந்து நிறுவனங்கள் இங்கே அப்பாவி மக்களின் உயிரைப் பணயம் வைத்து, தங்கள் மருந்துகளை ஆய்வு செய்ய விரும்பினால், அதற்கு எந்தத் தடையும் கிடையாது. உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு நாட்டில் மனித உரிமைகள் குறித்த ஆய்வுகளுக்கே அனுமதி மறுப்பதும், இந்தியாவின் வம்சா வழியினராக இருந்தாலும்கூட அவர்களை நாட்டை விட்டு துரத்துவதும் வெட்கக் கேடானது!

குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மசோதா

நாட்டுக்கே முன்னோடியாக குஜராத் அரசு, ‘குஜராத் பயங்கரவாதம், திட்டமிட்ட குற்றச்செயல் கட்டுப்பாட்டுச் சட்டம் 2015’ என்று ஒரு மசோதாவைச் சில மாதங்களுக்கு முன் நிறைவேற்றி யிருக்கிறது. மோடி முதல்வராக இருந்தபோது கொண்டுவர முயற்சித்தது ‘திட்டமிட்ட குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டு குஜராத் மசோதா 2003’இன் திருத்தியமைக்கப்பட்ட வடிவம் இது. 2004இல் அப்துல் கலாம், 2008இல் பிரதிபா பாட்டீல் என்று இரு குடியரசுத் தலைவர்கள் கையெழுத்திட மறுத்து நிராகரித்த மசோதா. மனித உரிமைகளைத் தூக்கிப் போட்டு மிதித்து நசுக்கும் பல பிரிவுகளைக் கொண்ட மசோதா.

இதன் கீழ், தாங்கள் கைது செய்யும் ஒருவரின் விசாரணைக் காலத்தைக் காவல் துறையினர் 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலும்கூட நீட்டித்துக் கொள்ளலாம். போலீஸ் காவலில் இருக்கும்போது ஒருவர் கொடுத்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலத்தையே அவருக்கு எதிரான வழக்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் காவல் துறையினர் அளிக்கலாம். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே குற்றவாளி, குற்றவாளியுடன் இணைந்து செயல்பட்டவர், உடந்தையாக இருந்தவர், சதி செய்தவர் என்று அனைவர் மீதும் குற்றம்சாட்ட முடியும். எல்லாவற்றுக்கும் மேல் இதன் கீழ் கைது செய்யப்படும் ஒருவர் ஜாமீன் மனு அடிப்படையிலோ, சொந்த ஜாமீனிலோ வெளியே வர முடியாது. இப்படியெல்லாம் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, யாரும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது.

மோடி பிரதமர் நாற்காலியை நோக்கி நகர்ந்த உற்சாகத்தில் மீண்டும் புதிய பெயரில் அதே மசாதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியிருக்கிறது குஜராத் அரசு. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, ஒவ்வொரு மாநிலமும் இப்படியான சட்டங்களை நிறைவேற்ற ஆரம்பித்தால், நிலைமை என்னவாகும்?

Pin It