மத்திய தணிக்கைத்துறை - ஒன்றிய ஆட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். அந்த நிறுவனமே இப்போது மோடி ஆட்சியின் ஊழல் முறைகேடுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறது.

பிரதமரின் நெருக்கம் இருந்தால் போதும் கனவிலும் நினைக்காத திட்டங்களும் கிடைக்கும் என்பது ஒன்றிய பாஜ அரசின் சித்தாந்தமாக மாறி விட்டதோ என்று ஐயப்படுகின்ற அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார் அதானி. நாட்டின் எல்லைப் பகுதிகள், கடலோரப் பகுதிகள், துறைமுகங்கள், சுற்றுலா தலங்கள், 100 மாவட்ட தலைமையகங்கள் ஆகியவற்றை இணைக்கும் 34,800 கிமீ நீள சாலை அமைப்பது தான் பாரத் மாலா திட்டத்தின் நோக்கமாகும். நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஒன்று என்பதால் தகுதி வாய்ந்த, முன் அனுபவம் பெற்ற நிறுவனங்களுக்குதான் இந்த திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பது காலம் காலமாக இருந்து வந்த நடைமுறை. ஆனால், பாரத் மாலா திட்டப் பணிகள் ஒப்படைக்கப்பட்டது தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கை, முறைகேடுகள், விதி மீறல்களின் உச்சத்தை பிரதிபலிப்பதாகவும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. காரணம், அனுபவமும், தகுதியும் இல்லாத போதும் அதானி நிறுவனங்களுக்கும் பாஜவுக்கு தாராள கட்சி நிதி வழங்கிய மற்றும் பாஜ தலைவர்களின் நிறுவனங்களுக்கும் விதிகளை மீறி திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன.amit shah and modi 500உதாரணமாக, அதானி டிரான்ஸ்போர்ட் தலைமையிலான நிறுவனங்களின் கூட்டமைப்பில் உள்ள சூர்யபேட் கம்மம் ரோடு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தெலங்கானாவில் உள்ள சூர்யபேட் மற்றும் கம்மம் இடையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் கொஞ்சம் கூட முன் அனுபவம் இல்லை. இதேபோன்று தான், பிஎன்ஆர் இன்போடெக் என்ற உள்கட்டமைப்பு நிறுவனத்திற்கு லக்னோ வட்டச்சாலை (ரிங் ரோடு) திட்டப் பணியின் ஒரு பகுதி 2019ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கான மதிப்பீட்டு செலவு, நிர்ணயித்திருந்ததை விட 17.44 சதவீதம் அதிகம். இது மட்டுமின்றி மறுமதிப்பீட்டிலும் திட்டச் செலவு 2.02 சதவீதம் அதிகரித்துவிட்டது. இந்த நிறுவனம் பாஜ தலைவர் நவீன் ஜெயின் என்பவருக்குச் சொந்தமானது. திட்டப்பணி ஒப்படைக்கப்பட்ட போது ஆக்ரா மேயராக இருந்தவர் தான் நவீன் ஜெயின். இதேபோன்று, ஐஆர்பி இன்ஃப்ரா ஸ்டிரக்சர் டெவலப்பர்ஸ், ஜெ குமார் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் எம்கேசி இன்ப்ரா ஸ்டிரக்சர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கும் பாரத் மாலா திட்டப்பணிகள் ஒப்படைக்கப்பட்டதில் விதிகள் மீறப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இவ்வாறு விதிகளை மீறி திட்டப் பணிகளை ஒப்படைத்ததற்கு காரணம், இந்த 4 நிறுவனங்களும் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பாஜவுக்கு கட்சி நிதியாக ரூ.77 கோடி கொடுத்திருக்கின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அதானி தலைமையில் இணைந்த நிறுவனங்கள்

திட்டப் பணிகளுக்கு விண்ணப்பித்த நிறுவனங்களின் கூட்டமைப்பில் அதானி நிறுவனம் வைத்துள்ள பங்கு 74 சதவீதம். இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அந்தத் துறையில் குறைந்த பட்சம் 6 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த அடிப்படை விதியை கூட பூர்த்தி செய்யாத, நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட சாலை பணிகளில் ஈடுபட்டிராத அதானி நிறுவனம் தான் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு தலைமை ஏற்றுள்ளது.

அதாவது அதானி நிறுவனத்துக்கு சாலை பணிகளில் அனுபவம் இல்லாதபோதும், பிறதுறை நிறுவனங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட துறை அனுபவங்களை தனதாக்கி எந்த வகையிலாவது சம்பந்தம் இல்லாத திட்டங்களை கூட டெண்டர் எடுத்து விடுகிறது.இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) திட்டத்தின் மொத்த செலவினத்தில் 40 சதவீத பங்களிப்பை வழங்கும். எஞ்சிய 60 சதவீதம் சாலை மேம்பாட்டு திட்டப் பணியில் ஈடுபடும் நிறுவனம் ஏற்க வேண்டும். இந்த 60 சதவீதத்தில் 20 முதல் 25 சதவீத தொகையை தன்னிடம் இருந்த நிதியிலிருந்து எடுத்துக்கொண்டு எஞ்சிய தொகையை வங்கிகளில் கடனாக பெறுவது வழக்கம்.

குறைந்த பிரீமியம் குறிப்பிட்டும் கைமாறிய டெண்டர்

லக்னோ வட்டச்சாலை (ரிங் ரோடு) திட்டப் பணியின் ஒரு பகுதி பணிக்கு கடந்த 2019 மார்ச் 7ம் தேதி டெண்டர் வெளியிடப்பட்டிருந்தது. திட்ட மதிப்பீடாக ரூ.904.31 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைவிட அதிகமாக ரூ.1,062 கோடி மதிப்புக்கு பிஎன்சி இன்போடெக் நிறுவனத்திற்கு திட்டப் பணி வழங்கப்பட்டுள்ளது. இது முதலில் நிர்ணயித்த தொகையை விட 17.44 சதவீதம் அதிகமாகும். இந்த ஐஆர்பி இன்ஃப்ரா ஸ்டிரக்சர் நிறுவனம் பாஜவுக்கு கட்சி நிதியாக கடந்த 2013ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.65 கோடி வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஹாப்பூர் பைபாஸ் – மொராதாபாத் நெடுஞ்சாலை திட்டப் பணியை ஏற்றுள்ளது.

அதுவும் 68 சதவீதம் குறைந்த பிரீமியத்துக்கு எடுத்துள்ளது. அதாவது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தத் திட்டத்திற்கு டெண்டர் வெளியிடும்போது, சாலை திட்டத்தை முடித்த பிறகு அரசுக்கு இந்த நிறுவனம் ஆண்டு பிரீமியமாக ரூ.97.99 கோடி செலுத்த வேண்டும். பின்னர், 22 ஆண்டுகளுக்கு சுங்க கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம். ஆனால், 2018ம் ஆண்டில், இந்த நிறுவனம் சமர்ப்பித்த டெண்டரில் ஆண்டு பிரீமியமாக ரூ.31.5 கோடி மட்டுமே வழங்குவதாக குறிப்பிட்டிருந்தும், நெடுஞ்சாலை ஆணையம் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. திட்டப் பணி நடைபெற உள்ள சாலையில் செல்வதாக உத்தேசிக்கப்படும் வாகன போக்குவரத்து மற்றும் விரிவான திட்ட அறிக்கையின்படி உள்ள மொத்த விலை புள்ளி அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதேநேரத்தில், ஐஆர்பி நிறுவன இணையதளத்தில் மேற்கண்ட திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.3,345 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திட்ட தேதியிலிருந்து ஒரு வாரத்துக்குள்ளாகவே இந்த முடிவுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வந்துள்ளது. திட்ட மதிப்பீட்டில் தவறுகள் இருந்து போதிலும் எந்த ஒரு நியாயமான காரணமோ அல்லது மறு டெண்டர் விடுவதற்கான முயற்சியிலோ ஈடுபடாமல் அவசரகதியில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது குறித்து சிஏஜி அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆனால் திட்டத்தை வடிவமைத்து அதனை கட்டி முடித்து இயக்குவது மற்றும் ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட கால அளவு வரை சோதனை சாவடி மூலம் வருவாய் ஈட்டிக் கொள்வது பின்னர் அரசிடம் திட்டத்தை ஒப்படைப்பது என்ற அடிப்படையில் தான் மேற்கண்ட திட்டம் டெண்டர் விடப்பட்டுள்ளது. ஐஆர்பி இன்ப்ரா ஸ்டிரக்சர் நிறுவனம் கடந்த 2020-21 நிதியாண்டில் பாஜவுக்கு ரூ.20 கோடியும் இதனுடன் தொடர்புடைய 3 நிறுவனங்கள் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை ரூ.45 கோடியும் கட்சி நிதியாக வழங்கியிருக்கின்றன. கட்சி நிதியும். அதானியுடன் கூட்டும் தகுதியாகுமா? கடந்த 2018 டிசம்பர் மாதம் ஜெ குமார் இன்ப்ரா ப்ராஜெக்ட் நிறுவனம் துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் ஒரு பகுதியை ரூ.1,349 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் எடுத்திருந்தது.

இந்தத் திட்டப் பணியை கைக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் சுரங்கப்பாதை அமைப்பதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அடிப்படை விதியை கூட பூர்த்தி செய்யாத இந்த நிறுவனம் திட்ட பணியை கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பாஜவுக்கு கட்சி நிதியாக ரூ.6.46 கோடி வழங்கி இருக்கிறது. இதுபோல் 2017-18 நிதியாண்டில் ரூ.5.25 கோடி, 2015-16 நிதியாண்டில் ரூ.1 கோடி மற்றும் 2013-14 நிதியாண்டில் ரூ.21 லட்சம் கட்சி நிதியாக வழங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக ராகு சந்திரா உள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவராக 2015ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.

மேலும் ஜிஆர் இன்ப்ரா ஸ்டிரக்சர் ப்ராஜெக்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜிஆர் ஹைவேஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர் நிறுவனத்துக்கு கூடுதல் இயக்குனராகவும் இருந்தவர். இதுபோல் வெல்ஸ்புன் என்டர்பிரைஸ் நிறுவன இயக்குநராகவும் உள்ளார். அதானி குழுமமும் வெல்ஸ்புன் நிறுவனமும் இணைந்து அதானி வெல்ஸ்புன் துரப்பன நிறுவனம் என்ற பெயரில் எரிவாயு துரப்பன பணிகளில் ஈடுபட்டுள்ளன. இது தவிர ஜெ குமார் இன்ப்ரா புராஜெக்ட் நிறுவனம் மிச்சிகன் இன்ஜினியர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் செய்து வருகிறது. மிச்சிகன் இன்ஜினியர்ஸ் நிறுவனம் வெல்ஸ்புன் என்டர்பிரைசில் 50.10 சதவீதம் பங்கினை கொண்டுள்ளது. ஜெ குமார் நிறுவனம் பாஜவுக்கு கட்சி நிதியாக ரூ.6.46 கோடி வழங்கியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ஜெ.குமார் இன்ப்ரா புராஜெக்ட் நிறுவனத்தை மும்பை மாநகராட்சி கடந்த 2016ம் ஆண்டு தடைப் பட்டியலில் வைத்திருந்தது. 2015ம் ஆண்டு நடந்த சாலை திட்ட ஊழல் விவகாரத்தை தொடர்ந்து இந்த முடிவை மும்பை மாநகராட்சி அப்போது எடுத்திருந்தது. கடந்த 2021ம் ஆண்டு மும்பையில் பாலம் ஒன்று இடிந்து விழுந்து நொறுங்கியது. இந்த பாலம் ஜெ குமார் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு திட்டத்தை வழங்கியதற்கு, பாஜ தலைமையிலான அப்போதைய மகாராஷ்டிர அரசை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It