பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதையே பண்பாட்டின் அடிப்படையில் நாகாலாந்தில் எதிர்க்கிறார்கள். பழம் பெருமை பண்பாடு என்பதற்காக கண்மூடித்தனமாக ஏற்பது சமூகத்தையே சீரழித்து விடும் என்பதற்கு நாகாலாந்து கலவரமே உதாரணம்.

ஒரு வார காலம், கிளர்ச்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது - இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து.

பிப்ரவரி 1 அன்று நடைபெறுவதாக இருந்த, தற்போது இரத்து செய்யப்பட்டு விட்ட, நகராட்சி மன்றத் தேர்தல்கள்தாம் கலவரத்துக்குக் காரணம். இவ்வமைப்புகளில் மகளிருக்கு 33% ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை எதிர்த்துத்தான் இத்தனை களேபரமும். மற்ற மாநிலங்களில் உள்ளது போலவே தங்கள் மாநிலத்திலும், மகளிருக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று, நாகாலாந்து அன்னையர் சங்கம், நீதிமன்றம் சென்று வாதிட்டது.

2012இல் இருந்து 2016 வரை நான்கு ஆண்டுகள் போராடியதன் பலன் - இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம், மகளிருக்கு 33ரூ ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், 16 ஆண்டு களுக்குப் பின், நாகாலாந்து மாநிலத்தில், நகராட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 1 அன்று தேர்தல்கள் நடைபெற இருந்தன.

நாகாலாந்து மாநில பழங்குடியினர் கூட்டு இயக்கம், இந்த ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்து வருகிறது .மகளிருக்கு அதிகாரம் வழங்குவது, நாகர் இனத்தில் இல்லை என்பது அவர்களின் வாதம். நாகர் இனத்தின் தனித்தன்மையைக் குலைக்கிற செயலாக இதனை, கூட்டியக்கம் பார்க்கிறது. இதுதான் கிளர்ச்சி, கலவரம், துப்பாக்கிச் சூடு, இரு இளைஞர்கள் மரணம் என்று நீண்டுகொண்டே போகிறது.

கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையை ஏற்று, தேர்தல்கள் தற்போதைக்கு இரத்து செய்யப்பட்டு விட்டன; துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், போராட்டத்தை இரத்து செய்கிற மனநிலையில், கூட்டு இயக்கம் இல்லை. முதல்வர் ஜீலியாங் பதவி விலக வேண்டும்; அதுவரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

நைடோனு அங்காமி. சிறந்த சமூக சேவைக்காக 2000ஆம் ஆண்டு, பத்மஸ்ரீ விருது பெற்ற பெண்மணி. அதே ஆண்டு, நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நபர்களில் ஒருவர். தனது ஆறாவது வயதில், கிளர்ச்சியாளர்களின் வன்முறையில், அரசுப் பணியில் இருந்த தனது தந்தையைப் பறி கொடுத்தவர்.

தாயாரால் வளர்க்கப்பட்டு, படித்து, காவல்துறை உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்டு, இப்பதவியை உதறி விட்டு, பள்ளி ஆசிரியர் ஆனார்.

1984-ம் ஆண்டு, ‘நாகாலாந்து அன்னையர் சங்கம்' தோற்றுவித்த நைடோனு, மது, போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிரமாகப் போராடி, போதையின் கோரப் பிடியில் இருந்து, தம் இன மக்களை விடுவிப்பதில் பெரும் வெற்றி கண்டார்.

இதனைத் தொடர்ந்து, ‘உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு பிரதிநிதித்துவம்' என்கிற கோட்பாட்டில் முனைந்து இறங்கிய அன்னையர் சங்கம், நீதிமன்றக் கதவுகளை நாடியது.

நாகாலாந்து மக்களின் பாரம்பரிய மரபுசார் வழிமுறைகளுக்கு மதிப்பு அளிக்கிற வகையில், சாசனத்தின் பிரிவு 371ஏ, இம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இதன்படி, நாகாலாந்து மக்களின் பாரம்பரியம் தொடர்புடைய எந்தச் சட்டமும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டாலும் கூட, மாநில சட்டப் பேரவையும் அங்கீகரிக்க வேண்டும்.

நகராட்சி அமைப்புகளில் மகளிருக்கான ஒதுக்கீடு, தங்களின் பாரம்பரிய மரபுப்படி, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று, பழங்குடியினர் கூட்டு இயக்கம் கூறுகிறது. தங்கள் மாநில அரசு தங்களை வஞ்சித்து விட்டதாகவும், பிரிவு 371ஏ வழங்கிய சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்து இருப்பதாகவும் இவர்கள் கருதுகிறார்கள்.

நாகாலாந்து மாநில அமைச்சரவை கூடி, நகராட்சிகளுக்கு அதிகாரம் வழங்குதல் தொடர்பான அரசியல் சாசனப் பிரிவு 9ஏ-வில் இருந்து நாகாலாந்து மாநிலத்துக்கு விலக்கு அளிக்குமாறு, மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, மொத்தம் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் 60 பேரும், டெல்லியில் பிரதமரை சந்தித்து, உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளனர்.

Pin It