கர்நாடகாவில் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து, அதில் வரும் கதாபாத்திரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா டவுனைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சைத்ரா, மகள் பிரார்த்தனா (7). பிரார்த்தனா 2-ம் வகுப்பு படித்து வந்தாள். வீட்டில் டிவி.யில் ஒரு குறிப்பிட்ட கன்னட சீரியலை பார்ப்பது வழக்கம்.

இந்த  தொடரில் நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்தன. அதைப் பார்த்த பிரார்த்தனா, கடந்த 11-ம் தேதி, தானும் கையில் ஒரு பேப்பரை எடுத்து தீ வைத்துக்கொண்டு நடனமாடினாள். அப்போது பிரார்த்தனாவின் ஆடையில் தீப்பற்றிக் கொண்டது. வலி தாங்க முடியாமல் அலறினாள்.

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். உடனடியாக தாவணகெரே அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு சென்றனர்.

கடந்த 15 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், பிரார்த்தனா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தாள். இதையடுத்து, சிறுமியின் தந்தை மஞ்சுநாத் அளித்த புகாரின்பேரில் ஹரிஹரா டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தாவணகெரே மாவட்ட நிர்வாகம், டிவி சீரியல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

பிரார்த்தனாவின் தந்தை மஞ்சுநாத் கூறுகையில், ‘‘குழந்தைகளை தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதை தடுக்க வேண்டும். நான் என் மகளை கண்காணிக்கத் தவறிவிட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல் ஒரு சீரியலை பார்த்து நிறைய பேர் கட்டிடத்தின் மேல் இருந்து பறக்க முயற்சித்து கீழே விழுந்து இறந்தனர். இப்போது என் மகள் உடலில் தீ வைத்து நடனமாடி உயிரிழந்திருக்கிறாள். இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடராத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

பெற்றோர் திருந்த வேண்டும்

இந்த சம்பவம் குறித்து மனநல மருத்துவர் கூறியதாவது:

எல்லா குடும்பங்களிலும் மனிதர்களோடு மனிதர்கள் பேசி புரிந்து கொள்ளும் நேரத்தைவிட, தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட் போன் வழியாக பார்க்கவும், படிக்கவும் புரிந்து கொள்ளும் விஷயங்கள்தான் அதிகமாகிவிட்டன. அதிலும் வீட்டில் இருக்கும் பெற்றோர் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல், எந்த நேரமும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பது, குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிகிறது. தொலைக்காட்சி வழியாக சொல்லப்படும் விஷயங்களை பின்பற்றலாம் என்ற எண்ணமும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

தற்போது தொலைக்காட்சி  தொடரைப்  பார்த்து இந்த குழந்தை தீ வைத்து இறந்தது போல, இதற்கு முன்பு உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஏற்கெனவே இதுபோன்று வெளியான ஒரு  தொடரைப்  பார்த்து அதீத சக்திபடைத்த ஒருவரை போல் உயரத்தில் இருந்து குழந்தைகள் குதித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அவ்வளவு ஏன்... தங்கள் குழந்தைகள் தொலைக்காட்சியில் பாட்டு போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அவர்களை வற்புறுத்தி துன்புறுத்தும் பெற்றோரும் உள்ளனர். போட்டியில் பரிசு கிடைக்காவிட்டால், உலகமே பார்க்கும்படி கதறி அழுகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மீதான தங்கள் பற்றுதலையும், நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கின்றனர். முதலில் பெற்றோர் திருந்த வேண்டும். அடுத்து மூடநம்பிக்கை உள்ளிட்ட அபாயமான விஷயங்களை பரப்பக் கூடாது என்பதில் தொலைக்காட்சிகள் கவனமாக இருக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி எந்த நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்கலாம் என்பதை முடிவு செய்வதோடு, அந்த சமயங்களில் அவர்களுடன் இருந்து நேரம் செலவழிப்பது அவசியம் என்றார்.

Pin It